Sunday, September 26, 2010

சிறிய அன்பு

ஒரு சிறிய அன்பிற்காக இனியும்
நான் காத்துக்கொண்டு
இருக்க தேவையில்லை.

காலையில் பார்த்த எதிர்வீட்டு
குழந்தையின் கையசைப்பில்
அது நிறைந்து வழிந்தது.

பேருந்தின்
பக்கத்து இருக்கை
பயணியின் புன்னகையில்
அது எட்டி பார்த்தது.

ஒரு மூதாட்டிக்கு நடைப்பாதை
கடக்க உதவிய போது
அவள் கண்களில்
அது தெளிவாக தெரிந்தது..

முகம் தெரியாத யாரோ
ஒருவர் எழுதிய பின்னூட்டத்தில்
கூட அது இருந்தது.

சிறிய அன்பின் உண்மையான
இருப்பிடத்தை இப்பொழுது
கண்டுக்கொண்டேன்.

இனியும் அந்த சிறிய அன்பிற்காக
அவளிடம்
கைக்கட்டி நிற்க தேவையில்லை,

அந்த சிறிய அன்பு என்னைச்சுற்றி
எல்லா இடத்திலும்
நிறைந்திருக்கிறது.

நேற்று நான் குடித்த மதுவின்
கடைசி துளியில்
அது ஒளிந்துக்கொண்டு இருந்தது  போல.

Saturday, September 25, 2010

கடவுளே கணபதி - மீள்பதிவு

அசோக்கின் அலுவலகத்தில் ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் அவள் வேலைக்கு சேர்ந்தாள். பார்ப்பதற்கு அழகாக இருந்தாள். முகத்தில் எப்பொழுதும் ஒரு பிரகாசம் இருக்கும். பெளர்ணமி அன்று பிறந்து இருப்பாள் போல.

ஒரு முறை பார்த்தால் இன்னொருமுறையும் பார்க்க தூண்டும் முகம். முகமாவது ஒருமுறைதான் பார்க்க தூண்டும், மற்றவைலாம் அவளை தொடர்ந்துப் பார்த்துக்கொண்டே இருக்க வைக்கும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் 30-28-32 என்று சொல்லலாம். ஊர் ஏதோ மதுரை பக்கம். மதுரை தியாகராஜா கல்லூரியில் B.E முடித்துவிட்டு, campus interview'வில் வேலைக்கு சேர்ந்து இருந்தாள். பார்ப்பதற்கு அமைதியான பெண்னை போல் காட்சியளித்தாள்.

அடுத்த ஒரு மாதத்திற்கு அலுவலகத்தில் இருந்த முக்கால்வாசி ஆண்கள் அவளைப் பற்றிதான் விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். அசோக்கின் குரூப்பில், சதிஷ் தான் அவளிடம் முதலில் பேசத் தொடங்கினான். பேசிய அடுத்த நாளே அசோக்கிடம் சதிஷ் சொன்னது “ ரொம்ப நல்ல பொண்ணுடா, நல்லா பேசுது, அப்பா Hydrabad'ல வேலை செய்கிறாராம் “.

அடுத்து அவளிடம் பேச தொடங்கியவன் பிரதாப். பிரதாப் கொஞ்சம் ஸ்டைலான ஆள். எப்பொழுதும் ipod'ல எதாவது pop பாடலை கேட்டுக்கொண்டே இருப்பான். பிரதாபும் அவளும் ஒரு நாள் Cafeteria’ல பேசிக்கொண்டு இருப்பதை அசோக் பார்த்தான். அடுத்த நாள் பிரதாப் அசோக்கிடம் சொன்னது “ டேய் அவளுக்கும் Akon பாட்டுத்தான் பிடிக்குமாம். ‘ Sorry - Blame it on me ' பாட்டை அப்படியே பாடுறாடா, ரொம்ப நல்ல பொண்ணுடா “.

இப்படி அசோக்கின் நண்பர்கள் ஒவ்வொருவரும் அவளிடம் பேசுவதில் தீவிரமாக இருந்தனர். ஏனோ அசோக்கிற்கு அவளிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை. எற்கனேவே அசோக் சில பிரச்சனைகளில் இருந்ததால் அவன் அவளிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பிரதாபும், சதிஷ்’ம் தொடர்ந்து அவளிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். அடுத்த மூன்று மாதத்தில் அவர்களுக்குள் சணடையே வந்துவிட்டது யார் அவளிடம் பேசுவது என்று. பிரதாப்’ம் சதிஷ்’ம் ஒவ்வொரு முறை பார்த்துக்கொள்ளும் பொழுதும் பகைவர்களை போல் பார்த்துக்கொண்டார்கள்.

