Sunday, October 31, 2010

Animal Farm (விலங்குப் பண்ணை) - by George Orwell

நான் ஆங்கில புத்தகங்கள் அதிகம் படிப்பதில்லை. சமீபத்தில் மற்றொரு புத்தகத்தை தேடி சென்றபோது, கையில் கிடைத்தது "Animal Farm". ஏற்கனவே கேள்விப்பட்ட நாவல் என்பதைவிட அதன் ஸீரோ சைஸ் என்னை ஈர்த்தது. (மொத்தம் 90 பக்கங்கள்தான்).

முதலில் கிழே உள்ள ஒரு மேலோட்டக் கதையை படியுங்கள்.

"அரசாட்சி நடக்கும் நாடு. ஒரு நாள், ஒரு வயதானவர் அங்கு உள்ள மக்கள் அனைவருக்கும்  கம்யூனிசம் பற்றி விளக்குகிறார். "எல்லாருக்கும் சுதந்திரம், நம் உழைப்பு நமக்காவே, நாமே ராஜா  நாமே மந்திரி" என்று அவர் சொல்ல சொல்ல மக்கள் அனைவரும் சுதந்திர கனவினைக் காண தொடங்குகிறார்கள். அடுத்த சில நாட்களில் அந்த வயதானவர் இறந்து விடுகிறார். நாடு முழுவதும் புரட்சி வெடிக்கிறது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக போராடுகிறார்கள். அரசன் பயந்து நாட்டை விட்டு ஒடுகிறான். அவர்கள் நாடு சுதந்திரம் அடைகிறது. மக்கள் சந்தோஷத்தில் குதுகலம் அடைகிறார்கள். மக்கள் பிரதிநிதியாக இருக்க இருவர் முன்வருகிறார்கள். அவர்கள் மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களை உருவாக்குகிறார்கள். மக்களாட்சி ஆரம்பமாகிறது. எங்கும் கம்யூனிசம். மக்கள் ஒருவரை ஒருவர் "காம்ரேட்" என்று அழைத்துக்கொள்கிறார்கள்."

"நாடு செழிப்பாக மாறுகிறது. பக்கத்து நாட்டில் உள்ள அரசர்கள் இதை பார்த்து போராமை கொள்கிறார்கள். போருக்கு வருகிறார்கள். ஆனால், மக்கள் ஒற்றுமையாக போராடுவதால் எதிரி நாட்டு அரசர்கள் தோல்வியடைகிறார்கள். போரில் இறந்தவர்கள் தியாகிகள் என்று அறிவிக்கபடுகிறது. மக்கள் பிரதிநியாக தேர்தேடுக்கப்பட்ட இருவருக்குள் எப்பொழுதும் கருத்து வேறுபாடு இருந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் அது உச்சத்துக்கு போக, ஒருவனை மற்றொருவன் படைவீரர்கள் வைத்து கொன்றுவிடுகிறான். அதன் பின், அவன் கொஞ்ச கொஞ்சமாக சர்வதிகாரியாக மாறுகிறான். எதிர்த்து பேசினால் மரணம் நிச்சயம் என்பதால், மக்கள் அனைவரும் பயத்துடன் வாழ்கிறார்கள். முன்னர், அரசாட்சியில் இருந்ததை விட அவர்களின் நிலைமை மோசமாக இருக்கிறது. ஆனால், முன்னரை விட இப்பொழுது சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் இருப்பதாக நம்ப தொடங்கினர்."

மேலே சொன்ன மேலோட்டக் கதையை, குழந்தைக்களுக்கும் புரிவது போல், தெளிவாகவும், விரிவாகவும், மனிதர்களுக்கு பதிலாக மிருகங்களை வைத்து சொன்னால் எப்படி இருக்கும், அதுதான் George Orwell எழுதிய "Animal Farm".

"ஒரு பண்ணையில் வாழும் மிருகங்கள் அனைத்தும், அந்த பண்ணை உரிமையாளரை  விரட்டிவிட்டு, மிருகங்களின் அரசாங்கத்தை அமைக்கின்றன. வெள்ளை பன்றிகள் தலைமை பொருப்பை ஏற்கின்றன. மிருகங்களின் அரசாங்கம் என்ற போக்கு மாறி, கொஞ்ச கொஞ்சமாக பன்றிகளின் சர்வதிகார ஆட்சியாக மாறுகிறது. இதுதான் Animal Farm‘ன் ஒன்லைன் ஸ்டோரி.



George Orwill இந்த கதையை  எழுதியது 1935‘களில். அதாவது உலகம் முழுவதும் கம்யூனிசம் என்ற புதிய சித்தாந்தம் சுடர்விட்டு எரிய துவங்கிய காலம். கம்யூனிசத்திற்க்காக பலர் தங்கள் உயிர்களை கூட துறக்க தயாராக இருந்தனர். கவிஞர்கள் புதிய புரட்சி கவிதைகளை எழுதி குவித்த நாட்கள். வருமையின் பிடியில் சிக்கிக்கொண்டு எதாவது மாற்றம் வருமா?? என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருந்ததனர். இந்த காலக்கட்டத்தில் தான், கம்யூனிசத்தை பற்றி George Orwill இந்த நாவலை எழுதினார்.

இதனை கம்யூனிச எதிர்ப்பு நாவல் என்று சொல்லி நிராகரித்துவிட முடியாது. கம்யூனிசத்தின் எழுச்சி மற்றும் தோல்வி ஆகிய இரண்டை பற்றியும் இந்த நாவல் சொல்கிறது. ஒரு முழுமையான கம்யூனிச ஆய்வு நாவல் என்று இதை சொல்லலாம்.

கதையில் வரும் இரண்டு பன்றிகள் Nepoleon,Snowball ஆகியவை  ஸ்டாலின், லெனின் ஆகியோரை குறிக்கிறது என்பதை அனைவராலும் சுலபமாக ஊகித்து விடமுடியும். முதல் முதலாக சுதந்திரத்தை பற்றி பேசும் Old Major என்ற கதாபாத்திரமும் Karl Marx‘தான் என்பது சுலபமாக புரிந்துவிடுகிறது. இப்படி ரஷ்யா, அமெரிக்கா, அந்த காலத்து புகழ் பெற்ற கவிஞர்கள், போர் தளபதிகள் என்று அனைவருமே இந்த Animal Farm நாவலில் இருக்கிறார்கள்.

விலங்குகள் சுதந்திரம் அடைந்தவுடன், அவர்கள் தங்களுக்குள் கொண்டுவரும் ஏழு கட்டளைகள்,

1. Whatever goes on two legs is an enemy.
2. Whatever goes on four legs, or has wings, is a friend.
3. No animal shall wear clothes.
4. No animal shall sleep in a bed.
5. No animal shall drink alcohol.
6. No animal shall kill any other animal.
7. All animals are equal.

இந்த கட்டளைகள் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு இப்படி முடிகிறது,

1. No animal shall sleep in a bed. with sheets
2. four legs good, two legs better
3. No animal shall drink alcohol. to excess
4. No animal shall kill any other animal. without cause
5. All animals are equal. but some animals are more equal than others

கம்யூனிசம் பற்றி புரிந்துக்கொள்ள கண்டிப்பாக இந்த நாவல் உதவும். அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.

பின்குறிப்பு: "விமர்சன கட்டுரைகள் எழுதுவதற்கு நீ லாய்க்கற்றவன்" என்று நண்பன் ஒருவன் என்னிடம் சொல்கிறான். இது எனக்கும் தெரிந்ததுதான். என்ன செய்ய?? நமக்கு வராது என்று தெரிந்த ஒன்றைத்தானே எப்பொழுதும் செய்ய ஆசைப்படுகிறோம். 

Friday, October 29, 2010

Kikujiro, மிஷ்கின், நந்தலாலா

Question: Is Nandalala inspired from a Japanese film?

