Wednesday, June 3, 2026

வார்த்தைகளோடு அலைபவன் - தனவந்தனின் மூன்றாவது மகன் - 2

 

வார்த்தைகளோடு அலைபவன்

6.தனவந்தனின் மூன்றாவது மகன் 

2 

வார்த்தைகளோடு அலைபவன் எப்போது வேண்டுமானாலும் கதை சொல்லத் தொடங்குவான் என்பதை அறிந்திருந்த ஊர் மக்கள், அவன் கதை சொல்லப் போவதை ஊர் முழுவதும் தெரியப்படுத்த ஒரு மணியைத் தயாராக வைத்திருந்தனர்.

வார்த்தைகளோடு அலைபவன் அந்த ஊருக்குள் வந்து ஆறு நாட்கள், ஆறு நாழிகைகள், ஆறு நொடிகள் ஆனபோது, கடைசியாக அந்த மணி ஒலித்தது. ஊர் மக்கள் அனைவரும் திரளாக மணி ஒலித்த திசையை நோக்கி ஓடத் தொடங்கினர்.

தனவந்தனின் வீட்டிலும் அந்தப் பரபரப்பு ஒட்டிக்கொண்டது.

ஆறு நாட்களுக்கு முன்னர், தனவந்தனும் அவனது மனைவியும் வார்த்தைகளோடு அலைபவனைச் சந்தித்து, தங்களுக்காகத் தனியாக, பிரத்யேகமாகக் கதை சொல்லுமாறு கேட்டிருந்தார்கள். ஆனால், வார்த்தைகளோடு அலைபவன் அதை முற்றிலுமாக மறுத்துவிட்டான். தனவந்தனின் மனைவி கொடுத்த பொற்காசுகளையும் அவன் வாங்கவில்லை.

கடைசியாக, அவனது மனைவி, தங்களுக்குச் சொந்தமான ஒரு பரந்த இடத்தில் அனைத்து விதமான சௌகரியங்களும் கிடைக்கும் என்றும், மக்கள் கூட்டமாக அமரவும் அதுவே சரியான இடமாக இருக்கும் என்றும் கூறி, அங்கிருந்து கதை சொல்லுமாறு வேண்டினாள்.அதற்கும் அவன் மறுத்துவிட்டான்.

இப்போது மணி ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த இடம், ஊரின் இடுகாட்டுக்கு அருகில் இருந்தது.

தனவந்தன், அவனது மனைவி மற்றும் இரு மகன்களும் தங்களது வேலையாட்களுடன் அந்த ஒலி வந்த திசையை நோக்கிச் சென்றனர். அவர்கள் சென்ற விதம், ஒரு பெரிய கோயில் திருவிழா ஊர்வலத்தைப் போல இருந்ததாக ஊருக்குள் ஒரு பேச்சு உண்டு. தனவந்தன், அவனுடைய நினைவூட்டும் ஆறு வேலையாட்கள், அவனது மனைவி, அவளது மூன்று பணிப்பெண்கள், தனவந்தனின் இரு மகன்கள், அவர்களுக்குத் தலா இரண்டு வேலையாட்கள், அவர்கள் அமர்வதற்கான அரியாசனங்கள், அவற்றைத் தூக்க நான்கு வேலையாட்கள், அவர்கள் பயணிப்பதற்காக இரண்டு யானைகள், அதற்கான இரு பாகன்கள் என ஒரு பெரும் பட்டாளமாகவே அவர்கள் கதை கேட்கச் சென்றார்கள்.

யானையின் மீது செல்லும்போது கூட, தனவந்தன் தனது இல்லாத மகனிடம்,

பத்திரமாக அமர்ந்துகொள்”

என்றும்,

கீழே எட்டிப் பார்க்காதே”

என்றும் சொல்லிக்கொண்டே, கொஞ்சமும் விருப்பமில்லாமல் கதை கேட்கச் சென்றான்.

வார்த்தைகளோடு அலைபவன் கதை சொல்ல இருந்த அந்த இடுகாட்டுக்கு அருகில், ஏற்கனவே ஊர் மக்கள் வெள்ளம் போல் திரண்டிருந்தனர்.

தனவந்தன் தனது குடும்பத்துடன் வந்திருப்பதைக் கண்ட மக்கள், அவன் மீது வைத்திருந்த மரியாதைக்காகவும், அவனது வானுயர்ந்த செல்வத்திற்காகவும் தாங்களாகவே வழிவிட்டு, முன் வரிசையில் அவர்களுக்கு இடம் கொடுத்தார்கள்.

வார்த்தைகளோடு அலைபவன் தனது மூட்டையை அவிழ்த்து, அதிலிருந்து வெளிவந்த முதல் வார்த்தையை வைத்து இவ்வாறு கதை சொல்லத் தொடங்கினான்:

இந்தக் கதை நான் உருவாக்கியது அல்ல. நம் பிரபஞ்சத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு விசித்திரக் கிரகத்தின் ரகசியம் இது. லில்லி மாதத்தில் பிறந்தவன் தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்த ஓர் உண்மைச் சம்பவம்...”

வார்த்தைகளோடு அலைபவன் ஒரு முக்கோண வடிவக் கருவியின் வழியே கதை சொன்னதால், அங்கு வந்திருந்த அனைவருக்குமே அவனது குரல் தெளிவாகக் கேட்டது. அவன் கதை சொல்லச் சொல்ல, மக்கள் கூட்டம் பேரமைதியில் ஆழ்ந்தது. அன்றைய இரவு முழுவதும் அவன் கதை சொன்னான். ஊர் மக்கள் அனைவரும் இருந்த இடத்தை விட்டு நகராமல் கதை கேட்டுக்கொண்டிருந்தனர். சில குழந்தைகள் தங்களின் அம்மாக்களின் மடியிலேயே தூங்கிப்போயின. தங்கள் காதலியைப் பார்ப்பதற்காகவே அங்கு வந்திருந்த சில இளைஞர்கள், கதையோடு கலந்து தங்களின் காதலியையே மறந்தார்கள்.

தனவந்தனுக்கு அந்தக் கதை பிடித்ததா இல்லையா என்பது அவனுக்கே தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவனை அங்கிருந்து எழுந்து செல்ல விடவில்லை. அவன் அருகிலிருந்த தனது இல்லாத மகனையும் சில நிமிடங்களுக்கு ஒருமுறை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டான். தனவந்தனின் நினைவூட்டும் வேலையாட்களோ தங்களின் கடமையை முற்றிலும் மறந்து கதையோடு ஒன்றியிருந்தனர். சிரிப்பதையே மறந்து, வணிகத்தில் பெரும் செல்வம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கும் மூத்த மகனும், கதைக்குத் தகுந்தவாறு சிரித்தும், தனது முகபாவங்களை மாற்றியும் கதையை ரசித்துக்கொண்டிருந்தான். இப்படியே இரவு முழுவதும் நகர்ந்தது.