அடுத்த சில நாட்களில் சதிஷ் அசோக்கிடம் சொன்னான் “ மச்சி, நேற்று நானும் அவளும் Delhi-6 படத்திற்க்கு போனோம்’டா, அதை எப்படியோ இந்த பிரதாப் தெரிச்சுக்கிட்டு அவளுக்கு போன் செய்து டிஸ்டர்ப் செய்றான்’டா. பார்த்துக்கிட்டே இரு, இந்த பிரதாப் ஒரு நாள் என்கிட்ட நல்லா வாங்க போறான்.”

பிரதாப்பிடம் அசோக் இதை பற்றி கேட்ட போது, பிரதாப் சதிஷ் மேல் புகார்களை அடுக்கிக்கொண்டே போனான். அசோகிற்க்கு இந்த போட்டியில் பிரதாப்'தான் வெற்றி பெறுவான் என்று தோன்றியது.

இது நடந்த இரண்டு மாதங்களில் அவள் இந்த இரண்டு பேரிடமும் பேசுவதை குறைத்துக்கொண்டாள். சொல்ல போனால் அவள் இவர்களிடம் பேசுவதே கிடையாது. அவள் தற்பொழுது telecom Project'ல இருக்கும் அரவிந்தனுடம் சுற்றிக்கொண்டு இருப்பதாக அனைவரும் பேசிக்கொண்டனர். அரவிந்தனும் அவளும் காதலிப்பதாக சிலர் சொல்ல அசோக் கேள்விபட்டான்.

இன்று அசோக், பிரதாப், சதிஷ் எல்லாரும் பாரில் உட்கார்ந்து தண்ணியடித்துக் கொண்டு இருந்த போது, சதிஷ் சொன்னான் “ மச்சி, உங்களுக்கு matter தெரியுமா?? அரவிந்தனும், அவளும் நேற்று மாகாபலிபுரம் போய் இருக்காங்க. நான் அப்பவே அவளைப் பற்றி சந்தேகப்பட்டேன். இப்பொழுது conform ஆயிடுச்சு” என்றான்.

இதை கேட்ட பிரதாப் “ ஆமாம்’டா சதிஷ், நான் கூட அவளுடைய college பொண்ணு பவித்ராகிட்ட விசாரித்தேன். அவள் college'லயும் இப்படிதானாம். நமக்குதான் தெரியாம போச்சு.”

ஆறு மாதங்களுக்கு முன்னால் இதே பாரில் சதிஷும், பிரதாப்பும் அவளை தேவதை என்று புகழ்ந்து பேசியது ஞாபகம் வந்தது. அசோக் சிரித்துக்கொண்டான்.

சிறிது நேர அமைதிக்கு பிறகு சதிஷ் மீண்டும் அரம்பித்தான் “சரி பிரதாப், இந்த பவித்ரா எப்படி ??”.

கடவுளே கணபதி!!!!!!!

Sunday, September 19, 2010

Operation Green Hunt

செய்தி 1:

நாள்: 2 Jul 2010

நாமக்கல் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி மலைப்பகுதியில்  "பிளாட்டினம்" இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் இந்திய புவியியல் ஆய்வுத்துறை மற்றும் கனிமவளத்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது.

செய்தி 2:

நாள்: 6 Apr 2010

சத்தீஷ்கரில் தண்டேவாடே மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 73 சி.ஆர்.பி.எஃப் படையினர் கொல்லப்பட்டனர்.

விளக்கம்:

இந்த இரண்டு செய்திகளுக்கும் உள்ள தொடர்பை அறிந்துக்கொள்வதற்க்கு, முதலில் சத்தீஷ்கரின் தண்டேவாடே மாநிலத்தைப்பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும்.

தண்டேவாடே மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. இங்கு பின்தங்கிய என்றால், படிப்பறிவு சதவீதம் மிகவும் குறைவான, காடுகள் நிறைந்த வனப்பகுதி என்று சொல்லாம். அந்த பகுதி மக்களை மேம்படுத்த அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. " அந்த பகுதி மக்களுக்குப் படிப்பறிவை வளர்பதுதான் அந்த திட்டம் " என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் கண்டிப்பாக இந்திய நாட்டில் வசிக்கும் தமிழராக இருக்க முடியாது.

தண்டேவாடே மாவட்ட மக்களுக்காக அறிமுகம் செய்த திட்டத்தின் பெயர் "Operation Green Hunt". அதாவது அந்த மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியான சுமார் " 74 ஆயிரத்து 836 ஏக்கர் " நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு (டாடா மற்றும் எஸ்ஸார்) கொடுப்பது. தனியார் நிறுவனங்கள் அந்த நிலத்தில் தங்களுக்கு தேவையான் தொழில்சாலைகள் அமைத்து அந்தப் பகுதி மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். இந்த 74 ஆயிரம் ஏக்கர் தவிர்த்து மிச்சம் உள்ள இடத்தில் அந்த பகுதி மக்கள் சந்தோஷமாக இருக்கலாம். இதுதான் "Operation Green Hunt".