Mysskin: Now, I cannot answer this question and convince anyone. When my film is released, you can take the DVD of the Japanese film and then compare and say. Of course, I am an ardent fan of Takeshi Kitano. In fact, you can call him my guru. In a way his Kikujiro stimulated me to take Nandalala but Nandalala is not Kikujiro. You can tell me this after you see the film.

முழு பேட்டிக்கு இங்கு கிளிக் செய்யவும்: http://www.behindwoods.com/features/Interviews/interview-5/director/mysskin-01.html
 
மேலே உள்ள மிஷ்கினின் பேட்டியை ரொம்ப நாட்களுக்கு முன்னாலேயே படித்திருக்கிறேன், இந்த பேட்டியை படித்த பின் தான் "Mystic Rivers" திரைப்படத்தை தேடிபிடித்து பார்த்தேன். (இனையம் வந்த பிறகு இந்த தேடிபிடித்து என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. Mystic Rivers திரைப்படத்தை தேடிபிடிக்க எனக்கு 2 நிமிடங்களே தேவைப்பட்டது. டவுன்லோட் செய்வதற்க்கு தான் நான்கு மணிநேரமாகியது). இனிமேல் யாராவது "அஞ்சாதே" திரைப்படம் Mystic Rivers’ன் காப்பி என்று சொன்னால், அவர்களை கொலை செய்யாமல் விடுவதாகயில்லை.

இதே பேட்டியில்தான் மிஷ்கின்  "Kikujiro" திரைப்படத்தைப் பற்றி பேசியிருந்தார். ஏனோ, அப்பொழுது அந்த திரைப்படத்தை  பார்க்கும் ஆவல் சுத்தமாக இல்லை. பின், அப்படியே மறந்துவிட்டேன். சமீபத்தில் "நந்தலாலா" பற்றி நான் எழுதிய ஒரு பதிவுக்கு, பின்னூட்டம் எழுதிய நண்பர் ஒருவர் Kikujiro பற்றி சொல்லியிருந்தார். Kikujiro திரைப்படத்தின் விளம்பரத்தை பார்த்தவுடனேயே பார்க்க தூண்டியது. வழக்கம் போல், இந்த திரைப்படத்தையும் கஷ்டப்பட்டு தேடிபிடித்து பார்த்தேன். (இந்தமுறை 3 நிமிடம் தேவைப்பட்டது).

ஒரு சிறு பையன் அவன் அம்மாவை தேடி பல நூறு மைல் தூரம் இருக்கும் ஊருக்கு போகிறான். அந்த பையனுக்கு துணையாக பக்கத்து வீட்டில் வசித்த பெண், தன் கணவனை அனுப்புகிறாள். அந்த பெண்ணின் கணவன் ஒரு ரவுடி. அவனும் அந்த பையனும் பயணம் செய்யும் போது சந்திக்கும் மனிதர்களை பற்றியதுதான் இந்த படம். நந்தலாலா திரைப்படத்தின் கதையும் இதுதான், ஆனால் இதில் பையனுக்கு உதவுபவன் ஒரு மனநோயாளி என்று மிஷ்கின் ஒருமுறை சொன்னதாக ஞாபகம். ஆகவே கண்டிப்பாக நந்தலாலா திரைப்படம் ஒரு முழு காப்பி அல்ல என்று நம்பலாம். அப்படி காப்பியாக இருந்தாலும் கூட ஒரு பிரச்சனையும் அல்ல, ஒரு நல்ல திரைப்படம் தமிழுக்கு வருவது நல்லது தானே???

Kikujiro திரைப்படம் ஒரு குழந்தையின் பார்வையிலேயே முழுவதும் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் உலகம் வித்தியாசமானது, அவர்களை பொறுத்தவரை கெட்டவர்கள் என்று யாருமே இல்லை. இந்த திரைப்படத்திலும் கெட்டவர்கள் என்று யாரும் இல்லை (பூங்காவில் சிறுவனை வன்புணர்ச்சி செய்யமுயலும் ஒருவனை தவிர. அவனும் சில நிமிடங்கள்தான் வருகிறான்). மற்றபடி படம் மிகவும் அமைதியாகவே செல்கிறது, ஒரு தெளிந்த நீரோடை போல.

நம் தமிழ் திரைப்படங்களில் குழந்தைகள் என்றாலே, அவர்கள் மிகவும் புத்திசாலியாக இருக்கவேண்டும், தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். அஞ்சலியில் மணிரத்னம் ஆரம்பித்து வைத்த டிரண்ட் என்று நினைக்கிறேன். ஆனால் இந்த திரைப்படத்தில் Masao என்ற கதாபாத்திரத்தில் வரும் சிறுவன் அதிகம் பேசுவதில்லை, அதிகமாக அவன் சொல்வது "ம்" மட்டும்தான். அதேபோல் மெல்லிய காமெடி திரைப்படம் முழுவதும் மறைந்திருக்கிறது.

கேமராவை பற்றி கண்டிப்பாக சொல்லவேண்டும், பல காட்சிகளை கேமராவை Constant’ஆக  ஒரே இடத்தில் நிற்கவைத்து எடுத்திருக்கிறார்கள், இதே போன்ற கேமரா கோணங்களை  "அஞ்சாதே" திரைப்படத்திலும் பார்க்கலாம். Backround’ல் வரும் அந்த டீம் மியுசிக்கும் அருமை.  

வழக்கம் போல் விக்கிப்பீடியாவில் தேடிபிடித்ததில் கிடைத்த சில தகவல்கள் (இந்த முறை 1 நிமிடத்துக்கும் குறைவாகவே)

திரைப்படம் பெயர்: Kikujirô no natsu
டைரக்டர் பெயர்: Takeshi Kitano
Masao காதாபாத்திரம்: Yusuke Sekiguch
Kikujiro காதாபாத்திரம்: Takeshi Kitano
மேரா: Yangijima Katsumi

நந்தலாலா "Kikujiro" திரைப்படத்தின் காப்பியா?? என்பதை, நந்தலாலா திரைப்படத்தை பார்த்த பின்தான் முடிவு செய்யவேண்டும். இப்பொதைக்கு இது தேவையில்லாத ஒன்று, அப்படியே Kikujiro திரைப்படத்தை பார்த்து நந்தலாலா’வை எடுத்திருந்தாலும், நம் அமீரை போல் மிஷ்கின் கொலை செய்திருக்க மாட்டார் என்று சத்தியமாக நம்பலாம்.
 
(எனக்கு ஏற்கனவே தமிழ் வராது. ஆகவே பெயர்களை அனைத்தையும் ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டேன்)

Wednesday, October 27, 2010

பாரதியின் கதைகள்

கீழே உள்ள புகைப்படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா?? நன்றாக பாருங்கள், நமக்கு மிகவும் தெரிந்தவர்தான்.


அவர் வேறு யாரும் இல்லை, நம் "மகாகவி பாரதியார்" தான். என்ன வியப்பாக இருக்கிறதா?? அதே போன்ற ஒரு வியப்பைத்தான், அவரின் "காக்காய் பார்லிமெண்ட்" என்ற கதையை படிக்கும்போது நான் உணர்ந்தேன். புதுமைப்பித்தன் கதைகளில் இருக்குமே ஒரு நையாண்டி கலந்த நகைச்சுவை எழுத்து, அதே போன்றுதான் இந்த கதையும் உள்ளது. பகடி கலந்த புனைவு என்றுகூட சொல்லலாம்.

புதுமைப்பித்தன் எழுத்துக்கே பாரதியார்தான் முன்னோடி என்று நான் பலமுறை கேள்விப்பட்டது உண்டு, ஆனால் அதை முதல் முறையாக இப்பொழுது உணர்கிறேன்.

பாரதியார் கவிதை எழுதுவதில் மட்டும் இல்லாமல், கதை எழுதுவதிலும் வல்லவராக இருந்து உள்ளார். பின், ஏன் அவர் தொடர்ந்து கதைகள் எழுதவில்லை?? என்று தெரியவில்லை.

