இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பனிடம் தொலைபேசியில் பேச நேர்ந்தது. இயக்குநர் ராமின் தீவிர பக்தன் அவன்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஆனந்த விகடன் "தங்க மீன்கள்" திரைப்படத்திற்கு குறைவான மார்க் போட்டபோது, இரவு இரண்டு மணிக்கு போன் செய்து ஒரு மணி நேரம் அழுது தீர்த்தவன். நல்லவேளையாக ஒரு மணி நேரத்தில் போன் லைன் தானாகவே கட் ஆகிவிட்டது. போனில் பேட்டரி தீர்ந்துவிட்டதா அல்லது போதை தீர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை. இயேசுவின் பெயருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு நானும் தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள் காலையில் எழுந்தவுடனேயே மனைவியிடம் இருந்து வந்த முதல் கேள்வி:
"நைட் இரண்டு மணிக்கு போனில் பேசுகிற அளவுக்கு அப்படி என்ன முக்கிய விஷயம்?"
மீண்டும் அதே நண்பனிடமிருந்து போன் வந்தவுடனேயே, ஒரு விஷயத்தை மட்டும் மனதில் உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டேன்.
"இந்த முறை சினிமாவைப் பற்றி மட்டும் ஒன்றுமே பேசிவிடக் கூடாது."
ஆனால் இந்தப் பாழாய்ப் போன நாக்கு எங்கே நாம் சொல்வதைக் கேட்கிறது?
வழக்கம்போல் சனியன், நாக்கில் வந்து ஸ்டூல் போட்டு உட்கார்ந்துகொண்டு என்னைப் பார்த்து கேலியாகச் சிரித்தது. என்னையும் அறியாமல் என் நாக்கிலிருந்து ஒரு கேள்வி எழுந்தது.
"மச்சி, மூடர்கூடம் சூப்பரா இருக்காமே? பார்த்தியா? நம்ம ஊருல இரண்டே நாளில் தூக்கிவிட்டான். என்னால் பார்க்க முடியாம போச்சு" என்றேன்.
இந்தக் கேள்விக்காகவே காத்திருந்தவன் போல, கடகடவென்று பேசத் தொடங்கிவிட்டான்."மூடர்கூடம் ஒரு ஆங்கில திரைப்படத்தின் காப்பி. அதற்கு ஆனந்த விகடன் 50 மார்க் போட்டுள்ளது. ஆனால் தங்க மீன்கள் திரைப்படத்திற்கு 44 மார்க்தான். காப்பியடித்த திரைப்படத்திற்கு அதிக மார்க்; ஆனால் ஒரிஜினலாக எடுத்தால் மரியாதை இல்லை."
இப்படி அரை மணி நேரம் புலம்பினான். அவனை ஒருவழியாக சமாதானப்படுத்தி போனை கட் செய்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி இயக்குநர் ராமின் மீது பைத்தியமாக இருக்கும் நண்பர்கள் பலரை எனக்குத் தெரியும் (என்னையும் சேர்த்து).
எங்கள் நண்பர் வட்டத்தில் இயக்குநர் ராமை எப்பொழுதுமே "எங்கள் இயக்குநர்" என்றுதான் அழைப்போம்.
எங்கள் அனைவருக்குமே "கற்றது தமிழ்" திரைப்படத்தின் மீதும் இயக்குநர் ராமின் மீதும் ஏன் அப்படி ஒரு பைத்தியம் என்று யோசித்துப் பார்த்தபோது, எனக்குத் தோன்றியது இதுதான்.
"கற்றது தமிழ்" திரைப்படம் வந்த சமயத்தில், நாங்கள் கல்லூரி முடித்து வேலைக்காகத் தீவிரமாக அலைந்துகொண்டு இருந்தோம். தொடர்ந்து எல்லா நிறுவனங்களிலும் நிராகரிக்கப்பட்டுக்கொண்டு இருந்தோம். கல்லூரிக் காதல்கள் ஒவ்வொன்றாக 'குட் பை' சொல்லிப் பிரிந்துகொண்டு இருந்தன.
இன்னும் எத்தனை நாட்களுக்கு அப்பாவிடமிருந்து பணம் கேட்பது என்ற பயம்.
"கற்றது தமிழ்" திரைப்படத்தின் பிரபாகரன் கதாபாத்திரத்தை எங்களில் ஒருவனாகப் பார்த்தோம். அவன் தோல்வியைப் பார்த்து நாங்களும் அழுதோம். அவனைப் போலவே மரணம் ஒன்றுதான் சரியானது என்று நாங்களும் நம்பத் தொடங்கினோம்.
(என் நண்பன் ஒருவன் பூட்டிய அறைக்குள் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டதும் இதே காலத்தில்தான் நடந்தது.)
படித்து பட்டம் முடித்துவிட்டு வேலைக்காக சென்னை வீதிகளில் அலைந்துகொண்டு இருக்கும் இன்றைய இளைஞர்கள் கூட "கற்றது தமிழ்" திரைப்படத்தைப் பார்த்தால், பிரபாகரனை தங்களின் ஒருவனாக உணர்வார்கள். அதுவே எங்கள் இயக்குநரின் வெற்றி.
"தங்க மீன்கள்" திரைப்படமும் அப்படிப்பட்ட திரைப்படம்தான். குழந்தைகளைப் பெற்ற எல்லா அப்பாக்களும் தங்களையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக கல்யாணியாக உணர்வார்கள்.
"தங்க மீன்கள்" திரைப்படத்தைப் பற்றி பலர் தெளிவாக எழுதிவிட்டதால், இந்தப் பதிவை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.
குறிப்பு:
"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" திரைப்படத்தைப் பற்றி எழுதுவதற்காகத்தான் இந்தப் பதிவை எழுதத் தொடங்கினேன். ஆனால் எழுதி ரொம்ப நாட்களாகிவிட்டதால், சொல்ல வந்த விஷயத்தையே மறந்து எங்கோ சென்று விட்டேன்.
"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். இன்னும் "மூடர்கூடம்" திரைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் எனக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.