சரி, அந்த வனப்பகுதியில் ஏன் தொழில்சாலைகள் அமைக்க வேண்டும்??. ஏனென்றால் அந்த பகுதிதான் கனிம வளம் நிறைந்த பகுதியாகும்.

அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எல்லாம், பழங்குடி மக்கள். அதாவது காலம் காலமாக அங்கேயே வாழ்பவர்கள். நம் சென்னைவாசிகள் போல் அல்ல இவர்கள், ஒரு லட்சம் ரூபாய் அதிகமாகக் கிடைத்தால் நிலத்தை விற்றுவிட்டு போக.

74 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை பழங்குடியினரிடம் இருந்து கைப்பற்ற அரசால் முடியவில்லை. 5 சதவீத இடம்தான் அரசால் கையகப்படுத்த முடிந்தது. இதுவே அரசாங்கம் வழு கட்டாயமாக கைப்பற்றியதுதான். தங்களை கொடுமைப்படுத்திய அரசுக்கு எதிராக பழங்குடியினர் துப்பாக்கி எடுத்தனர். இதற்க்கு  மாவோயிஸ்டுகள் உதவி செய்தனர். தற்பொழுது அந்தப்பகுதியில் மாவோயிஸ்டுகளாக இருக்கும் முக்கால்வாசி பேர் பழங்குடியினரே, அவர்கள் யாரும் பிறக்கும்போதே மாவோயிஸ்டுகளால பிறக்கவில்லை. தங்களையும், தங்கள் நிலத்தையும் பாதுகாக்க அவர்களுக்கு வேறு வழிகள் தெரியவில்லை.

முடிவுரை:

விரைவில், இந்திய அரசாங்கத்துக்கு ஒரு விசயம் தெரிய வரலாம். அதாவது நாமக்கல் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர் என்று. அரசு அவர்களை மேம்படுத்த "Operation Green Hunt - 2" என்ற திட்டத்தை கொண்டுவரும். தமிழக அரசாங்க குடும்பத்திற்க்கு இது ஒரு 'ஜாக்பாட்' பரிசுதான், இதன்மூலம் "எந்திரன்" போல இன்னும் பல சமுதாய அக்கறைக்கொண்ட படங்கள் எடுக்கலாமே!!.

ஆனால் இப்படி எல்லாம் நடந்தால், ஏற்கனேவே கொந்தளித்து இருக்கும் தமிழர் சிலர் சும்மா இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் உருவாகும் நாள் மிக தொலைவில் இல்லை.

பின்குறிப்பு 1:

1854 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ·ப்ராங்க்லின் பியர்ஸ் செவ்விந்திய நிலப்பகுதியை வாங்குவதற்காக ஆட்களை அனுப்பினார். அப்பொழுது செவ்வியந்தியத் தலைவன் ஸியட்டில் சொன்ன பதில், (தமிழில் : சுகுமாரன் - உயிர்மை)

"நான் ஒரு காட்டுமனிதன்; என்னால் வேறு வகையில் புரிந்துகொள்ள முடியவில்லை. புல்வெளிகளில் செத்து அழுகும் ஆயிரக்கணக்கான எருமைகளை நான் பார்த்திருக்கிறேன். பாய்ந்து ஓடும் ரயிலிருந்து வெள்ளைக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டவை உயிர் வாழ்வதற்காக மட்டுமே நாங்கள் கொல்லும் எருமைகளை விட, புகை கக்கும் இரும்புக் குதிரைகள் எப்படி முக்கியமானவை என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு காட்டு மனிதன்.

விலங்குகள் இல்லாமல் என்ன மனிதன்? எல்லா விலங்குகளும் இந்த பூமியிலிருந்து போய்விடுமானால், பிசாசுத் தனிமையில் மனிதன் இறந்து போவான். விலங்குகளுக்கு நேர்வதுயாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.

எங்கள் காலடியில் உள்ள நிலம் எங்களுடைய மூதாதையரின் சாம்பல் என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். எனில் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். எங்களுடைய உடன்பிறந்தவர்களின் வாழ்க்கையால் வளமாக்கப்பட்டது இந்த பூமி என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இந்த பூமி எங்கள் தாய் என்று எங்களுடைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தோம் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். பூமிக்கு எது நேர்ந்தாலும், அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும். நிலத்தின் மீது துப்பும்போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக் கொள்கிறான்.