நம்மை பொருத்தவரை  பாரதியார் என்றால் அவர் கவிதைகள்தான் நினைவில் வரும். எனக்கு பிடித்த கவிஞர்களில் முதலில் இருப்பவர் பாரதியார். பாரதியாரிடம் எல்லாவற்றிக்கும் கவிதை இருக்கும். "நீங்கள் ஒரு யுத்தத்தில் வெற்றி அடையும் போது, காதலியை பிரியும் போது, காதலியுடன் இனையும் போது, கடவுளை  வேண்டும்போது, தாய் மண்ணை நினைக்கும் போது" இப்படி எல்லாவற்றிக்கும் கவிதை  எழுதிருக்கிறார்.

"காக்காய் பார்லிமெண்ட்" என்ற அந்த கதையை நீங்கள் இங்கு படிக்கலாம்.

http://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_27.html

காக்காய் பார்லிமெண்ட் கதை தற்பொழுதைய காலத்துக்கும் தகுந்தால் போல் உள்ளது. இப்பொழுது படிக்கும்போது, ஏதோ நம் தமிழ்நாட்டு முதல் அமைச்சரையும், அவர் குடும்பத்தையும் பகடி செயவது போல் இருக்கிறது. இந்த கதையில் அவர் "காக்காவின் பாஷை" அகராதியைப் பற்றி சொல்லும் போது சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதே போல் கீழே உள்ள வரிகளை படித்து பாருங்கள்,

"நான் சொல்வதுதான் சரியான பிரயோகம் என்பதற்கு போகர் இலக்கணத்தில் ஆதாரமிருக்கின்றது. “போகர் இலக்கணம் உமக்கு எங்கே கிடைத்தது?” என்று கேட்கலாம். அதெல்லாம் மற்றொரு சமயம் சொல்லுகிறேன்."

இதே போன்ற எழுத்தை புதுமைப்பித்தன் கதைகளிலும் காணலாம்.

இந்த கதையை  முடிக்கும் போது, "இது நிஜமாக நடந்த விஷயமில்லை. கற்பனைக் கதை" என்று முடித்து உள்ளார். அந்த கடைசி வரி மட்டும் தேவையில்லாத ஒன்று என்று தோன்றுகிறது. ஒருவேளை, அந்த காலத்தில் இது போன்ற கதைகள் ஒரு புதிய முயற்சி என்பதால், மக்களுக்கு புரியும் பொருத்து, அந்த வரியை எழுதியிருக்கலாம்.

இந்த வார இறுதியில் பாரதியாரின் கதைகள் தொகுப்பை வாங்கி எல்லா கதைகளையும் படிக்கலாம் என்று இருக்கிறேன். "அவரின் கவிதை தொகுப்பை  போல், கதை தொகுப்பையும் யாராவது வெளியிட்டு இருக்கிறார்களா என்ன??".

Tuesday, October 26, 2010

ஒரு செவிவழிக் கதை

"என்னப்பா, நம்ம சொந்தத்திலேயே அழகா ஒரு அஞ்சு பொண்ணுங்க இருக்கு. அதுல ஒன்ன பார்த்து உனக்கு  முடிச்சிடலாமா??".

இப்படித்தான் அசோக்கின் தாத்தா, அவனிடம் பேச ஆரம்பித்தார். தாத்தா, அசோக்கை தனியாக கூப்பிடும் போதே, இதில் ஏதோ வில்லங்கம் இருக்கு என்று அசோக்கிற்கு தெரிந்துவிட்டது.

"உன் அப்பன்கிட்ட பேசித்தேன். இந்த காலத்து பசங்க யாரையும் நம்ப முடியாது, நீங்களே அசோக்கிடம் பேசி ஒரு முடிவுக்கு வாங்கனு சொல்லிட்டான். ஏன்டா?? உன் மனசுல எதாச்சும் இருந்தா இப்பவே சொல்லிடு" என்றார்.

"அதுலாம் ஒன்னும் இல்ல தாத்தா. இப்ப என்ன கல்யானத்துக்கு அவசரம். கொஞ்ச நாள் ஆகட்டும்"

"பொண்ணை பார்த்து, நாளைக்கே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறமாதிரி பேசுற. இப்ப பார்க்க ஆரம்பித்தால்தான், ஒரு வருடத்தில் கல்யாணம் முடியும்" என்றார்.

இப்படிதான் ஒரு சுபயோக சுபதினத்தில் அசோக்கிற்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது. "சொந்தத்திலேயே அழகா ஒரு அஞ்சு பொண்ணுங்க இருக்கு" - இதில் அசோக்கிற்கு சந்தேகம், அது யாருடா  நமக்கு தெரியாம, அழகா ஐந்து பொண்ணுங்க என்று. "நம்ம குடும்பத்திலேயே இதுவரை  அழகு’னா அது யசோதாதான்" என்று ஒருமுறை தாத்தாவே சொல்லியிருக்கிறார். யசோதா பிறந்த வருடம் 1938. இதை அவர் யசோதா பாட்டியின் கருமாரியின் போது சொன்னார்.

அசோக்கும் கடந்த நான்கு வருடமாக எல்லா திருமண விழாவிலேயும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான், இதுவரை அவர்கள் சொந்தத்தில் ஒரு பெண்ணைக்கூட பார்த்தது இல்லை. பின் எப்படி இந்த தாத்தாவால் மட்டும் ஐந்து பெண்களை கண்டுபிடிக்க முடிந்தது!! அதுவும் அழகாக!!

அடுத்த வரியை தாத்தா சொன்ன போதுதான் அந்த "அழகான அஞ்சு பொண்ணுங்க" என்ற வார்த்தையின் உள்ளர்த்தம் அசோக்கிற்கு புரிந்தது. "உனக்கும் பொருத்தமாக" என்றார். அன்று இரவு அசோக்கின் அப்பா, அசோக்கிடம் "இது உன் வாழ்க்கை. எல்லாம் உன் இஷ்டம், யோசித்து முடிவு எடு" என்றார்.

அடுத்த நாள், கோயில் திருவிழாவில் அசோக்கிடம் அவன் தாத்தா ஒரு பெண்ணை காட்டினார்.  "இப்ப நம்ம ரவி பொண்ணு எடுத்திருக்கான்’ல அவுகளோட சித்தப்பா  பொண்ணு" என்றார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக, "ஜெயங்கொண்டான்"  திரைப்படத்தில் வரும் பாவனா’வை போல் இருந்தாள். அசோகிற்கு ஒரே சந்தோஷம், அன்று இரவு அவன் கனவில் வெள்ளை நிற தேவதைகள் வந்து வந்து போனார்கள்.

ரவியின் மூலம் அந்த பெண்ணின் அப்பாவிற்கு தாத்தா செய்தி அனுப்பினார். "பொண்ணு இன்னும் படிக்க போகுது, அதனால் ஒரு இரண்டு வருடமாகும்" என்று பதில் வந்தது. தாத்தாவிற்கு இந்த பதிலால் எந்த ஒரு மனவருத்தமும் ஏற்படவில்லை. கடந்த இருபது வருடங்களாக சொந்தங்கள் எல்லாருக்கும் திருமணம் செய்து வைத்துக்கொண்டு இருக்கிறார். இந்த பதிலை அவர் பலமுறை பலரிடம் கேட்டு இருந்தார்.

ஆனால் அசோக்கிற்குதான் அந்த இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. கனவில், கரும் இருளில் தனியாக உட்கார்ந்து இருந்த அவனை பார்த்து தேவதைகள் சிரித்துவிட்டு போயின. சில நாட்களுக்கு கழித்து "அந்த பொண்ணையும், அசோக்கையும் சேர்த்து வைத்து பார்த்தால், கருப்பு வெள்ளை டி.வி’யை பார்த்தமாதிரி இருக்கும்" என்பதால்தான் அந்த பெண்ணின் அப்பா சம்மதிக்கவில்லை என்று அறிந்தபோது, கொஞ்சம் அதிகமாகவே அசோக் வருத்தப்பட்டான். அசோக்கின் தாத்தாவுக்கும் இந்த விஷயம் தெரிந்தே இருந்தது, ஆனால் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவில்லை.

