Monday, May 11, 2026

Crontab -time

அசோக்'க்கு வாழ்க்கையில் இப்பொழுது திடீரென்று ஒரு வெறுமை தோன்றியது போல் ஒரு உணர்வு அவனுக்கு.


40 வயதை கடந்தால் அப்படித்தான் இருக்கும் என்று அவன் மனைவி அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்கிறாள். அவள் அதை மிகவும் சாதாரணமாக சொல்கிறாள். “எல்லாருக்கும் வரும்…” என்று. ஆனால் அசோக்'க்கு அது சாதாரணமாக தெரியவில்லை. சில நேரங்களில் இரவு இரண்டு மணிக்கு திடீரென்று தூக்கம் கலைந்து ceiling fan-ஐ பார்த்துக்கொண்டு படுத்திருக்கிறான். வாழ்க்கை எங்கோ pause செய்து வைக்கப்பட்ட video போல தோன்றுகிறது.

இந்த வெறுமையை கடக்க மீண்டும் புத்தகங்கள் படிக்கலாம் என்று நினைத்தான். அலமாரியில் இருந்த பழைய புத்தகங்களை எல்லாம் எடுத்துப் புரட்டிப் பார்த்தான். ஒருகாலத்தில் ஒரே இரவில் முடித்த புத்தகங்களை இப்போது இரண்டு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை. மூன்றாவது பக்கத்திற்கு செல்லும் முன்பே மனசு எங்கோ சென்று விடுகிறது.

Intraday செய்யலாம் என்றாலும் அதிலும் விருப்பம் இல்லை.
ஒருகாலத்தில் market open ஆகும் நேரத்திற்கு முன்னரே laptop முன் ready-ஆ உட்கார்ந்திருப்பான். இப்போது candle chart-களை பார்த்தாலே சலிப்பு வருகிறது. பச்சை நிறமோ, சிவப்பு நிறமோ எந்த உணர்வையும் தரவில்லை.

திரைப்படம், web series, OTT recommendation… எதுவும் கைக்கொடுக்கவில்லை. Netflix open செய்து அரை மணி நேரம் scroll பண்ணிவிட்டு எதையும் பார்க்காமல் close செய்து விடுகிறான்.

கடைசியாக இந்த வெறுமையை கொஞ்சம் தள்ளி வைத்தது Ubuntu தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் பழைய laptop ஒன்றை format செய்து Ubuntu install பண்ணியிருந்தான். install ஆகி முடிந்த பிறகு வந்த அந்த கருப்பு terminal screen-ஐ பார்த்தபோது ஏனோ ஒரு அமைதி கிடைத்தது. அதன்பிறகு பழைய Unix command-களை எல்லாம் தூசி தட்டி பயன்படுத்த ஆரம்பித்தான்.

grep
awk
sed
cron

இந்த command-களை type பண்ணும்போது மட்டும் அசோக்'க்கு இன்னும் உலகத்தின் control ஏதோ தன்னிடம் இருப்பது போல தோன்றுகிறது.

என்னதான் Windows போல அனைத்து வசதிகளும் Ubuntu-வில் வந்துவிட்டாலும், command போட்டு இரண்டு தட்டு தட்டினால்தான் ஒரு திருப்தி. GUI-யில் mouse click பண்ணுவது விட terminal-ல் blinking cursor முன் உட்கார்ந்திருப்பதில் ஒரு தனி அமைதி இருக்கிறது.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு வேலை மாறி புதிய கம்பெனிக்கு சென்றபோது நடந்த ஒரு விஷயம் அவனுக்கு அடிக்கடி ஞாபகம் வருகிறது.

ரொம்ப வருடங்களாக pending-ஆ கிடந்த ஒரு issue. Senior engineer-கள் கூட touch பண்ண பயந்த issue. அசோக் ஒரு அரை மணி நேரம் logs எல்லாம் பார்த்துவிட்டு, crontab-ல் ஒரே ஒரு time option சேர்த்து restart பண்ணியிருக்கிறான். பிரச்சினை சரியாகிவிட்டது.

அந்த floor முழுக்க அவனை ஒரு மாதிரி பார்த்தார்கள்.
டீமில் இருந்த ஒருவர் “How did you find this?” என்று கேட்டது இன்னும் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது.

அந்த நாளில் issue fix ஆன சந்தோஷத்தை விட, “நமக்கும் ஏதோ தெரியும்” என்ற உணர்வே அவனுக்கு பெரிய நிம்மதியை கொடுத்தது.