எங்களுக்குத் தெரியும் இது: பூமி மனிதனுக்கு உரிமையானதல்ல; மனிதன் பூமிக்கு உரிமையானவன். எங்களுக்குத் தெரியும் இது : ரத்தம் ஒரு குடும்பத்தை ஐக்கியப் படுத்துவதுபோல எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கு நேரிடும். வாழ்க்கை வலையை நெய்தவன் மனிதனல்ல. அவன் அதில் வெறும் கண்ணி. வலைக்குச் செய்வது எதுவாயினும் அவன் தனக்கே செய்து கொள்கிறான்"


இதன் முழுக்கட்டுரைக்கு இங்கே செல்லவும்.

பின்குறிப்பு 2:

கிழே உள்ள புகைப்படம் சமீபத்தில் நண்பன் திருமணத்திற்காக பொன்னமராவதி சென்றபோது எடுத்தது. இந்தப் புகைப்படத்தில் உள்ளது போல "சாவி வாங்கிக்கொண்டு திருடும் திருட்டுதான் இங்கு நடந்துக்கொண்டு இருக்கிறது".

Thursday, September 16, 2010

படித்ததில் பிடித்தது

உங்கள் அனைவருக்குமே தெரியும் நான் சாரு நிவேதிதாவின் தீவிர ரசிகன் என்று. என்னூல் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் சாரு, அந்தவகையில் அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவருடைய எத்தனையோ பதிவுகளை "படித்ததில் பிடித்தது" என்று இந்த வலைப்பதிவில எழுதிவிட்டேன். இனிமேல் அவரைப் பற்றி எழுதவே கூடாது என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் என்ன செய்ய??. "தான் சொல்லவருவதை அவரைவிட யாராலும் இந்தளவு தெளிவாகவும் ஆணித்தரமாக எழுதமுடியாது."

அவருடைய சமீபத்திய "அராத்து, கருந்தேள், கேள்வி பதில்" போன்ற பகுதிகள் ஒருவித சலிப்பைத்தான் எனக்கு தந்தது. "அனைவரும் சொல்வதுபோல், நம் சாரு உண்மையாகவே மாறிவிட்டாரா??" என்று ஒரு சந்தேகம் கூட வந்தது. எது எப்படியோ, அவர் தற்பொழுது எழுதியிருக்கும் "என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?" என்ற பதிவுக்காகவே அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடலாம்.

சாருவின் "என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?" பதிவில் இருந்து சிலவரிகள் கீழே,

(இது சாரு கட்டுரையின் ஒரு பகுதியே, தயவு செய்து அந்த கட்டுரை முழுவதையும் இங்கு கிளிக் செய்துப்படிக்கவும். நானும் ரஜினியின் ரசிகன் என்பதையும்  இங்கே சொல்லிக்கொள்கிறேன்)

"தன் மகள் திருமணத்துக்கு ரஜினிகாந்த் இதுவரை அவரைத் திட்டிய அரசியல் தலைவர்களுக்கெல்லாம் நேரில் போய் பத்திரிகை கொடுத்திருக்கிறார். ஆனால் தன் ரசிகர்களை மட்டும் திருமணத்துக்கு வர வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவரை எதிர்த்த திருமாவளவனோடும் பாமக தலைவர்களோடும் சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறார். ”அப்படியானால், அப்போது அந்தக் கட்சித் தொண்டர்களோடு மல்லுக்கு நின்ற எங்கள் நிலை என்ன?” என்ற அதிர்ச்சி அலை ரசிகர்களிடையே எழுந்தது. உடனே ரஜினியும் தன் ரசிகர்களை தனியாக அழைத்து, அவர்களுக்குத் தனியாக விருந்து வைக்க விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார். ரஜினி ரசிகர்களுக்கு இதை விட வேறு அவமானம் வேண்டாம்.

ரஜினி என்றுமே தன் ரசிகர்களை மதித்தது கிடையாது. அப்படி இருக்கும் போது ரசிகர்கள் ஏன் அவரை மதிக்க வேண்டும்?  ரஜினியின் படம் வந்தால் எல்லோரையும் போல் பார்த்து விட்டுப் போக வேண்டியதுதானே? ஏன் சொந்தக் காசை செலவழித்து ரசிகர் மன்றம் வைக்க வேண்டும்?  அவர் படம் வெளிவந்தால் ஏன் அவருக்கு 100 அடி உயர கட் அவுட் வைத்து பீர் அபிஷேகம் செய்ய வேண்டும்?  ரஜினி ’என் வீட்டுக்குத் திருமணத்துக்கு வராதே’ என்று சொல்வது போல், ’நாங்களும் உங்கள் படத்தைப் பார்க்க மாட்டோம்’ என்று கூட சொல்ல வேண்டாம்; குறைந்த பட்சம், படம் வந்த உடனே 500 ரூ. டிக்கட் கொடுத்துப் பார்க்காமல் இரண்டு வாரம் கழித்து 50 ரூ. கொடுத்துப் பார்க்கலாமே?  நம் மாமனோ மச்சானோ தன் வீட்டுத் திருமணத்துக்கு அழைக்காவிட்டால் அடுத்து அவர்கள் வீட்டு விசேஷத்தை ‘பாய்காட்’ செய்கிறோம் அல்லவா?  இதே ரோஷத்தை ரஜினியிடம் காட்டினால் என்ன?

