வார்த்தைகளோடு அலைபவன்
6.தனவந்தனின் மூன்றாவது மகன்
2
வார்த்தைகளோடு அலைபவன் எப்போது வேண்டுமானாலும் கதை சொல்லத் தொடங்குவான் என்பதை அறிந்திருந்த ஊர் மக்கள், அவன் கதை சொல்லப் போவதை ஊர் முழுவதும் தெரியப்படுத்த ஒரு மணியைத் தயாராக வைத்திருந்தனர்.
வார்த்தைகளோடு அலைபவன் அந்த ஊருக்குள் வந்து ஆறு நாட்கள், ஆறு நாழிகைகள், ஆறு நொடிகள் ஆனபோது, கடைசியாக அந்த மணி ஒலித்தது. ஊர் மக்கள் அனைவரும் திரளாக மணி ஒலித்த திசையை நோக்கி ஓடத் தொடங்கினர்.
தனவந்தனின் வீட்டிலும் அந்தப் பரபரப்பு ஒட்டிக்கொண்டது.
ஆறு நாட்களுக்கு முன்னர், தனவந்தனும் அவனது மனைவியும் வார்த்தைகளோடு அலைபவனைச் சந்தித்து, தங்களுக்காகத் தனியாக, பிரத்யேகமாகக் கதை சொல்லுமாறு கேட்டிருந்தார்கள். ஆனால், வார்த்தைகளோடு அலைபவன் அதை முற்றிலுமாக மறுத்துவிட்டான். தனவந்தனின் மனைவி கொடுத்த பொற்காசுகளையும் அவன் வாங்கவில்லை.
கடைசியாக, அவனது மனைவி, தங்களுக்குச் சொந்தமான ஒரு பரந்த இடத்தில் அனைத்து விதமான சௌகரியங்களும் கிடைக்கும் என்றும், மக்கள் கூட்டமாக அமரவும் அதுவே சரியான இடமாக இருக்கும் என்றும் கூறி, அங்கிருந்து கதை சொல்லுமாறு வேண்டினாள்.அதற்கும் அவன் மறுத்துவிட்டான்.
இப்போது மணி ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த இடம், ஊரின் இடுகாட்டுக்கு அருகில் இருந்தது.
தனவந்தன், அவனது மனைவி மற்றும் இரு மகன்களும் தங்களது வேலையாட்களுடன் அந்த ஒலி வந்த திசையை நோக்கிச் சென்றனர். அவர்கள் சென்ற விதம், ஒரு பெரிய கோயில் திருவிழா ஊர்வலத்தைப் போல இருந்ததாக ஊருக்குள் ஒரு பேச்சு உண்டு. தனவந்தன், அவனுடைய நினைவூட்டும் ஆறு வேலையாட்கள், அவனது மனைவி, அவளது மூன்று பணிப்பெண்கள், தனவந்தனின் இரு மகன்கள், அவர்களுக்குத் தலா இரண்டு வேலையாட்கள், அவர்கள் அமர்வதற்கான அரியாசனங்கள், அவற்றைத் தூக்க நான்கு வேலையாட்கள், அவர்கள் பயணிப்பதற்காக இரண்டு யானைகள், அதற்கான இரு பாகன்கள் என ஒரு பெரும் பட்டாளமாகவே அவர்கள் கதை கேட்கச் சென்றார்கள்.
யானையின் மீது செல்லும்போது கூட, தனவந்தன் தனது இல்லாத மகனிடம்,
“பத்திரமாக அமர்ந்துகொள்”
என்றும்,
“கீழே எட்டிப் பார்க்காதே”
என்றும் சொல்லிக்கொண்டே, கொஞ்சமும் விருப்பமில்லாமல் கதை கேட்கச் சென்றான்.
வார்த்தைகளோடு அலைபவன் கதை சொல்ல இருந்த அந்த இடுகாட்டுக்கு அருகில், ஏற்கனவே ஊர் மக்கள் வெள்ளம் போல் திரண்டிருந்தனர்.
தனவந்தன் தனது குடும்பத்துடன் வந்திருப்பதைக் கண்ட மக்கள், அவன் மீது வைத்திருந்த மரியாதைக்காகவும், அவனது வானுயர்ந்த செல்வத்திற்காகவும் தாங்களாகவே வழிவிட்டு, முன் வரிசையில் அவர்களுக்கு இடம் கொடுத்தார்கள்.
வார்த்தைகளோடு அலைபவன் தனது மூட்டையை அவிழ்த்து, அதிலிருந்து வெளிவந்த முதல் வார்த்தையை வைத்து இவ்வாறு கதை சொல்லத் தொடங்கினான்:
“இந்தக் கதை நான் உருவாக்கியது அல்ல. நம் பிரபஞ்சத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு விசித்திரக் கிரகத்தின் ரகசியம் இது. லில்லி மாதத்தில் பிறந்தவன் தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்த ஓர் உண்மைச் சம்பவம்...”
