Sunday, May 17, 2026

crontab -time - Version 3

crontab -time -  Version 1

crontab -time -  Version 2 

 Build and Install Engineer — பெயர் மட்டும்தான் கெத்தாக இருக்கும். Build and Install Engineer'ன் வேலை என்னவென்று சொன்னால், “இவ்வளவுதானா?” என்பீர்கள்.

நாம் எல்லாரும் Exe file பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஒரு application'ஐ install செய்ய அந்த Exe file'ஐ double click செய்தாலே போதும். அந்த Exe file'ஐ உருவாக்குவதுதான் Build Engineer'ன் வேலை. Windows என்றால் Exe. அதுவே Unix'ல் apt, tar, dep, rpm என்று மாறும்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், Developers தரும் file'கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, Unix'க்கு தகுந்த Exe file போல மாற்றி Unix server'ல் install செய்ய வேண்டும். அது Development Server, Testing Server, Production Server என்று மாறும்.

அசோக் வேலை செய்த கம்பெனியில் இதையெல்லாம் ஏற்கனவே இருந்த Script பார்த்துக்கொள்ளும். அந்த Script'ஐ run செய்ய வேண்டியது மட்டும் அசோக்கின் வேலை. முதல் சில நாட்கள் அசோக்குக்கு இந்த வேலை ரொம்ப பிடித்திருந்தது. காரணம், வேலை குறைவு. யாரும் வந்து கேள்வி கேட்க மாட்டார்கள். காலையில் வந்து system on பண்ணி, mail check பண்ணி, build run பண்ணிவிட்டால் பாதி வேலை முடிந்த மாதிரி.

சில நேரங்களில் build run ஆகிக்கொண்டிருக்கும் போது, சில developer'கள் tension'ஆ “அசோக்… build status என்ன?” என்று கேட்டு பக்கத்திலேயே உட்கார்ந்து விடுவார்கள்.

அப்பொழுது மட்டும் இவன் terminal'ல் tail -f logfilename என்று போட்டு விடுவான். ஸ்கிரீனில் ஏதாவது ஓடிக்கொண்டே இருந்தால்தானே பக்கத்தில் இருப்பவர்களுக்கும் இவன் வேலை செய்வது போல தோன்றும்.

Unix'ல் கருப்பு screen'ல் வெள்ளை எழுத்து வேகமாக ஓடிக்கொண்டிருந்தால், பக்கத்தில் நிற்பவர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துவிடும். “ஏதோ பெரிய வேலை நடக்குது…” என்று.

எப்போதாவது அந்த Script error காட்டும். அப்பொழுது எந்த developer மாற்றிய file'ல் error வருகிறது என்பதை பார்த்து, அந்த Developer'யிடம் சொல்ல வேண்டும்.

Development Server மற்றும் Testing Server'ல் install செய்து test செய்த பின்னரே Production Server'ல் install செய்வதால், Production'ல் error வராது. அப்படி error வந்தாலும் ஏதாவது library file missing ஆகி இருப்பதால்தான் வரும். அந்த library file'ஐ சேர்த்துவிட்டால் பிரச்சனை solve ஆகிவிடும்.

ஆனால் சில rare case'களில் மட்டும் build fail ஆகும். அந்த நேரத்தில்தான் எல்லாருக்கும் Build Engineer ஞாபகம் வரும்.

அதுவரை office'ல் சும்மா சுற்றிக்கொண்டிருக்கும் மனிதன் போல தெரிந்தவன், திடீரென்று operation theatre'க்குள் அழைக்கப்பட்ட doctor மாதிரி முக்கியமானவன் ஆகிவிடுவான்.

நமது கதையே இனிமேல்தான் ஆரம்பிக்கிறது.

கிருபா அன்று அனுப்பிய messenger message'க்கு reply செய்யாமலேயே அசோக் close செய்துவிட்டான். அடுத்த நாள்தான் ஏதாவது reply செய்து இருக்கலாமோ என்று நினைத்தான். ஆனால் இனிமேல் reply செய்தால் நல்லா இருக்காது என்பதால் அந்த எண்ணத்தையும் கைவிட்டான்.

பழைய அலுவலகத்தில் கிடைத்த சில கசப்பான அனுபவங்களால் பெண்களிடமிருந்து தள்ளியே இருக்க முடிவு செய்திருந்தான் அசோக்.

அசோக்குக்கு புதிய அலுவலகத்தில் நட்பு வட்டாரம் கொஞ்சம் பெருக ஆரம்பித்தது. வெங்கட் மூலம் அனைவரின் அறிமுகமும் கிடைத்தது.

“சிங்காரவேலன்” திரைப்படத்தில் ஒரு dialogue வருமே — “இங்கு உள்ள எல்லா instrument'யையும் தொடும் ஒரே ஆள் இவன்தான்” என்று. அப்படிப்பட்டவன் வெங்கட்.

அவன் இருப்பது Testing Team'ல். ஆனால் Development, Production ஆட்கள் அனைவரையும் தெரியும். அவன் தன் Team'ல் உட்கார்ந்து இருப்பதை விட மற்ற Team'ல் அமர்ந்து இருக்கும் நேரம்தான் அதிகம்.அனைவரையும் கலாய்ப்பான். கூச்சமே படாமல் எல்லா பெண்களிடமும் அவனே போய் பேசுவான். அவன் பயப்படும் ஒரே நபர் அவன் TL.

அசோக் Team'ல் இரண்டே பேர்தான். அதுவும் இன்னொருவர் onsite'ல் இருந்தார். TL என்று யாரும் கிடையாது. Manager'ம் பெங்களூர். ஆகவே அசோக்கை இங்கே கேள்வி கேட்க யாருமே கிடையாது.

அதனால்தான் அவன் office'ல் ரொம்ப நேரம் headset போட்டுக்கொண்டு இருப்பான். வெளியிலிருந்து பார்த்தால் onsite call'ல் busy'ஆ இருப்பது போல இருக்கும். தினமும் production call, testing call, deployment call என்று ஏதாவது ஒன்று இருக்கும். சில call'களில் இவனுக்கு சம்பந்தமே இருக்காது. இருந்தாலும் இவன் பெயரையும் Cc'யில் வைத்து mail அனுப்பிவிடுவார்கள்.