லட்சக் கணக்கான ரசிகர்களை சமாளிக்க முடியாது என்று அவர் சொல்ல முடியாது.  அரசியல்வாதி கூட தன் தொண்டர்களை ’வாருங்கள் வாருங்கள்’ என்று அழைத்து பிரம்மாண்டமாய் கூட்டம் கூட்டி பிரியாணி பொட்டலம் கொடுக்கிறார்.  அரசியல்வாதிக்கு செல்வாக்கு இருக்கிறது, செய்கிறார் என்று பார்த்தால் ஆன்மீகவாதியும் பல்லாயிரக் கணக்கான பக்தர்களை ஒரே இடத்தில் கூட்டுகிறார். அப்படியிருக்கும் போது ரஜினியால் மட்டும் ஏன் முடியாது?  காரணம், மனம் இல்லை.  மனமிருந்தால் மார்க்கமுண்டு.

இன்னொரு கொடுமை.  நக்சலைட்டுகள் நான்கு போலீஸ்காரர்களைக் கடத்தி வைத்துக் கொண்டு, அதில் ஒரு போலீஸ்காரரைக் கொன்று போட்டிருக்கிறார்கள். அதே நாளில் இந்தியாவின் ஹோம் மினிஸ்டர் இங்கே சென்னையில் எந்தப் பதற்றமும் இல்லாமல் ரஜினி வீட்டுக் கல்யாணத்தில் விருந்து சாப்பிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்."


 (இது சாரு கட்டுரையின் ஒரு பகுதியே, தயவு செய்து அந்த கட்டுரை முழுவதையும் இங்கு கிளிக் செய்துப்படிக்கவும்)

Friday, September 10, 2010

ஒரு கிறுக்கல்

அவளுக்கு நான் ஒரு முத்தம் கொடுக்கவேண்டும். மீண்டும், மீண்டும் எனது காதலை, சொற்களால் அவளுக்கு புரியவைக்க விரும்பவில்லை. ஒரே ஒரு முத்தம் போதும், அந்த ஒரு முத்தத்தில் எனது காதல் முழுவதையும் அவளுக்கு புரியவைத்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

முதலில் அந்த முத்தத்திற்கு அவளை சம்மதிக்க வைக்கவேண்டும். ஒரு முத்தத்தால் அவள் கற்புக்கு எந்த ஒரு பாதிப்பும் வந்துவிடாது என்பதை அவளுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஒரு முத்தத்தால, கருவில் குழந்தை உருவாகிவிடும் என்று நம் தமிழ்சினிமாக்கள் உருவாக்கியிருக்கும் மாய தோற்றத்தை அவளிடம் இருந்து உடைக்க வேண்டும்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரே முத்தத்தால் என் காதலை அவளுக்கு புரியவைக்கமுடியும் என்று. என்னையே அவளுக்கு முழுவதுமாக தந்துவிட முடியும் என்று. என்னை அவள் புரிந்துக்கொள்ள முடியும் என்று. எப்படி ஒரே முத்தத்தில் இவை எல்லாம் சாத்தியம் என்று கேட்கிறீர்களா??. நான் இதைபற்றி ஒரு நொடிகூட சந்தேகப்படவில்லை. ஆகவே அதை பற்றி நான் யோசிக்கவே விரும்பவில்லை.

அந்த முத்தத்தை எங்கே, எப்பொழுது, எப்படி தரவேண்டும் என்பதை நான் முன்கூட்டியே முடிவு செய்துவிட்டேன். ஒரு நாடகத்தின் ஒத்திகையை போல அவை என் மனக்கண்ணில் எப்பொழுதும் இருக்கிறது. அந்த முத்தம் இதுவரை எந்த ஒரு காதலனும் தன் காதலிக்கு தராத ஒன்றாக இருக்கும்.

இது எத்தனையோ அங்கிலப் படங்களை பார்த்து உருவாக்கிய முத்தம் அல்ல. முற்றிலும் என் உணர்ச்சிகளால், என் உண்மையான காதலால் உருவாக்கபட்ட முத்தம்.

