“என்ன இரண்டு மூன்று நாளா முகத்தில் ஒரு பிரகாசம் தெரிகிறது…” என்றாள் மனைவி.
“அப்பப்போ ஏதோ யோசிக்கிறீங்க… அப்புறம் போனை எடுத்து ஏதோ டைப் செய்கிறீங்க. என்ன பண்றீங்க?”
நான் உடனே போனை லாக் பண்ணிவிட்டேன். அது ஒரு இயல்பான ரியாக்ஷன். கல்யாணமான ஆண்கள் எல்லாருக்கும் அந்த ரியாக்ஷன் இருக்கும் என்று நினைக்கிறேன். செல்போனில் எதுவும் இல்லையென்றாலும், மனைவி திடீரென்று கேட்டால் ஸ்கிரீன்'ஐ ஆஃப் பண்ணிவிடுவோம்.
அவளிடம் மீண்டும் நான் வலைப்பதிவில் எழுதுவதைப் பற்றி சொன்னால், “என்ன வெட்டி வேலை?” என்பாள். அவளைப் பொறுத்தவரை நான் செய்வது எல்லாமே வெட்டி வேலைதான்.
ஆனால் அவள் ஒரு drawer'ல இருந்த பொருட்களை இன்னொரு drawer'க்கு மாற்றி இரண்டு மணி நேரம் arrange பண்ணினால் அது “வீட்டு வேலை”.
அவள் வீட்டில் இருக்கும் போதெல்லாம் ஏதாவது வேலை செய்துக்கொண்டே இருப்பாள். வெளியில் இப்படி இருப்பதில்லை. ஆனால் வீட்டுக்கு வந்து விட்டால் இப்படித்தான்.
எதையாவது துடைப்பது, இடத்தை ஒழுங்குபடுத்துவது என்று எதையாவது செய்து கொண்டிருப்பாள். இதெல்லாம் வெட்டி வேலை இல்லையா என்று கேட்டால், என்னைப் பார்த்து முறைத்துப் பார்ப்பாள்.
அதேபோல் எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக யோசித்து செய்வாள். நிதானமாக யோசித்து செய்வதிலும், யோசித்து நிதானமாக செய்வதிலும் வித்தியாசம் உள்ளது. இவள் முதல் category.
நான் எதற்காவது சண்டை போட்டால் கூட, திரும்ப சண்டை போட மாட்டாள். “சே… இதுக்குப் போய் சண்டை போட்டோமே” என்று நம்மை வருத்தப்பட வைத்து விடுவாள்.
மேலும் அவளைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், கல்யாணமான புதிதில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம்.
சென்னைக்கு வந்த முதல் நாள், தோசை மாவை நான் கடையில் வாங்கிக்கொண்டு வந்தேன்.
அவள் kitchen'க்குள் போன விதத்தை பார்த்தால், MasterChef Tamil audition'க்கு போகிற மாதிரி இருந்தது. கழுத்தில் ஒரு வெள்ளை துணி, தலையில் ஒரு பாலிதீன் தொப்பி.
அடுப்பை பற்றவைத்து தோசைக்கல்லை வைத்தாள்.
பத்து நிமிடம் ஆனது.இருபது நிமிடம் ஆனது. அரை மணி நேரமாகியும் தோசைக்கல் சூடாகவே இல்லை.
“அடுப்பு சரியில்ல போல…” என்றாள் கவலையாக. நான் kitchen'க்குள் போய் பார்த்தேன். அடுப்பு நன்றாக எரிகிறது. ஆனால் மேலே ஏதோ வித்தியாசமாக இருந்தது. அப்போதுதான் பார்த்தேன்.
ஒரு தோசைக்கல் மீது இன்னொரு தோசைக்கல்.மொத்தம் இரண்டு தோசைக்கல்.
ஒரு நொடி எனக்கு என்ன react பண்ணுவது என்று தெரியவில்லை. சிரிக்கலாமா? அழலாமா? அல்லது கல்யாண ஆல்பத்தை எடுத்து மீண்டும் பார்க்க ஆரம்பிக்கலாமா?
“என்ன இது?” என்று கேட்டேன்.அவள் மிகவும் சாதாரணமாக,
“இப்படித்தான் எங்க அம்மா வைத்து கொடுத்தாங்க…” என்றாள்.
அந்த confidence'ஐ பார்த்ததும் எனக்கே கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. உலகத்திலேயே இரண்டு தோசைக்கல் வைத்து தோசை ஊற்றும் ancient tradition அவர்களுடைய குடும்பத்தில் இருக்குதோ என்று.
இதைவிட highlight என்னவென்றால்,
“எங்க வீட்டில் இப்படித்தான் செய்வோம். வேணும்னா எங்க அம்மாவிடம் கேளுங்க,” என்றாள்.
அப்படிப்பட்டவள் இப்போது YouTube பார்த்து என்ன என்னமோ சமைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறாள். இப்பொழுது கூட பையன் கேட்டான் என்பதற்காக ரேஷ்மி கபாப் செய்துக்கொண்டு இருக்கிறாள். நேற்று பொண்ணுக்காக ரசகுல்லா.
சில நேரங்களில் kitchen'ல அவள் சமையல் செய்வதை பார்க்கும்போது, இதே பெண்தானா இரண்டு தோசைக்கல் வைத்து தோசை ஊற்ற முயற்சி செய்தாள் என்று தோன்றும்.
திருமணத்திற்கு பிறகு பெண்கள் எல்லாவற்றையும் அவ்வளவு வேகமாக கற்றுக்கொள்கிறார்கள். நாம் தான் ஆறிப்போன காபிக்கும், கருகிப்போன தோசைக்கும் இன்னும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