முக்கியமாக எல்லா Development call'களிலும் இவன் பெயரையும் சேர்த்து இருப்பார்கள். அந்த call'களுக்கும் இவனுக்கும் சம்பந்தமே இருக்காது. இருந்தாலும் வேறு வழியில்லாமல் login செய்வான்.

சில call'களில் இரண்டு மணி நேரம் discussion போகும். கடைசியில்:

“Build team… anything from your side?”

என்று கேட்பார்கள்.

அசோக் உடனே மியூட் எடுத்துவிட்டு,

“No issues from build side…”

என்று சொல்லிவிட்டு மீண்டும் மியூட் போட்டுவிடுவான். அந்த ஒரு வாக்கியம் சொல்லத்தான் இரண்டு மணி நேரம் கால்.

Development call'களை ஏற்பாடு செய்பவள் கிருபாதான். அவள் வேண்டுமென்றே இவன் பெயரை சேர்க்கிறாளோ என்ற சந்தேகம் கூட அசோக்குக்கு வந்தது.

அப்துலும் சும்மா இல்லாமல் ஒரு முறை சொன்னான்:

“முன்னரெல்லாம் Development call'யில் Build Team'லிருந்து யாரும் வரமாட்டார்கள். இப்ப ஏன் மச்சி எல்லா call'லயும் உன் பெயரையும் அந்த கிருபா சேர்க்குது? உனக்கும் அதுக்கும் ஏதாவது பிரச்சனையா?”

அவன் பேசுவதில் 50% சதவீதம்தான் உண்மையாக இருக்கும். மற்றது அவன் சேர்க்கும் பில்டப்.

சில நேரங்களில் கிருபாவும் conf call'ல் வந்து ஏதாவது பேசுவாள். அவள் பேசும் போது அசோக் mute'யில் போட்டுவிட்டு வேறு வேலை பார்த்துக்கொண்டு இருப்பான்.

திடீரென்று ஒரு நாள் onsite'லிருக்கும் இன்னொரு Build Team நபர் பிரசாத் phone செய்தார். ஒரு medical emergency காரணமாக ஒரு மாதம் medical leave எடுக்கப் போவதாகவும், ஆகவே அந்த ஒரு மாதம் மட்டும் அசோக்குதான் எல்லா வேலையையும் பார்க்க வேண்டும் என்றார். மேலும் அந்த ஒரு மாதத்தில் ஒரு Production Deployment இருப்பதாகவும், அதையும் சேர்த்து பார்க்க சொன்னார்.

“என்ன சந்தேகம் என்றாலும் எப்ப வேண்டுமானாலும் message செய்யுங்கள்,” என்றார்.

“Free'ஆ இருக்கும் போது reply செய்கிறேன்,” என்றும் சொன்னார்.

அதன் அர்த்தம் தனக்கு போன் செய்ய வேண்டாம் என்பது.

Official'ஆக ஒரு ஈமெயிலும் அனுப்பி இருந்தார். அவரின் விடுமுறை அடுத்த நாளிலிருந்து ஆரம்பித்தது.

கொஞ்ச நேரத்தில் Manager call செய்தார்.

“பாவம் பிரசாத்'க்கு ஒரு medical emergency. அதை பற்றி அப்புறம் சொல்றேன். அசோக், உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. என்ன உதவி என்றாலும் கேளுங்க,” என்றார்.

அசோக்குக்கு உள்ளுக்குள் ஒரு பயத்துடன்,

“Okay… No problem…” என்றான்.

Saturday, May 16, 2026

சினிமா சினிமா

ரொம்ப நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு ஒரு திரைப்படத்திற்கு சென்றோம். ஊரிலிருந்து அக்கா, தங்கை மற்றும் அவர்கள் பசங்களும் வந்திருந்தார்கள். ஆகவே ஒரு பெரிய கூட்டமாகத்தான் சென்றோம். மொத்தமாக ஒரு பத்து டிக்கெட் சேர்ந்திருக்கும். கூட அம்மாவும் வந்தாள்.

குடும்பமாக திரைப்படத்திற்கு சென்றால் யார் எங்கே உட்கார வேண்டும், யாருக்கு பாப்கார்ன் வேண்டும், யாருக்கு பெப்சி, யாருக்கு ரெஸ்ட் ரூம் என்பதிலேயே பாதி நேரம் போய்விடுகிறது.

அம்மாவுக்கு தியேட்டரில் சினிமா பார்ப்பது என்றால் சின்ன வயதிலிருந்தே பிடிக்கும். ஸ்டார் தியேட்டரில் நான், அம்மா, அக்கா முதல் வரிசையில் அமர்ந்து அர்ஜீன் நடித்த “கர்ணா” திரைப்படம் பார்த்த ஞாபகம் இன்னும் நினைவில் இருக்கிறது. அப்பொழுது எனக்கு பத்து வயது இருக்கும். 

அதேபோல் சின்ன வயதில் அம்மாவின் ஊருக்கு சென்றால், தாத்தா எல்லாரையும் டூரிங் டாக்கீஸுக்கு அழைத்து செல்வார். மண்ணில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும். படம் ஆரம்பிக்கும் முன் ஓலி பெருக்கியில்  பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.சில நேரங்களில் ரீல் அறுந்து படம் நின்றுவிடும். யாரும் கோபப்பட மாட்டார்கள். எல்லாரும் அமைதியாக, சரி செய்யும் வரை காத்திருப்பார்கள். இன்றோ, YouTube இரண்டு நோடி buffering ஆனாலே செல்போனை அடித்து உடைக்க தயாராக இருக்கிறோம். அந்த டூரிங் டாக்கீஸ் இருந்த இடத்திற்கு அருகில்தான் இப்பொழுது கீழடி அகழாய்வு மையம் அமைந்துள்ளது.