அந்த முத்தத்தை அவள் உதட்டில்தான் தரவேண்டும். அதுவும் முக்கியமாக கீழ் உதட்டில். நாங்கள் முத்தம் தரும்போது, அவள் கைகள் என் பின்தலை முடிகளை கோதிக் கொண்டு இருக்கும். நான் என் ஒரு கையால் அவள் பின்தலையையும், மற்றொரு கையால் அவள் இடுப்பையையும் பிடித்துக்கொள்வேன். அவள் அன்று புடவை அனிந்துவந்தாள், இன்னும் உத்தமம். அப்பொழுதுதான் என் கைகளால் அவள் இடுப்பு பகுதியை முழுமையாக தொட முடியும். இதனால் கைகளுக்கும், இடுப்புக்கும் ஒரு உஷ்னம் பரவும். தோல்கள் உரசும் போதுதான் உண்மையான காதல் வெளிப்படும் என்று நம்புகின்றவன் நான். நீங்கள் நினைப்பது போல் இந்த முத்தத்தை ஒரு விநாடியோ, ஒரு நிமிடமோ, ஒரு மணிநேரமோ தரப்போவது இல்லை. யுகங்கள், யுகங்களாக தர வேண்டும். எதைப்பற்றியும் கவலைப்படாமல், விண்வெளியில், ஆகாயத்தில், மேக கூட்டத்தின் நடுவில், பனிவிழும் மலைகளில், கடல்நீருக்கு அடியில், காற்றில் என்று எல்லா இடங்களிலும், யுக யுகங்களாக தரவேண்டும்.

இது காதல் இல்லை காமம் என்கிறீர்களா?, எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. காமம் இல்லாத காதல் ஏது??. காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமே காமம்தானே??. இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், காதலுக்கும் காமத்திற்க்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்ள வேண்டியது. அதை பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்டு என்னிடம் வாருங்கள், என் முழுக்கதையையும் உங்களிடம் சொல்கிறேன். அதுவரை என் காதல், அவளைப்போலவே உங்களுக்கும் புரியாது.

Tuesday, September 7, 2010

ஒரு மனிதன் வாழ்வதற்க்கு தன்னம்பிக்கையை தாருங்கள், பிச்சையை அல்ல

“இந்த பதிவை யார் மனதையையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை”
இரண்டு மாதங்களுக்கு முன்னால், வலையில் மேய்ந்து கொண்டு இருந்தபோது. ஒரு பெண் வலைப்பதிவாளர் எழுதிய ஒரு பதிவை படிக்க நேர்ந்தது. அதன் சுருக்கம்

“ கற்றது தமிழ் படத்தின் கதாநாயகன் போல் உண்மையில் யாராவது இருக்கிறார்களா என்று பல நாட்களாக சந்தேகம் இருந்தது. ஆனால், அவரை பார்த்தவுடன் அந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது. கிட்டத்தட்ட அவர் கற்றது தமிழ் ஜீவா மாதிரியே இருப்பார். சொந்தக்கார பையந்தான். சில நாட்கள் மனநல காப்பகத்தில் கூட வைத்து இருந்தார்கள். இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார். அவரைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கும். தினமும் போனில் அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறேன். சில நாட்கள் வேலை காரணமாக நான் போன் செய்ய மறந்தால் கூட, அவரே போன் செய்து “என் இன்று போனில் பேசவில்லை” என்று விசாரிக்கிறார். முன் எல்லாம் அவருடன் ரோட்டில் தனியாக நடக்கவே பயமாக இருக்கும். இப்பொழுது எல்லாம் அப்படி இல்லை. ”

இதுதான் அவர் எழுதி இருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் ” இந்த பதிவுக்கு நான் பார்த்த போதே 30 பின்னுட்டம் . இப்பொழுது எத்தனை என்று தெரியவில்லை”. அந்த பின்னுட்டம் எல்லாம் இப்படிதான் இருந்தது “ ஒரு மனிதனை திருத்தியதற்க்கு வாழத்துக்கள்” “ சூப்பர்” என்று. அதில் சில அறிவுஜீவிகள் சந்தேகம் வேறு கேட்டு இருந்தார்கள்.

நான் படித்தவுடன் அந்த வலைப்பதிவின் முகவரியை கூட பார்க்காமல் அப்படியே மூடிவிட்டேன்.

நீங்கள் இதைப்படிக்கும் போது உங்களுக்குள் என்னவிதமான எண்ணங்கள் உதிக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், சத்தியமாக எனக்கு தோன்றியது “ அந்த பதிவை எழுதியவரையும், அதற்கு பின்னுட்டம் எழுதியவர்களையும் ஒன்றாக நிற்க்கவைத்து கன்னத்தில் பளார் என்று அறையவேண்டும் ”.