"பார்த்த முதல் பெண் தடைப்பட்டு விட்டால், பின் அந்த பையனின் திருமணம் ரொம்ப நாட்கள் தள்ளிப்போகும்" என்று கண்ணன் மாமா, அசோக்கிடம் ஒருநாள் சொன்னார்.

இதற்குள் அசோக்கின் தாத்தா அவனுக்கு இரண்டாவது பெண்ணை பார்த்திருந்தார். இந்த முறை அசோக் பெண்ணை பார்க்கவில்லை. ஆனால், அழகாக இருப்பாள் என்று அக்காவின் மூலம் கேள்விப்பட்டான். ஆனால், இதிலேயும் ஒரு பிரச்சனை வந்தது. அந்த பெண் பிறந்த வருடம் 1991. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் வித்தியாசம். இவ்வளவு சின்ன பொண்ணு வேண்டவே வேண்டாம் என்று அசோக் சொல்லிவிட்டான். அசோக்கின் அப்பாவும், "எல்லாம், அவன் இஷ்டம்" என்று சொல்லிவிட்டார். அம்மாவுக்கும், தாத்தாவுக்கும்தான் கொஞ்சம் வருத்தம் "இப்படி நல்ல பொண்ணை வேண்டாம்’னு சொல்லிடானே" என்று.

மூன்றாவது பெண்ணை, அசோக் பார்த்த போது இந்த முறை எல்லாம் சரியாகவே நடக்கும் என்று நினைத்தான். ஆனால், பெண்ணின் தம்பி மூலம் பிரச்சனை வந்தது. "விசாக நட்சத்திர பையன், தம்பி இருக்கும் பெண்ணை மணந்தால், அது அந்த தம்பியை அடித்துவிடும்" என்று ஒரு சோதிடக்காரன், வேலையில்லாத ஒரு மாலை வேளையில் சொல்லிவிட்டான். இதனால், அந்த பெண்ணின் வீட்டில் எல்லாரும் பயந்துவிட இந்த பெண்ணும் அசோக்கிற்கு கிடைக்காமல் போய்விட்டது.

இந்த மூன்று சம்பவத்தால், மனதளவில் அசோக் பாதிக்கப்பட்டான். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இதைப்பற்றி பேச வேண்டாம் என்று வீட்டில் கறாராக சொல்லிவிட்டான். ஆனால், அசோக்கின் தாத்தா மறைமுகமாக ஒரு பெண்ணை பார்த்தார். அந்த பெண் "தான் ஒரு பையனை காதலிப்பதாகவும், அவனைத்தான் திருமணம் செய்வேன்" என்று வீட்டில் அடம்பிடித்ததால், இந்த பெண்ணும் இல்லாமல் போனது. அதன் பின், அசோக்கின் தாத்தாவும் பெண் பார்க்கும் படலத்தை ஒத்திவைத்தார்.

ஆனால் இது நடந்து ஒரு ஆறு மாதங்கள் பிறகும், அசோக்கின் தேவதை கனவுகள் மட்டும் நிற்கவே இல்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான  தேவதைகள் கனவில் வந்துக்கொண்டே இருந்தனர்.

Tuesday, October 19, 2010

படித்ததில் பிடித்தது

முத்தம்

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்
ஒரு காப்பி சாப்பிடலாம் வா

- தேவதேவன்

Monday, October 11, 2010

பெண்களின் கால்கள்

இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - IV 

வணக்கம் சார். எப்படி சார் இருக்கீங்க??. எல்லா பதிவையும் இதே மாதிரி ஆரம்பிக்கிறது எனக்கே அலுப்பா இருக்கு சார். எழுதுற எனக்கே அலுப்பு'னா, படிக்கிற உங்களுக்கு??. கவலைப்படாதீங்க சார் அடுத்ததடவை மலையாளத்தில் ஆரம்பிக்கிறேன். இப்பொழுதுதான் ஒரு அழகான பெண் மலையாளம் சொல்லி தர ஆரம்பித்து இருக்காள், எப்படியாவது மலையாளத்தை பிக்கப் பண்ணிடலாம்'னு நினைக்கிறேன்.

அழகான பெண் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன சார்??. பெண் என்றாலே அழகு தானே. ஒரு பெண்ணை அழகு, அழகில்லை என்று எதை வைத்து எடை போடுகிறார்கள். குமார் சொல்வான் " நேருக்கு நேர்" படத்தில் வரும் சிம்ரன்தான் உண்மையான உலக அழகி என்று. இவன்தான் ஒருமுறை  "அலைகள் ஓய்வதில்லை" திரைப்படத்தை  பார்த்துவிட்டு, தூக்கத்தில் அன்று இரவு முழுவதும் "அமலா", "அமலா" என்று புலம்பிக்கொண்டு இருந்தான், நான் அவனை எழுப்பிவிட்டு அது "அமலா"   இல்லை, "ராதா"  என்றேன். அவன் "பெயரில் என்ன இருக்கிறது" என்று சொல்லி மீண்டும் கனவுகான தொடங்கிவிட்டான்.

அவன் சொல்வது சரிதான் சார். பெயரில் என்ன இருக்கிறது. எல்லாமே உடையிலும் நடையிலும்தான் இருக்கிறது.

நீங்கள் பெண்களின் கால்களை  கவனித்து இருக்கிறீர்களா??. நான் எல்லா பெண்களிடமும் முதலில் பார்ப்பது அவர்கள் கால்களைத்தான். பின்புதான் மற்றவை எல்லாம். பெண்களின் கால்விரல்கள்தான் எத்தனை அழகு!!, அதுவும் அந்த சுண்டுவிரல்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.  "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தில் கூட சிம்பு, திரிஷாவின் சுண்டுவிரலைத்தான் முதலில் பிடிப்பான்.

பெண்கள் தங்கள் முகத்தை போலவே கால்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். கால்களை  அழகாக வைத்துகொள்ள எப்பொழுதும் விரும்புகிறார்கள். அதற்காக ஏதோ, ஏதோ மருந்துகள் எல்லாம்  கால்களில் போட்டுக்கொள்கிறார்கள். முகத்தில் தேமல் வந்தால் கூட அதிகம் கவலைப்படாத பெண்கள், கால்களில் வெடிப்பு வந்தவுடன், ஏதோ தங்கள் அழகே போய்விட்டது போல் வருத்தப்படுகிறார்கள்.

சார், நீங்கள் கால்களிள் மருதாணி வைத்திருக்கும் பெண்களை  பார்த்து இருக்கிறீர்களா??. அவள் கையில் இருக்கும் மருதாணியைவிட காலில் இருக்கும் மருதாணி அழகாகயிருக்கும். எதற்காக பெண்கள் தங்கள் கால்களை எப்பொழுதும் அழகாக வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள்?? ஒருவேளை என்னைப்போலவே பெண்களின் கால்களை ரசிப்பவர்கள் பல பேர் இருக்கிறார்களா??

"நாம் ஒருவனால் கவனிக்கப்படுகிறோம் என்ற விஷயத்தை பெண்களின் ஆழ்மனது சுலபமாக கண்டுக்கொள்கிறது". யாரவது பார்க்கும்போது, தானாகவே பெண்ணின் கைகள் அவள் ஆடையை சரிசெய்யும். அது போல, நாம் பெண்ணின் கால்களை பார்க்கும் போது, தானாகவே எதன் பின்னாலாவது அவள் கால்களை மறைத்துக்கொள்கிறாள்.   

நான் பெண்களின் கால்களை ரசிக்க தொடங்கியது எப்பொழுது இருந்து என்று சரியாக ஞாபகம் இல்லை சார். கண்டிப்பாக கடந்த இரண்டு வருடங்களாகதான். ஒருவேளை மனுஷ்யபுத்திரனின் "கால்களின் ஆல்பம்" கவிதையின் பாதிப்பாகக்கூட இருக்கலாம்.