விடிந்தவுடன் கதையை நிறுத்திய வார்த்தைகளோடு அலைபவன், மீண்டும் இன்றைய மாலை நேரத்தில் கதை தொடங்கும் என்றான். மக்கள் அனைவரும் மெல்லக் கலைந்து சென்றனர். இதே போல் தினமும் நடந்தது.

அந்தக் கதையைச் சொல்லி முடிக்க வார்த்தைகளோடு அலைபவன் மொத்தம் இருபத்தெட்டு இரவுகளை எடுத்துக்கொண்டான். ஒரு பௌர்ணமி அன்று தொடங்கிய கதை, அடுத்த பௌர்ணமி நாளில்தான் நிறைவடைந்தது.

முதல் நாள் கதை கேட்டுவிட்டு வந்த தனவந்தன்,

இனி நான் கதை கேட்கப் போவதில்லை”

என்று பிடிவாதம் பிடித்தான். ஆனால் அன்று மாலையே, யாரிடமும் எதுவும் சொல்லாமல், தன் குடும்பத்தோடு மீண்டும் அவனே முன்னால் சென்று கதை கேட்க அமர்ந்தான்.

இரண்டாம் நாள் கதையிலும் மக்கள் கூட்டம் குறையவில்லை. மாறாக இன்னும் அதிகரித்திருந்தது. முதல் நாள் கதை கேட்காதவர்களும் இப்போது வந்து சேர்ந்திருந்தார்கள். சிலர் தங்களுடைய வீட்டிலிருந்து பாய்களைக் கொண்டு வந்தார்கள். சிலர் சமைத்த உணவுகளைக் கொண்டு வந்தார்கள்.

மூன்றாம் நாள், தனவந்தன் ஒரு விசித்திரமான விஷயத்தை கவனித்தான் வார்த்தைகளோடு அலைபவன் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது, தனது மூன்றாவது மகனைப் பார்க்க அவன் திரும்பினான். ஆனால் அந்த இடம் காலியாக இருந்தது. உடனே பதறிப்போனான். சில நொடிகளுக்குப் பிறகுதான் மீண்டும் அவன் மகன் அங்கே அமர்ந்திருப்பது போலத் தோன்றியது. அதைப் பற்றி அவன் யாரிடமும் சொல்லவில்லை.

நான்காம் நாள், அவனுடைய நினைவூட்டும் வேலையாட்கள் ஆச்சரியத்தில் இருந்தார்கள். ஏனென்றால், அன்று காலை முதல் அவன் தனது இல்லாத மூன்றாவது மகனிடம் வழக்கத்தை விடக் குறைவாகப் பேசிக்கொண்டிருந்தான்.

ஐந்தாம் நாள், அவனுடைய வேலையாள் ஒருவன் வந்து, “சின்ன ஐயா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.” என்று நினைவூட்டினான். தனவந்தன் அவனைப் பார்த்து, “எனக்குத் தெரியும்.” என்றான்.

இரண்டு வருடங்களில் அவன் முதல் முறையாக அப்படிச் சொன்னான். வேலையாட்கள் மூலம் இதை கேள்விப்பட்ட தனவந்தன் மனைவி கொஞ்சம் நிம்மதி அடைந்தாள்.

ஏழாம் நாள், ஊரில் ஒரு வதந்தி பரவத் தொடங்கியது. கதை கேட்க வந்தவர்கள் தூங்கும்போது, அவர்கள் கனவுகளிலும் வார்த்தைகளோடு அலைபவன் சொல்லும் அதே கதை தொடர்கிறது என்று சிலர் சொன்னார்கள். கனவில் கேட்ட பகுதியை மறுநாள் இரவு அவன் கதையில் சொல்வதாகவும் கூறினார்கள்.

பத்தாம் நாள், தனவந்தனின் மூத்த மகன் தனது தந்தையைப் பார்த்து பயந்தான். இரண்டு வருடங்களுக்குப் பிறகு தனவந்தன் முதல் முறையாக அனைவரிடமும்  சிரித்துப்பேசினான்.

பன்னிரண்டாம் நாள், நினைவூட்டும் வேலையாட்களின் எண்ணிக்கை ஆறு பேரிலிருந்து நான்கு பேராகக் குறைக்கப்பட்டது. மற்ற இருவருக்கும் தோட்ட வேலைகள் ஒதுக்கப்பட்டன. அந்த இருவரும் மாலை நேரத்தில் வேலைகளை வேகமாக முடித்துவிட்டு, கதை கேட்கும் கூட்டத்தின் பின் வரிசையில் அமர ஆரம்பித்தார்கள்.

பதினாறாம் நாள், தனவந்தன் ஒரு முழு நாளை தனது மூன்றாவது மகனிடம் பேசாமல் கழித்தான். அந்த மாலை வீட்டுக்குத் திரும்பிய பிறகுதான் அதை அவன் உணர்ந்தான். அவன் அழவில்லை. மகிழ்ச்சியும் அடையவில்லை. நீண்ட நேரம் அமைதியாக மட்டும் அமர்ந்திருந்தான்.

அதே நாளில், ஊரில் மற்றொரு வதந்தியும் பரவியது. கதை கேட்க வந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான வேறு கதையைத்தான் கேட்கிறார்கள் என்று சிலர் சொன்னார்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும், ஒவ்வொருவருக்கும் வேறு கதை.

இருபதாம் நாள் முதல் தனவந்தன் மற்ற சிலரை போல், வீட்டுக்கு செல்லாமல் அங்கேயேயிருந்து மாலை சொல்லப் போகும் கதைக்காக காத்திருக்க தொடங்கினான்.

இருபத்தெட்டாம் நாள். பௌர்ணமி. கதை முடிந்தது. வார்த்தைகளோடு அலைபவன் கடைசி வார்த்தையைச் சொன்னான். மூட்டையை மூடினான். அடுத்த ஊருக்கு செல்ல மூட்டையை தூக்கி கொண்டு நடக்க தொடங்கினான்.

கூட்டம் நீண்ட நேரம் அமைதியாக அதே இடத்தில் இருந்தது. சிலர் போக மனம் இன்றி அங்கேயே அமர்ந்தனர். அடுத்த பல வருடங்களுக்கு அந்த இடம் அந்த ஊர் மக்களுக்கு கதைகள் பேசும் கூடாரமாக அமைந்தது.