இப்போது இரவுகளில் Ubuntu open செய்து வெறுமனே terminal-ஐ பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான் அசோக்.

கருப்பு screen.
அதில் வெறும்:

user@ubuntu:~$

Sunday, May 10, 2026

ஹலோ

மன்னியுங்கள்…
உங்கள் கொண்டாட்டங்களின் நடுவில்
என்னால் கைதட்ட முடியவில்லை.
உங்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சி,
என் மனதில் மட்டும்
ஒரு கனமான அமைதியை விட்டுச் செல்கிறது.

நீங்கள் இதை வெற்றி என அழைக்கிறீர்கள்;
நான் இதை
வரலாறு தவறாக திரும்பும் தருணம் என பார்க்கிறேன்.
உண்மைகள் தோற்கும் போது,
பிம்பங்கள் அரியணை ஏறும் போது,
கூட்டத்தின் சத்தம் கூட
உங்களுக்கு பாடலாகவே கேட்கிறது.

இன்று ஏற்றப்பட்ட இந்த விளக்குகள்
நாளை எதை எரிக்கப் போகின்றன என்று தெரியவில்லை.
எதையும் எரிக்காமல் இருக்கவே
நானும் விரும்புகிறேன்.

ஆனால்
நமது விருப்பப்படி எல்லாம் நடந்திருந்தால்,
இந்த பதிவு எழுத வேண்டிய அவசியமே
இருந்திருக்காது அல்லவா?

தெளிவில்லா தெளிவுரை

தமிழக அரசியலில் தற்போது ஒரு வித்தியாசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எந்த பெரிய கொள்கையோ சித்தாந்தமோ இல்லாமல், ஒரு நடிகரின் பிம்பத்தை நம்பி மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சினிமாவில் கிடைத்த புகழும் ரசிகர் ஆதரவும் அரசியலிலும் வெற்றி தரும் என்று பலர் நம்ப தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. ஆனால் இப்போது சமூக வலைத்தளங்கள் காரணமாக ஒரு மனிதரின் பிம்பம் மிக வேகமாக பெரியதாக மாற்றப்படுகிறது. மக்கள் அவரை ஒரு தலைவராக பார்க்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் நல்ல நிர்வாகம், அரசியல் அனுபவம், தெளிவான திட்டங்கள் போன்றவை இருக்கிறதா என்ற கேள்வி இன்னும் இருக்கிறது.

இப்போது உருவாகியிருப்பது உண்மையான அரசியல் நம்பிக்கையா, அல்லது வெறும் உணர்ச்சி மற்றும் ரசிகர் மனப்பான்மையா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். இந்த பிம்பம் ஒருநாள் உடைந்து போகுமா, அல்லது மக்கள் ஆதரவால் இன்னும் பெரிய சக்தியாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


உண்மையாகவே எது அரசியல்?

கல்லூரி காலங்களில் அவன் அரசியலை புத்தகங்களின் வழியாக புரிந்துகொள்ள முயன்றான். லெனினும் கார்ல் மார்க்ஸும் சொன்ன சமத்துவக் கருத்துகளே உலகத்தை மாற்றும் சக்தி என்று நம்பினான். தொழிலாளியின் வலி, ஏழையின் பசி, முதலாளித்துவத்தின் ஆதிக்கம் — இவையெல்லாம் அவனுக்குள் ஒரு கோபத்தையும் புரட்சிக் கனவையும் உருவாக்கின. அந்த நாட்களில் அவனுக்கு பிடித்த நிறம் சிகப்பு. அது ஒரு நிறமல்ல, ஒரு உணர்ச்சி என்று எண்ணினான்.

காலம் நகர்ந்தது. பின்னர் காந்தியின் எழுத்துகளும் அஹிம்சை கொள்கையும் அவனை ஈர்த்தன. வன்முறையால் எதையும் மாற்ற முடியாது, மனிதநேயம் தான் உண்மையான அரசியல் என்று நம்ப ஆரம்பித்தான். காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் மீது தீராத கோபத்தோடும் பழியோடும் சில ஆண்டுகள் திரிந்தான்.