வார்த்தைகளோடு அலைபவன் ஒரு முக்கோண வடிவக் கருவியின் வழியே கதை சொன்னதால், அங்கு வந்திருந்த அனைவருக்குமே அவனது குரல் தெளிவாகக் கேட்டது. அவன் கதை சொல்லச் சொல்ல, மக்கள் கூட்டம் பேரமைதியில் ஆழ்ந்தது. அன்றைய இரவு முழுவதும் அவன் கதை சொன்னான். ஊர் மக்கள் அனைவரும் இருந்த இடத்தை விட்டு நகராமல் கதை கேட்டுக்கொண்டிருந்தனர். சில குழந்தைகள் தங்களின் அம்மாக்களின் மடியிலேயே தூங்கிப்போயின. தங்கள் காதலியைப் பார்ப்பதற்காகவே அங்கு வந்திருந்த சில இளைஞர்கள், கதையோடு கலந்து தங்களின் காதலியையே மறந்தார்கள்.
தனவந்தனுக்கு அந்தக் கதை பிடித்ததா இல்லையா என்பது அவனுக்கே தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவனை அங்கிருந்து எழுந்து செல்ல விடவில்லை. அவன் அருகிலிருந்த தனது இல்லாத மகனையும் சில நிமிடங்களுக்கு ஒருமுறை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டான். தனவந்தனின் நினைவூட்டும் வேலையாட்களோ தங்களின் கடமையை முற்றிலும் மறந்து கதையோடு ஒன்றியிருந்தனர். சிரிப்பதையே மறந்து, வணிகத்தில் பெரும் செல்வம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கும் மூத்த மகனும், கதைக்குத் தகுந்தவாறு சிரித்தும், தனது முகபாவங்களை மாற்றியும் கதையை ரசித்துக்கொண்டிருந்தான். இப்படியே இரவு முழுவதும் நகர்ந்தது.
விடிந்தவுடன் கதையை நிறுத்திய வார்த்தைகளோடு அலைபவன், மீண்டும் இன்றைய மாலை நேரத்தில் கதை தொடங்கும் என்றான். மக்கள் அனைவரும் மெல்லக் கலைந்து சென்றனர். இதே போல் தினமும் நடந்தது.
அந்தக் கதையைச் சொல்லி முடிக்க வார்த்தைகளோடு அலைபவன் மொத்தம் இருபத்தெட்டு இரவுகளை எடுத்துக்கொண்டான். ஒரு பௌர்ணமி அன்று தொடங்கிய கதை, அடுத்த பௌர்ணமி நாளில்தான் நிறைவடைந்தது.
முதல் நாள் கதை கேட்டுவிட்டு வந்த தனவந்தன்,
“இனி நான் கதை கேட்கப் போவதில்லை”
என்று பிடிவாதம் பிடித்தான். ஆனால் அன்று மாலையே, யாரிடமும் எதுவும் சொல்லாமல், தன் குடும்பத்தோடு மீண்டும் அவனே முன்னால் சென்று கதை கேட்க அமர்ந்தான்.
இரண்டாம் நாள் கதையிலும் மக்கள் கூட்டம் குறையவில்லை. மாறாக இன்னும் அதிகரித்திருந்தது. முதல் நாள் கதை கேட்காதவர்களும் இப்போது வந்து சேர்ந்திருந்தார்கள். சிலர் தங்களுடைய வீட்டிலிருந்து பாய்களைக் கொண்டு வந்தார்கள். சிலர் சமைத்த உணவுகளைக் கொண்டு வந்தார்கள்.
மூன்றாம் நாள், தனவந்தன் ஒரு விசித்திரமான விஷயத்தை கவனித்தான் வார்த்தைகளோடு அலைபவன் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது, தனது மூன்றாவது மகனைப் பார்க்க அவன் திரும்பினான். ஆனால் அந்த இடம் காலியாக இருந்தது. உடனே பதறிப்போனான். சில நொடிகளுக்குப் பிறகுதான் மீண்டும் அவன் மகன் அங்கே அமர்ந்திருப்பது போலத் தோன்றியது. அதைப் பற்றி அவன் யாரிடமும் சொல்லவில்லை.
நான்காம் நாள், அவனுடைய நினைவூட்டும் வேலையாட்கள் ஆச்சரியத்தில் இருந்தார்கள். ஏனென்றால், அன்று காலை முதல் அவன் தனது இல்லாத மூன்றாவது மகனிடம் வழக்கத்தை விடக் குறைவாகப் பேசிக்கொண்டிருந்தான்.