தனவந்தன் வீட்டுக்கு சென்று தனது ஆறு நினைவூட்டும் வேலையாட்களையும் அழைத்தான்.அவன் அவர்களிடம்,

நாளையிலிருந்து நீங்கள் வீட்டில் உள்ள தோட்ட வேலையைப் பாருங்கள்"

என்றான்.

வேலையாட்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இரண்டு வருடங்களாக அவர்கள் செய்த வேலை அன்றோடு முடிந்தது.

அன்றிலிருந்து தனவந்தன் தனது இல்லாத மகனைப் பற்றி பேசுவதில்லை. அது எப்படி நடந்தது என்பதை அவனுக்கே சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இதே போல் அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒரு மாற்றத்தை கண்டனர்.

கடல் கடந்து வணிகம் செய்து வரும் தனவந்தனின் மூத்த மகன் மூலம் வார்த்தைகளோடு அலைபவனின் புகழ் பக்கத்து நாடுகளுக்கும் பரவியது.

Sunday, May 31, 2026

வார்த்தைகளோடு அலைபவன் - தனவந்தனின் மூன்றாவது மகன்

 வார்த்தைகளோடு அலைபவன்

6.தனவந்தனின் மூன்றாவது மகன் 

வார்த்தைகளோடு அலைபவன் புதிதாக கதை சொல்ல வந்த ஊரில், ஒரு தனவந்தன் இருந்தான்.

அவனிடம் நூறு வேலையாட்கள் இருந்தார்கள். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தார்கள்.அவனுக்கு சொந்தமாக நிலங்கள் இருந்தன. கடைகள் இருந்தன. குதிரைகள் இருந்தன. அவனிடம் வேலை செய்தவர்களில் சிலர், தங்கள் தாத்தாவின் தாத்தா காலத்திலிருந்தே அந்த குடும்பத்திற்கு வேலை செய்து வந்ததாகச் சொல்வர்.அவனுடைய மூன்றாவது மகன் இறக்கும் வரை, அவனுடைய வாழ்க்கையில் எந்த ஒரு குறையும் இல்லை என்று அந்த ஊர் மக்கள் சொல்வார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால், ஆறு வயதே ஆன அவனுடைய மூன்றாவது மகன் காய்ச்சல் கண்டு இறந்துவிட்டான்.அந்த காய்ச்சல் எப்படி வந்தது என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது. சிலர் அது வடக்குப் பகுதியில் இருந்து வந்த ஒரு நோய் என்றார்கள். இன்னும் சிலர் அது சாதாரண காய்ச்சல்தான் என்றார்கள். அந்தக் குழந்தையைப் பார்த்த வைத்தியன் ஒருவன் மட்டும், "இந்தக் குழந்தை நோயால் இறக்கவில்லை" என்று சொன்னதாக ஒரு வதந்தியும் உண்டு. ஆனால் அவன் எதனால் இறந்தான் என்பதை அந்த வைத்தியன் கடைசி வரை யாரிடமும் சொல்லவில்லை.

அதன் பிறகுதான் தனவந்தனின் நோய் தொடங்கியது.முதலில் அவனுக்கே அது தெரியவில்லை.இல்லாத தனது மூன்றாவது மகனை கற்பனையில் உருவாக்கி அவனிடம் பேசத் தொடங்கினான்.

இதை முதலில் கவனித்தது அவனுடைய மூத்த மகன்தான்.ஒருநாள் மதிய நேரத்தில், வீட்டின் பின்புறத் தோட்டத்தில் நின்றுகொண்டு தனவந்தன் யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தான்.ஆனால் அங்கு யாரும் இல்லை.அவன் மூத்த மகன் அமைதியாக நின்று கேட்டுக்கொண்டிருந்தான்.
"இன்று பாடம் படித்தாயா?"
என்று தனவந்தன் கேட்டான்.
சிறிது நேரம் அமைதியாக நின்றான். பிறகு,
"பொய் சொல்லாதே. உன் கண்களைப் பார்த்தாலே தெரிகிறது."
என்று சிரித்தான். அன்று இரவு அந்த விஷயத்தை தனது அம்மாவிடம் மூத்த மகன் சொன்னான்.

புத்திரப் பிரிவில் தனது கணவர் வாடுவதால், சில நாட்களில் சரியாகிவிடும் என்று அவள் நினைத்தாள். ஆனால் நாளாக நாளாக அவனுடைய இந்தப் பிரச்சனை அதிகமாகிக்கொண்டே போனது.

காலையில் எழுந்தவுடனே தனது மூன்றாவது மகனை எழுப்புவது போல பேசுவான்.சாப்பிட உட்கார்ந்தால் அவனுக்கும் ஒரு தட்டு வைக்கச் சொல்வான்.வெளியே செல்லும்போது அவனையும் அழைத்துக்கொண்டு வருவது போல கதவைத் திறந்து பிடித்துக்கொண்டு நிற்பான். இதையெல்லாம் பார்த்த அவன் மனைவி,
"அவன் இறந்து ரொம்ப நாட்களாகிவிட்டதே"
என்று சொன்னவுடன்,
"அய்யோ, மறந்துவிட்டேன்"
என்று சொல்லிவிடுவான்.

ஆனால் அந்த மறதி பத்து நிமிடங்களுக்குக் கூட நீடிக்காது.மீண்டும் மகனிடம் பேசத் தொடங்கிவிடுவான்.அப்போது மீண்டும் அவன் மனைவி வந்து நினைவூட்ட வேண்டும்.இது நாள் முழுவதும் தொடர்ந்தது. வணிகம் செய்ய வெளியே செல்லும்போதும் அவன் இப்படித்தான் நடந்துகொள்வதாக அவனுடைய வேலையாட்கள் வந்து அவன் மனைவியிடம் தெரிவித்தார்கள்.

அடுத்த நாளிலிருந்து, அவன் இப்படிச் செய்யும் போதெல்லாம் அவனுக்கு மகனின் மரணத்தை நினைவூட்டுவதற்காக, வேலையாட்களில் ஒருவரை அவன் மனைவி நியமித்தாள். அந்த தனவந்தனுக்கும் இல்லாத மகனிடம்தான் பேசுகிறோம் என்பது தெரிந்தே இருந்தது. ஆனால் அவனால் அதைத் தடுக்க முடியவில்லை.ஆகவே, அருகில் ஒரு வேலையாள் இருந்து அதை நினைவூட்டிக்கொண்டே இருப்பதும் நல்லது என்று அவனும் எண்ணினான். ஆனால் இந்த வியாதி நாட்கள் செல்லச் செல்ல இன்னும் மோசமாகிக்கொண்டே வந்தது. 