பள்ளி முழு ஆண்டு விடுமுறை என்றால் பரமக்குடியிலிருக்கும் பெரியம்மா வீட்டுக்கு அம்மாவுடன் சென்று விடுவோம். பெரியப்பா பரமக்குடியில் இருக்கும் எல்லா திரையரங்கங்களுக்கும் எங்களை அழைத்து சென்று விடுவார்.

ஓம் சண்முகா, ரவி, சாந்தி, கிருஷ்ணா என பல தியேட்டர்கள் இருந்தன. பெரியப்பா அலுவலகம் முடித்து எப்பொழுதும் இரவு காட்சிக்குத்தான் அழைத்து செல்வார்.

இரவில் படம் முடிந்து வரும் போது மற்ற தியேட்டர்களிலிருந்தும் மக்கள் படம் முடிந்து வருவார்கள். தெருவே திருவிழா போல கூட்டமாக இருக்கும். சிலர் படம் பற்றி சண்டை போட்டுக்கொண்டே நடந்து செல்வார்கள்.

அத்தனை தியேட்டர்கள் இருந்த பரமக்குடியில் இப்பொழுது ஒரு தியேட்டர் கூட இல்லை.

நாங்கள் நேற்று சென்ற திரைப்படம் ரீல்ஸ்களின் ஒரு மொத்த கலவை போல இருந்தது. நீங்கள் படத்தை முழுமையாக பார்க்க தேவையில்லை. ரீல்ஸைப் போல ஐந்து ஐந்து நிமிடங்களாக பிரித்து பார்த்தாலும் படம் புரிந்துவிடும். புரியுமளவுக்கு படத்தில் கதையும் இல்லை.

ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு பில்டப், தேவையே இல்லாத ஒரு பாடல். அந்த பாட்டுக்குள் ஒரு fight. திடீரென்று ஹீரோ கத்துவார், அதற்கு theatre'ல யாராவது whistle அடிப்பார்கள். படம் முழுவதும் இந்த pattern திரும்ப திரும்ப வந்துக்கொண்டு இருந்தது.  அம்மா திரைப்படம் பார்க்கும் போதே தூங்கிவிட்டாள். நான்தான் இடைவேளையின் போது எழுப்பிவிட்டேன்.

ஆனால் பசங்களுக்கு படம் பிடித்திருந்தது போல தோன்றியது. அவர்கள் theatre'லிருந்து வெளியே வந்த பிறகும் அந்தப் படத்தில் வந்த dialogue'களை சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

படம் முடிந்து வரும் போது மகன் என்னிடம் நாலு தடவையாவது கேட்டிருப்பான்: 

“படம் நல்லாதானேப்பா இருந்துச்சு?” நான் ஒவ்வொரு தடவையும், “நல்லாத்தான் இருந்துச்சு…” என்றேன்.

சொல்ல முடியாது, இன்று அவனுக்கு கிடைத்த திரைப்பட அனுபவம், பின்னாட்களில் எனக்கு இப்போது நினைவில் வருவது போல அவனுக்கும் நினைவில் வரலாம்.

Friday, May 15, 2026

வீட்டு பிரச்சனைகள் - 1

“என்ன இரண்டு மூன்று நாளா முகத்தில் ஒரு பிரகாசம் தெரிகிறது…” என்றாள் மனைவி.

“அப்பப்போ ஏதோ யோசிக்கிறீங்க… அப்புறம் போனை எடுத்து ஏதோ டைப் செய்கிறீங்க. என்ன பண்றீங்க?”

நான் உடனே போனை லாக் பண்ணிவிட்டேன். அது ஒரு இயல்பான ரியாக்‌ஷன். கல்யாணமான ஆண்கள் எல்லாருக்கும் அந்த ரியாக்‌ஷன் இருக்கும் என்று நினைக்கிறேன். செல்போனில் எதுவும் இல்லையென்றாலும், மனைவி திடீரென்று கேட்டால் ஸ்கிரீன்'ஐ ஆஃப் பண்ணிவிடுவோம். 

அவளிடம் மீண்டும் நான் வலைப்பதிவில் எழுதுவதைப் பற்றி சொன்னால், “என்ன வெட்டி வேலை?” என்பாள். அவளைப் பொறுத்தவரை நான் செய்வது எல்லாமே வெட்டி வேலைதான்.

ஆனால் அவள் ஒரு drawer'ல இருந்த பொருட்களை இன்னொரு drawer'க்கு மாற்றி இரண்டு மணி நேரம் arrange பண்ணினால் அது “வீட்டு வேலை”.

அவள் வீட்டில் இருக்கும் போதெல்லாம் ஏதாவது வேலை செய்துக்கொண்டே இருப்பாள். வெளியில் இப்படி இருப்பதில்லை. ஆனால் வீட்டுக்கு வந்து விட்டால் இப்படித்தான்.

எதையாவது துடைப்பது, இடத்தை ஒழுங்குபடுத்துவது என்று எதையாவது செய்து கொண்டிருப்பாள். இதெல்லாம் வெட்டி வேலை இல்லையா என்று கேட்டால், என்னைப் பார்த்து முறைத்துப் பார்ப்பாள்.

அதேபோல் எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக யோசித்து செய்வாள். நிதானமாக யோசித்து செய்வதிலும், யோசித்து நிதானமாக செய்வதிலும் வித்தியாசம் உள்ளது. இவள் முதல் category.

நான் எதற்காவது சண்டை போட்டால் கூட, திரும்ப சண்டை போட மாட்டாள். “சே… இதுக்குப் போய் சண்டை போட்டோமே” என்று நம்மை வருத்தப்பட வைத்து விடுவாள்.

மேலும் அவளைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், கல்யாணமான புதிதில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம்.

சென்னைக்கு வந்த முதல் நாள், தோசை மாவை நான் கடையில் வாங்கிக்கொண்டு வந்தேன்.

அவள் kitchen'க்குள் போன விதத்தை பார்த்தால், MasterChef Tamil audition'க்கு போகிற மாதிரி இருந்தது. கழுத்தில் ஒரு வெள்ளை துணி, தலையில் ஒரு பாலிதீன் தொப்பி. 

அடுப்பை பற்றவைத்து தோசைக்கல்லை வைத்தாள்.

