வார்த்தைகளோடு அலைபவன்
7.விசித்திரமான உடையணிந்த இளம் பெண்
வார்த்தைகளோடு அலைபவன் அந்த ஊரை விட்டு சென்ற இருபத்தெட்டு ஆண்டுகள் கழித்து, அந்த ஊருக்கு விசித்திரமான உடையணிந்த இளம் பெண்ணொருத்தி வந்தாள்.
தற்போது இளைப்பாறும் கூடமாகவும், மாலை நேரங்களில் கதைகளைப் பற்றி மக்கள் பேசும் இடமாகவும் மாறியிருந்த, வார்த்தைகளோடு அலைபவன் கதை சொன்ன அந்த இடுகாட்டுக்கு அருகிலுள்ள இளைப்பாறும் கூடத்திற்குச் சென்றாள்.
தனவந்தனின் மூத்த மகன் அந்த இடத்தில் மிகவும் விசாலமான இளைப்பாறும் கூடத்தைத் தனது சொந்தச் செலவில் கட்டியிருந்தான். அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள் அனைவரும் அந்தக் கூடாரத்தில் ஒரு நாள் இரவு தங்கிவிட்டு, வார்த்தைகளோடு அலைபவன் சொன்னதாகச் சொல்லப்படும் கதைகளைக் கேட்டுவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அங்கு வரும் அனைவருக்கும் இரவு உணவு தனவந்தனின் குடும்பத்திலிருந்து இலவசமாக வழங்கப்பட்டது.
பலர் உணவுக்காக வந்தார்கள். பலர் கதைகளுக்காக வந்தார்கள்.
இன்னும் சிலர், அந்த இடத்தில் ஒரு இரவு தூங்கினால் விசித்திரமான கனவுகள் வரும் என்று நம்பி வந்தார்கள். அப்படி வந்தவர்கள் மறுநாள் காலை எழுந்ததும் தாங்கள் கண்ட கனவுகளை மற்றவர்களிடம் சொல்லுவார்கள். சில நேரங்களில் அந்தக் கனவுகள், வார்த்தைகளோடு அலைபவன் சொன்ன கதைகளோடு ஒத்துப் போகும். சில நேரங்களில் முற்றிலும் வேறுபட்டிருக்கும். ஆனால் அந்தக் கனவுகளும் பின்னர் கதைகளாக மாறிவிடும். அதனால் அந்த ஊரில், எது கதை, எது கனவு, எது நினைவு என்பதைப் பிரித்தறிவது நாளாக நாளாக கடினமாகிக் கொண்டே போனது.
விசித்திரமான உடையணிந்த அந்த இளம் பெண் அங்கு யாரையோ தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு முதியவர், அவளிடம் விசாரிக்கத் தொடங்கினார்.
அவள், தான் வார்த்தைகளோடு அலைபவனின் கால்தடங்களைப் பின்தொடர்ந்து இங்கு வந்திருப்பதாகச் சொன்னாள். மேலும், அவனை நீண்ட நாட்களாகப் பின்தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், அதை அவனும் அறிந்தே இருந்தான் என்றும் கூறினாள்.
அவள் அப்படிச் சொன்னவுடனேயே கூட்டத்தில் சிறிய சலசலப்பு எழுந்தது.
"இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் இங்கு வந்த மனிதனின் கால்தடங்களை இன்னும் பார்க்க முடியுமா?"
என்று ஒருவரிடம் ஒருவர் கேட்டுக்கொண்டார்கள்.
ஆனால் அந்தப் பெண் யாருடைய பேச்சையும் கேட்காதவள் போல அமைதியாக நின்றிருந்தாள். அவளுடைய கையில் இருந்த புத்தகத்தை மட்டும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தாள்.