குமாரிடம் இதைப்பற்றி கேட்டேன் சார், " நீ பெண்களில் கால்களை பார்ப்பியா??" என்று, "நம்மை  செருப்பால் அடிப்பார்களோ??, என்று சந்தேகம் வரும்பொழுது மட்டும் பார்ப்பேன்" என்றான்.

ஒரு பெண், தனது கால்களில் அணிந்திருக்கும் காலணியை பார்த்தே அவளைப்பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ளலாம் சார். இது உண்மை சார். நீங்களே வேண்டுமானால் சோதித்து பாருங்கள், ஹை ஹீல்ஸ் அணிந்திருக்கும் எல்லா  பெண்களும் ஒரே மாதிரி இருப்பார்கள். போன வாரம் எங்கள் அலுவலகத்தில் இலவசமாக கொடுத்த டீ-சர்ட் large Size'ல் இருந்ததால் மாற்ற போயிருந்தேன் சார். அப்பொழுது அங்கே வந்த பொண்ணு ஒண்ணு, அவள் கையில் மடித்து வைத்திருந்த புதிய டீ-சர்டை விரித்து காட்டி, "I am having large, but I want small" என்றாள். அப்பொழுதுதான் அவள் கால்களை பார்த்தேன் எவ்வளவு பெரிய ஹை ஹீல்ஸ் தெரியுமா??

சரி சார், மீண்டும் அடுத்த பதிவில் இதைப்போல் நாட்டுக்கு தேவையான கருத்துகளுடன் சந்திப்போம்.

Saturday, October 9, 2010

இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - III

 Love the way you lie

வணக்கம் சார். இந்த புதுமை புதுமை என்ற வார்த்தை இருக்கிறதே, அது மீது எனக்கு ஒருவித மோகம் சார். யாருக்கு தான் புதுமை மீது ஆசை இல்லை என்கிறீர்களா??. என்னை பொருத்தவரை எதாவது புதிதாக செய்துக்கொண்டே இருக்கனும் சார். புதிதாக செய்தால் நம்மை அனைவரும் திரும்பி பார்ப்பார்கள், அதனால் தான் நான் புதுமை மீது ஆசைக் கொள்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. எனக்கு எப்பொழுதும் பத்தோடு பதினொன்றாக இருக்கவே பிடிக்கும். அந்த பதினொன்றாவது நபராக இருந்துக்கொண்டு நம்மால் முடிந்த புதுமையை செய்துக்கொண்டே இருக்கவேண்டும், இது தான் என் ஆசை. என்னை பொருத்தவரை எப்பொழுதும் நான் தனியாக தெரிய கூடாது. எனக்கு அது ஒரு லஜ்ஜையை ஏற்படுத்தும். (இங்கு என்ன வார்த்தையை உபயோகப்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியல சார்).

சரி, நீ இதுவரை புதுமையாக என்ன செய்துயிருக்காய் ?? என்று கேட்டீர்கள் என்றால், அதற்கு என் பதில் “ஒன்றும் இல்லை” என்பதுதான். ஆனால், எதாவது புதிதாக செய்யவேண்டும் என்ற வெறி மட்டும் எனக்குள் இருந்துக்கொண்டே இருக்கிறது சார். ஏதாவது புதிதாக செய்ய வேண்டும். அட்லீஸ்ட் எழுத்திலாவது புதுமை செய்ய வேண்டும், நம்ம பேயோனை போல. ஆனால், இப்பொழுது நூற்று கணக்கான போலி பேயோன்கள் நாடு முழுவதும் உருவாகிவிட்டார்கள். போகிறபோக்கில் பார்த்தால், நம் சொந்த பெயரில் எழுதுவதுகூட புதிய முயற்சியாக மாறிவிடும் போல் இருக்கிறது. ஏன்னென்றால், இப்பொழுது பல பேர் பேயோனை போல வேறு பெயர்களில்தான் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள் போன வாரம் சரவணாவின் வலைப்பதிவை படித்தீர்களா சார்?? ஒரு கதை எழுதியிருந்தான். “சாவின் நடுவில் கதையும் அதற்க்கு வந்த இருபது பின்னூட்டங்களும்”. இதுதான் சார் அந்த பதிவின் தலைப்பு. “அதாவது ஒரு கதைக்கு வந்த பின்னூட்டங்களை மையமாக வைத்து ஒரு புனைவுகதை எழுதியிருக்கிறான்”. என்னமா யோசிக்கிறாங்க சார். இது மாதிரிதான் புதுமையாக யோசிக்கனும் சார். இவன மாதிரி ஆள்தான் நாட்டுக்கு ரொம்ப முக்கியம் சார்.

எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை சார், ஒரு நாடகம் போட வேண்டும். கதைகூட ரெடி சார். எஸ்.ராவின் “கடவுளின் குரலில் பேசி” என்ற கதையிருக்கு’ல அதை மையமாக வைத்து நான் ஒரு நாடகத்தை உருவாக்கியிருக்கேன். போன வருடம் எங்கள் ஊர் திருவிழாவில் போடலாம் என்று நண்பர்கள் பலரிடம் எவ்வளவோ சொல்லி பார்த்தேன், யாருமே ஒ.கே சொல்லல சார். நான் எழுதிய நாடகம் யாருக்கும் புரியவில்லையாம்.

என் எழுத்தையும் மதிக்கும் சில பேரு இருக்கதான் செய்கிறார்கள் சார். எனக்கு தெரிந்த கிறித்தவ பொண்ணு ஒன்னு இருக்கு சார். போன வருடம், அது என்னையும் மதித்து ஒரு நாடகம் எழுதி கேட்டுச்சு சார். அவர்கள் சர்சில் கிறிஸ்துமஸ் தினம் அன்று நடிப்பதற்க்கு, சின்ன குழந்தைகள் நடிக்கும் நாடகம் அது. இந்த பொண்ணுதான் நாடகம் போடுவதற்க்கு Organizer (இதற்க்கு தமிழ் வார்த்தை என்ன சார்??). நானும் எழுதி கொடுத்தேன், ஏசு உண்மையாக எங்கு பிறந்தார் எனபதைப்பற்றி “மத்தேயு, மார்க்கு, யோவான், லூக்கா” ஆகியோருக்குள் நடக்கும் வாக்குவாதம்தான் நாடகம்.

இந்த நால்வரும் தாங்கள் எழுதிய நற்செய்தி நூல்களை வைத்து ஏசுவின் பிறப்பை பற்றி விவாதிக்கிறார்கள். இது சிறுவர்களுக்கான நாடகம் என்பதால், ஏசுவின் பிறப்பை பற்றி அதிகமாக பேசாமல் கொஞ்சம் காமெடியாக எழுதிக்கொடுத்தேன். இந்த நாடகத்துக்கு சர்சில் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவளே நாடகத்தில் கொஞ்சம் மாற்றங்கள் செய்து அந்த நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டிவிட்டாள். என்ன ஒன்று, நான் எழுதியது வேறு, அங்கு நடந்த நாடகம் வேறு. ஆனால், மேடையில் நாடகத்தை எழுதியவர் என்று என் பெயர் படிக்கப்பட்டது.

இப்ப சொல்லுங்க சார், இந்த உலகத்தில் எந்த மாதிரி புதுமையை நான் செய்ய முடியும்??. இங்கு யாருமே புதுமையை விரும்பவில்லை. எற்கனவே ஒருவன் வகுத்த வாழ்க்கை எல்லைக்குள் சொகுசாக வாழ நினைக்கிறார்கள். முக்கியமாக அவர்களுக்கு புதுமை என்றால் என்னவென்று புரிவதில்லை. ஏதோ அது ஒரு சமூக நோய் என்று நினைக்கிறார்கள்.

