Wednesday, February 13, 2013

நண்பர் ஆறுமுகத்தின் ஆராதனாவுக்காக.....

கவிதைகளாலும் வார்த்தைகளாலும் உருவான ஆராதனாவுக்கு உருவம் கொடுக்க முயற்சித்து கொண்டு இருக்கிறேன். யாரோ ஒருவரின் ஆராதனாவுக்கு நான் உருவம் கொடுப்பது தவறான செயல்தான் என்ற போதிலும், இனியும் ஆராதனாவை வெறும் வார்த்தைகளால் மட்டுமே பார்க்க நான் தயாரில்லை. ஆராதனாவுக்கு ஒரு உருவம் தேவை. வார்த்தைகளுக்கு உருவம் கொடுப்பதில் நான் கைதேர்ந்த வித்தகன் கிடையாது, சொல்ல போனால் வார்த்தைகளுக்கு உருவம் கொடுப்பது இதுதான் எனக்கு முதல் முறை. இதோ ஆராதனாவுக்கு உருவம் கொடுக்க தொடங்கிவிட்டேன். முடிந்தவுடன் சொல்லி அனுப்புகிறேன், வந்து வாழ்த்திவிட்டு போங்கள்.

முடிவில்லா கதை


"நீ இதை கதையாக எழுதலாம்" என்று அசோக் என்னிடம் சொன்ன "அவனுக்கும், அவன் நண்பனுக்கும்" நடந்த உரையாடலை வைத்துதான் இந்த கதையை எழுதுகிறேன். இந்த கதையை எழுதுவதற்கு அசோக் ஒரே ஒரு நிபந்தனைதான் போட்டான் அது " எந்த காரணம் கொண்டும் அவனின் நண்பனின் பெயரை எங்கேயும் எழுதிவிட கூடாது" என்பதே.

இந்த கதையை நீங்கள் படிக்கும் முன்னர் சில விசயங்கள்.

"இணையம்", இதற்கு இன்னொரு அர்த்தம் வேகம் என்று நினைக்கிறேன். இணையம் வந்தபிறகு எல்லாவற்றிலும் ஒரு வேகம். அது நீங்கள் செய்யும் வேலையாகத்தும், காதலாகத்தும், நட்பாகத்தும் எல்லாவற்றிலும் ஒரு வேகம். அதே போல் அவை வந்த வேகத்தில் உடனே மறைந்தும் விடுகிறது. நீங்கள் ஒருவனின் உயிர் நண்பன் என்றால் கண்டிப்பாக அவனின் Facebook'லும் நண்பனாக இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் நீங்கள் இருவரும் தோழர்கள் இல்லை. உங்களுக்கு ட்விட்டர் பற்றியும் தெரிந்திருக்கும், அசோக்கிற்கும் அவனது ட்விட்டர் நண்பனுக்கும் இடையில் நடந்த உரையாடல்தான் கதை. நான் முன்னரே சொன்னது போல், அசோக் என்னிடம் காட்டிய இணைய உரையாடல்களை வைத்துதான் இந்த கதையை எழுதுகிறேன். ப்ரைவசி கருதி சிலவற்றை அவன் என்னிடம் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆகவே எனக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து இந்த கதையை உருவாக்க முயற்சித்து இருக்கிறேன்.

அசோக் சொன்ன கதையை வைத்து நானே எழுதிய ட்விட்டர் மற்றும் இ-மெயில் உரையாடல்கள்தான் கிழே உள்ளவை. இதில் எது ட்விட்டர் உரையாடல், எது இ-மெயில் உரையாடல் என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளவும்

சகா, உனது வலைப்பதிவை படித்தேன். நன்றாக எழுதுகிறாய், தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.


நன்றி நண்பா. தொடர்ந்து படிக்கவும்.

சகா! நீங்க மொபைல் மூலமா ட்விட் பண்றதா சொல்லியிருந்தீங்க. என்ன மாடல்?
லேப்ல பண்ற மாதிரியே எல்லா ட்விட்டர் ஆப்சனும் பண்ணமுடியுமா? ஏதாச்சும் டிரா பேக் இருக்குதா சகா!?