வேலைக்கு சென்று, வெளி உலகத்தின் உண்மைகளை பார்த்தபோது, சாதி, பணம், அதிகாரம் ஆகியவை மனிதர்களை எப்படி பிரிக்கின்றன என்பதை உணர்ந்தான். அப்போது “இங்கு அனைவரும் சமம்” என்ற பெரியாரின் சிந்தனைகள் அவனுக்கு நெருக்கமானதாக தோன்றின. சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு — இவையே உண்மையான அரசியல் என்று நம்பினான்.

பின்னர் வாழ்க்கையில் குடும்பம் வந்தது. பொறுப்புகள் வந்தன. அப்போது “நாங்கள் எல்லாம் திராவிட குடும்பம்” என்று சொல்லிக்கொண்டு வாழ ஆரம்பித்தான். ஆனால் அவனுக்குள் ஒரு கேள்வி மட்டும் தொடர்ந்து இருந்தது — இவையெல்லாம் உண்மையான அரசியலா, இல்லை ஒவ்வொரு காலத்திலும் மனிதன் பிடித்துக் கொள்ளும் அடையாளங்களா?

இப்படி பல அரசியல் கோட்பாடுகளிலும் சிந்தனைகளிலும் சிக்கி, குழம்பிப் போய் நடந்தான் அவன். அந்த நேரத்தில் எதிரில் ஒருவன் வந்தான். அரசியல் பற்றி ஆழமாக ஒன்றும் தெரியாமலேயே பெரிய வார்த்தைகள் பேசினான். மக்கள் மனதை கவரும் வசனங்களை சொன்னான். அவனைச் சுற்றி ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். சிந்தனையை விட பிம்பத்தையும் உண்மையை விட உணர்ச்சியையும் நம்பும் அந்த கூட்டத்தை பார்த்தபோது, அவனுக்குள் இருந்த நம்பிக்கையே உடைந்தது.

“இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்,” என்று உரக்கச் சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் அவன் நடந்தான்.

Thursday, May 16, 2024

எரிந்து போன டைரி குறிப்புகள் ( எனது நினைவிலிருந்து)

நாம் ஏன் மற்றவர்களுக்காக நடிக்க வேண்டும் ?

நமது நடிப்பின் மூலம் ஒருவரின் தற்கொலை ஒரு நாள் தள்ளிபோகும் என்றால், கண்டிப்பாக நடிக்கலாம் தவறே இல்லை.

நமது நடிப்பின் மூலன் ஒருவரின் முகத்தில் ஒரு கணநேரம் சிரிப்பு வரும் என்றால், ஒருவரின் அந்த கணநேர மகிழ்ச்சிக்காக நமது சுயத்தை மறைத்து நாம் நடிக்கலாமா?? தேவையே இல்லை.

அதே நேரம் அந்த ஒருவர் யார் என்பதும் இங்கே முக்கியம் இல்லையா. அந்த ஒருவர் நாம் நேசிப்பவராக இருக்கலாம், அல்லது நாம் வெறுப்பவராக  அல்லது அவர் நம்மை நேசிப்பவராக, இப்படி ஏதோ ஒருவராக.. 

ஆனால் அவரின் மகிழ்ச்சிக்காக நாம் நமது சுயத்தை விட்டு தரக்கூடாது என்று நினைப்பதும் ஒருவகையான சுயநலம் இல்லையா??

நமக்கான சுய பிம்பத்தை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது, அது ஒரு வீதமான ஆணவம். என்னை பார், நான் யாருக்காகவும் எப்பொழுதும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று நிருபிக்க துடிக்கும் ஆணவம். நாம் நிருபித்து இங்கு எதை சாதிக்க போகிறோம்.

இருக்கும் ஒரு பிறவியை மற்றவர்களுக்காக வாழ்ந்து விட்டு செல்வோமே.

