Saturday, January 28, 2023

Hindenburg நிறுவனத்தின் அதானி ரிப்போர்ட்

காக்கா அமர்ந்து மரக்கிளை சாய்ந்த கதையாக, நான் கடந்த 21-ஆம் தேதி அதானி குழுமத்தைப் பற்றி எழுத, 24-ஆம் தேதி Hindenburg நிறுவனம் அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து 88 அம்சங்களைக் கொண்ட அறிக்கையை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது.

அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் கடந்த இரண்டு நாட்களில் 20–30 சதவீதம் வரை சரிந்துள்ளன. இன்னும் எவ்வளவு குறையும் என்று தெரியவில்லை. இதற்கிடையில், அதானி Enterprises நிறுவனத்தின் FPO கடந்த 27-ஆம் தேதி தொடங்கியுள்ளது.

FPO-வில் அதானி Enterprises பங்கின் விலை ரூ.3112. ஆனால் திறந்த சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை (27-01-2023) அதானி பங்கின் விலை ரூ.2761 ஆக இருந்தது. கண்டிப்பாக இந்த FPO தோல்வியடையும் என்று அனைவரும் கூறிக்கொண்டிருக்க, அதானி நிறுவனமோ இந்த FPO வெற்றிகரமாக நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதற்கான மறைமுக ஏற்பாடுகளை இந்நேரம் அந்த நிறுவனம் தொடங்கியிருக்கலாம்.

வரும் திங்களன்று அதானி பங்கு மீண்டும் ரூ.3000-ஐத் தொடும் என்று எதிர்பார்க்கலாம்.

Hindenburg நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை சில ஆரோக்கியமான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்தியாவில் பல துறைகளில் ஏகபோக ஆதிக்கமாக (Monopoly) உருவாகிவரும் அதானி நிறுவனத்திற்கு இது கண்டிப்பாக ஒரு முட்டுக்கட்டையாக அமையும்.

சிலர், “ஒரு அமெரிக்க நிறுவனத்தின் அறிக்கையை நாம் ஏன் நம்ப வேண்டும்?” என்று கேட்கிறார்கள். மோடியைப் பற்றிய பிபிசி ஆவணப்படத்திற்கும் இதைத்தான் சொன்னார்கள். அவர்களிடம் பேசி எந்தப் பயனும் இல்லை.

 

கடைசியாக ஒன்று. பங்குச் சந்தைக்கு புதிதாக வருபவர்களுக்கும், அதைப் பற்றி கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. அந்த Hindenburg நிறுவனத்தின் அறிக்கையை முழுமையாகப் படியுங்கள்; புரிந்தாலும் சரி, புரியாவிட்டாலும் சரி.

மேலும், இதன் தொடர்ச்சியாக அடுத்து நடக்கப் போகும் விவாதங்கள் மற்றும் மாற்றங்களை தொடர்ந்து கவனியுங்கள். சந்தையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று முன்கூட்டியே அனுமானித்து, அதன் படி நடக்கிறதா என்று சரிபாருங்கள்.

ஒரே செய்தி நிறுவனத்தின் செய்தியை மட்டும் படித்து முடிவு செய்யாதீர்கள். முக்கியமாக, தொலைக்காட்சி சேனல்களை மட்டுமே நம்பாமல் செய்தித்தாள்களையும் படியுங்கள்.

இப்போதைக்கு பணத்தை முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது.

Hindenburg நிறுவனத்தின் அதானி அறிக்கை:
https://hindenburgresearch.com/adani/



 



Saturday, January 21, 2023

துணிவு திரைப்படமும், Yes bank AT1 Bond, LIC மற்றும் அதானி ஷேர்களும்....

“துணிவு” திரைப்படத்தில் வருவது போல் Mutual Fund Scam-க்கு வாய்ப்பு உள்ளதா?” என்று ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறபோதுதான், நேற்று உயர்நீதிமன்றம் Yes Bank AT1 Bond Write-off செல்லாது என்று தீர்ப்பு அளித்துள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 8000 கோடி ரூபாய்.