முதலில் அந்த வேலையாள் ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை மட்டுமே அவனுக்கு மகனின் மரணத்தை நினைவூட்ட வேண்டியிருந்தது.ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை நினைவூட்டுமளவு சென்றது. இறுதியில், ஒரு மணிநேரத்திற்கு ஒரு வேலையாள் என்ற கணக்கில் மொத்தம் ஆறு வேலையாட்கள் இதற்காகவே வேலை பார்த்தார்கள்.அவன் வெளியூர் செல்லும்போதும் அந்த ஆறு பேரையும் அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காகவே அவன் வெளியூர் வணிகப் பயணங்களைத் தவிர்த்தான்.

அவனுடைய இந்த நிலையைப் பார்த்த ஊரில் சிலர்,
"அவன் மகனின் ஆத்மா இன்னும் அவனைச் சுற்றிக்கொண்டிருப்பதால் தான் இப்படிச் செய்கிறான்"
என்றார்கள்.
இன்னும் சிலர்,
"இது ஒரு மனநோய். இதற்கு வைத்தியரிடம் செல்ல வேண்டும்"
என்றார்கள்.

அவனும் மாந்திரீகர்களிடமும், வைத்தியர்களிடமும் சென்றான். ஆனால் இந்த வியாதி நின்றபாடில்லை. இன்னும் சிலர் சொன்னபடி, இதைவிட பெரிய மாந்திரீகர்களையும் பெரிய வைத்தியர்களையும் தேடிச் சென்றான். அதன் பின்னர் அவனுடைய வாழ்க்கை, ஒரு மாந்திரீகரிடமிருந்து இன்னொரு மாந்திரீகரிடமும், ஒரு வைத்தியரிடமிருந்து இன்னொரு வைத்தியரிடமும் அலைந்து திரிவதிலேயே கழிந்தது.

அந்த ஊரில் சிலர் இதைப் பார்த்து சிரித்தார்கள்.சிலர் பயந்தார்கள்.சிலர் இரக்கம் கொண்டார்கள்.ஆனால் அனைவரும் அவனைப் பற்றிப் பேசினார்கள்.அவனுடைய மகனைப் பற்றியும் பேசினார்கள்.அந்தக் குழந்தை உயிரோடு இருந்த காலத்தை விட, இறந்த பிறகுதான் அந்த ஊரில் அதிகம் பேசப்பட்டது.

இப்படியாக இரண்டு வருடங்கள் கடந்தன.இப்போது எல்லாம் அவன் வெளியே அதிகம் செல்வதில்லை.முகத்தில் ஒரு களைப்பு எப்போதும் இருந்தது.யாரிடமும் அதிகம் பேசுவதும் இல்லை.பேசினாலும் மகனிடம்தான் பேசுவான்.அதைத் தடுக்க அவனுடைய வேலையாள் எப்போதும் அவன் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பான். 
வணிக நிர்வாகத்தை அவன் மூத்த மகன் திறம்பட கவனித்துக்கொண்டிருந்ததால், செல்வம் மட்டும் குறையவில்லை; மாறாக இன்னும் பெருகிக்கொண்டே இருந்தது.

வார்த்தைகளோடு அலைபவனின் கதைகள் வியாதிகளைக் குணப்படுத்தும் என்ற செய்தியை அறிந்த அவன் மனைவி, தனது கணவரையும் அழைத்துக்கொண்டு வார்த்தைகளோடு அலைபவனைப் பார்க்கச் சென்றாள். கூடவே சில பொற்காசுகளையும் எடுத்துச் சென்றாள். இதில் சற்றும் நம்பிக்கையில்லாத அந்த தனவந்தன், தனது மனைவியின் விருப்பத்திற்காக மட்டுமே அவளுடன் சென்றான்.

Friday, May 29, 2026

Crontab: Ashok.exe - Amazon Kindle Book


 Crontab என்ற பெயரில் நான் எழுதிய பதிவுகளை Crontab: Ashok.exe என்ற பெயரில் Amazon Kindle புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

நண்பன் ஒருவன் Kindle Direct Publishing பற்றி சொல்ல, நானும் விளையாட்டாக உள்ளே நுழைந்தேன். அடுத்த அரை மணி நேரத்தில் புத்தகம் தயார். வெள்ளைக்காரனா வெள்ளைக்காரன்தான். ஒரு புத்தகத்துக்கு முன்னுரை எழுதுவதை விட, அதை வெளியிடுவது சுலபமாக இருக்கிறது.

புத்தகத்தின் விலை 49 ரூபாய். Amazon கமிஷன் போக எனக்கு 15 ரூபாய் கிடைக்கும்.

உடனே மனது கணக்கு போட்டது.

எனது நண்பர்கள் 100 பேர் வாங்கினால்,

100 × 15 = 1500 ரூபாய்.

இப்படியே இரண்டு மூன்று புத்தகம் போட்டால், முழு நேர எழுத்தாளனாகிவிடலாம்.

இந்த யோசனை வந்த ஐந்து நிமிடத்திற்குள் நண்பர்கள் அனைவருக்கும் WhatsApp-ல் புத்தக link-ஐ அனுப்பிவிட்டேன். அடுத்த 48 மணி நேரத்தில் இதுவரை இரண்டு பேர் வாங்கியுள்ளனர்.அதில் ஒருவர் தீவிர வாசகரான நான். இன்னொருவர் யார் என்று தெரியவில்லை.

Amazon அந்த விவரத்தை எழுத்தாளர்களிடம் சொல்ல மாட்டார்களாம். ஒருவேளை அவர் இந்தப் பதிவைப் படித்துக்கொண்டு இருக்கலாம்.

அப்படியென்றால், இந்த புத்தகத்தின் முதல் வெளி முதலீட்டாளருக்கு எனது நன்றி.

புத்தகத்தின் link:

https://amzn.in/d/0idH5bOn

Wednesday, May 27, 2026

வார்த்தைகளோடு அலைபவன் - கால இயந்திரம்

 வார்த்தைகளோடு அலைபவன்

5.கால இயந்திரம் 

 வார்த்தைகளோடு அலைபவனிடம் , காலத்தைப் பின்னோக்கிச் செலுத்தும் ஒரு இயந்திரம் இருந்தது. அதை அவன் கழுத்தில் எப்போதும் அணிந்திருந்தான். அது, அவன் பிறந்தது முதல் இன்று வரை நடந்த அவனுடைய அனைத்து நிகழ்வுகளையும் பாதுகாத்து வைத்திருந்தது. அதை அவன் அப்பா, ஒரு அரபு வணிகரிடம் பத்து ஷையர் இனக் குதிரைகளையும், நான்கு ஆப்ரிக்க யானைகளையும் கொடுத்து வாங்கியிருந்தார். அவன் பிறந்தவுடனேயே அதை அவன் கழுத்தில் அணிவித்துவிட்டார்.