சகா,  இப்பொழுது உள்ள எல்லா செல்போனிலிலும் தமிழில் டைப் செய்யும் வசதி வந்துவிட்டது. நான் இப்பொழுது உபயோகப்படுத்துவது சோனி எக்ஸ்பீரியா. இது ஆண்ட்ராய்டு மாடல். எல்லா ஆண்ட்ராய்டு மாடல் போன்களிலும் தமிழில் டைப் செய்யாலாம், அதற்கு "தமிழ் விசை" என்ற மென்பொருள் தேவை. இதை இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம். தமிழ் பக்கங்களை படிக்க "Opera Mini" என்ற மென்பொருள் இருக்கிறது. இந்த மென்பொருள் நோக்கியா மற்றும் ஐ-போனுக்கும் உபயோகப்படுத்தலாம். இப்பொழுதுலாம், தமிழில் டைப் செய்வது ரொம்ப சுலபம் சகா. உங்களுக்கு இன்னும் சந்தேகம் என்றால், தங்கள் மொபைல் நம்பர் தரவும், நான் போன் செய்து விளக்குகிறேன். தங்களுடைய போனின் மாடல் என்ன??

உனது இ-மெயிலுக்கு நன்றி நண்பா. சில சொந்த பிரச்ச்னைகளால் கடந்த மூன்று மாதங்களாக செல்போன்கள் உபயோகப்படுத்துவது இல்லை. செல்போனில் எப்படி டைப் செய்ய முடியும் என்ற சந்தேகத்தால் அந்த கேள்வியை கேட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். மற்றபடி நாம் ட்விட்டர் மற்றும் மெயில் மூலமே பேசிக்கொள்வோம்.

என்னது, இந்த நூற்றாண்டில் போன் உபயோகப்படுத்தாத மனிதனா??? ஆச்சர்யம் தான். எப்படி சகா இது சாத்தியமானது. நானும் பல முறை இப்படி முயற்சி செய்துள்ளேன். ஆனால் அவை எல்லாம் தோல்வியில்தான் முடிந்து உள்ளது. இன்னும் என்னால் உங்கள் வார்த்தைகளை நம்ப முடியவில்லை.

என்னது போன் உபயோகப்படுத்துவதில்லையா>> உண்மை தான் தோழர். சில அந்தரங்க காரணங்கள். ஒரு காலத்தில் இந்த உலகத்திலேயே செல்போனை அதிகம் உபயோகப்படுத்தியது நான் தான் சகா. இரவு எது?? பகல் எது?? என்ற தெரியாத காலம் அது.

சகா, தங்கள் வலைப்பதிவை படித்தேன். சாருவைப் பற்றி தாங்கள் எழுதிய கட்டுரை அருமை, நான் சாருவின் ரசிகன், இருந்தாலும் அந்த கட்டுரை எனக்கு பிடித்திருந்தது. அது மதுரை பொண்ணோ, ஜெர்மனி பொண்ணோ யாராக இருந்தால் எனக்கு என்ன, நான் இன்னும் சாருவின் ரசிகன் தான்.
சகா, இருக்கிறீர்களா??


நேற்று தூங்க அதிகாலை ஆகி விட்டது. இப்போது தான் எழுந்தேன்.உங்களை தேட வைத்து விட்டேன். நான் எப்போதும் இப்படித் தான். சாரி சகா.

சகா, ஒரு சந்தேகம். தற்பொழுது பிரேம்-ரமேஷின் 'மகாமுனி' புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் வலைப்பதிவில் அவரைப் பற்றி மனித மாமிசம் உண்பவர் என்று யாரோ சொன்னதாக குறிப்பிட்டு உள்ளீர். அப்படி சொன்னது யார்?? ரமேஷ் - பிரேமின் "சொல் என்றொரு சொல்" என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் ஒன்று. இப்படியும் எழுத முடியுமா என்ற குழப்பம். இதை போல் எழுதுவதால்தானே அவர்களுக்கு இப்படி ஒரு கேட்டப்பெயர்.

சகா! நான் உடனடியாக பதிலளிக்காததை தயவு செய்து பொருட்படுத்தாதீர்கள். எனது சூழல் அப்படி. மன்னிக்கவும் தோழர்.

மகாமுனியை நான் தரிசித்ததில்லை சகா. வலைப்பூவில் முனியை பற்றி பகிருங்களேன் சகா.
வெளிப்படையாக சொல்லப் போனால் இலக்கியம் என்ற ஒன்று படித்தே இரு வருடங்களாயிற்று சகா.
நான் படித்தவரையில் "முன்பொரு காலத்தில் 108 கிளிகள்" தான் தமிழின் ஆகச்சிறந்த தொகுப்பென ஒருமுறை ஜெமோவிடம் கூறினேன்.அன்பாய் புன்னகைத்தார்.


