மீண்டும் பைத்தியக்கார எண்ணங்கள் மனதில் துளிர்விட ஆரம்பித்துவிட்டன. எதனால் இந்த எண்ணங்கள் என்று ஆராயத் தொடங்கினால், அது பிரச்சனைகளை இன்னும் பூதாகரமாக்கிவிடும்.
காலை ஏழு மணிக்கு மீண்டும் கண்கள் தூங்கச் சென்றுவிட்டன. விதவிதமான கனவுகள். மொத்தம் பத்துக்கும் குறையாத கனவுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஏதோ ஒரு கனவிலிருந்து திடீரென்று அலறி அடித்துக்கொண்டு எழுந்தால், மணி வெறும் 7:05 தான்.
இந்த ஐந்து நிமிடங்களில் கிட்டத்தட்ட பத்து கனவுகள்.
எழுந்தபோது அந்தப் பத்து கனவுகளும் நினைவில் இருந்தன. ஆனால் இப்போது நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தால், ஒரு கனவு கூட நினைவில் வர மறுக்கிறது.
ஒருவேளை தூக்கத்தில் நான் பத்து கனவுகள் கண்டதாகக் கண்டது கூட கனவுதானா?
இல்லை, பத்து கனவுகள் கண்டது உண்மைதான். ஆனால் நினைவில் வரத்தான் மறுக்கிறது.
ஒருவேளை அதே கனவுகள் மீண்டும் வந்தால், எங்கேயோ நிஜத்தில் நடந்ததாக அப்போது தோன்றலாம். அது நிஜம் அல்ல, கனவுதான் என்று அந்தக் கனவுக்கு எப்படி புரியவைப்பது?
இந்தக் கனவுகள் சம்பந்தமாகத்தான் எத்தனை புத்தகங்கள், எத்தனை திரைப்படங்கள்.
Inception திரைப்படம் எனக்குப் புரிந்த அளவுக்குக் கூட, கனவுகளைப் பற்றி நான் படித்த எந்தப் புத்தகங்களும் எனக்குப் புரியவில்லை.
(கனவுகளைப் பற்றி நான் படித்த புத்தகங்கள் மற்றும் பார்த்த திரைப்படங்களில் எனக்கு Inception மட்டுமே கொஞ்சம் புரிந்தது என்பதைத்தான் கொஞ்சம் குழப்பி மேலே எழுதியிருக்கிறேன். எழுதிய பின் படித்துப் பார்த்தபோது, எழுதிய எனக்கே அந்த வரிகள் புரியவில்லை என்றாலும், ஏனோ அதை நீக்க மனது வரவில்லை.)
எனக்கு சில கனவுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன.
மீண்டும் மீண்டும் என்பதற்கு தினமும் என்று அர்த்தம் இல்லை.
கொஞ்ச நாட்களாக நான் பறப்பது போல் எனக்குக் கனவு வருகிறது.
யாரோ என்னைத் துரத்துகிறார்கள். நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். கொஞ்ச நேரம் பறக்கவும் செய்கிறேன்.
பறப்பது எனக்குக் கடினமான வேலையாகத் தெரியவில்லை. தினமும் நான் பறப்பவன் போல் பறந்துகொண்டு இருக்கிறேன்.
பறப்பது என்றால் பறவையைப் போல் அல்ல. Matrix திரைப்படத்தில் ஓடிப்போய், கால்களை தரையில் அமர்த்திய பின் பறப்பார்களே, அது போல்.
நான் மட்டும்தான் பறக்கிறேன். என்னைத் துரத்துபவர்கள் பறக்கவில்லை. அவர்கள் ஓடித்தான் வருகிறார்கள்.
நான் பறப்பதைப் பார்த்து அவர்கள் வியந்ததாகவும் தெரியவில்லை.
அவ்வளவுதான் நினைவில் இருக்கிறது.
ஆனால் எழுந்த பின் இப்போது நினைத்துப் பார்த்தால், அதே போல் நான் பறப்பது போன்ற கனவுகள் அடிக்கடி எனக்கு வருவது போல் தோன்றுகிறது.
இன்னொரு நாள் — ஒரு கனவில், ஒரு அறையில் நான் மட்டுமே இருக்கிறேன்.
எனக்குப் பறப்பது மறந்துவிடுகிறது.
நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன். ஆனால் பறக்க முடியவில்லை.
என்னுடைய கையாலாகாத்தனத்தை நினைக்கும்போது கண்களில் தண்ணீர் வருகிறது.
கதறி அழுகிறேன்.
இன்னொரு கனவில் ஒவ்வொரு வீட்டு மொட்டைமாடியாகப் பறந்துகொண்டு இருக்கிறேன்.
என்னுடன் இன்னொருவனும் வருகிறான்.
எங்கள் இருவரையுமே யாரோ துரத்துகிறார்கள்.
நாங்கள் ஓடியும் பறந்தும் அவர்களிடமிருந்து தப்பிக்கிறோம்.
ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் பிரிகிறோம்.
இப்போது நான் மட்டும் தனியாக ஓடிக்கொண்டு இருக்கிறேன்.
ஒரு கோயிலின் கோபுரங்களில் ஒளிந்துகொண்டு இருக்கிறேன்.
அங்கேயிருந்து கோயிலுக்குள் எட்டிப்பார்க்கிறேன்.
உள்ளே சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
சொல்லப்போனால், மேலே சொன்ன கனவில் எனக்கு "நானும் அவனும்" பிரிவது வரைதான் நினைவில் இருக்கிறது.
அதற்குப் பின் எழுதியது எல்லாம் நானே எழுதியது.
இல்லை, அதுவும் கனவில் வந்ததுதான் என்று உள்மனம் சொல்கிறது.
உண்மையாக அது கனவில் வந்ததா, இல்லை நானே கதைகட்டி எழுதுகிறேனா என்று தெரியவில்லை.
என் பைத்தியக்கார எண்ணங்களைப் பற்றி சொல்ல வந்த நான், கனவுகளோடு முடித்துக்கொள்கிறேன்.
பைத்தியக்கார எண்ணங்களைப் பற்றி இன்னொரு முறை எழுதுகிறேன்.
அதற்கு முன்னால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி —
"நீ கடைசியாக ஒரு பைத்தியத்தை எப்போது நேரில் பார்த்தாய்?" என்று யாராவது உங்களிடம் கேட்டால், உங்கள் பதில் எப்படியாக இருக்கும்?
No comments:
Post a Comment