காக்கா அமர்ந்து மரக்கிளை சாய்ந்த கதையாக, நான் கடந்த 21-ஆம் தேதி அதானி குழுமத்தைப் பற்றி எழுத, 24-ஆம் தேதி Hindenburg நிறுவனம் அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து 88 அம்சங்களைக் கொண்ட அறிக்கையை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.
அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் கடந்த இரண்டு நாட்களில் 20–30 சதவீதம் வரை சரிந்துள்ளன. இன்னும் எவ்வளவு குறையும் என்று தெரியவில்லை. இதற்கிடையில், அதானி Enterprises நிறுவனத்தின் FPO கடந்த 27-ஆம் தேதி தொடங்கியுள்ளது.
FPO-வில் அதானி Enterprises பங்கின் விலை ரூ.3112. ஆனால் திறந்த சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை (27-01-2023) அதானி பங்கின் விலை ரூ.2761 ஆக இருந்தது. கண்டிப்பாக இந்த FPO தோல்வியடையும் என்று அனைவரும் கூறிக்கொண்டிருக்க, அதானி நிறுவனமோ இந்த FPO வெற்றிகரமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதற்கான மறைமுக ஏற்பாடுகளை இந்நேரம் அந்த நிறுவனம் தொடங்கியிருக்கலாம்.
வரும் திங்களன்று அதானி பங்கு மீண்டும் ரூ.3000-ஐத் தொடும் என்று எதிர்பார்க்கலாம்.
Hindenburg நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை சில ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவில் பல துறைகளில் ஏகபோக ஆதிக்கமாக (Monopoly) உருவாகிவரும் அதானி நிறுவனத்திற்கு இது கண்டிப்பாக ஒரு முட்டுக்கட்டையாக அமையும்.
சிலர், “ஒரு அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையை நாம் ஏன் நம்ப வேண்டும்?” என்று கேட்கிறார்கள். மோடியைப் பற்றிய பிபிசி ஆவணப்படத்திற்கும் இதைத்தான் சொன்னார்கள். அவர்களிடம் பேசி எந்தப் பயனும் இல்லை.
கடைசியாக ஒன்று. பங்குச் சந்தைக்கு புதிதாக வருபவர்களுக்கும், அதைப் பற்றி கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. அந்த Hindenburg நிறுவனத்தின் அறிக்கையை முழுமையாகப் படியுங்கள்; புரிந்தாலும் சரி, புரியாவிட்டாலும் சரி.
மேலும், இதன் தொடர்ச்சியாக அடுத்து நடக்கப் போகும் விவாதங்கள் மற்றும் மாற்றங்களை தொடர்ந்து கவனியுங்கள். சந்தையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று முன்கூட்டியே அனுமானித்து, அதன் படி நடக்கிறதா என்று சரிபாருங்கள்.
ஒரே செய்தி நிறுவனத்தின் செய்தியை மட்டும் படித்து முடிவு செய்யாதீர்கள். முக்கியமாக, தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே நம்பாமல் செய்தித்தாள்களையும் படியுங்கள்.
இப்போதைக்கு பணத்தை முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது.
Hindenburg நிறுவனத்தின் அதானி அறிக்கை:
https://hindenburgresearch.com/adani/