பத்து நிமிடம் ஆனது.இருபது நிமிடம் ஆனது. அரை மணி நேரமாகியும் தோசைக்கல் சூடாகவே இல்லை.

 “அடுப்பு சரியில்ல போல…” என்றாள் கவலையாக. நான் kitchen'க்குள் போய் பார்த்தேன். அடுப்பு நன்றாக எரிகிறது. ஆனால் மேலே ஏதோ வித்தியாசமாக இருந்தது. அப்போதுதான் பார்த்தேன்.

ஒரு தோசைக்கல் மீது இன்னொரு தோசைக்கல்.மொத்தம் இரண்டு தோசைக்கல்.

ஒரு நொடி எனக்கு என்ன react பண்ணுவது என்று தெரியவில்லை. சிரிக்கலாமா? அழலாமா? அல்லது கல்யாண ஆல்பத்தை எடுத்து மீண்டும் பார்க்க ஆரம்பிக்கலாமா?

 “என்ன இது?” என்று கேட்டேன்.அவள் மிகவும் சாதாரணமாக, 

“இப்படித்தான் எங்க அம்மா வைத்து கொடுத்தாங்க…” என்றாள்.

அந்த confidence'ஐ பார்த்ததும் எனக்கே கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. ஒருவேளை இரண்டு தோசைக்கல் வைத்து தோசை ஊற்றும் ancient tradition அவர்களுடைய குடும்பத்தில் இருக்குதோ என்று.

இதைவிட highlight என்னவென்றால்,

“எங்க வீட்டில் இப்படித்தான் செய்வோம். வேணும்னா எங்க அம்மாவிடம் கேளுங்க,” என்றாள்.

அப்படிப்பட்டவள் இப்போது YouTube பார்த்து என்ன என்னமோ சமைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறாள். இப்பொழுது கூட பையன் கேட்டான் என்பதற்காக ரேஷ்மி கபாப் செய்துக்கொண்டு இருக்கிறாள். நேற்று பொண்ணுக்காக ரசகுல்லா. 

சில நேரங்களில் kitchen'ல அவள் சமையல் செய்வதை பார்க்கும்போது, இதே பெண்தானா இரண்டு தோசைக்கல் வைத்து தோசை ஊற்ற முயற்சி செய்தாள் என்று தோன்றும்.

திருமணத்திற்கு பிறகு பெண்கள் எல்லாவற்றையும் அவ்வளவு வேகமாக கற்றுக்கொள்கிறார்கள். நாம் தான் ஆறிப்போன காபிக்கும், கருகிப்போன தோசைக்கும் இன்னும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறோம்.

Thursday, May 14, 2026

crontab -time - 2

ரொம்ப நாட்களுக்கு பிறகு அசோக் போன் செய்தான். எனது கடைசி பதிவில் நிறைய தவறு இருப்பதாக சொன்னான்.

“அது crontab -t இல்ல சார்…” என்றான்.

அவன் இன்னும் அதே மாதிரிதான் பேசுகிறான். எவ்வளவு வருடங்கள் ஆனாலும் technical விஷயங்களை correct பண்ணும்போது மட்டும் அவன் குரலில் ஒரு seriousness வந்துவிடும். மற்ற எல்லா விஷயங்களிலும் தோல்வியடைந்த மனிதன் போல பேசும் அசோக், Unix பற்றி பேசும்போது மட்டும் இன்னும் உலகத்தை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் பேசுவான்.

“crontab'லிருக்கும் ஒரு script'க்கு முன்னால் time command சேர்க்கணும் சார். எடுத்துக்காட்டுக்கு,

time ./scriptname.sh

அப்படி run பண்ணா போதும். அந்த script மொத்தம் எவ்வளவு நேரம் எடுத்துச்சுன்னு சொல்லிடும். அதோட output'யை >> use பண்ணி ஒரு file'ல dump பண்ணி வச்சுட்டா, எப்ப வேண்டுமானாலும் போய் check பண்ணிக்கலாம். Log file'க்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு. Log file, script'ல் ஏதாவது பிரச்சனை அல்லது running results மட்டும் தான் update செய்யும். ஆனால் time command மொத்த running time'யை காட்டும்.”

அவன் இதை சொல்லும்போது கூட keyboard தட்டிக்கொண்டே பேசுவது போல கேட்டது.

“அப்போ அந்த டீம்ல நான் மட்டும் தான் Unix Build Admin சார். மத்தவங்க எல்லாரும் developers அல்லது testers. நான் மட்டும் தனியா விடப்பட்ட மாதிரி இருக்கும்.”

அசோக் இந்த “தனியா விடப்பட்ட மாதிரி” என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவான். கல்லூரியில் இருந்தபோதும் அப்படித்தான். Office'ல இருந்தபோதும் அப்படித்தான். இப்பொழுதும் அப்படி இருக்கலாம்.

ஆனால் உண்மையாகவே அந்த பழைய வேலையை விட்டு இந்த புது கம்பெனிக்கு வந்ததே தனியாக இருக்கத்தான் என்பது எனக்கு நன்றாக தெரியும். அவன் காதல் தோல்வி என்று நம்பிக்கொண்டு இருக்கும் ஒன்று உண்மையில் இல்லவே இல்லை என்பதும் எனக்கு தெரியும்.

“ஒரு மூணு interlinked script'கள் அந்த server crontab'ல ஓடிக்கிட்டு இருந்துச்சு. Server-உடன் application connect ஆகி data download பண்ண அந்த script'கள் help பண்ணும். ரொம்ப வருஷமா நல்லாதான் போயிட்டு இருந்துச்சு. ஆனா ஒரு இரண்டு மூணு மாதமா random'ஆ மக்கர் பண்ண ஆரம்பிச்சுது.

யாருக்கும் root cause தெரியல. Developers database'யை blame பண்ணினாங்க. DBA network'யை blame பண்ணினான். Network team storage'யை blame பண்ணுச்சு. வழக்கம்போல production issue'க்கு எல்லாரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு இருந்தாங்க சார்…”

அவன் சிரித்தான்.