Saturday, January 28, 2023

Hindenburg நிறுவனத்தின் அதானி ரிப்போர்ட்

 காக்கா அமர்ந்து மரக்கிளை சாய்ந்த கதையாக, நான் கடந்த 21’ஆம் தேதி அதானி குழுமத்தை பற்றி எழுத, 24’ஆம் தேதி Hindenburg நிறுவனம் அதானி குழுமத்தில் தில்லுமுல்லுகளை 88 பாய்ண்ட்’களாக ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. அதானி குழுமத்தில் அனைத்து பங்குகளும் கடந்த இரண்டு நாட்களில் 20-30% சதவீதம் குறைந்து உள்ளன, இன்னும் எவ்வளவு குறையும் என்று தெரியவில்லை.  இதற்கிடையில் அதானி Enterprises FPO கடந்த 27’ஆம் தேதி தொடங்கிஉள்ளது.  FPO’வில்  அதானி Enterprises விலை 3112 ரூபாய், Open Market’யில் கடந்த வெள்ளியன்று (27-1-2023) அதானி விலை 2761. கண்டிப்பாக இந்த FPO தோல்விதான் என்று அனைவரும் சொல்லிக்கொண்டு இருக்க, அதானி நிறுவனமோ கண்டிப்பாக இந்த FPO நடைப்பெறும் என்று அறிவித்து உள்ளது. அதற்கான மறைமுக ஏற்பாடுகளை இந்நேரம் அந்த நிறுவனம் தொடங்கியிருக்கும். வரும் திங்களன்று அதானி ஷேர் மீண்டும் 3000 ரூபாய் தொடும் என்று எதிர்பார்க்கலாம்.


 


Hindenburg நிறுவனம் தந்த ரிப்போர்ட் சில ஆரோக்கியாமான விவாதங்களுக்கு வழிவகுத்து உள்ளது. இந்தியாவில் அனைத்து துறைகளிலும் Monopoly’யாக உருவாகிவரும் அதானி நிறுவனத்துக்கு இது கண்டிப்பாக ஒரு முட்டுக்கட்டை.

ஒரு சிலர், ஒரு அமெரிக்கன் கம்பெனியின் ரிப்போர்டை நாம் ஏன் நம்ப வேண்டும் ?? என்கிறார்கள். மோடியை பற்றிய பிபிசி டாக்குமெண்டருக்கும் இதைதான் சொன்னார்கள். அவர்களிடம் பேசி ஒரு பிரயோசனமும் இல்லை.

கடைசியாக ஒன்று, ஷேர் மார்க்கெட்’க்கு புதிதாக வருபவர்களுக்கு மற்றும் கற்றுக்கொள்ள நினைப்பவர்கள் இது ஒரு  நல்ல வாய்ப்பு. அந்த Hindenburg நிறுவனம் ரிப்போர்ட்டை புரியுதோ இல்லையோ முழுவதுமாக படியுங்கள்.மேலும் இதன் தொடர்ச்சியாக அடுத்து அடுத்து நடக்க போகும் விவாதங்கள் மற்றும் மாற்றங்களை தொடர்ந்து வாசியுங்கள், அடுத்து மார்க்கெட்டில் நடக்க போவதை முன் கூட்டியே அனுமானித்து அதன் படி நடக்கிறதா என்று சரி பாருங்கள். ஒரே செய்தி நிறுவனத்தின் செய்தியை மட்டும் படித்து முடிவு செய்யாதீர்கள். முக்கியமாக டிவி சேனலை பார்க்காமல் செய்திதாள்களை படியுங்கள். இப்பொழுதைக்கு பணத்தை முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது.

  Hindenburg நிறுவனத்தின் அதானி ரிப்போர்ட் Link : https://hindenburgresearch.com/adani/

 

Saturday, January 21, 2023

துணிவு திரைப்படமும், Yes bank AT1 Bond, LIC மற்றும் அதானி ஷேர்களும்....

“துணிவு திரைப்படத்தில் வருவது போல் Mutual Fund Scam'க்கு வாய்ப்பு உள்ளதா?” என்று ஒரு விவாதம் ஓடிக்கொண்டு இருக்கிறபோதுதான், நேற்று உயர்நீதிமன்றம் Yes Bank AT1 Bond Write off செல்லாது என்று தீர்ப்பு அளித்து உள்ளது. இதன் மதிப்பு கிட்டதட்ட 8000 கோடி ரூபாய்.

போதுவாக எல்லா Financial Scam'களும் எப்பொழுதும் ஒரே மாதிரி இருப்பது இல்லை, "இதற்கு முன்னாடி இது மாதிரி நிறைய தடவை நடந்து உள்ளது, ஆனால் இதுதான் First Time" என்ற வாக்கியம் Financial Scam'களுக்கு சுலபமாக பொருந்தும்.