இருந்தாலும் ஒரு சிலர் அவர்கள் துறைகளில் புதுமை செய்துக்கொண்டு இருக்கதான் செய்கிறார்கள். அவர்களை பார்க்கும் போதுலாம், எனக்கு ஒருவித வியப்புதான் வருகிறது. EMINEM சமீபத்தில் Recovery என்று ஒரு ஆல்பம் வெளியீட்டு உள்ளார். அதில் உள்ள ஒரு பாடலின் தலைப்பு “Untiltle". என்ன ஒரு புதுமையான பெயர்??. EMINEM’ன் எல்லா பாடல்களுமே புதுமையாக இருக்கும். “The Real Slim Shady" என்று ஒரு பாடல், தன்னைப்போல் போலியாக உருவாகி கொண்டிருக்கும் Rap பாடகர்களைப்பற்றி பாடுவதுதான் மையக்கருத்து. இப்படி EMINEM’ன் எல்லா பாடல்களுமே கொஞ்சம் different'ஆக இருக்கும். தமிழில் பரத்வாஜ் இசையில் வந்த “உனக்கென்ன உனக்கென்ன, தம்பி உனக்கென்ன ” பாடலை இந்தவகையில் கொஞ்சம் different'ன பாடல் என்று சொல்லலாம்.

அய்யோ, எங்கேயோ ஆரம்பித்து கடைசியில் இசைக்கு வந்தாச்சு சார். நீங்கள் தமிழ்நாட்டில் இசையை தவிர்த்து வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம். இசைப்பற்றி எழுதும் ஷாஜியின் நிலைமை உங்களுக்கே தெரியும். விஜய் டி.வி’யின் புண்ணியத்தால், இப்பொழுது வீட்டுக்கு வீடு பாடகர்கள் உருவாகிவிட்டார்கள். தமிழ்நாட்டில் தடுக்கிவிழுந்தால் நீங்கள் ஒரு பாடகர் தோளில்தான் விழ வேண்டும். அந்ததளவு பாடகர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஆனால், சிறந்த பாடகரை தேர்வு செய்யும் நடுவர் இன்னும் ஒரு மலையாளி தான். போனவாரம் விஜய் டி.வியில் ஒரு நடுவர் சொல்கிறார் “நீங்கள் உங்கள் Face Expression 'னை இன்னும் அதிகமாக்கனும்” அடப்பாவிங்களா, பாடுறதுக்கும், முகபாவனைக்கும் என்னையா சம்மந்தம் ??. ஒருவேளை உங்களுக்கு தெரியுமா சார்.

சரி, இந்த முறை பதிவு கொஞ்சம் பெரிசா போச்சு சார். நாம் மீண்டும் அடுதத முறை சந்திப்போம்.

கடைசியாக ஒன்று சார்,

EMINEM Recovery ஆல்பத்தில் Rihanna ஒரு பாடல் பாடியுள்ளார். அதான் சார் "Unfaithful Rihana", ”காதலில் விழுந்தேன்” படத்தில் கூட நம்ம சுனைனாக்கா பாடுவாங்களே “உனக்கென நான், எனக்கென நீ, நினைக்கையில் இனிக்குதே" என்று, அந்த பாடலின் Orginal Track’யை பாடியவர். இவர் இந்த Recovery ஆல்பத்தில் EMINEM கூட சேர்ந்து "Love the way you lie" என்ற பாடலை பாடியுள்ளார். என்னமா இருக்கு தெரியுமா சார், நீங்களே ஒருமுறை கேட்டுப்பாருங்கள். அதன் லீங்க் கீழே,

நந்தலாலா

“அங்காடித்தெரு” திரைப்படத்தை அடுத்து நான் மிகவும் எதிர்பார்த்த படம், மிஷ்கினின் “நந்தலாலா”. திரைப்படம் முழுவதும் தயாராகியும், கிட்டத்தட்ட கடந்த ஒன்றரை வருடங்களாக திரைக்கு வரமுடியாத நிலையில் இருந்தது. கடைசியாக வரும் 20ம் தேதி வெளிவர இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றது.


”அஞ்சாதே” திரைப்படத்தை குறைந்தது ஆறு முறையாவது முழுமையாக பார்த்திருப்பேன். நான் எந்த திரைப்படத்தையும் ஒரு முறைக்கு மேல் பார்ப்பது இல்லை. ஆனால், அஞ்சாதே திரைப்படம் என்னுல் ஏற்படுத்திய அதிர்வு, என்னை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது. ”திரைப்படத்தில் வரும் மொட்டை வில்லன், பூ விற்க்கும் கிழவி, எப்பொழுதும் சித்தியை திட்டிக்கொண்டு இருக்கும் குருவி, ஒயின் ஷாப்பில் வேலைப்பார்க்கும் அந்த சிறுவன், மனைவியின் தலையை வெட்டி காவல்நிலையத்துக்கு எடுத்துவரும் கணவன், அப்பாவிடம் “என்னை பார்க்காதீங்க பா” என்று சொல்லும் கைலியோடு நடுரோட்டில் நிற்க்கும் பெண், என்கவுண்டருக்காக தன் விரலை தானே சுட்டுக்கொள்ளும் போலிஸ்” இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களுக்கு மிஷ்கின் தந்த முக்கியத்துவமே என்னை மீண்டும் திரைப்படத்தை பார்க்க தூண்டியது. அந்த பூ விற்க்கும் கிழவியை கண்டிப்பாக யாராலும் மறக்க முடியாது.

சமீபத்தில் ஒரு ஹிந்தி நண்பர் “இது வரை தமிழில் எதாவது சீரியஸ் திரைப்படம் வந்துயிருக்கா??” என்று கேட்டார். நான் சிறிதும் யோசிக்காமல் சொன்ன பதில் “அஞ்சாதே”. ஏனோ அந்த நேரத்தில் ”கற்றது தமிழ்” திரைப்படம் கூட நினைவுக்கு வரவில்லை.




மிஷ்கினுக்கு புத்தகங்கள் மிகவும் பிடிக்கும் என்று அறிந்தபோது, அவர் மீது இருந்த மதிப்பு கொஞ்சம் அதிகமாகிவிடட்து. புத்தகங்களை (இலக்கிய புத்தகங்களை) படிக்கும் தமிழ் இயக்குனர்கள் மிகவும் குறைவு, விரல் விட்டு எண்ணிவிடலாம்.

மிஷ்கினின் பேச்சை இரண்டு முறை நேரடியாக கேட்டு இருக்கிறேன். இரண்டுமே புத்தக வெளியீட்டு விழா. ஒரு விழாவில் “நல்ல புத்தகங்கள் பற்றியும், நல்ல திரைப்படங்கள் பற்றியும் தொடர்ந்து எல்லாரிடமும் பேசுங்கள். அப்பொழுதுதான் அது எல்லாருக்கும்,சென்று அடையும்” என்றார். மற்றோரு முறை “Wolf Tottem" புத்தகத்தைப்பற்றி புகழ்ந்து பேசினார், ஏனோ என்னால் அந்த புத்தகத்தை இருபது பக்கங்கள் தாண்டி படிக்க முடியவில்லை.

தினமலர் வாரமலரில் மிஷ்கின் ஒரு தொடர் கட்டுரை எழுதி வந்தார். இது திருச்சி பதிப்பில் வெளிவந்தது. அதில் படித்த ஒன்று இன்னும் என் நினைவில் இருக்கிறது “சித்திரம் பேசுதடி படத்தில் வரும் அப்பா கேரக்டர் எப்பொழுதும் எதையாவது துடைத்துக்கொண்டு இருப்பார். அவர் மனதில் அழுக்கு இருந்தது, அதை சுத்தம் செய்வதற்க்காகவே அவர் எப்பொழுதும் துடைத்துக்கொண்டு இருப்பது போல் உருவாக்கியிருந்தேன்”.

எத்தனை இயக்குனர்கள் இதை போல் கதாபாத்திரஙகளை கூர்மையாக உருவாக்குகிறார்கள்??. போன வாரம் நான் பார்த்த ஒரு திரைப்படத்தில் “சந்தானமும், கருனாஸும்” விஞ்ஞானிகள். கொஞ்சமாவது விஞ்ஞானி போல அவர்கள் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கலாம். அப்படி இருந்தும் அவர்கள் ஒன்றும் நடிக்க தெரியாத நடிகர்கள் அல்ல. அவர்கள் என்ன செயவார்கள் பாவம், இயக்குனர் என்ன சொல்கிறாறோ அதைப்போல்தானே நடிக்க முடியும்.  