ஒருவர் ஒருவனை தற்கொலைக்கு தூண்டுகிறார். அதற்க்கு பலர் பின்னுட்டம் எழுதுகிறார்கள். இதுதான் எனக்கு தோன்றியது.

நான் இப்படி சொல்வதற்க்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. கண்டிப்பாக ஒரு நாள் அவருக்கும் தெரியவரும், நம் மீது இரக்கப்பட்டு தான் அனைவரும் அன்பு காட்டுகிறார்கள் என்று. அது தெரியவரும்போது அவர் மீண்டும் பழைய நிலையைவிட மோசமாக போக வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் யார் மீதாவது இரக்கப்பட்டு அன்பு செலுத்துகிறீர்கள் என்றால், அது ஒரு பிச்சைக்கு சமம். ஒரு மனிதன் வாழ்வதற்க்கு தன்னம்பிக்கையை தாருங்கள், பிச்சையை அல்ல.

Monday, September 6, 2010

கதைகள்

கடந்த ஒரு மாதமாக எதுவும் எழுத முடியவில்லை. எதைப்பற்றி எழுத ஆரம்பித்தாலும் முதல் வரியை தாண்ட முடியாமல் தள்ளாடுகிறேன். இப்படி கடந்த ஒரு மாதத்தில் எழுத முடியாமல் நின்று போனவையின் எண்ணிக்கை கண்டிப்பாக நாற்பதை தாண்டி இருக்கும். எனக்குள் ஒரு பயமே வந்துவிட்டது, இனி நம்மால் எதுவும் புதிதாக எழுத முடியாதா என்று. அந்த ஒரு பயத்தில் எழுதியதுதான் கடந்த பதிவு. ஏதாவது எழுதியாக வேண்டும், என்று எழுதியது.

அது ஒரு சாதாரணப் பதிவாக இருந்த போதும்,. என்னால் தொடர்ந்து எழுத முடியும் என்ற நம்பிக்கையை எனக்கு அது தந்தது. இப்படி எல்லாவற்றிக்கும் நமபிக்கை ஏற்படுத்த, ஏதோ ஒன்று நமக்கு தேவைப்படுகிறது.

இந்த உலகமே கதைகளால் உருவாக்கபட்டது. ஆதி மனிதன் ஆதாமிடம் தொடங்கியது நமது கதைகள். இந்த உலகத்தின் முதல் கதையின், முதல் கதாநாயகன் அவன். அதன் பின் வந்த ஒவ்வொரு மனிதனுக்கும் நாம் ஒரு கதையை உருவாக்கி வைத்துள்ளோம். ஏன், உங்கள் தாத்தா, பாட்டி பற்றிக் கூட, யாரோ ஒருவர், யாரிடமோ கதை சொல்லிக்கொண்டு இருக்கலாம்.

ஒவ்வொரு மனிதனிடமும், அவனுக்கு மட்டுமே தெரிந்த, அவனைப்பற்றிய கதை ஒன்று இருக்கிறது. அதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று ஒரு பக்கம் ஏங்குகிறான். இன்னொரு பக்கம், அது யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று பயப்படுகிறான்.

உங்களுக்கே தெரியாமல், உங்களைப்பற்றி வெளியில் ஒராயிரம் கதைகள் உலாவிக்கொண்டு இருக்கின்றன. நீங்கள் பெண் என்றால், இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்ட கூட வாய்ப்பு இருக்கிறது.

கதைகளை போலவே புரளிகளுக்கும் நமக்கு பஞ்சம் இல்லை. புரளிகள் ஒரு கூறிப்பிட்ட காலக்கட்டத்தில் அழிந்துவிடுகிறது. ஆனால், கதைகள் அப்படி அல்ல, அது கால் முளைத்து, கை முளைத்து அந்த காலகட்டத்துக்கு தகுந்தால்போல் தனனை மாற்றிக்கொள்கிறது,

“ தியான வகுப்பில் சேர போகிறேன்” என்று விளையாட்டாக ஒருவனிடம் நான் சொல்ல, கொஞ்ச நாடகளில் “அவன் சாமியாராக மாறி, இப்பொழுது வெள்ளியங்கிரி மலையில் இருக்கிறான்” என்று ஒரு கதை உருவாகி என்னிடமே வந்தது. என்னைப்பற்றி நன்கு அறிந்த சிலர், இந்தக்கதையை எபபடி நம்பினார்கள் என்று இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது.

கதைகளை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஒரு கதையை உருவாக்குவதற்க்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.

இரண்டாம் வகுப்பு படிக்கும் பக்கத்துவீட்டு பையன்கூட, என்னிடம் சொல்ல ஒரு கதை வைத்து இருக்கிறான். “ டோரா ஒரு நாள் காட்டுக்கு போச்சா. அங்கே காணாமல் போச்சு” இப்படித்தான் தொடங்குகிறது அவன்சொல்லும் கதைகள்.