பொதுவாக எல்லா Financial Scam-களும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. “இதற்கு முன்னாடி இதுபோல் நிறைய தடவை நடந்துள்ளது; ஆனால் இதுதான் First Time” என்ற வாக்கியம் Financial Scam-களுக்கு சுலபமாகப் பொருந்தும்.

மூன்று வருடங்களுக்கு முன்னால், Yes Bank திவாலாகும் நிலைமையில் இருந்தது. உடனே மத்திய அரசும், RBI-யும் Yes Bank-ஐ காப்பாற்ற சில முக்கியமான முடிவுகளை எடுத்தனர். அதில் ஒன்றுதான் இந்த Yes Bank AT1 Bond Write-off. அதாவது, இந்த Bond-ஐ வாங்கியவர்களுக்கு பணம் திருப்பித் தரத் தேவையில்லை.

AT1 Bond-ஐ பொதுமக்களும் வாங்கலாம். ஆனால் பெரிய நிறுவனங்கள், Pension Scheme-கள் மற்றும் Mutual Fund நிறுவனங்கள்தான் அதிகமாக வாங்குவார்கள். இந்த Write-off-ல் அனில் அம்பானியின் Reliance Mutual Fund-க்கு (புதிய பெயர் Nippon Mutual Fund) மட்டும் 2500 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.

Mutual Fund-க்கு நஷ்டம் என்றால் அது அவர்களின் நஷ்டம் இல்லை; அந்த Mutual Fund-ல் முதலீடு செய்த பொதுமக்களின் நஷ்டம். இந்த Write-off காரணமாக பல Debt Mutual Fund Scheme-கள் அந்த வருடம் Negative Returns கொடுத்தன.

இந்த Yes Bank விவகாரத்தில் மட்டும் “இதுதான் First Time” வகையைச் சேர்ந்த Financial Scam-கள் பல நடந்துள்ளன. அதில் இன்னொன்று, பத்து ரூபாய்க்கு Yes Bank பங்குகளை SBI மற்றும் ஏழு தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கியது. அவர்கள் அதை 40 ரூபாய்க்கு சந்தையில் விற்று லாபம் பார்த்தார்கள். இதைப்பற்றி பின்னர் ஒரு முறை பொறுமையாகப் பார்ப்போம்.

கடைசியாக, இப்போது நடந்துகொண்டிருக்கும் ஒரு Financial Scam-ஐ பற்றியும் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன்.

அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் கடந்த ஆறு வருடங்களாக உயர்ந்துகொண்டே வருகின்றன. அதானி Enterprises பங்கின் விலை மட்டும் 7700% உயர்ந்துள்ளது. அதாவது, 2016-ல் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இப்போது அது 78 லட்சம் ரூபாயாக மாறியிருக்கும்.

கடந்த இரண்டு வருடங்களாக LIC நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குகளை தொடர்ந்து வாங்கி வருகிறது. தற்போது அதானி குழுமத்தின் 5 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் LIC-யிடம்தான் உள்ளன.

ஏற்கனவே அதிக விலையில் இருக்கும் அதானி பங்குகளை LIC ஏன் தொடர்ந்து வாங்க வேண்டும்? யார் சொல்லி வாங்குகிறார்கள்?

இதற்கிடையில், அடுத்த வாரம் அதானி நிறுவனம் FPO மூலம் இன்னும் அதிக பங்குகளை சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. அதையும் இந்த LIC-தான் வாங்கும் என்று பலர் கருதுகிறார்கள்.

எல்லாம் நன்றாக நடக்கும் வரை எந்த Financial Scam-மும் வெளியில் தெரியாது. எங்காவது பிரச்சனை ஏற்பட்டால்தான் இந்த மீடியாக்கள் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்.

சரி, நேரமாகிவிட்டது. நானும் எனது மகனும் அடுத்து தேவி திரையரங்கில் “வாரிசு” மேட்னி ஷோவுக்குச் செல்ல வேண்டும்.

நன்றி. வணக்கம்.