மகாமுனி பிரேம்- ரமேஷ் சிறுகதைகளின் தொகுப்பு. இதில் நீங்கள் சொன்ன ”108 கிளிகள்" இருக்கிறது.
ஏனோ அந்த சிறுகதை என்னை அதிகம் கவரவில்லை. எனக்கு மிகவும் பிடித்தக் கதை “பரமபத காதைகள்”. கிளிகள் கதையை மீண்டும் ஒரு முறை படித்து பார்க்கனும்.
ஒரு வேளை அந்த கதை எனக்கு பிடிக்க கொஞ்ச நாட்கள் ஆகலாம்.முழுதும் இந்த புத்தகத்தை படித்த பின், விரைவில் வலைப்பதிவில் எழுதுகிறேன்.நன்றி சகா.


சகா.. நகுலனைப் பற்றி நாஞ்சில்நாடன் எழுதியது..http://tiny.cc/f6mh0
ஏனோ, கண்கள் கலங்கி விட்டது....


படித்தேன் தோழர். பகிர்வுக்கு நன்றி. நகுலன் பற்றி சொல்ல சில இருக்கின்றன. பின்னர்.. தற்சமயம் மனம் சற்று இலகுவாயில்லை.


RT @ashok338 நகுலனின் சுசிலா நியாபகம் இப்பொழுது தேவையில்லாமல் வருகிறது.

சகா, நகுலனை நேரில் சந்தித்தது உண்டா??


இல்லை நண்பா, கடந்த ஒரு வருடமாக புத்தகம் மூலமாக மட்டுமே பழக்கம்.

அவரை சந்தித்திருக்கிறேன் சகா, இரு முறை..

இரண்டு முறையா??? நீங்கள் உண்மையாகவே அதிர்ஷ்டம் செய்தவர் சகா.. வாசகராக சந்தித்தீர்களா???


வாசகராகத் தான் சகா. இப்போதும் அவ்வப்போது அவரது வீடும் அந்த நாற்காலியும் கனவில் வந்து கொண்டுதான் இருக்கின்றது.


சகா, நீங்கள் பத்திரிக்கையில் துறையில் வேலை செய்கிறீர்களா??

என்ன செய்கிறீர்கள்? என்பதைப் போன்ற அச்சம் தரும் கேள்வி வேறேதும் தற்போதைக்கு எனக்கில்லை :) சில வருடங்கள் கழித்து பகிர்கிறேன் சகா.

இணையத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர்கள் நட்பு இத்துடன் காணாமல் போனது.

************************************
இது தான் அசோக் சொன்ன கதை இதை வைத்து நானும் ஒரு முழு கதையை எழுத எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை.

Tuesday, February 12, 2013

இன்னொரு கதை

பசி வயிற்றை கிள்ளுகிறது. அது எப்படி கிள்ளும் என்றும் கேட்காதீர்கள். சிலவற்றை அனுபவித்தால் மட்டுமே நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். அப்படிதான் இதுவும். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. மாதத்தில் ஒரு நாளாவது இப்படி காலையிலிருந்து இரவு வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பது என்று முடிவுசெய்து இருக்கிறேன். காரணம் என்று எதுவும் இல்லை.

வீட்டில் இருந்தால், கண்டிப்பாக எதாவது சாப்பிட வேண்டிய கட்டாயம் எற்பட்டுவிடும். "இல்லை, இன்று முழுவதும் எதுவும் சாப்பிட போவதில்லை" என்று மனைவியிடம் சொல்ல முடியாது. அப்படி சொன்னால், அதற்கு காரணம் கேட்பாள். காரணம் எதுவும் இல்லை என்று சொன்னால், நான் எதையோ ஒன்றை மறைப்பதாக அவள் எண்ணக்கூடும்.

எதற்கு இந்த தேவையில்லாத பிரச்சனை என்று காலை 8 மணிக்கே அலுவலகத்துக்கு வந்துவிட்டேன். அப்படியிருந்தும் அவள் விடவில்லை,  ஒரு கப் டீ போட்டு வைத்துவிட்டாள். ஏற்கனவே காலையில் டிபன் வேண்டாம் என்று சொல்லியாச்சு என்பதால் டீயை குடித்துவிட்டேன். எங்களுக்கு திருமணமாகி ஏழு மாதங்கள் கடந்துவிட்டது. இந்த ஏழு மாதத்தில் ஒருநாள் கூட அவள் கோபப்பட்டோ, டென்ஷனாகியோ நான் பார்த்ததில்லை. 