இப்பொழுது என்னிடம் முதல் வரியை மட்டுமே கொண்ட நாற்பதுக்கும் மேற்பட்டக்கதைகள் இருக்கின்றன. இனி அவற்றை வார்த்தைகளால் நிரப்ப வேண்டும். என்னை சுற்றி உள்ள மனிதர்களோடு அந்த கதைகளை இனைக்க வேண்டும். சில உண்மைகளையும், பல பொய்களையும் சொல்லி படிப்பவர்களை கவர வேண்டும். தேவைப்பட்டால், எஸ்.ரா, சாரு, ஆதவன் போன்றோரின் வரிகளை திருடி எனது கதைகளில் இனைக்க வேண்டும். இதை சொல்வதற்க்கு எனக்கு எந்த ஒரு வெட்கமும் இல்லை. யாராலும் சொந்தமாகக் வார்த்தைகளை நிரப்பி, கதைகளை எழுத முடியாது, கண்டிப்பாக யாரோ ஒருவரின் உதவி தேவைப்படுகிறது. இதுதான் உண்மை.

Saturday, September 4, 2010

புரிந்தும் புரியாமலும் - II

”ஹலோ,

“ம். சொல்லு”

“இப்பத்தான் டா, உன் ப்ளாக்’யை படித்தேன். உண்மையாவே அந்த பொண்ணுகிட்ட ‘I Love You” சொல்லிட்டியா??”.

“ஆமாம்”

“அடப்பாவி, அந்த பொண்ணு என்ன சொன்னுச்சு??”

“அதான் எழுதியிருந்தேன்’ல!!, அதைத்தான் சொன்னுச்சு”

”சரி, இதைலாம் ப்ளாக்’ல எழுதுவியா?? உனக்கு அறிவே இல்லையா?? அந்த பொண்ணு படிச்சா, உன்னைப்பற்றி என்ன நினைப்பாள்”

“அவளாம் என் ப்ளாக்’யை படிக்க மாட்டா. படிச்சாலும் அவளுக்கு நான் யாரைப்பற்றி எழுதியிருக்கேனு தெரியாது. அவளை பொருத்தவரை, நான் தினமும் ஒரு பொண்ணுக்கு ’ ‘I Love You’ சொல்றவன்”.

“ஏன்டா, இப்படி ரொம்ப vex ஆகி பேசுற!!.. சரி, நாளைக்கு வீட்டுக்கு வா?. அம்மா வரச்சொன்னாங்க”

“யே, அம்மாகிட்ட எதாச்சும் இதைப்பற்றி சொல்லிட்டியாடி”

”ஹா, ஹா.. ஏன்டா, இந்த பயம் இருக்குதுல, அப்பறம் என் இதைலாம் எழுதுற!!. நான்லாம், அம்மாகிட்ட ஒன்னும் சொல்லல. நீ நாளைக்கு வந்து ஒன்னும் உளறாமல் இருந்தா சரி”

“எனக்கு என்னமோ உன் மீது சந்தேகமா இருக்கு. நான் அடுத்த ஞாயிற்று கிழமை வரேன். நாளைக்கு பசங்க’கூட வெளியில போலாம்னு இருக்கேன்”

”அதுலாம் எனக்கு தெரியாது. ஒழுங்கா, நாளைக்கு மத்தியானம் சாப்பிட வர. சிக்கன் பிரியாணி. அப்பறம் பின்னாடி வருத்தபடுவ”

”யே, புரிஞ்சுக்கோ. அடுத்த வாரம் வரேன். அம்மாகிட்ட எதாவது சொல்லி நீ சமாளி”

“அடுத்த வாரம்’லாம் உனக்கு வீட்ல ‘No Entry’. என்னை பெண் பார்க்க வராங்க”

“துரோகி, சொல்லவே இல்ல. மாப்பிள்ளை யாரு. ஏதோ MEPZ பக்கத்துல வீடு, Infosys’ல வேலை பார்க்கிறானு ஒரு தடவை அம்மா சொன்னாங்கல. அவனா??”

“நாளைக்கு வீட்டுக்க்கு வா, அம்மா ‘Full Detail’ சொல்லுவா. நான் இப்ப ரொம்ப பிஸி பா”

“சரி பொழைத்து போ. நாளைக்கு வீட்டுக்கு வரேன்”

“ம், அந்த பயம். சரி, நான் உன்கிட்ட அப்பறம் பேசுறேன். Bye Bye”

“யே, அப்படியே என் ப்ளாக்’ல கொஞ்சம் Comments எழுது பா”

“டேய், நீ திருந்தவே மாட்டியா. சரி. Will try. Bye bye.”

“Bye”