அந்த இயந்திரத்தின் மூலம், அவன் ஏற்கனவே கடந்துவந்த காலத்திற்குச் செல்ல முடியும். ஆனால் அங்கு சென்று அவனால் வெறுமனே வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும்; எந்த ஒரு நிகழ்வையும் மாற்ற முடியாது. அதுவே அந்த இயந்திரத்தின் வரமும் மிகப்பெரிய சாபமும் — அது கடந்த காலத்தை காட்டும், ஆனால் எந்த ஒரு நினைவிலிருந்தும் அவனை காப்பாற்றாது.

ஏழு வயதில், அவன் தொலைத்துப் போன ஒரு மரப்பொம்மையை நாள் முழுவதும் தேடி களைத்துப் போயிருந்தான். அப்போதுதான் அவன் அப்பா அந்த இயந்திரத்தைப் பற்றி முழுமையாகச் சொன்னார். தேவையின் போது மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டளையையும் இட்டிருந்தார். இவ்வளவு அரிய இயந்திரத்தை, வெறும் யானைகளுக்கும் குதிரைகளுக்கும் பதிலாக அந்த அரபு வணிகன் ஏன் கொடுக்க வேண்டும் என்ற சந்தேகம் அவருக்குள் இருந்துக்கொண்டே இருந்தது.

முதலில் அவன் அந்த இயந்திரத்தை சாதாரண விஷயங்களுக்காகவே பயன்படுத்தினான். தொலைத்துப் போன பொருட்களை கண்டுபிடிக்க. தனது அம்மாவின் குரலை மீண்டும் கேட்க. முதல் முறையாக கதை சொன்ன நாளில் மக்கள் எப்படி அவனைப் பார்த்தார்கள் என்பதை அறிந்துகொள்ள.

ஆனால் மெதுவாக, அந்த இயந்திரம் அவனுக்கு ஒரு பழக்கமாக மாறத் தொடங்கியது. சில வருடங்களுக்குப் பிறகு அவன் ஒரு விஷயத்தை கவனித்தான்.

அவன் கடந்த காலத்துக்குள் செல்லும் ஒவ்வொரு முறையும், அங்கே இருக்கும் பழைய “அவன்” ஒருசில நொடிகள் அமைதியாக நின்று, எதையோ உணர்வது போல திரும்பிப் பார்ப்பான்.

முதலில் அது அவனுடைய கற்பனை என்று நினைத்தான்.

ஒருமுறை, தனது பத்தாவது வயதில் அம்மா இறந்த நாளின் நினைவுக்குள் அவன் சென்றான். மழையில் நின்றுகொண்டிருந்த சிறுவனான அவன், திடீரென்று வெறுமையான வானத்தைப் பார்த்து இப்படிச் சொன்னான்:

> “நீ மீண்டும் வந்துவிட்டாயா?”

அந்த நொடியில்தான் வார்த்தைகளோடு அலைபவன் முதல் முறையாக பயந்தான்.

அதன் பின்னர் பல நாட்கள் அவனால் தூங்க முடியவில்லை. அந்த இயந்திரம் வெறும் நினைவுகளை மட்டும் பாதுகாக்கவில்லை; நினைவுகளும் அவனை நினைவில் வைத்துக்கொண்டிருக்கின்றன என்ற பயம் அவனுக்குள் வளரத் தொடங்கியது.

அதன் பிறகு அவன் அந்த இயந்திரத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டான். அப்பாவின் விருப்பத்திற்காக மட்டும் அதை கழுத்தில் அணிந்திருந்தான்.

அவன் அப்பா நண்பர்களால் வஞ்சிக்கப்பட்டு, அவர் தந்த வார்த்தைகளை மூட்டையாக கட்டிக்கொண்டு ஊர் ஊராக கதை சொல்லத் தொடங்கிய பிறகும், அந்த இயந்திரத்தை அவன் கழுத்தில் அணிந்திருந்தான்.

ஒருமுறை ஒரு ஊரில், ஒரு புதிய கதையை அவன் சொல்லிக்கொண்டிருந்தான். தினமும் தனது பழைய நினைவுகளுக்குள் சென்று வாழ்ந்துகொண்டே இருப்பதால், மெதுவாக நிகழ்காலத்தில் இருந்து அழிந்து போகும் ஒரு மனிதனைப் பற்றிய கதை அது.

அந்தக் கதையை கேட்ட ஒரு முதியவன் கூட்டத்தில் எழுந்து நின்று கேட்டான்:

> “நினைவுகளுக்குள் அதிக நேரம் வாழ்ந்தவர்கள், இறுதியில் யாருடைய நினைவாக மாறுவார்கள்?”

அந்தக் கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் அந்தக் கேள்வி மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

இத்தனை நாள் இதைப் பற்றி ஏன் சிந்திக்கவில்லை என்று அவன் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

அன்று இரவுதான், பல வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அந்த இயந்திரத்தை இயக்கினான்.

இந்த முறை அவன் மிகவும் பின்னோக்கிச் சென்றான்.

தன் பிறப்புக்கு முன்னால்.

அப்போது அவன் அம்மா அவனை கருவுற்றிருந்தாள்.

அவன் அப்பா இன்னும் செல்வந்தராக இருந்த நாட்கள் அவை.

பத்து ஷையர் இனக் குதிரைகளையும், நான்கு ஆப்ரிக்க யானைகளையும் அழைத்துக்கொண்டு, பாலைவனத்தின் நடுவே இருந்த ஒரு கருப்பு கூடாரத்துக்குள் அவன் அப்பாவும் அம்மாவும் செல்வதை அவன் பார்த்தான்.

அந்த கூடாரத்திற்குள் இருந்த அரபு வணிகனின் முகம் முழுவதும் கருப்பு துணியால் மூடப்பட்டிருந்தது.

அவன் அப்பா அந்த இயந்திரத்தை வாங்கியபோது, அந்த வணிகன் அதை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு சில நொடிகள் கண்களை மூடியபடி நின்றான். பின்னர் மெதுவாக இப்படிச் சொன்னான்:

> “இது கடந்த காலத்தை மட்டும் காட்டும் கருவி அல்ல. இது ஒருநாள் உன்னை, உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனிதனாக மாற்றிவிடும்.”