"ஏன்பா, உனக்கு கோபமே வராதா??" என்று கேட்டால். "கோபப்பட்டு என்ன நடக்க போகிறது" என்பாள்.

அவளைப் பற்றி எழுத ஆரம்பித்தாள் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்று தெரியவில்லை. தனியாக அவளைப் பற்றி ஒரு பதிவு எழுத ஆசை. ஆபிதீன் அவரின் மனைவியைப் பற்றி கலகலப்பாக எழுதுவாரே அதைப்போல். கல்யாணமான புதிதில் அவளை சிரிக்க வைக்க படாதப் பாடுபட்டேன். எந்த காமெடி சொன்னாலும் சிரிக்க மாட்டாள். பின்னர்தான் தெரிந்தது நான் சொல்லும் காமெடிகள் அவளுக்கு புரிவதில்லை என்ற விசயம். அவளிடம் காமெடிக்கு விளக்கம் சொல்லியே முதல் இரண்டு மாதங்கள் கழிந்துவிட்டன.

இப்பொழுதுலாம் அவள் உஷார் ஆகிவிட்டாள், நான் காமெடி சொல்வதற்கு முன்னரே சிரித்துவிடுகிறாள். "எதற்கு சிரித்தாய்" என்று கேட்டால் " அப்பறம் நான் சிரிக்க'லைனா அந்த காமெடிக்கு விளக்கம் வேறு சொல்லுவீங்க" என்கிறாள்.

அவள் விழுந்து விழுந்து சிரிக்கும் அதிசயமும் ஒருநாள் நடந்தது . அது "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" திரைப்படத்தை பார்த்த போது. சில்லரையைக் கொட்டியது போல் சிரிப்பு என்பார்களே, அது போல் அப்படியோரு சிரிப்பு. இப்பொழுது கூட அந்த திரைப்படத்தின் எதாவது ஒரு வசனத்தை சொன்னால் விடாமல் சிரிப்பாள். அப்படி ஒருநாள் அவள் சிரித்த சிரிப்பை கேட்டு பக்கத்து வீட்டு பாட்டி பயந்து போய் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். அந்த பாட்டிக்கு காது கேட்காது என்பது இங்கே ஒரு கூடுதல் செய்தி.

காலை எட்டு மணிக்கு அலுவலகம் வந்தேன். இப்பொழுது மணி மூன்று. நான்கு முறை போன் செய்துவிட்டாள். " காலையில் சாப்பிட்டாச்சா??" "மதியம் சாப்பிட்டாச்சா??" என்று இரண்டு முறையும், "நான் சாப்பிட போகிறேன்" என்று இரண்டு முறையும் மொத்தம் நான்கு முறை.  இதுவரை காலையிலிருந்து ஆறு முறை தண்ணீர் குடித்ததைதவிர வேறு எதுவும் சாப்பிடவில்லை என்று அவளிடம் சொல்லவா முடியும்.

"இல்லை, இன்னைக்கு முழுவதும் எதுவும் சாப்பிடவேண்டாம் என்று முடிவுசெய்து இருக்கிறேன். சும்மாதான் இந்த முடிவு" என்ற உண்மையை சொல்லலாம். அதற்கு அவளிடமிருந்து வரும் பதில் இப்படியாகதான் இருக்கும்,

"இப்ப அடி வாங்க போறீங்க. முதல்ல இந்த புக் படிக்கிறதை நிறுத்துங்க. மொத்தமா ஒருநாள் எடைக்கு போட்டுறேன் பாருங்க". ஆனால் இதை சொல்லும் போது அவள் மூகத்தில் கொஞ்சம் கூட கோபத்தை பார்க்க முடியாது.

இன்னும் பசி வயிற்றை கிள்ளுகிறது. இன்றைய பசியால் ரொம்ப நாட்களாக தூங்கிக்கொண்டு இருந்த என் வலைப்பதிவுக்கு ஒரு பதிவு கிடைத்துள்ளது என்பதை தவிர உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் இந்த பசிக்கான வேறு காரணங்கள் எதுவும் இல்லை.

குறிப்பு:
இரண்டு வருடங்களுக்கு முன்னால், இரண்டு நாட்கள் டீ தண்ணீரை தவிர வேறு எதுவும் உண்ணாமல் அறையிலேயே கிடந்தது இப்பொழுது தேவையில்லாமல் நினைவில் வருகிறது.