முன்று வருடங்களுக்கு முன்னால், யெஸ் பேங்க் திவாலாகிய நிலைமையில் இருந்தது. உடனே மத்திய அரசும், ஆர்பிஐ'யும் யெஸ் பேங்கை காப்பாற்ற சில மூக்கிய முடிவுகளை எடுத்தனர். அதில் ஒன்றுதான் இந்த யெஸ் பேங்க் AT1 Bond write-off, அதாவது இந்த பாண்ட் வாங்கியவர்கள் யாருக்கும் பணம் தரதேவையில்லை. AT1 Bond'யை பொது மக்களும் வாங்கலாம், ஆனால் பெரிய கம்பேனிகள், Pension Scheme மற்றும் mutual fund நிறுவனத்தினர் தான் அதிகம் வாங்குவார்கள். இந்த write-off'யில் அனில் அம்பானியின் Reliance Mutual Fund'க்கு (புதிய பெயர் Nippon Mutual Fund) மட்டும் 2500 கோடி ரூபாய் வரை நஷ்டம். Mutual Fund'க்கு நஷ்டம் என்றால் அது அவர்களின் நஷ்டம் இல்லை, அந்த Mutual Fund வாங்கிய பொதுமக்களுக்கு நஷ்டம். இந்த write-off காரணமாக Debt Mutual Fund Scheme'கள் பல அந்த வருடம் Negative Returns தந்தன.

இந்த யெஸ் பேங்கில் மட்டும் "இதுதான் First Time" என்ற வகை Financial Scam'கள் இதுவரை பல நடந்து உள்ளன.அதில் இன்னொன்று, பத்து ரூபாய்க்கு யெஸ் பேங்க் ஷேரினை SBI மற்றும் ஏழு தனியார் வங்கிகளுக்கு ஒதுக்கினார்கள். அவர்கள் அதை 40 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்று லாபம் பார்த்தார்கள். இதைப்பற்றி பின்னர் ஒரு முறை பொருமையாக பார்ப்போம்.

கடைசியாக, இப்பொழுது நடந்து கொண்டு இருக்கும் ஒரு Financial Scam'யை பற்றியும் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறேன்.

அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் கடந்த ஆறு வருடங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதானி Enterprises ஷேரின் விலை மட்டும் 7700% உயர்ந்து உள்ளது, அதாவது 2016'யில் ஒரு லட்சம் ரூபாய் போட்டு இருந்தால், இப்பொழுது 78 லட்சம் ரூபாய். கடந்து இரண்டு வருடங்களாக LIC நிறுவனம் அதானி குழுமம் ஷேர்களை தொடர்ந்து வாங்கி வருகிறது, இப்பொழுது அதானி குழுமத்தின் 5 சதவீத அதிக பங்குகள் LIC'யிடம் தான் உள்ளது. எதற்காக எற்கனவே விலை அதிகம் உள்ள அதானி ஷேர்களை LIC தொடர்ந்து வாங்கவேண்டும். யார் சொல்லி வாங்குகிறார்கள் ?. இதற்கிடையில் அடுத்த வாரம் அதானி நிறுவனம் FPO மூலம் இன்னும் அதிக ஷேர்களை சந்தைக்கு கொண்டு வருகிறார்கள். அதையும் இந்த LIC'தான் வாங்குவார்கள். எல்லாம் நன்றாக நடக்கும் வரை எந்த Financial Scam'மும் வெளியில் தெரியாது. எங்காவது பிரச்சனையென்றால் தான் இந்த மீடியாக்கள் பக்கம் பக்கமாக எழுதுவார்கள்.

சரி நேரமாகி விட்டது, நானும் எனது மகனும் அடுத்து தேவி திரையரங்கில் “வாரிசு” மேட்னி ஷோக்கு செல்ல வேண்டும். நன்றி வணக்கம்.

Sunday, August 28, 2022

.

முத்தம் என்பது ஒரு பெயர் சொல்.
முத்தம் என்பது நாம் ஒருவர் மீது
செலுத்தும் வன்முறை.

முத்தம் என்பது ஒருவர் மீது நமது இருப்பை நினைநாட்ட நாம் செலுத்தும்
ஒரு ஏகாபத்திய செயல், அல்லது
நான் உனக்காக இருக்கிறேன் என்று நம்ப வைக்கும் ஒரு நாடகம்.

முத்தம் என்பது எப்பொழுதோ நடக்க போகும் ஒரு கொலைக்கான ஆரம்பம்.
முத்தம் என்பது அடுத்த நொடி நடக்கயிருந்த ஒரு தற்கொலைக்கான முடிவு.

கவிதா ஒருமுறை என்னிடம் சொன்னது போல் "முத்தத்தை வேறும் முத்தமாக மட்டும் பார்ப்பவர்களின் வாழ்க்கை அந்தளவு Complicated'ஆக இல்லை" தான்.