அவன் அப்பா அதைப் புரிந்துகொள்ளவில்லை.

ஆனால் வார்த்தைகளோடு அலைபவனுக்கு அந்த வார்த்தைகள் உடனே புரிந்துவிட்டன. ஏனென்றால் அந்த வணிகரின் குரல், அவனுடைய குரலைப் போலவே இருந்தது.

அவன் அதிர்ச்சியோடு அந்த வணிகரின் கைகளைப் பார்த்தான். அந்தக் கைகளில், சிறுவயதில் மரத்தில் இருந்து விழுந்தபோது அவனுக்கு ஏற்பட்ட அதே காயத்தழும்பு இருந்தது.

அந்த இயந்திரம் மனிதர்களை கடந்த காலத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. மெதுவாக அவர்களை கடந்த காலத்தின் மனிதர்களாக மாற்றிக்கொண்டிருந்தது என்பதை அவன் புரிந்துகொண்டான்.

அன்றே அவன் அந்த இயந்திரத்தை ஒரு ஆற்றில் தூக்கி எறிந்தான். அதன் பிறகு, மகிழ்ச்சியாக அடுத்த ஊருக்குக் கதை சொல்லப் பயணத்தைத் தொடங்கினான்.

அன்று அவன் சொன்ன கதை, வானளவு சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் தந்ததாக ஊர் மக்கள் சொன்னார்கள். நோய்வாய்ப்பட்டவர்கள் அவன் கதையை கேட்டால் நோய் நிவர்த்தி அடைகிறார்கள் என்ற செய்தியும் அன்றிலிருந்துதான் பரவ ஆரம்பித்தது.

Tuesday, May 26, 2026

crontab -time - முடிவுரை

சென்ற பதிவுடன் Crontab Session பதிவுகள் முடிகின்றன. இன்னும் இரண்டு பதிவுகள் எழுதி வைத்துள்ளேன். ஆனால் அதன் கதைப்போக்கு வேறு எங்கோ செல்கிறது. இதுவரை office cubicle'யிலேயே இருந்த அசோக், அந்த இரண்டு பதிவுகளில் வெளியே வருகிறான். சில தத்துவங்களும் அரசியலும் பேசுகிறான். ஆகவே, Crontab'யை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன். எழுதிய இரண்டு பதிவுகளையும் வீணாக்கக் கூடாது. சில tinkering work செய்து வேறு தலைப்பில் வெளிவரும்.


இந்த முடிவுரை கூட தேவையில்லாத ஒன்றுதான். ஆனால் வாசகர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் விட்டால், இந்த உலகம் பின்நாட்களில் நம்மை காறித் துப்பாதா?
 

ஆகவே இதோ Crontab Series'யின் முடிவுரை. ஒரு வாசகர் கடிதத்துடன்.


ரொம்ப வருடங்களுக்கு பிறகு எனக்கு வந்த வாசகர் கடிதம் அது. மீண்டும் அனுப்பியவரின் email id'யை படித்தேன். கேள்விப்பட்ட மாதிரியே இல்லை. ஒருவேளை கவிதாவாக இருக்குமோ? தெரியவில்லை.


அந்த வாசகர் மெயில்:
“என்ன, பத்து பதினைந்து வருடம் கழித்து திடீரென்று அசோக்கை உள்ளே கொண்டு வருகிறீர்கள்? அப்படியென்றால் இத்தனை வருடம் அசோக் என்ன செய்துகொண்டிருந்தான்? எழுத்தாளன் இல்லாமல் ஒரு கதாபாத்திரம் இத்தனை நாள் உயிர் வாழ முடியுமா? இல்லை அசோக் என்கிற கதாபாத்திரமே பொய்யா?”


ஆங்கிலத்தில் introspective memoir என்று ஒரு வார்த்தை உண்டு. அதாவது ஒரு குறிப்பிட்ட வாசகர்களுக்காக மட்டும் எழுதும் எழுத்தாளர்கள். ஆனால் நான் இன்னும் கொஞ்சம் மேல்.ஒரு குறிப்பிட்ட வாசகர்களுக்காக எழுதாமல், ஒரே ஒரு வாசகருக்காக மட்டும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். அந்த ஒரே ஒரு வாசகர் நான்தான்.இதற்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை என்று தெரியவில்லை.இப்போது நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரிகிறது அல்லவா? நிற்க.


அசோக் உண்மையாகவே இத்தனை நாட்கள் என்ன செய்துகொண்டு இருந்தான் என்பது எனக்கு முழுமையாக தெரியாது. ஆனால் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறான் என்பது தெரியும்.
 

IT field'லிருந்து முழுமையாக வெளியே வந்துவிட்டான்.
 

ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத இரண்டு வியாபாரங்களை கவனித்துக்கொண்டு இருக்கிறான். இங்கு “கவனித்துக்கொண்டு இருக்கிறான்” என்பதுதான் சரியான வார்த்தை. ஏனென்றால் அந்த தொழில்களை அவன் ஆரம்பிக்கவும் இல்லை, அவன் நடத்தவும் இல்லை, கவனித்து மட்டும் கொண்டு இருக்கிறான். 

இரண்டு தொழில்களில் ஒன்று அவன் தந்தையுடையது. மற்றொன்று அவன் மாமனாருடையது. ஒன்று தங்க நகை சம்பந்தப்பட்ட தொழில். மற்றொன்று உணவு தொழில் சம்பந்தப்பட்டது. அவனுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு மனைவியும் தான். அசோக்கின் மனைவி மட்டும் இல்லையென்றால், இந்நேரம் அசோக் சட்டை பிய்த்துக்கொண்டு பைத்தியமாக தெருக்களில் அலைந்துகொண்டு இருப்பான். இதை அவன் சொல்லவில்லை. அசோக்கின் மனைவிதான் பார்ப்பவர்களிடம் இதை எல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். நிற்க.


சில நேரங்களில் பழைய குறிப்புகளை படிக்கும்போது, இதை உண்மையில் நான்தான் எழுதினேனா என்ற சந்தேகம் வருகிறது. அந்த காலத்தில் இருந்த நான் வேறு. இப்போது இந்த வரிகளை எழுதிக்கொண்டிருக்கும் நான் வேறு. 


அப்படியிருக்க, அந்த கதைகளில் வந்த “அசோக்” மட்டும் எப்படி ஒரே மனிதனாக இருக்க முடியும்?
 

அசோக் உண்மையில் இருந்தானா என்று கேட்டால், என்னால் உடனே “ஆம்” என்று சொல்ல முடியவில்லை.
 

