கதை சுருக்கம்:எனக்கு ரொம்ப நாட்களாகவே சந்தேகம், "இந்த பெண்கள் leggings ஆடைகளை எப்படி அவ்வளவு டைட்டாக அணிகிறார்கள் ??". "பேண்டை தைத்து போடுகிறார்கள் ??, இல்லை அப்படியே காலோடு சேர்த்து தைத்து விடுகிறார்களா??" என்று. leggings போட்டுக்கொண்டு பெண்கள் குனியும் போது நமக்கே பயமாக இருக்கும், எங்கே கிழிந்து விடுமோ?? என. இந்த சந்தேகம் எனக்கு எப்படி தீர்ந்தது என்பது பற்றித்தான் இந்த கதை. இது'லாம் ஒரு கதை, இதற்க்கு ஒரு கதை சுருக்கமா என "தூ" என்று துப்புவர்கள், "நான் எந்த பெண் ஆடையையும் இனி பார்க்க மாட்டேன்" என்று தங்கள் வருங்கால மனைவி மீது சத்தியம் செய்துவிட்டு, இந்த கதையை படிக்காமல் சென்றுவிடலாம். நிகழ்கால மனைவி உள்ளவர்கள் தங்கள் வருங்கால காதலி மீது சத்தியம் செய்யுங்கள்.
எனக்கு இந்த கதை சுருக்கம் எழுதி இதுவரை பழக்கம் இல்லை. ஏனென்றால், எனது கதைகளே சுருக்கமாகத்தான் இருக்கும். எனது கதைகள் படித்துக்கொண்டு இருக்கும்போதே சீக்கிரம் முடிந்துவிடுகிறது என்று சில பேர் வருத்தமும், பல பேர் சந்தோஷமும் அடைகிறார்கள். அதனால்தான் இந்தமுறை இப்படி ஒரு ஏற்பாடு, "கதையின் முடிவை முன்னாடியே சொல்லிவிட்டு அதை நோக்கி கதையை நகர்த்துவது என".
எங்களால் அதை நம்பவே முடியவில்லை. எப்படி நாங்கள் மறந்தோம் என்று. நாங்கள் என்பது "என்னை, செல்வாவை, சிவாவை, அருணை" என்று நால்வரையும் சேர்த்துத்தான். நாங்கள் கடந்த ஒரு வருடமாகவே சொந்தமாக ஒரு பிஸினஸ் தொடங்கவேண்டும் என்ற முடிவோடு அழைந்துக்கொண்டு இருக்கிறோம். நாங்கள் யோசிக்காத பிஸினஸ் எதுவுமே இல்லை. "ஜூஸ் கடை, ஐஸ்கிரீம் கடை, ஹோட்டல், சூப்பர் மார்கெட், பிரைடு சிக்கன்" என்று பல பிஸினஸ்களைப் பற்றி யோசித்து விட்டோம், ஆனால் எதுவும் செட் ஆகவில்லை. "Hollow bricks" ஆரம்பிக்கலாம் என்று ஒருமுறை கும்மிடிபூண்டி அருகில் இடம் எல்லாம் பார்த்து, அட்வான்ஸ் தரும் சமயம் நின்றுவிட்டது. பின் ஒருமுறை, நண்பன் ஒருவன் துணையுடன் பட்டாபிராம் அருகில் "Export Business" அரம்பிக்க எல்லா ஏற்பாடு செய்துக்கொண்டு இருந்தபோது நண்பன் பாதியிலேயே பிரிய, அதுவும் நின்றுவிட்டது. இப்படி நாங்கள் கால் வைக்காத பிஸினஸ் என்று எதுவும் இல்லை. அம்பானி பிரதர்ஸ் கூட இத்தனை துறைகளில் கால் வைத்து இருக்க மாட்டார்கள்.
ஒரு நிமிடம், கதைசுருக்கம் இரண்டாம் பாராவிலேயே முடிந்துவிட்டது. இப்பொழுது கதையைதான் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள். "இதை, ஏன் சொல்கிறேன்?" என்றால், பல பேர் என் கதை முழுவதையும் படித்துவிட்டு கதை எங்கே என்று கேட்கிறார்கள்.
ம், எங்கே விட்டேன். அம்பானி பிரதர்ஸ் கூட இத்தனை துறைகளில் கால் வைத்து இருக்க மாட்டார்கள். ஒரு முறை அண்ணாநகரில் "சக்தி மசாலா ஷோரூம்" ஆரம்பிக்க ஒரு புரோக்கர் நாயாய் பேயாய் அலைந்து சாந்தி காலணியில் ஒரு இடத்தை பார்த்துக்கொடுத்தார். இப்பொழுது அவர் எங்களை கொலைவெறியில் தேடிக்கொண்டு இருக்கிறார்.
நாங்கள் தீவிரமாக செயல்படவில்லை அதனால்தான், எல்லாமே நின்றுவிட்டது என்று நினைக்க வேண்டாம். நாங்கள் எந்தளவு கஷ்டப்பட்டோம் என்று எங்களுக்குதான் தெரியும். சிவா இரண்டாயிரம் ரூபாய் பணம் கட்டி Export வகுப்புக்குலாம் போனான். செல்வா இதற்காகவே "High performance interpreter" புத்தகத்தை வாங்கிபடித்தான். தினமும் இரவு, படித்ததை எங்களுக்கு கதையாக சொல்வான். ஆனால், அந்தக்கதை சொல்லும் நேரத்தில் அவன் செல்போனுக்கு பத்து குட்நைட் மெசேஜ் வந்துவிடும். அதுவும் வேற வேற பெண்களிடம் இருந்து. பாவம், செல்வாவிற்கு குட்நைட் சொல்லவில்லை என்றால், அந்த பெண்களுக்கு தூக்கம் வராது போல. நானும் சிவாவும் எங்களுக்குள் மாற்றி மாற்றி குட்நைட் மெசேஜ் அனுப்பிக்கொண்டால்தான் உண்டு.