Thursday, May 12, 2022

.

வாழ்க்கையில் கவலையே இல்லாதவன் ஒரு காதல் கவிதை எழுதுகிறான்.

வாழ்க்கையில் கவலையே இல்லாதவன் அந்த காதல் கவிதையை படித்து, ஒரு காதலியை தேடுகிறான். ஒரு கட்டத்தில் ஏமாற்றத்தால் கதறி அழுகிறான்.

பல நாட்களுக்கு பின், முன்னவனும் பின்னவனும் ஒரு மதுபான வீடுதியில் சந்திக்க நேர்ந்தது.  நம்மை போலவே அவர்களுக்கும் யார் முன்னவன், யார் பின்னவன் என்ற குழப்பம் ஏற்பட, ஒரு நிம்மதியுடன் இருவருமாக, ரயிலே வராத தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து உறங்கினர்.

Tuesday, February 8, 2022

.

திருமணமான ஒருவன் தனது 35வது வயதில் முதல் முறையாக காதல் கவிதை எழுதிய போது, இந்த சமூகம் அவன் மீது முதல் சந்தேக பார்வையை வைத்தது.

முதலில் அவனுக்கு ஒரு காதலி இருப்பதாக சொல்லப்பட்டது. பின்னர் அவளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக கோர்க்கப்பட்டது. அவன் தனது பத்தாவது காதல் கவிதை எழுதிய போது, அவள் அவனுடைய பழைய கல்லூரி காதலி என்றும், அவள் கணவன் இரண்டு வருடங்களுக்கு முன்னர் விபத்தில் இறந்து விட்டதாகவும் ஒரு உபக்கதை சேர்க்கப்பட்டது.

யாரோ ஒருவன் எழுதும் கவிதையால் யாரோ ஒருத்தியின் தனிப்பட்ட வாழ்க்கை விவாதத்துக்கு உட்படுவதை எண்ணி, இந்த சமூகத்தை சபித்துக்கொண்டே டாஸ்மாக் பாரில் அன்றைய காதல் கவிதையை எழுதி முடித்தான். பின்னர், "வீட்டுக்கு வரும் போது அண்ணாச்சி கடையில் ஒரு பாக்கெட் தோசை மாவு வாங்கி வர வேண்டும்" என்று மனைவி சொன்னதை மீண்டும் ஒருமுறை நினைவில் நிறுத்திக்கொண்டான்.

Sunday, September 29, 2013

மீண்டும் சினிமாவைப் பற்றி ஒரு பதிவு

இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பனிடம் டெலிபோனில் பேச நேர்ந்தது. இயக்குநர் ராமின் தீவிர பக்தன் அவன். கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஆனந்த விகடன் "தங்க மீன்கள்" திரைப்படத்திற்கு மார்க் குறைவாக போட்ட போது, இரவு இரண்டு மணிக்கு போன் செயது ஒரு மணி நேரம் அழுது தீர்த்தவன். நல்லவேளையாக ஒரு மணிநேரத்தில் போன் லைன் தானாகவே கட்டாகி விட்டது. போனில் பேட்டரி தீர்ந்துவிட்டதா அல்லது போதை தீர்ந்துவிட்டதா என்று தெரியவில்லை. இயேசுவின் பெயருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு நானும் தூங்கிவிட்டேன். அடுத்த நாள் காலையில் எழுந்தவுடனேயே மனைவியிடம் வந்த முதல் கேள்வி " நைட் இரண்டு மணிக்கு போனில் பேசுகிறளவுக்கு, அப்படி என்ன முக்கிய விசயம்??"

மீண்டும் அதே  நண்பனிடமிருந்து போன் வந்தவுடனேயே, ஒரு விசயத்தை மட்டும் மனதில் உறுதியாக நிலை நிறுத்திக்கொண்டேன், "இந்த முறை சினிமாவைப் பற்றி மட்டும் ஒன்றுமே பேசிவிட கூடாது".

ஆனால், இந்த பாழாய் போன நாக்கு எங்கே நாம் சொன்ன பேச்சை கேட்கிறது. வழக்கம் போல் சனியன், நாக்கில் வந்து ஸ்டூல் போட்டு உட்கார்ந்துக்கொண்டு என்னைப்பார்த்து கேலியாக சிரித்தது. என்னையும் அறியாமல் என் நாக்கிலிருந்து ஒருகேள்வி எழுந்தது,

"மச்சி, மூடர்கூடம் சூப்பரா இருக்காமே. பார்த்தியா?? நம்ப ஊருல இரண்டே நாளில் தூக்கிவிட்டான். என்னால் பார்க்க முடியாம போச்சு" என்றேன்.