“நான் தான் அந்த script execution time fluctuate ஆகுது notice பண்ணேன். அதான் அந்த time command use பண்ணி output log எடுத்தேன். அதுக்கப்புறம்தான் issue எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சேன்.”

“அதுக்கப்புறம்தான் டீம்ல எனக்கு மரியாதை வந்துச்சு. நான், சிவா, அப்துல், வெங்கட் எல்லாரும் ஒரு group மாதிரி set ஆனோம்.”

இன்னும் சில விஷயங்களை பேசிவிட்டு போனை cut செய்தான்.

ஆனால் நமது கதை இனிமேல்தான் ஆரம்பிக்கிறது.

அன்று மாலை office முழுக்க அசோக்குக்கு பாராட்டு மழை. அந்த மாதிரி சூழ்நிலைகளை அசோக் handle பண்ண தெரியாது. யாராவது appreciation கொடுத்தால் உடனே monitor'யை பார்த்துக்கொண்டு busy'ஆ நடிக்க ஆரம்பித்துவிடுவான்.

அவனுக்கு onsite'லிருந்து ஒரு appreciation mail வந்திருந்தது.

“Thanks for identifying the exact issue”

என்று இருந்தது. Onsite'யிலிருந்து வரும் மெயில்களில் பெயர் வராது. ID மட்டும் தான் தெரியும். கீழே Regards, கிருபா என்று சுறுக்கமாக இருந்தது.

எதற்கு thank you என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான், சிவா chair'யை இழுத்துக்கொண்டு அவன் அருகில் வந்தான்.

“மச்சி… அந்த script'யை எழுதியதே கிருபாதான்.”

“அந்த script காரணமாத்தான் கிருபாவுக்கு onsite opportunity கிடைச்சது. செம brain. எல்லா developers'க்கும் கிருபா என்றா ஒரு இது…”

“என்ன இது?”

“அதான் டா… dangerous category.”

சிவா சிரித்தான்.

பின்னர் அவனே அசோக்கின் Messenger app'ஐ open பண்ணி, Krupa'வின் ID'யை search செய்து “Hi” என்று type செய்தான்.

அப்போதுதான் அசோக் அவளது முழுப் பெயரை சரியாக படித்தான்.

கிருபா நாயர்.

பக்கத்தில் அவள் photo இருந்தது.

Click செய்து பார்த்தான்.

பார்க்க அழகாகத்தான் இருந்தாள். ஆனால் கண்டிப்பாக கேரளா பெண் மாதிரி தெரியவில்லை. Corporate office'களில் இருக்கும் அந்த generic smart face. Straightened hair. ID card. Half smile.

சிவா laptop screen'ஐ பார்த்துவிட்டு கேட்டான்:

“என்ன மச்சி… ஆளு எப்படி?”

“இல்ல… நாயர் போட்டு இருக்கு. ஆனா கேரளா மாதிரி தெரியல.”

“செம்மடா நீ… முகத்தை பார்த்தே கண்டுபிடிக்கிற level'க்கு போயிட்டியா?”

“Native சென்னைதான். ஒரு வருஷம் முன்னாடி வரைக்கும் நீ உட்கார்ந்திருக்கும் இதே cubicle'லதான் அவளும் உட்கார்ந்திருந்தா. கொஞ்சம் head weight. யார்கிட்டயும் ரொம்ப பேச மாட்டா. நம்ம அப்துல் எவ்வளவோ try பண்ணான். ஆனா set ஆகல.”

அதற்குள் Messenger window blink ஆனது.

Kirupa: “Finally we got a Unix System Admin for our team.”

சில நேரங்களில் வாழ்க்கை முழுக்க மாறப்போகும் விஷயங்கள் எல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கின்றன சார்.

ஒரு blinking cursor.

ஒரு “Hi”.

அல்லது ஒரு Unix script.

Monday, May 11, 2026

Crontab -time

அசோக்'க்கு வாழ்க்கையில் இப்பொழுது திடீரென்று ஒரு வெறுமை தோன்றியது போல் ஒரு உணர்வு அவனுக்கு.


40 வயதை கடந்தால் அப்படித்தான் இருக்கும் என்று அவன் மனைவி அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்கிறாள். அவள் அதை மிகவும் சாதாரணமாக சொல்கிறாள். “எல்லாருக்கும் வரும்…” என்று. ஆனால் அசோக்'க்கு அது சாதாரணமாக தெரியவில்லை. சில நேரங்களில் இரவு இரண்டு மணிக்கு திடீரென்று தூக்கம் கலைந்து ceiling fan-ஐ பார்த்துக்கொண்டு படுத்திருக்கிறான். வாழ்க்கை எங்கோ pause செய்து வைக்கப்பட்ட video போல தோன்றுகிறது.

இந்த வெறுமையை கடக்க மீண்டும் புத்தகங்கள் படிக்கலாம் என்று நினைத்தான். அலமாரியில் இருந்த பழைய புத்தகங்களை எல்லாம் எடுத்துப் புரட்டிப் பார்த்தான். ஒருகாலத்தில் ஒரே இரவில் முடித்த புத்தகங்களை இப்போது இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. மூன்றாவது பக்கத்திற்கு செல்லும் முன்பே மனசு எங்கோ சென்று விடுகிறது.

Intraday செய்யலாம் என்றாலும் அதிலும் விருப்பம் இல்லை.
ஒருகாலத்தில் market open ஆகும் நேரத்திற்கு முன்னரே laptop முன் ready-ஆ உட்கார்ந்திருப்பான். இப்போது candle chart-களை பார்த்தாலே சலிப்பு வருகிறது. பச்சை நிறமோ, சிவப்பு நிறமோ எந்த உணர்வையும் தரவில்லை.

திரைப்படம், web series, OTT recommendation… எதுவும் கைக்கொடுக்கவில்லை. Netflix open செய்து அரை மணி நேரம் scroll பண்ணிவிட்டு எதையும் பார்க்காமல் close செய்து விடுகிறான்.