உயிர்மையை போல ஒரு பதிப்பகம ஆரம்பிக்கலாம் என்றான் அருண். இப்படி பல பிஸினஸ்களை பற்றி யோசித்த நாங்கள் எப்படி இந்த "ரெடிமேட் ஷோரூமை" மட்டும் மறந்தோம் என்று தெரியவில்லை. கடைசியாக ஒரு ரெடிமேட் ஷோரூம் ஆரம்பிக்க முடிவு செய்தோம். எந்தமாதிரி ஆரம்பிப்பது என்று குழப்பம்.
இப்பொழுது புதிதாக திறந்து இருக்கும் 'Express mall'ல், லீ, லீவைஸ் போல ஏதாவது கம்பெனி ஷோரூம் ஆரம்பிக்கலாம் என்றான் அருண். ஆனால், விசாரித்து பார்த்தபோது அதை ஆரம்பிக்கும் செலவில் எங்கள் ஊரில் ஒரு கல்யாண மண்டபமே கட்டிவிடலாம் என்பது தெரியவந்தது. அதுவும் "இந்தமாதிரி கம்பெனி ஷோரூம் எல்லாம் வேலைக்கே ஆகாது" என்றும், "லாபத்தைவிட நஷடமே அதிகமாக வரும்' என்றும், ஏற்கனவே ஷோரூம் நடத்திக்கொண்டு இருந்தவர்கள் சொன்னார்கள்.
கல்லூரியில் என் கூட படித்த பாலாவின் நினைவு அப்பொழுதுதான் வந்தது, அவன் அடையாறில் ஒரு ரெடிமேட் கடை வைத்து உள்ளான். பாலா என்றால் பல பேருக்கு தெரியாது. அவன் முழுப்பெயர் பாலசுப்புரமணிய சண்முகசுந்தரம். கொஞ்ச பேர் அவனை பாலா என்பார்கள், கொஞ்ச பேர் அவனை சுப்பு என்பார்கள், கொஞ்ச பேர் அவனை சண்முகம் என்பார்கள், நீங்கள் அவனை எந்த கெட்டவார்த்தை வைத்தும் அழைக்கலாம்.
நான் பாலாவிடம் ரெடிமேட் ஷோரும் பற்றி விசாரிக்க அவன் கடைக்கு சென்று இருந்தேன். ஒரு பெண் leggings,லாங் டாப்ஸ், மற்றும் ஒரு பெல்ட் வாங்கிக்கொண்டு போனாள். " இது தான் இப்பொழுது பேஷன், பேஷன்க்கு தகுந்தார்போல் புதிய ஆடைகளை விற்கவேண்டும். leggings வாங்கினால், கண்டிப்பாக லாங் டாப்ஸும், பெல்ட்டும் வாங்குவார்கள். இதில் எதாவது ஒன்று இல்லை என்றால் கூட எதையுமே வாங்கமால் சென்றுவிடுவார்கள்" என்றான்.
அவனைப் பார்த்து பேசியதில் பலவற்றை தெரிந்துக்கொண்டேன். அவற்றில் சில "இப்பொழுது பிராண்ட் டிரஸ்கள் மீதுதான் மக்கள் அதிக ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவ்வளவு விலை கொடுத்து வாங்க மக்கள் விரும்பவில்லை. முக்கால்வாசி பிராண்ட் துணிகள், திருப்பூரில்'தான் தயாரிக்கப்படுகிறது. திருப்பூரில் நேரிடையாக வாங்கி, இங்கே விற்றால் அதிகம் லாபம் பார்க்கலாம். அந்த துணிகளில் பிராண்ட் பெயரும் இருப்பதால் அதிக விலைக்கு விற்கமுடியும்."
மேலும் " குழந்தைகளுக்கான ஆடைகளில்தான் அதிக லாபம் பார்க்கமுடியும். ஏனென்றால், குழந்தைகளுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய பெற்றோர் தயாராக இருக்கிறார்கள். இருப்பதிலேயே அதிக தலைவலி தரும் வேலை, பெண்கள் ஆடைகள் விற்பதுதான். இரண்டு மணிநேரம் கடையில் இருக்கும் எல்லா ஆடைகளையும் கலைத்து போட்டுவிட்டு, கடைசியில் ஒரு கர்சீப்பை வாங்கிவிட்டு போவார்கள். புடவை, சுடிதார், பட்டியாலா எல்லாம் அந்த காலம். இப்பொழுது ஜீன்ஸ், குர்தா, மிடி, டாஸ், சோளி , Ghagra, leggings போன்ற ஆடைகள்தான் அதிகம் விற்பனையாகிறது. Ghagra'வில் இரண்டு வகையான ஆடைகள் இருக்கின்றன. இடுப்பு தெரிவது போல அணிவது ஒருவகை, இடுப்பை மறைத்து அணிவது இன்னொருவகை. தமிழ் பெண்கள் இரண்டாவது வகையைத்தான் அதிகம் விரும்புகிறார்கள்."
என்ன, இன்னும் நான் leggings எப்படி அணியவேண்டும் என்று சொல்லவில்லையா??. ஒரு பிஸினஸை ஆரம்பிப்பது போலவே, leggings ஆடை அணிவதும் கடினமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இதை பற்றி நன்கு தெரிந்தவர்கள் எனக்கு உதவலாம்.