மேலும் அவள் பின்வருமாறு கூறினாள்:
"கடைசியாக வார்த்தைகளோடு அலைபவன் இந்த ஊருக்கு வரும் முன், கழுத்திலிருந்த ஒரு பொருளை ஆற்றில் தூக்கி எறிந்தான். அதன் பிறகு மிகவும் மகிழ்ச்சியாகச் சிரித்தான். பல வருடங்களாக அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் நான், இதுவரை அவன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததைப் பார்த்ததில்லை. அவன் அப்படி எந்தப் பொருளைத் தூக்கி எறிந்தான் என்று பார்க்கும் ஆவலில் நான் ஆற்றில் இறங்கி தேடினேன். அப்போது ஒரு நீர்ச் சுழலில் சிக்கி, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டேன். இதை அனைத்தையும் வார்த்தைகளோடு அலைபவன் பார்த்துக்கொண்டேதான் இருந்தான். ஆனால், அவன் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. பின்னர் ஒரு மரக்கிளையைப் பிடித்து கரை சேர்ந்தேன். அதன் பிறகு, இதோ இங்கு உள்ள அவன் கால்தடங்களைப் பின்தொடர்ந்து இங்கு வந்து சேர்ந்தேன்."
அவள் கை நீட்டிக் காட்டிய இடத்தை அந்த முதியவர் பார்த்தார். ஆனால் அங்கு எந்தக் கால்தடங்களும் இல்லை. மாறாக, அவளுடைய கால்தடங்கள் மட்டுமே ஈரமாக அவள் வந்த வழியெங்கும் இருந்தன.
அதற்குள் அவளையும் அந்த முதியவரையும் சுற்றி ஒரு கூட்டம் கூடியிருந்தது. அந்த இளைப்பாறும் கூடத்தில் இருந்தவர்களுக்கும் அவள் வந்த முதல் நொடியிலிருந்தே ஒரு ஆர்வம் தோன்றியிருந்தது. அந்த ஊருக்கு தினமும் புதியவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். சிலர் வணிகர்கள். சிலர் யாத்திரிகர்கள். சிலர் வார்த்தைகளோடு அலைபவனைப் பற்றிய கதைகளைக் கேட்கவே வருபவர்கள். ஆனால் வார்த்தைகளோடு அலைபவனின் கால்தடங்களைப் பின்தொடர்ந்து வந்ததாகச் சொன்னவள் இவள் ஒருத்திதான்.
கூட்டத்தில் இருந்த ஒருவன், அவள் கையில் வைத்திருந்தது என்ன என்று கேட்டான்.
"இது ஒரு கதைப் புத்தகம். புத்தகத்தின் பெயர் 'சொல் என்றொரு சொல்'. இந்தப் புத்தகத்தின் மூலமாகத்தான் நானும் வார்த்தைகளோடு அலைபவனும் முதல் முறையாகச் சந்தித்துக்கொண்டதாக அவனே என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறான்."
என்றாள்.
அந்த முதியவர் கொஞ்சம் வியப்புடன்,
"கதைகளை எப்படி புத்தகமாக எழுத முடியும்? கதைகள் ஒவ்வொரு முறையும் சொல்பவருக்கும் கேட்பவருக்கும் தகுந்தபடி மாறும் அல்லவா? இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னால் வார்த்தைகளோடு அலைபவன் இங்கு சொன்ன ஒரு கதை, இப்போது பல ஆயிரம் கதைகளாக மாறி தினமும் ஒருவரால் இங்கு சொல்லப்பட்டு வருகிறதல்லவா? அப்படியிருக்க, கதைகளை எப்படி எழுத்துகளால் ஒரு புத்தகத்திற்குள் அடைத்து வைக்க முடியும்?"
என்றார்.
அவள் அமைதியாக இருந்தாள். மாலை காற்று மெதுவாக வீசியது. இளைப்பாறும் கூடத்தின் வெளியே இருந்த பழைய ஆலமரத்திலிருந்து சில உலர்ந்த இலைகள் கீழே விழுந்தன. அவற்றில் ஒன்று அவள் காலடியில் வந்து விழுந்தது. அதை எடுத்துப் பார்த்த அவள், ஏதோ ஒன்றை நினைவுகூர்ந்தவளைப் போல நீண்ட நேரம் அமைதியாக நின்றாள். அப்போது அந்த ஊரில் இருந்த யாருக்கும் தெரியவில்லை.
இருபத்தெட்டு வருடங்களாக அவர்கள் கதைகளாகச் சொல்லிக்கொண்டிருந்த மனிதனைப் பற்றி, அவர்களைவிட அதிகமாக அறிந்த ஒரே நபர், அந்த மாலை அவர்களுக்கிடையே நின்றுகொண்டிருந்தாள்.