இந்த கேள்விக்காக காத்திருந்தவன் போல், கடகடவென்று பேச தொடங்கிவிட்டான்.

"மூடர்கூடம் ஒரு ஆங்கில திரைப்படத்தின் காப்பி. அதற்கு ஆனந்த விகடனின் 50 மார்க் போட்டு உள்ளார்கள். ஆனால் தங்கமீன்கள் திரைப்படத்திற்கு 44 மார்க் தான். காப்பியடித்த திரைப்படத்திற்கு அதிக மார்க், ஆனால் ஒரிஜினலாக எடுத்தால் மரியாதை இல்ல"

இப்படி அரை மணிநேரம் புழம்பினான். அவனை ஒருவழியாக சமாதானம் செய்து போனை கட் செய்தேன்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால், இப்படி இயக்குனர் ராமின் மீது பைத்தியமாக இருக்கும் நண்பர்கள் பலரை எனக்கு தெரியும் (என்னையும் சேர்த்து). எங்கள் நண்பர் வட்டத்தில் இயக்குனர் ராமை எப்பொழுதுமே "எங்கள் இயக்குநர்" என்றுதான் அழைப்போம்.  எங்கள் அனைவருக்குமே "கற்றது தமிழ்" திரைப்படம் மீதும் இயக்குநர் ராமின் மீதும், ஏன்? அப்படி ஒரு பைத்தியம் என்று யோசித்து பார்த்த போது, எனக்கு தோன்றியது

"கற்றது தமிழ்" திரைப்படம் வந்தசமயம், நாங்கள் கல்லூரி முடித்து வேலைக்காக தீவிரமாக அழைந்துக்கொண்டு இருந்தோம். தொடர்ந்து எல்லா கம்பெனிகளில் இருந்தும் நிராகரிக்கப்பட்டு கொண்டு இருந்தோம். கல்லூரி காதல்கள் ஒவ்வொன்றாக 'குட் பை' சொல்லி பிரிந்துக்கொண்டு இருந்தது. இன்னும் எத்தனை நாட்களுக்கு அப்பாவிடமிருந்து பணம் கேட்பது என்று பயம். "கற்றது தமிழ்" திரைப்படத்தின் பிரபாகரன் கதாபாத்திரத்தை எங்களின் ஒருவனாக பார்த்தோம். அவன் தோல்வியை பார்த்து நாங்களும் அழுந்தோம். அவனைப் போலவே மரணம் ஒன்றுதான் சரியானது என்று நாங்களும் நம்ப தொடங்கினோம். (என் நண்பன் ஒருவன் பூட்டிய அறைக்குள் மர்மமான முறையில் தற்கொலை செய்துக்கொண்டதும் இதே காலத்தில்தான் நடந்தது).

படித்து பட்டம் முடித்துவிட்டு வேலைக்காக சென்னை வீதிகளில் அழைந்துக்கொண்டு இருக்கும் இன்றைய இஞைர்கள் கூட "கற்றது தமிழ்" திரைப்படத்தைப் பார்த்தால், பிரபாகரனை தங்களின் ஒருவனாக உணர்வார்கள். அதுவே எங்கள் இயக்குநரின் வெற்றி.

"தங்க மீன்கள்" திரைப்படமும் அப்படிப்பட்ட திரைப்படம் தான். குழ்ந்தைகளை பெற்ற எல்லா அப்பாக்களும் தங்களையும் எதாவது ஒரு சந்தர்பத்தில் கண்டிப்பாக கல்யாணியாக உணர்வார்கள். "தங்க மீன்கள்" திரைப்படத்தைப் பற்றி பலர் தெளிவாக எழுதிவிட்டதால் இந்த பதிவை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

குறிப்பு:
********
"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" திரைப்படத்தைப் பற்றி எழுதுவதற்காகதான் இந்த பதிவினை எழுத தொடங்கினேன். ஆனால் எழுதி ரொம்ப நாட்களாகி விட்டதால், சொல்ல வந்த விசயத்தையே மறந்து எங்கோ சென்று விட்டேன்.

"ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம், இன்னும் மூடர்கூடம் திரைப்படம் பார்க்கவில்லை, ஆனால் எனக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.