கடைசியாக இந்த வெறுமையை கொஞ்சம் தள்ளி வைத்தது Ubuntu தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் பழைய laptop ஒன்றை format செய்து Ubuntu install பண்ணியிருந்தான். install ஆகி முடிந்த பிறகு வந்த அந்த கருப்பு terminal screen-ஐ பார்த்தபோது ஏனோ ஒரு அமைதி கிடைத்தது. அதன்பிறகு பழைய Unix command-களை எல்லாம் தூசி தட்டி பயன்படுத்த ஆரம்பித்தான்.

grep
awk
sed
cron

இந்த command-களை type பண்ணும்போது மட்டும் அசோக்'க்கு இன்னும் உலகத்தின் control ஏதோ தன்னிடம் இருப்பது போல தோன்றுகிறது.

என்னதான் Windows போல அனைத்து வசதிகளும் Ubuntu-வில் வந்துவிட்டாலும், command போட்டு இரண்டு தட்டு தட்டினால்தான் ஒரு திருப்தி. GUI-யில் mouse click பண்ணுவது விட terminal-ல் blinking cursor முன் உட்கார்ந்திருப்பதில் ஒரு தனி அமைதி இருக்கிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு வேலை மாறி புதிய கம்பெனிக்கு சென்றபோது நடந்த ஒரு விஷயம் அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வருகிறது.

ரொம்ப வருடங்களாக pending-ஆ கிடந்த ஒரு issue. Senior engineer-கள் கூட touch பண்ண பயந்த issue. அசோக் ஒரு அரை மணி நேரம் logs எல்லாம் பார்த்துவிட்டு, crontab-ல் ஒரே ஒரு time option சேர்த்து restart பண்ணியிருக்கிறான். பிரச்சினை சரியாகிவிட்டது.

அந்த floor முழுக்க அவனை ஒரு மாதிரி பார்த்தார்கள்.
டீமில் இருந்த ஒருவர் “How did you find this?” என்று கேட்டது இன்னும் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது.

அந்த நாளில் issue fix ஆன சந்தோஷத்தை விட, “நமக்கும் ஏதோ தெரியும்” என்ற உணர்வே அவனுக்கு பெரிய நிம்மதியை கொடுத்தது.

இப்போது இரவுகளில் Ubuntu open செய்து வெறுமனே terminal-ஐ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான் அசோக்.

கருப்பு screen.
அதில் வெறும்:

user@ubuntu:~$

Sunday, May 10, 2026

ஹலோ

மன்னியுங்கள்…
உங்கள் கொண்டாட்டங்களின் நடுவில்
என்னால் கைதட்ட முடியவில்லை.
உங்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சி,
என் மனதில் மட்டும்
ஒரு கனமான அமைதியை விட்டுச் செல்கிறது.

நீங்கள் இதை வெற்றி என அழைக்கிறீர்கள்;
நான் இதை
வரலாறு தவறாக திரும்பும் தருணம் என பார்க்கிறேன்.
உண்மைகள் தோற்கும் போது,
பிம்பங்கள் அரியணை ஏறும் போது,
கூட்டத்தின் சத்தம் கூட
உங்களுக்கு பாடலாகவே கேட்கிறது.

இன்று ஏற்றப்பட்ட இந்த விளக்குகள்
நாளை எதை எரிக்கப் போகின்றன என்று தெரியவில்லை.
எதையும் எரிக்காமல் இருக்கவே
நானும் விரும்புகிறேன்.

ஆனால்
நமது விருப்பப்படி எல்லாம் நடந்திருந்தால்,
இந்த பதிவு எழுத வேண்டிய அவசியமே
இருந்திருக்காது அல்லவா?

தெளிவில்லா தெளிவுரை

தமிழக அரசியலில் தற்போது ஒரு வித்தியாசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எந்த பெரிய கொள்கையோ சித்தாந்தமோ இல்லாமல், ஒரு நடிகரின் பிம்பத்தை நம்பி மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சினிமாவில் கிடைத்த புகழும் ரசிகர் ஆதரவும் அரசியலிலும் வெற்றி தரும் என்று பலர் நம்ப தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. ஆனால் இப்போது சமூக வலைத்தளங்கள் காரணமாக ஒரு மனிதரின் பிம்பம் மிக வேகமாக பெரியதாக மாற்றப்படுகிறது. மக்கள் அவரை ஒரு தலைவராக பார்க்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் நல்ல நிர்வாகம், அரசியல் அனுபவம், தெளிவான திட்டங்கள் போன்றவை இருக்கிறதா என்ற கேள்வி இன்னும் இருக்கிறது.

இப்போது உருவாகியிருப்பது உண்மையான அரசியல் நம்பிக்கையா, அல்லது வெறும் உணர்ச்சி மற்றும் ரசிகர் மனப்பான்மையா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். இந்த பிம்பம் ஒருநாள் உடைந்து போகுமா, அல்லது மக்கள் ஆதரவால் இன்னும் பெரிய சக்தியாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


உண்மையாகவே எது அரசியல்?

கல்லூரி காலங்களில் அவன் அரசியலை புத்தகங்களின் வழியாக புரிந்துகொள்ள முயன்றான். லெனினும் கார்ல் மார்க்ஸும் சொன்ன சமத்துவக் கருத்துகளே உலகத்தை மாற்றும் சக்தி என்று நம்பினான். தொழிலாளியின் வலி, ஏழையின் பசி, முதலாளித்துவத்தின் ஆதிக்கம் — இவையெல்லாம் அவனுக்குள் ஒரு கோபத்தையும் புரட்சிக் கனவையும் உருவாக்கின. அந்த நாட்களில் அவனுக்கு பிடித்த நிறம் சிகப்பு. அது ஒரு நிறமல்ல, ஒரு உணர்ச்சி என்று எண்ணினான்.

காலம் நகர்ந்தது. பின்னர் காந்தியின் எழுத்துகளும் அஹிம்சை கொள்கையும் அவனை ஈர்த்தன. வன்முறையால் எதையும் மாற்ற முடியாது, மனிதநேயம் தான் உண்மையான அரசியல் என்று நம்ப ஆரம்பித்தான். காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் மீது தீராத கோபத்தோடும் பழியோடும் சில ஆண்டுகள் திரிந்தான்.