நான் இதுவரை எதிர்பார்த்து போன எந்த திரைப்படமும் நன்றாக இருந்ததில்லை. “நந்தலாலா” வெற்றி அடைய வாழ்த்துவதை தவிர, வேறு என்ன என்னால் செய்ய முடியும்??.

வாழ்த்துக்கள்.

Thursday, October 7, 2010

இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - II

ஒர் எதிர்வினை

வணக்கம் சார். என் பெயர்தான் அசோக். " மிகவும் பயம் கொண்ட, தன்னம்பிக்கையற்ற, ராசியில்லாத, தெளிவாக பேசத்தெரியாத ஒரு மனிதன்" என்று போன பதிவில் சரவணா எழுதியிருந்தானே, அது என்னைப்பற்றிதான்.

அவன் என்ன சார் சொல்றது. நான் சொன்றேன் சார். "நான் மிகவும் பயம் கொண்ட, தன்னம்பிக்கையற்ற, ராசியில்லாத, தெளிவாக பேசத்தெரியாத ஒரு மனிதன்". இப்படி சொல்வதில் எனக்கு எந்த ஒரு வெட்கமும் இல்லை சார். யாரு சார், இங்கே பயப்படல, இந்த சென்னையில் இருக்கிற எல்லாருமே எப்பொழுதும் பயந்துக்கொண்டுதான் இருக்காங்க. அவர்கள் கண்களின் எப்பொழுது ஒரு பயம் தெரிகிறது. ஒருவனின் கண்களை வைத்தே அவன் சென்னைவாசியா?? இல்லையா?? என்று கண்டுப்பிடித்து விடலாம். நம்பிக்கையில்லை என்றால், உங்கள் கண்களை நீங்களே ஒருமுறை  கண்ணாடியில் பாருங்கள். கண்ணாடியில் தெரியும் உங்கள் பிம்பத்தைக்கூட, உங்கள் கண்கள் சந்தேகித்து பார்க்கும். சந்தேகம் தான் சார், பயத்திற்க்கு முதல் காரணம்.

என்னைப்பற்றி தொடர்ந்து பத்து பதிவுகள் எழுதபோவதாக சரவணா சொல்லியிருக்கான். அவன் யாரு சார், என்னைப்பற்றி எழுதுவதற்க்கு. நான் எழுதுகிறேன் என்னைப்பற்றி, எந்தவொரு மிகையும் இல்லாமல், உள்ளது உள்ளபடி. ஒன்றை  மிகைப்படுத்தி எழுதுவதற்க்கு சரவணாவிற்கு நிகர் சரவணாவேதான். சென்ற பதிவில்கூட பாருங்கள், ஒரு ரூபாய்காக கண்டக்டரை  வில்லன் போல் சித்தரித்துவிட்டான்.  நான் சொல்றேன் சார், அன்னைக்கு உண்மையாக என்ன நடந்து என்று.

கலெக்டர் நகரில் இருந்து சி.ம்.பி.டி'க்கு டிக்கெட் விலை, நான்கு ஐம்பது. மீதி ஐம்பது காசு அவர் எனக்கு தரவேண்டும். கண்டக்டரும் பை முழுவதும் தேடிப்பார்த்தார், ஐம்பது காசு நாணயமே இல்லை, எல்லாம் ஐந்து ரூபாய் நாணயம்தான். நம்ம கவர்மெண்ட் இந்த ஐம்பது காசு நாணயத்தையே இப்பொழுது அடிப்பதில்லை  போல இருக்கு. கண்டக்டர் தேடி பார்த்து கிடைக்காதால், நானும் சில்லரையை கேட்காமல் விட்டுவிட்டேன். இதுதான் சார் நடந்தது.

இதை எப்படிலாம் மிகைப்படுத்த வேண்டுமோ அப்படிலாம் மிகைப்படுத்தி இந்த சரவணா  எழுதிவிட்டான்.

இதைப்பற்றி அவனிடம் கேட்டால், அவன் சொல்வான் "இப்படி எழுதுனாதான் படிக்க நல்லாயிருக்கும் டா". ஙோத்தா, அதற்க்கு என்னைப்பற்றியா எழுதவேண்டும். சாரி சார், என்னை  அறியாமல் கெட்டவார்த்தை சொல்லிவிட்டேன்.

நீங்கள் ஒன்றை நோட் செய்தீர்களா, எங்கே எல்லாம் அவனைப்பற்றி எழுதுகிறானோ அப்பொழுது எல்லாம் ஏதோ அவன் மட்டும்தான் இந்த உலகத்தில் நல்லவன் என்பதுபோல் எழுதிவிடுவான். சரிவிடுங்கள், கொஞ்சம் பேரின் எண்ணங்கள் அப்படி. இந்த உலகத்திலேயே அவர்கள் மட்டும்தான் நல்லவர்கள் என்ற நினைப்பு.

சரி சார், உங்கள் நேரத்தை நான் இதற்குமேல் சோதிக்கவிரும்பவில்லை. மீண்டும் அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Wednesday, October 6, 2010

இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன்

"மிகவும் பயம் கொண்ட, தன்னம்பிக்கையற்ற, ராசியில்லாத, தெளிவாக பேசத்தெரியாத ஒரு மனிதன்". அசோக்கைப் பற்றி இதற்குமேல் சுறுக்கமாக சொல்ல முடியாது. இது அசோக்கை பற்றிய கதை. இப்படி எந்த ஒரு சுவராசியம் இல்லாத அவனைப்பற்றி எப்படி ஒரு கதை  எழுத முடியும் என்று கேட்கிறீர்களா??. நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு அந்த உரிமை  இருக்கிறது. கேள்வி கேட்பது நம் உரிமை. ஆனால் அசோக்குக்கு தான் கேள்வி கேட்கவே தெரியாது. இன்று பஸ்ஸில் கூட நான்கு ரூபாய் டிக்கெட்க்கு அசோக் ஐந்து ரூபாய் கொடுத்தான், மீதி ஒரு ரூபாயை கண்டக்டர் தரவில்லை. அப்பொழுது கண்டக்டர், ஒரு பயணியிடம் ஏதோ ஒரு காரணத்திற்க்காக வாக்குவாதம் செய்துக்கொண்டு இருந்தார். பஸ் ரொம்ப கூட்டமாக வேறு இருந்ததால் பாவம் என்று அவனும் கேட்கவில்லை. ஆனால். இந்த பாவம் எல்லாம் நம்மை  நாமே சமாதானம் செய்துக்கொள்ளதான். அவன் அந்த இடத்தில் மீதி ஒரு ரூபாய் கேட்டு இருக்க வேண்டும். எங்கே கண்டக்டர் எதாவது சொல்லிவிடுவாரோ என்ற பயம் அவனுக்கு. 

என்னடா??, என்ன என்னமோ எழுதுறான். ஆனால் இப்படி பயந்தவனா இருக்கான் என்று நினைக்கிறீர்களா???.  உண்மையாகவே இதுதான் அசோக். இந்த தைரியம் எல்லாம் எழுத்தில் மட்டும்தான். அங்குதான் அவனை யாரும் கேள்வி கேட்க முடியாதே??. (அசோக் ஒரு வலைப்பதிவில் எழுதிக்கொண்டு இருக்கிறான் என்பதை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்)

அவனின் Orkut Profile'லும் இப்படிதான். கொஞ்சம் Terror'ஆக தமிழில் எழுதியிருப்பான். இதைப்பார்த்த அவன் நண்பனின்  நண்பன் ஒருவன், அசோக்கை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று ஒன்றைக்காலில் நின்று இருக்கிறான். நண்பனும் அவனிடம் "அசோக் எல்லாம் அந்தளவு worth இல்லை" என்று எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லையாம். அவனை  கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஒரே முடிவில் இருந்திருக்கிறான். ஒரு சேகுவரா படத்தை Orkut'ல் போட்டது தப்பாக போய்விட்டது.

