Wednesday, November 24, 2010

நந்தலாலா - நவம்பர் 26 முதல்


Saturday, November 20, 2010

புரிந்தும் புரியாமலும் - III

என் சுதந்திரத்தை என்னிடமே விட்டுவிடுங்கள். எனக்கு தெரியும், இந்த சதுரங்க ஆட்டத்தில் எனது ராஜாவை எப்பொழுது நகர்த்த வேண்டும் என்று. எனக்கு தெரியும், ஒரு மந்திரியின் உதவியை எப்பொழுது நாட வேண்டும் என்று, எனது குதிரைகளை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று, ராணி எப்பொழுது எனக்கு தேவைப்படும் என்று. என் சுதந்திரத்தை என்னிடமே விட்டுவிடுங்கள்.

நீங்கள் ஒரு பார்வையாளர் மட்டும்தான். ஒரு பார்வையாளனுக்கு எல்லாவித சலுகைகளும் இருக்கிறது. அதற்காக எனது படைவீரர்களை நகர்த்தும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது??. என்னிடம், என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள என் சுதந்திரம் மட்டுமே மிச்சம் இருக்கிறது, தயவு செய்து அதையும் பறித்துக் கொள்ளாதீர்கள்.

உங்கள் சொல்படித்தான் நான் கட்டங்களில் நகர வேண்டும் என்றால், எது சரி, எது தவறு என்பதை நீங்கள்தான் உறுதிப்படுத்துவீர்கள் என்றால்,. பின் நான் எதற்கு, ”நான்” என்ற வார்த்தைத்தான் எதற்கு??.

என் பாதையை நானே தேர்வு செய்துக்கொள்கிறேன். நீங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும்.

என் சுதந்திரத்தை என்னிடமே விட்டுவிடுங்கள். 

Sunday, November 7, 2010

ஒரு ரகசியம் உருவாகியது

என்னைப் பற்றிய ஒன்று
உங்கள் அனைவருக்கும்
தெரிந்தேயிருந்தது.

நான் அதை
மிகவும் பாதுகாப்பாகவே வைத்திருந்தேன்
அல்லது
அப்படி நினைத்துக்கொண்டிருந்தேன்.

அதைப்பற்றி
இதுவரை ஒரு வார்த்தைக்கூட
நான் எழுதியதில்லை
அல்லது
அப்படி நம்பிக்கொண்டிருந்தேன்.

எப்படியோ, அதைப்பற்றி
உங்கள் அனைவருக்கும் தெரிந்திருந்தது.

நம் சந்திப்பில்
அதைப்பற்றி பேசாமல் இருக்கவே
முயற்சிதேன்.

நீங்கள் அதைப்பற்றி கேட்கும் போதேல்லாம்
மிகுந்த பதற்றத்தோடு நமது பேச்சை
திசை திருப்பினேன்.

ஆனால்,
நீங்கள் எப்பொழுதும்
அதைப்பற்றிய
சிறிய துணுக்கை சிதறவிட்டு
என் முகபாவங்களை
புகைப்படம் எடுத்தீர்கள்.

என்னுடைய பதற்றம்
உங்களை புன்னகைக்க செய்தது.

என்னுடைய தவிப்பு
உங்களை சந்தோஷப்படுத்தியது.

இதற்காகவே
நாம் சந்திப்பதை தவிர்த்தேன்,
உங்கள் அழைப்புகளை நிராகரித்தேன்,
உங்கள் குறுஞ்செய்திகளை படிக்காமல் அழித்தேன்.

கடைசியில்
என்னை போலவே, நீங்களும்
அதை ஒரு ரகசியம் என்று
நம்பதொடங்கினீர்கள்.