வேலைக்கு சென்று, வெளி உலகத்தின் உண்மைகளை பார்த்தபோது, சாதி, பணம், அதிகாரம் ஆகியவை மனிதர்களை எப்படி பிரிக்கின்றன என்பதை உணர்ந்தான். அப்போது “இங்கு அனைவரும் சமம்” என்ற பெரியாரின் சிந்தனைகள் அவனுக்கு நெருக்கமானதாக தோன்றின. சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு — இவையே உண்மையான அரசியல் என்று நம்பினான்.

பின்னர் வாழ்க்கையில் குடும்பம் வந்தது. பொறுப்புகள் வந்தன. அப்போது “நாங்கள் எல்லாம் திராவிட குடும்பம்” என்று சொல்லிக்கொண்டு வாழ ஆரம்பித்தான். ஆனால் அவனுக்குள் ஒரு கேள்வி மட்டும் தொடர்ந்து இருந்தது — இவையெல்லாம் உண்மையான அரசியலா, இல்லை ஒவ்வொரு காலத்திலும் மனிதன் பிடித்துக் கொள்ளும் அடையாளங்களா?

இப்படி பல அரசியல் கோட்பாடுகளிலும் சிந்தனைகளிலும் சிக்கி, குழம்பிப் போய் நடந்தான் அவன். அந்த நேரத்தில் எதிரில் ஒருவன் வந்தான். அரசியல் பற்றி ஆழமாக ஒன்றும் தெரியாமலேயே பெரிய வார்த்தைகள் பேசினான். மக்கள் மனதை கவரும் வசனங்களை சொன்னான். அவனைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். சிந்தனையை விட பிம்பத்தையும் உண்மையை விட உணர்ச்சியையும் நம்பும் அந்த கூட்டத்தை பார்த்தபோது, அவனுக்குள் இருந்த நம்பிக்கையே உடைந்தது.

“இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்,” என்று உரக்கச் சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் அவன் நடந்தான்.

Thursday, May 16, 2024

எரிந்து போன டைரி குறிப்புகள் ( எனது நினைவிலிருந்து)

நாம் ஏன் மற்றவர்களுக்காக நடிக்க வேண்டும்?

நமது நடிப்பின் மூலம் ஒருவரின் தற்கொலை ஒரு நாள் தள்ளிப்போகும் என்றால், கண்டிப்பாக நடிக்கலாம். தவறே இல்லை.

நமது நடிப்பின் மூலம் ஒருவரின் முகத்தில் ஒரு கணநேரம் சிரிப்பு வரும் என்றால், ஒருவரின் அந்த கணநேர மகிழ்ச்சிக்காக நமது சுயத்தை மறைத்து நாம் நடிக்கலாமா? தேவையே இல்லை.

அதே நேரம் அந்த ஒருவர் யார் என்பதும் இங்கே முக்கியம் இல்லையா? அந்த ஒருவர் நாம் நேசிப்பவராக இருக்கலாம், அல்லது நாம் வெறுப்பவராக இருக்கலாம், அல்லது அவர் நம்மை நேசிப்பவராக இருக்கலாம். இப்படி ஏதோ ஒருவராக…

ஆனால் அவரின் மகிழ்ச்சிக்காக நாம் நமது சுயத்தை விட்டுத்தரக்கூடாது என்று நினைப்பதும் ஒருவகையான சுயநலம் இல்லையா?

நமக்கான சுய பிம்பத்தை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது? அது ஒருவிதமான ஆணவம். “என்னைப் பார்… நான் யாருக்காகவும் எப்போதும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்” என்று நிரூபிக்கத் துடிக்கும் ஆணவம்.

நாம் நிரூபித்து இங்கு எதை சாதிக்கப் போகிறோம்?

இருக்கும் ஒரு பிறவியை மற்றவர்களுக்காக வாழ்ந்து விட்டுச் செல்வோமே.

Saturday, January 28, 2023

Hindenburg நிறுவனத்தின் அதானி ரிப்போர்ட்

 காக்கா அமர்ந்து மரக்கிளை சாய்ந்த கதையாக, நான் கடந்த 21’ஆம் தேதி அதானி குழுமத்தை பற்றி எழுத, 24’ஆம் தேதி Hindenburg நிறுவனம் அதானி குழுமத்தில் தில்லுமுல்லுகளை 88 பாய்ண்ட்’களாக ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. அதானி குழுமத்தில் அனைத்து பங்குகளும் கடந்த இரண்டு நாட்களில் 20-30% சதவீதம் குறைந்து உள்ளன, இன்னும் எவ்வளவு குறையும் என்று தெரியவில்லை.  இதற்கிடையில் அதானி Enterprises FPO கடந்த 27’ஆம் தேதி தொடங்கிஉள்ளது.  FPO’வில்  அதானி Enterprises விலை 3112 ரூபாய், Open Market’யில் கடந்த வெள்ளியன்று (27-1-2023) அதானி விலை 2761. கண்டிப்பாக இந்த FPO தோல்விதான் என்று அனைவரும் சொல்லிக்கொண்டு இருக்க, அதானி நிறுவனமோ கண்டிப்பாக இந்த FPO நடைப்பெறும் என்று அறிவித்து உள்ளது. அதற்கான மறைமுக ஏற்பாடுகளை இந்நேரம் அந்த நிறுவனம் தொடங்கியிருக்கும். வரும் திங்களன்று அதானி ஷேர் மீண்டும் 3000 ரூபாய் தொடும் என்று எதிர்பார்க்கலாம்.


 


Hindenburg நிறுவனம் தந்த ரிப்போர்ட் சில ஆரோக்கியாமான விவாதங்களுக்கு வழிவகுத்து உள்ளது. இந்தியாவில் அனைத்து துறைகளிலும் Monopoly’யாக உருவாகிவரும் அதானி நிறுவனத்துக்கு இது கண்டிப்பாக ஒரு முட்டுக்கட்டை.