“இல்லை” என்றும் சொல்ல முடியவில்லை.
 

ஏனென்றால் சில மனிதர்கள் நிஜத்தில் வாழ்ந்த காலத்தை விட, நம் நினைவில் வாழும் காலம்தான் அதிகம்.
 

சில நேரங்களில் நான் அசோக்கைப் பற்றி எழுதுகிறேனா, இல்லை அசோக் என்னைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறானா என்பதே புரியவில்லை. அதிலும் விசித்திரம் என்னவென்றால், நான் அசோக்கை மறந்துவிட்டேன் என்று நினைக்கும் ஒவ்வொரு முறையும், எங்கிருந்தோ அவன் மீண்டும் வந்துவிடுகிறான்.


தற்போது அசோக்கிடம் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. எப்போதாவது தான் சிரிக்கிறான். வெளி நண்பர்களிடம் பேசியே ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. வியாபாரம் சம்பந்தமான ஆட்களிடம் தொடர்பு நிறைய இருந்தாலும், யாரையும் இவன் “நண்பர்கள்” என்ற எல்லைக்குள் கொண்டு வரவில்லை. அதை அவன் அப்பாதான் சொல்லிக்கொடுத்தார். 


“வியாபாரத்தில் சொந்தங்கள், நண்பர்கள் என்று பார்க்கக்கூடாது…”
 

இப்போது அசோக்கின் அந்த இறுகிய முகத்தை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். அசோக்கின் முதல் பையன் சொல்லும் timing comedy'க்குக்கூட அசோக் இப்போது சிரிப்பதில்லை. சில நேரங்களில் அவன் வீட்டில் இருப்பதை பார்த்தால், அங்கு ஒருவன் வாழ்ந்துகொண்டு இருப்பது போலவே தெரியாது.


காலையில் கடை திறக்க வேண்டும். பிறகு phone'ல் மற்ற கடைகளிலும் factory'யிலும் நடப்பவற்றை CCTV'யில் தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். எங்காவது வேலை சரியாக நடக்கவில்லை என்றால், உடனே phone செய்து இரண்டு dose விட்டு, அசோக் தனது இருப்பை காட்ட வேண்டும். பிறகு accounts பார்க்க வேண்டும். பிறகு இரவு phone calls, அந்த கடைகளின் அன்றைய வியாபாரத்தை பற்றி.

.
இதற்கிடையில் யாராவது “எப்படி இருக்கீங்க?” என்று கேட்டால் மட்டும், ஒரு இரண்டு நொடிகள் யோசித்துவிட்டு “நல்லா இருக்கேன்…” என்பான்.
 

அந்த “நல்லா இருக்கேன்” என்பதில்தான் பிரச்சனை.
 

அவன் உண்மையில் நல்லா இருக்கிறானா, இல்லை அந்த பதிலை பல வருடங்களாக பழக்கத்தால் சொல்லிக்கொண்டிருக்கிறானா என்பது அவனுக்கே தெரியாது. சில மனிதர்கள் சோகமாக இருப்பதில்லை. ஆனால் சந்தோஷமாகவும் இருப்பதில்லை. அவர்கள் வாழ்க்கையை வாழ்வதில்லை.வாழ்க்கை அவர்களை பயன்படுத்திக்கொண்டு போய்க்கொண்டிருக்கும். அசோக் இப்போது அந்த stage'ல் இருக்கிறான் என்று நினைக்கிறேன்.


ஒரு காலத்தில் இரவு இரண்டு மணி வரை office'ல் இருந்து deployment முடித்து, நண்பர்களோடு tea குடிக்க கிளம்பியவன், இப்போது இரவு பத்து மணிக்கே குழந்தைகளோடு தூங்கச் சென்று விடுகிறான்.ஆனால் தூக்கம்தான் வர மாட்டேன் என்கிறது. இதற்கிடையில் சில மாத்திரைகள் வேறு. Lamotrigine மாத்திரை போட்டால்தான் அவனால் அன்றைய இரவில் தூங்க முடியும். இல்லையென்றால் அதிகாலை வரை சும்மாவே படுத்து இருக்க வேண்டியதுதான்.
 

அவனிடம் இன்னும் பழைய laptop இருக்கிறதாம். வேலை செய்யாத laptop.
அதை ஏன் இன்னும் வைத்திருக்கிறான் என்று அவன் மனைவி பலமுறை கேட்டிருக்கிறாளாம். அவன் ஒவ்வொரு முறையும் “பழைய files இருக்கு…” என்று மட்டும் சொல்லிவிடுகிறான். ஆனால் அந்த laptop'ல் files மட்டும் இல்லை என்று எனக்கு தெரியும்.அவனின் ஒரு decade காலம் முழுக்க அங்கே இருக்கிறது.
 

சில conference call recordings, சில screenshots, சில mails. யாரோ அனுப்பிய “Thanks Ashok” என்ற இரண்டு வார்த்தைகள். இப்போது இல்லாத சில மனிதர்களின் chat history.
 

ஒருவேளை, இப்போது இல்லாத அவனுடைய பழைய version கூட அங்கேயே இருக்கலாம்.அதனால்தான் இன்னும் அதை delete செய்யாமல் வைத்திருக்கிறானோ என்னவோ.


இதுதான் அசோக்கின் இன்றைய நிலைமை.அதற்கு மேல் சொல்வதற்கும் ஒன்றுமில்லை. அல்லது, இன்னும் சொல்லக்கூடாத ஏதோ ஒன்று இருக்கலாம்.

Saturday, May 23, 2026

crontab -time - Version 6 Deployment Day

 அசோக் மீண்டும் சிவாவிடம் கேட்டான்: “மச்சி… வேலையை விட்டுத் தூக்கிட மாட்டாங்கல?”

“உடனே தூக்க மாட்டாங்கடா. முதல்ல மானம் போகும், அப்புறம் அசிங்கப்படுத்துவாங்க… இதையெல்லாம் தாங்கி நீ உயிரோட இருந்தா மட்டும்தான் கடைசியா தூக்குவாங்க…” என்றான் சிவா.

“Kirupa is typing…” இன்னும் அப்படியே இருந்தது.

“டேய்… அவ பெரிய மெயிலா  எல்லாருக்கும் அனுப்பப் போறா. அதுக்கு முன்னாடி நீ மேனேஜருக்குச் போன்'ல சொல்லிடு…” என்றான் சிவா.

அதற்குள் கிருபா மெசேஜ் அனுப்பி இருந்தாள்.