Saturday, November 6, 2010

வ குவாட்டர் கட்டிங்

”மச்சி, படம் முழுவதும் டைமிங் காமெடி'டா, செமயா இருக்கு. கண்டிப்பாக போய் பாரு” என்று செல்போனில் நண்பன் சொன்னான். இவன் நம்ம சரத் மாதிரி எல்லாம் இல்லை, இவன் இதுவரை சில படங்களை மட்டுமே நல்ல திரைப்படம் என்று சொல்லியிருக்கிறான். ஆனால், சரத் இவனுக்கு முற்றிலும் நேர்மார். இதுவரை எந்த படத்தையும் “மொக்கை” என்று சொன்னது கிடையாது. “நல்லா தான் இருக்கு, ஒரு முறை பார்க்கலாம்” எல்லா திரைப்படத்திற்க்கும் அவன் சொல்லும் ஒன்லைன் விமர்சனம் இதுதான். “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தை மட்டும் சொஞ்சம் அதிகமாக புகழ்ந்தான். காரணம், நீங்கள் நினைப்பது தான்.

”செமயா இருக்கு. கண்டிப்பாக போய் பாரு” என்று நண்பன் சொன்னவுடன் எனக்கு பெரிய அதிர்ச்சி. ஏனென்றால், இப்பொழுதுதான் இரண்டு நண்பர்களுக்கு நானே போன் செய்து ”படம் வேஸ்ட், போகாதீங்க” என்று சொல்லியிருந்தேன். ட்வீட்டரில் எழுத ஒரு பஞ்ச் லைன் கூட தயாராக வைத்திருந்தேன். எனக்கும் தயாநிதி அழகிரிக்கும் வாய்க்கால் தகராறு, அதன் காரணமாகத்தான் இந்த மாதிரி புரளிகளை செய்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். தீபாவளியன்று முதல் ஷோ’வில் திரைப்படத்தை பார்த்த பின்தான், இந்த முடிவுக்கு வந்தேன். இந்த முடிவை நான் மட்டும் எடுக்கவில்லை. என்னுடன் திரைப்படம் பார்த்த, திரையரங்கில் அமர்ந்திருந்த அனைவருமே இதைத்தான் சொன்னார்கள். திரையரங்கில் மொத்தம் ஆறுபது பேர் இருந்தோம். நான் சொல்வது அதிகம் என்று நினைக்கிறேன். டிக்கெட் கிழித்து கொடுத்தவருக்குத்தான் உண்மையான எண்ணிக்கை தெரியும்.

சரி, எல்லாரும் மைனாவிற்க்கும், உத்தமபுத்திரனுக்கும் போய் விட்டார்கள் என்று நினைத்து, அந்த திரைப்படங்களுக்கு சென்றிருந்த நண்பர்களுக்கு போன் செய்து விசாரித்தேன். அங்கேயும் இதே ஆறுபது, எழுபது எண்ணிக்கைத்தான் என்றார்கள். நானும் என் நண்பனும், எங்க ஊரில் ஒரு மல்டிபிளக்ஸ் கட்டலாம் என்ற ஐடியாவை ஒருமுறை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்தேன். “மச்சி, எல்லாரும் டி.வி’யில் சிறப்பு நிகழ்ச்சி பார்த்துக்கிட்டு இருப்பாங்க டா,  நாளைக்கு பாரு கூட்டம் அல்லும்” என்றான் அருகில அமர்ந்திருந்த என் பிசினஸ் பாட்னர். அடுத்து ஏதோ சொல்ல அவன் தொடங்கியவுடன்,  திரைப்படம் ஆரம்பித்து விட்டார்கள். நல்லவேளை நான் தப்பித்தேன்.

யாரோ ஒருவன், நாலு குவாட்டரை ஒன்றாக அடித்துவிட்டு ”சவுன்ட் கம்மியாக இருக்கு” என்று சொல்லியிருப்பான் போல, வால்யூம் "1000 டெசிபலை" தொட்டது. திரைப்படத்தில் என்ன பேசுகிறார்கள் என்று ஒன்றுமே புரியவில்லை. என் தலைக்குமேல், ஒரு ஸ்பீக்கர் கத்திக்கொண்டு இருந்தது, எங்கே தலையில் விழுந்துவிடுமோ என்ற பயத்தில் அதையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அதற்க்குள் இடைவேளை போட்டுவிட்டார்கள். திரையரங்கில் இருந்தயாருக்குமே ஒரு வார்த்தைக்கூட புரியவில்லை என்று அறிந்தபோது எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.