ஒரு சிலர், ஒரு அமெரிக்கன் கம்பெனியின் ரிப்போர்டை நாம் ஏன் நம்ப வேண்டும் ?? என்கிறார்கள். மோடியை பற்றிய பிபிசி டாக்குமெண்டருக்கும் இதைதான் சொன்னார்கள். அவர்களிடம் பேசி ஒரு பிரயோசனமும் இல்லை.

கடைசியாக ஒன்று, ஷேர் மார்க்கெட்’க்கு புதிதாக வருபவர்களுக்கு மற்றும் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் இது ஒரு  நல்ல வாய்ப்பு. அந்த Hindenburg நிறுவனம் ரிப்போர்ட்டை புரியுதோ இல்லையோ முழுவதுமாக படியுங்கள்.மேலும் இதன் தொடர்ச்சியாக அடுத்து அடுத்து நடக்க போகும் விவாதங்கள் மற்றும் மாற்றங்களை தொடர்ந்து வாசியுங்கள், அடுத்து மார்க்கெட்டில் நடக்க போவதை முன் கூட்டியே அனுமானித்து அதன் படி நடக்கிறதா என்று சரி பாருங்கள். ஒரே செய்தி நிறுவனத்தின் செய்தியை மட்டும் படித்து முடிவு செய்யாதீர்கள். முக்கியமாக டிவி சேனலை பார்க்காமல் செய்திதாள்களை படியுங்கள். இப்பொழுதைக்கு பணத்தை முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது.

  Hindenburg நிறுவனத்தின் அதானி ரிப்போர்ட் Link : https://hindenburgresearch.com/adani/

 

Saturday, January 21, 2023

துணிவு திரைப்படமும், Yes bank AT1 Bond, LIC மற்றும் அதானி ஷேர்களும்....

“துணிவு திரைப்படத்தில் வருவது போல் Mutual Fund Scam'க்கு வாய்ப்பு உள்ளதா?” என்று ஒரு விவாதம் ஓடிக்கொண்டு இருக்கிறபோதுதான், நேற்று உயர்நீதிமன்றம் Yes Bank AT1 Bond Write off செல்லாது என்று தீர்ப்பு அளித்து உள்ளது. இதன் மதிப்பு கிட்டதட்ட 8000 கோடி ரூபாய்.

போதுவாக எல்லா Financial Scam'களும் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பது இல்லை, "இதற்கு முன்னாடி இது மாதிரி நிறைய தடவை நடந்து உள்ளது, ஆனால் இதுதான் First Time" என்ற வாக்கியம் Financial Scam'களுக்கு சுலபமாக பொருந்தும்.

முன்று வருடங்களுக்கு முன்னால், யெஸ் பேங்க் திவாலாகிய நிலைமையில் இருந்தது. உடனே மத்திய அரசும், ஆர்பிஐ'யும் யெஸ் பேங்கை காப்பாற்ற சில மூக்கிய முடிவுகளை எடுத்தனர். அதில் ஒன்றுதான் இந்த யெஸ் பேங்க் AT1 Bond write-off, அதாவது இந்த பாண்ட் வாங்கியவர்கள் யாருக்கும் பணம் தரதேவையில்லை. AT1 Bond'யை பொது மக்களும் வாங்கலாம், ஆனால் பெரிய கம்பேனிகள், Pension Scheme மற்றும் mutual fund நிறுவனத்தினர் தான் அதிகம் வாங்குவார்கள். இந்த write-off'யில் அனில் அம்பானியின் Reliance Mutual Fund'க்கு (புதிய பெயர் Nippon Mutual Fund) மட்டும் 2500 கோடி ரூபாய் வரை நஷ்டம். Mutual Fund'க்கு நஷ்டம் என்றால் அது அவர்களின் நஷ்டம் இல்லை, அந்த Mutual Fund வாங்கிய பொதுமக்களுக்கு நஷ்டம். இந்த write-off காரணமாக Debt Mutual Fund Scheme'கள் பல அந்த வருடம் Negative Returns தந்தன.

இந்த யெஸ் பேங்கில் மட்டும் "இதுதான் First Time" என்ற வகை Financial Scam'கள் இதுவரை பல நடந்து உள்ளன.அதில் இன்னொன்று, பத்து ரூபாய்க்கு யெஸ் பேங்க் ஷேரினை SBI மற்றும் ஏழு தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கினார்கள். அவர்கள் அதை 40 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்று லாபம் பார்த்தார்கள். இதைப்பற்றி பின்னர் ஒரு முறை பொருமையாக பார்ப்போம்.

கடைசியாக, இப்பொழுது நடந்து கொண்டு இருக்கும் ஒரு Financial Scam'யை பற்றியும் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன்.

அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் கடந்த ஆறு வருடங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதானி Enterprises ஷேரின் விலை மட்டும் 7700% உயர்ந்து உள்ளது, அதாவது 2016'யில் ஒரு லட்சம் ரூபாய் போட்டு இருந்தால், இப்பொழுது 78 லட்சம் ரூபாய். கடந்து இரண்டு வருடங்களாக LIC நிறுவனம் அதானி குழுமம் ஷேர்களை தொடர்ந்து வாங்கி வருகிறது, இப்பொழுது அதானி குழுமத்தின் 5 சதவீத அதிக பங்குகள் LIC'யிடம் தான் உள்ளது. எதற்காக எற்கனவே விலை அதிகம் உள்ள அதானி ஷேர்களை LIC தொடர்ந்து வாங்கவேண்டும். யார் சொல்லி வாங்குகிறார்கள் ?. இதற்கிடையில் அடுத்த வாரம் அதானி நிறுவனம் FPO மூலம் இன்னும் அதிக ஷேர்களை சந்தைக்கு கொண்டு வருகிறார்கள். அதையும் இந்த LIC'தான் வாங்குவார்கள். எல்லாம் நன்றாக நடக்கும் வரை எந்த Financial Scam'மும் வெளியில் தெரியாது. எங்காவது பிரச்சனையென்றால் தான் இந்த மீடியாக்கள் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்.

சரி நேரமாகி விட்டது, நானும் எனது மகனும் அடுத்து தேவி திரையரங்கில் “வாரிசு” மேட்னி ஷோக்கு செல்ல வேண்டும். நன்றி வணக்கம்.