ஐந்தாம் நாள், அவனுடைய வேலையாள் ஒருவன் வந்து, “சின்ன ஐயா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.” என்று நினைவூட்டினான். தனவந்தன் அவனைப் பார்த்து, “எனக்குத் தெரியும்.” என்றான்.
இரண்டு வருடங்களில் அவன் முதல் முறையாக அப்படிச் சொன்னான். வேலையாட்கள் மூலம் இதை கேள்விப்பட்ட தனவந்தன் மனைவி கொஞ்சம் நிம்மதி அடைந்தாள்.
ஏழாம் நாள், ஊரில் ஒரு வதந்தி பரவத் தொடங்கியது. கதை கேட்க வந்தவர்கள் தூங்கும்போது, அவர்கள் கனவுகளிலும் வார்த்தைகளோடு அலைபவன் சொல்லும் அதே கதை தொடர்கிறது என்று சிலர் சொன்னார்கள். கனவில் கேட்ட பகுதியை மறுநாள் இரவு அவன் கதையில் சொல்வதாகவும் கூறினார்கள்.
பத்தாம் நாள், தனவந்தனின் மூத்த மகன் தனது தந்தையைப் பார்த்து பயந்தான். இரண்டு வருடங்களுக்குப் பிறகு தனவந்தன் முதல் முறையாக அனைவரிடமும் சிரித்துப்பேசினான்.
பன்னிரண்டாம் நாள், நினைவூட்டும் வேலையாட்களின் எண்ணிக்கை ஆறு பேரிலிருந்து நான்கு பேராகக் குறைக்கப்பட்டது. மற்ற இருவருக்கும் தோட்ட வேலைகள் ஒதுக்கப்பட்டன. அந்த இருவரும் மாலை நேரத்தில் வேலைகளை வேகமாக முடித்துவிட்டு, கதை கேட்கும் கூட்டத்தின் பின் வரிசையில் அமர ஆரம்பித்தார்கள்.
பதினாறாம் நாள், தனவந்தன் ஒரு முழு நாளை தனது மூன்றாவது மகனிடம் பேசாமல் கழித்தான். அந்த மாலை வீட்டுக்குத் திரும்பிய பிறகுதான் அதை அவன் உணர்ந்தான். அவன் அழவில்லை. மகிழ்ச்சியும் அடையவில்லை. நீண்ட நேரம் அமைதியாக மட்டும் அமர்ந்திருந்தான்.
அதே நாளில், ஊரில் மற்றொரு வதந்தியும் பரவியது. கதை கேட்க வந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான வேறு கதையைத்தான் கேட்கிறார்கள் என்று சிலர் சொன்னார்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும், ஒவ்வொருவருக்கும் வேறு கதை.
இருபதாம் நாள் முதல் தனவந்தன் மற்ற சிலரை போல், வீட்டுக்கு செல்லாமல் அங்கேயேயிருந்து மாலை சொல்லப் போகும் கதைக்காக காத்திருக்க தொடங்கினான்.
இருபத்தெட்டாம் நாள். பௌர்ணமி. கதை முடிந்தது. வார்த்தைகளோடு அலைபவன் கடைசி வார்த்தையைச் சொன்னான். மூட்டையை மூடினான். அடுத்த ஊருக்கு செல்ல மூட்டையை தூக்கி கொண்டு நடக்க தொடங்கினான்.
கூட்டம் நீண்ட நேரம் அமைதியாக அதே இடத்தில் இருந்தது. சிலர் போக மனம் இன்றி அங்கேயே அமர்ந்தனர். அடுத்த பல வருடங்களுக்கு அந்த இடம் அந்த ஊர் மக்களுக்கு கதைகள் பேசும் கூடாரமாக அமைந்தது.
தனவந்தன் வீட்டுக்கு சென்று தனது ஆறு நினைவூட்டும் வேலையாட்களையும் அழைத்தான்.அவன் அவர்களிடம்,
“நாளையிலிருந்து நீங்கள் வீட்டில் உள்ள தோட்ட வேலையைப் பாருங்கள்"
என்றான்.
வேலையாட்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இரண்டு வருடங்களாக அவர்கள் செய்த வேலை அன்றோடு முடிந்தது.
அன்றிலிருந்து தனவந்தன் தனது இல்லாத மகனைப் பற்றி பேசுவதில்லை. அது எப்படி நடந்தது என்பதை அவனுக்கே சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இதே போல் அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒரு மாற்றத்தை கண்டனர்.
கடல் கடந்து வணிகம் செய்து வரும் தனவந்தனின் மூத்த மகன் மூலம் வார்த்தைகளோடு அலைபவனின் புகழ் பக்கத்து நாடுகளுக்கும் பரவியது.
