Thursday, May 16, 2024

எரிந்து போன டைரி குறிப்புகள் ( எனது நினைவிலிருந்து)

நாம் ஏன் மற்றவர்களுக்காக நடிக்க வேண்டும்?

நமது நடிப்பின் மூலம் ஒருவரின் தற்கொலை ஒரு நாள் தள்ளிப்போகும் என்றால், கண்டிப்பாக நடிக்கலாம். தவறே இல்லை.

நமது நடிப்பின் மூலம் ஒருவரின் முகத்தில் ஒரு கணநேரச் சிரிப்பு மலரும் என்றால், அந்தக் கணநேர மகிழ்ச்சிக்காக நமது சுயத்தை மறைத்து நாம் நடிக்கலாமா? தேவையே இல்லை.

அதே நேரத்தில், அந்த ஒருவர் யார் என்பதும் இங்கே முக்கியம் இல்லையா? அவர் நாம் நேசிப்பவராக இருக்கலாம்; நாம் வெறுப்பவராக இருக்கலாம்; அல்லது நம்மை நேசிப்பவராக இருக்கலாம். இப்படி ஏதோ ஒருவராக...

ஆனால், அவரின் மகிழ்ச்சிக்காக நாம் நமது சுயத்தை விட்டுத்தரக் கூடாது என்று நினைப்பதும் ஒருவகையான சுயநலம் இல்லையா?

நமக்கான சுய பிம்பத்தை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? அது ஒருவிதமான ஆணவம். “என்னைப் பார்... நான் யாருக்காகவும் எப்போதும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்” என்று நிரூபிக்கத் துடிக்கும் ஆணவம்.

நாம் நிரூபித்து இங்கு எதைச் சாதிக்கப் போகிறோம்?

இருக்கும் இந்தப் பிறவியை மற்றவர்களுக்காக வாழ்ந்து விட்டுச் செல்வோமே.