“நான் அப்பவே சொன்னேன், தேவிக்கு போகலாம்’னு” என்றான் நண்பன். எஙகள் ஊரில் இருக்கும் ஒரே ஏ.சி திரையரங்கம் தேவி மட்டும்தான். அதுவும் ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் ஆரம்பித்தர்கள். அங்கு இன்னும் எந்திரன்’தான் ஒடிக்கொண்டு இருக்கிறது. என் நண்பன் ரஜினியின் தீவிர பித்தன். “எந்திரன்” திரைப்படததை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என்று எல்லா மொழியிலும் பார்த்துவிட்டான். எப்படியாவது எந்திரன் திரைப்படத்தை மலையாளத்தில் பார்க்க வேண்டும் என்பதுதான் அவனுடைய தற்பொழுதைய லட்சியம்.

இடைவேளை முடிந்து மீண்டும் திரைப்படம் ஆரம்பித்து இருந்தார்கள். வழக்கம் போல் ஸ்பீக்கர் அலறிக்கொண்டிருந்தது. நாங்கள் பாதியிலேயே கிளம்பி வந்துவிட்டோம். நாங்கள் வரும்போது திரையரங்கில ஒரு முப்பது பேருக்கு குறைவாகத்தான் இருந்தார்கள்.

இது நடந்து ஒரு மணிநேரம் கழித்துத்தான் மற்றொரு நண்பன் திருச்சியிலிருந்து போன் செய்தான். “மச்சி, படம் முழுவதும் டைமிங் காமெடி டா, செமயா இருக்கு. கண்டிப்பாக போய் பாரு” என்றான். இதற்குள் நான் கொஞ்ச பேருக்கு போன் செய்து “திரைப்படம் நல்லாயில்லை, ஓடாது” என்று சொல்லிருந்தேன்.

அந்த கொஞ்ச பேரில் நீங்களும் ஒருவராக இருந்தால், தயவுசெய்து நான் சொன்னதை மனதில் வைத்துக்கொள்ளாமல், திரைப்படத்தை ஒருமுறை நல்ல திரையரங்கில் பார்க்கவும். மீண்டும் உங்களுக்கு போன் செய்து இதை உங்களிடம் சொல்லமுடியாத நிலையில் இருக்கிறேன், ஏனென்றால், நிறைய வேலையிருக்கிறது, ”மைனா, உத்தமபுத்திரன், வல்லக்கோட்டை” போன்ற படங்களை பார்த்தாக வேண்டும். இதற்க்கு பின் நேரம் கிடைத்தால் “வ குவாட்டர் கட்டிங்” திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்.

Wednesday, November 3, 2010

.

நாளை தீபாவளியாம்,
காலியாகிறது சென்னை
மிகவும் சுத்தமாக.

Monday, November 1, 2010

ஆசிரியர் குழுவின் கடிதம்

மதிப்பிற்குரிய அசோக்கிற்க்கு,

நீங்கள் நேற்று அனுப்பிய சிறுகதையை கிடைக்கப் பெற்றோம். இதைப்போல், நீங்கள் வாரம் வாரம் அனுப்பும் எல்லா படைப்புகளும் எங்கள் மின்னஞ்சலுக்கு நல்லபடியாக வந்து சேர்ந்துக்கொண்டு இருக்கிறது. நீங்கள் நேற்று அனுப்பிய சிறுகதையில் "இது உங்களுக்கு அனுப்பும் 50வது கதை" என்று எழுதியுள்ளீர், ஆனால் எங்கள் கணக்கின்படி இது உங்களின் 35வது கதையாகும். ஒரே கதையை தலைப்பு மட்டும் மாற்றி இரண்டு முறை அனுப்பி இருந்தீர்கள். அதையும் சேர்த்தால் கூட கணக்கில் 36'தான் வருகிறது.