Kirupa: “I checked with Unix Team Seema. She said there is already one package installation scheduled in our server within the next one hour. CR is already raised for that. If we add our library file to the same CR, they can install our library as well. Since it is just a small library file, no reboot is required. Inform your manager and get the CR updated. Send mail to Change Request Team also.”

அசோக் உடனே: “Thanks a lot” என்று ரிப்ளை செய்தான். அந்த “Thanks a lot” கூட அவன் மூன்று தடவை டைப் செய்து, டெலீட் பண்ணிய பிறகுதான் அனுப்பப்பட்டது. முதலில்: “Thanks” என்று மட்டும் டைப் செய்தான். அது ரொம்ப dry'யா இருக்கிற மாதிரி தோன்றியது. பிறகு: “Thanks Kirupa” என்று டைப் செய்தான். அது தேவையில்லாமல் close'ஆ போகிற மாதிரி தோன்றியது.

கடைசியில்: “Thanks a lot” என்று அனுப்பிவிட்டான்.

மேனேஜருக்குப் போன் செய்து அனைத்தையும் விளக்கினான்.

“என்ன அசோக்… இவ்வளவு careless'ஆ இருக்கலாமா?” என்றார். வேறு ஒன்றும் சொல்லவில்லை.

உடனே Change Request Team'க்கும் Unix Admin Team'க்கும் conf call போடச் சொன்னார். யூனிக்ஸ் டீம் உடனே சரி என்றார்கள். அவர்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் போல. ஆனால், சேஞ்ச் ரெக்வெஸ்ட் டீமிலிருந்த ஷியாம் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டார்.

“எதுக்காக முன்னாடியே அந்த CR'யில் இதைச் சேர்க்கவில்லை?”

“UAT Server'யில் அந்த library'யை எப்போது install செய்தீர்கள்?”

“அதன் VR number என்ன?”

“ஏதாவது பிரச்சினை வந்தால் உடனே rollback செய்ய முடியுமா?”

இப்படி நிறைய கேள்விகள். அனைத்திற்கும் அசோக்கின் மேனேஜர் பொறுமையாகப் பதிலளித்தார். சில டெக்னிக்கல் கேள்விகளுக்கு மட்டும் அசோக்கைப் பதில் சொல்லச் சொன்னார். கடைசியாக ஷியாம் "Client email approval" கேட்டார். "பின்னர் ஏதாவது பிரச்சினை என்றால் எங்களைத்தான் கேள்வி கேட்பார்கள்" என்றார்.

அசோக் மேனேஜர், சேஞ்ச் ரெக்வெஸ்ட் டீம் மேனேஜருக்குக் கான்பரன்ஸ் கால் போட்டு, அவர் எப்படியோ அப்ரூவல் வாங்கித் தர, கடைசியில் அந்த CR'ரில் லைப்ரரி ஃபைல் சேர்க்கப்பட்டது.

உடனே கிருபாவுக்கு மெசேஜ் செய்து லைப்ரரி ஃபைல் சேர்க்கப்பட்ட விவரத்தைச் சொல்லி, இன்னொரு முறை நன்றி தெரிவித்தான் அசோக்.

அவளும் பதிலுக்கு: “Okay” என்று மட்டும் அனுப்பினாள்.

கிருபாவும், அவன் மேனேஜரும் இந்தச் Situation'ஐ கையாண்ட விதத்தைப் பார்த்து அசோக்குக்கு ஆச்சரியமாக இருந்தது. இருவருமே அவனை ஒரு வார்த்தைகூடக் குறை சொல்லவில்லை.

சேஞ்ச் ரெக்வெஸ்ட் டீமிலிருந்த ஷியாம் மட்டும்தான் கான்பரன்ஸ் காலில்:

“Ashok… it’s all your mistake…” என்று இரண்டு மூன்று தடவை சொன்னான்.

ஒருவழியாக அன்று Production Deployment சிறப்பாக முடிக்கப்பட்டது.  அந்த last mail வந்த நேரம் இந்திய நேரப்படி காலை நான்கு மணி இருக்கும். “Deployment completed successfully.”

மெயிலைப் பார்த்ததும் சிஸ்டத்தை off செய்தான். பக்கத்து கியூபிக்கலில் Chair'லேயே படுத்திருந்த சிவாவையும் வெங்கட்டையும் எழுப்பினான். சிவா headset'ஐ கழுத்தில் போட்டபடியே தூங்கிக்கொண்டிருந்தான். Monitor இன்னும் on'லேயே இருந்தது. Screen'ல் ஒரு Excel file open ஆகி இருந்தது. .வெங்கட் மட்டும் chair'ஐ இரண்டு cubicle தள்ளி இழுத்துக்கொண்டு போய், இரண்டு chair'களை சேர்த்து proper bed மாதிரி மாற்றி தூங்கிக்கொண்டிருந்தான்.

“டேய்… deployment முடிஞ்சுடுச்சு…” என்றான் அசோக்.

வெங்கட் கண் திறக்காமலேயே:
 “Success ஆ? இல்ல bridge call இன்னும் தொடருதா?”
என்றான்.

“Success டா…” என்றதும் உடனே எழுந்து உட்கார்ந்தான்.

வெங்கட்: "மச்சி... உசுரு தப்பிச்சது! இனிமேலாவது கான்பரன்ஸ் கால்ல மியூட் போட்டுட்டு காபி குடிக்கப் போவாத," என்று கியூபிக்கலிலேயே சத்தமாகச் சிரித்துக் கிண்டல் செய்தான்.

மறுநாள் சனிக்கிழமை விடுமுறை என்பதால், பைக்கில் பாண்டிச்சேரி போகலாமா என்று வெங்கட் ஐடியா தந்தான். சிவாவும் சரி சொல்ல, அசோக் கண் எரிச்சலுடன், "நான் வர்றேன், ஆனா அங்கே போய் நல்லா தூங்கிடுவேன். யாரும் disturb செய்யக் கூடாது," என்றான். போகும் வழியில் அப்துல் அறைக்கு சென்று அவனையும் அழைத்து செல்வோம் என்று முடிவானது.

காலை ஆறு மணிக்கு ஆபீஸை விட்டு வெளியே வந்து, சோழிங்கநல்லூர் சாலையோரக் கடையில் அந்த விடியற்காலைக் குளிரில் மூவரும் குடித்த இஞ்சி டீயின் சுவை அசோக்குக்கு இன்னும் மறக்கவில்லை.

அன்று நடந்ததை இப்போது நினைத்தாலும் அசோக்கின் முகத்தில் தானாகவே ஒரு சிறிய புன்னகை வந்துவிடும்.