சென்ற முறை நாகூர் சென்றபோது, அசோக்கிடம் அவன் நண்பன் அவனை அறிமுகம் செய்து வைத்தான். ஒரு பத்து நிமிடம்தான் பேசியிருப்பான், அதற்குள் ஒரு இருபது தடவையாவது அவன் அசோக்கிடம் கேட்டுவிட்டான் "நீங்கள்தான் உண்மையாகவே அந்த Orkut Profile ஓனரா??" என்று. அந்த பத்து நிமிட உரையாடலோடு அவர்கள் நட்பு முடிந்துவிட்டது. அதன்பிறகு அவன் அசோக்கின் நண்பனிடம் ரொம்ப வருத்தப்பட்டு இருப்பான் போல. "அசோக்கை ரொம்ப நம்பியதாக".

இதற்க்கு எல்லாம் அசோக் என்ன சார் செய்ய முடியும். அவன் சின்னவயதில் இருந்தே வளர்ந்தது அப்படி. இப்பொழுது உங்கள் வீட்டு முன்னால் ஒரு கொலை  நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள். அட்லீஸ்ட் போலீஸ்'காவது ஒரு போன் செய்து சொல்வீர்கள அல்லவா. ஆனால் அசோக்கின் அப்பா அப்படி இல்லை, வீட்டை பூட்டி உள்ளேயே இருந்துக்கொள்வார், பின்னால் போலிஸ் வந்துகேட்டால் கூட, அந்த நேரத்தில் நாங்கள் குடும்பத்தோடு முருகன் கோயிலுக்கு போயிருந்தோம் என்று சொல்லிவிடுவார். இது உண்மையாக நடந்தது.  அப்பொழுது அசோக் பனிரெண்டு'டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான். ஒருவன் கத்தியால் குத்தப்பட்டு ரோட்டில் விழுந்தது இன்னும் ஏதோ ஒரு கனவை போல் அவன் நினைவில் இருக்கிறது. மாடியில் இருந்த ஜன்னலோரமாக அசோக் அதைப்பார்த்துக்கொண்டு இருந்தான்.

அப்பறம் இன்னொன்று, ஒருவன் தமிழில் எழுதினால், அவன் தமிழ் பித்தன், தமிழ் தீவிரவாதி என்று படிப்பவர்களே பெயர் வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அசோக்  தமிழில் எழுதுவதற்க்கு உண்மையான காரணம் என்னவென்றால், அவனுக்கு சுட்டுப்போட்டாலும் அங்கிலம் வராது. தமிழும் அரைக்குறைதான். ஏதோ இப்பொழுதுதான், கொஞ்சம் கொஞ்சமாக எழுத்துப்பிழை  இல்லாமல் எழுத ஆரம்பித்து உள்ளான்.

இப்படிபட்ட அசோக்கைப்பற்றிதான் தொடர்ந்து ஒரு பத்து பதிவுகள் எழுதலாம் என்று இருக்கிறேன். இந்த பதிவில் அவனின் பயத்தைப்பற்றி பார்த்துவிட்டோம், இனி அடுத்தப்பதிவில் அவன் ராசியைப்பற்றி  பார்ப்போம்.

Tuesday, October 5, 2010

எந்திரன் & Peepli live

"என்ன, எந்திரன் படத்தைப்பற்றி இன்னும் எழுதல??" என்று கேட்ட நண்பனுக்காக இதை எழுதவேண்டியதாக போயிற்று. ஏதோ நம் வலைப்பதிவை படிப்பவர்களே, நம் நண்பர்கள் மட்டும்தான், அவர்கள் ஆசையைக்கூட நிறைவேற்றவில்லை என்றால், பின் எதற்க்காக இந்த வலைப்பதிவு??.

போன சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு நானும் நண்பனும் சேர்ந்து ஒரு திரைப்படம் பார்த்தோம். அங்கில படத்திற்கு நிகரான பிரமாண்டம், திரைப்படம் முழுவதும் வழிந்து ஓடியது. டைட்டில் கார்டில் "எந்திரன்" என்று பெயர் போட்டார்கள்.

திரையரங்கில் நுழைந்த போது, எனக்கு ஒரு இனம் புரியாத எதிர்ப்பார்ப்பு இருந்தது உண்மைதான். திரையில் "ரஜினிகாந்த்" தோன்றியபோது என் முகத்தில் நூறு வாட்ச் வெளிச்சம் அடித்தது உண்மைதான். திரைப்படம் முடியும்வரை, என் உடம்பு முழுவதும் ரத்தம் ஒரு புதுவேகத்தில் ஓடியது உண்மைதான். அதற்காக, இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு எந்திரன் ஒரு சிறந்தப்படம் என்று சொல்லிவிடமுடியாது.

இன்னும் ஒரு நான்கு மாதங்களுக்கு பிறகு இதே படத்தை பார்த்தால் கண்டிப்பாக நமக்கு ஒரு ஏமாற்றம்தான் மிஞ்சும். எந்திரன், தற்பொழுதைய "Hyperworld"க்கு ஏற்ற ஒரு சாதாரண கமர்ஷியல் திரைப்படம். இன்னும் ஒரு வருடம் கழித்து பார்த்தால், நம்மை அறியாமல் நமக்கு ஒரு சிரிப்புதான் ஏற்படும், பழைய ராமராஜன் படங்களை பார்க்கும்போது ஒரு சிரிப்புவருகிறதே, அதேபோல்.

"Over Excitemnet" காரணமாக இந்த திரைப்படத்தை அனைவரும் கொஞ்சம் அதிகமாக புகழ்கிறார்கள். கடைசி 40 நிமிடங்களில் சங்கர் என்ன சொல்லவருகிறார் என்றே புரியவில்லை. திரைமுழுவதும் ரஜினியை காட்டினாலே போதும், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துவிடுவார்கள் என்று சங்கர் நினைத்து இருப்பார்போல. ஆனால், அதுதான் உண்மை. ஒரு சினிமா பார்வையாளனைப் பற்றி, சங்கரை தவிர வேறுயாராலும் இந்தளவு சரியாக புரிந்துக்கொள்ள முடியாது.

***************************************************************************
இந்தவாரம் நான் பார்த்த இன்னொரு படம் "Peepli live". அங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு, Black Humour. தமிழில் பகடி என்று சொல்லலாம். "Peepli Live" ஒரு பகடி திரைப்படம். தற்பொழுதைய அரசியலையும், தொலைக்காட்சிகளையும், ஊடகங்களையும் இதற்க்குமேல் கிண்டல் செய்ய முடியாது.

"தற்கொலை செய்துக்கொண்டால் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்று கேள்விப்படும் ஒரு விவசாயி, தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்கிறான். அந்த கிராமத்தில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், அந்த செய்தி எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது. அதை  வைத்து எத்தனைப்பேர் லாபம் சம்பாதிக்கிறார்கள். கடைசியில் அந்த விவசாயி தற்கொலை செய்துக்கொண்டானா?? " இதுதான் கதை.

தற்பொழுதைய Reality Show'களுக்கும், T.V News'க்கும் எந்த ஒரு வேற்றுமையும் இல்லாமல் போய்விட்டது. எல்லாவற்றிலும் நம் மக்கள் ஒருவித மசாலாவை எதிர்ப்பார்க்கிறார்கள். எல்லாவற்றிக்கும் ஒரு Opinion Poll. அது ஒரு தற்கொலையாக இருந்தாகும் கூட. இவை அனைத்தையும் இந்த திரைப்படம் முழுவதும் பகடி செய்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தப்படத்தை தயாரித்து இருப்பது அமீர்கான். நம் தமிழ் ஹீரோக்கள், இதைப்போல் ஒரு திரைப்படம் தயாரிக்க முன்வருவார்களா??