இதுவரை  உங்கள் படைப்புகள் எதையும் நாங்கள் வெளியிடாமல் போனதுக்கு முதலில் "நிகழ்காலம்"  சிற்றிதழின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.  உங்கள் அனைத்து படைப்புகளையும் படித்த பின்னரே எங்கள் ஆசிரியர் குழு இந்த கடிதத்தை எழுதுகிறது. எங்கள் கடிதம் உங்களுக்கு மகிழ்ச்சியையும், பெரிய ஆச்சர்யத்தையும் கொடுக்கும் என்று நம்புகிறோம். இதுவரை "நிகழ்காலம்" ஆசிரியர் குழு சார்பில்  எந்த எழுத்தாளருக்கும் கடிதம் எழுதியது இல்லை, இதுவே முதல்முறை. இதற்காக நீங்கள் கண்டிப்பாக சந்தோஷம் அடையலாம்.

முதலில் எங்கள் ஆசிரியர் குழு சார்பில் சிலவற்றை உங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறோம். எங்கள் "நிகழ்காலம்" மாதம் ஒருமுறை மட்டுமே வெளிவரும் சிற்றிதழ். இதுவரை இரண்டு இதழ்கள் மட்டுமே வந்துள்ளது. அதற்குள் நீங்கள் 35 கதைகள் அனுப்பியது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது. முக்கியமாக எங்கள் முதல் இதழில், எங்கள் ஆசிரிய குழுவை சேர்ந்த சோம்பன் எழுதிய "சூர்ப்பனகை பல்லாக்கில் போனாள்" என்ற கதையின் தலைப்பை மட்டும் மாற்றி மீண்டும் எங்களுக்கே அனுப்பியதன் காரணம் என்னவோ???.

நாங்கள் உங்களை  குறைசொல்கிறோம் என்று தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். எங்கள் சிற்றிதழுக்கு ஆயுள் சந்தா கட்டிய ஒரே ஆள் என்ற முறையில் உங்களுக்கு எல்லா  உரிமையும் இருக்கிறது. உங்கள் இலக்கிய ஆர்வம் எங்களை  தொடர்ந்து பிரமிக்க வைக்கிறது. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்றே நாங்களும் ஆசைப்படுகிறோம். உங்கள் நண்பர் ஒருவர் எங்கள் இதழுக்கு ஆயுள் சந்தா செலுத்த இருப்பதாக சொன்னீர்களே, அது என்னவானது??. ஒன்றும் அவசரமில்லை, உங்களுக்கு ஒருமுறை ஞாபகப்படுத்தினோம். அவ்வளவுதான்.

எங்கள் ஆசிரியர் குழுவில் உங்களைப் பற்றி பேசும் போது,உங்களை நாங்கள் "பின்நவீனத்துவத்தின் ராஜா" என்றே அழைக்கிறோம். உங்கள் எழுத்து, உலகம் முழுவதும் சென்று அடையவேண்டும். அது ஒரு சிறிய மக்களுக்குள் நின்றுவிடகூடாது. கண்டிப்பாக உலகம் முழுவதும் பரவ வேண்டும். உங்கள் கதைகளை  இப்போழுதே நிகழ்காலம் சிற்றிதழில் வெளியிட்டால், அது கொஞ்ச மக்களுக்கே சென்று சேரும். சில நாட்கள் ஆகட்டும், நமது நிகழ்காலம் சிற்றிதழ் எல்லா மக்களையும் சென்றடைந்தவுடன் நீங்கள் தான் நமது இதழின் ஆஸ்தான எழுத்தாளர்.

அடுத்த இதழ் வெளியிட சுமார் பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. எங்கள் ஆசிரிய குழுவில் அனைவரும் பணத்தை ஏற்பாடு செய்ய முயன்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.  எப்படியாவது இந்த மாத இதழை மட்டும் வெளியிட்டால் போதும், அடுத்த மாத இதழுக்கு கண்டிப்பாக விளம்பரம் கிடைத்துவிடும். ஏற்கனவே முதல் மட்டும் கடைசி பக்க விளம்பரங்களுக்கு ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். ஆகவே, இன்னும் ஒரு இதழை வெளீயிட்டால் போதுமானது. அதன் பின் எல்லாம் தானாகவே நடுந்துவிடும். எல்லாம் இறைவன் செயல்.

இப்படிக்கு,
"நிகழ்காலம்" ஆசிரியர் குழு.