Thursday, August 20, 2026

மரவட்டை

முன்குறிப்பு:


எல்லோருக்கும் வரும் ஆசைதான்.

நண்பன் ஒருவன், "குறும்படம் ஒன்றை எடுப்போம்" என்று சொல்ல, சும்மா திரைக்கதையாக ஒரு கதையை எழுதி பார்ப்போமே என்று ஆரம்பித்தது.

ரமேஷ் பிரேம் "மகாமுனி" தொகுப்பில் வரும் ஒரு பக்கக் கதை இது.

வழக்கம் போல் இதையும் பாதியில் விட்டாச்சு.

கிட்டத்தட்ட பதினைந்து வருடத்திற்கு முன்னால் எழுதியது.

ஆனால் நண்பன் இன்னும் எப்படியாவது ஒரு குறும்படத்தையாவது எடுத்துவிட வேண்டும் என்று வெறிகொண்டு அலைகிறான்.

நான் அவன் வரும் பக்கம் அறிந்துகொண்டு இரண்டு கிலோமீட்டர் சுற்றிச் செல்கிறேன்.


(சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ஒரு மரத்தின் நிழலில் ஒரு சிறுவன் உட்கார்ந்து இருக்கிறான்.) (காட்சி நடக்கும் வருடம் 1995 வருடம் போல் தோன்ற வேண்டும். ஆனால் வருடத்தை காட்ட தேவையில்லை).

முருகேஷ் (கேமராவைப் பார்த்து):

வணக்கம்.

என் பெயர் முருகேசன்.

அப்பா என்னை முருகேஷ்னுதான் கூப்பிடுவார்.

அதோ அங்கு இடிச்சு கிடக்குதுல ஒரு கொட்டகை. அங்கதான் அப்பா கடை வைத்திருந்தார்.

பஞ்சர் கடை.

இந்தக் கடற்கரைச் சாலையில் எங்க கடையை விட்டா, அடுத்த கடைக்கு பத்து கிலோமீட்டர் வரை போகணும்.

எங்க அப்பா பஞ்சர் பார்க்காத காரே இல்லை.

சோப்பு டப்பா சைஸ் கார், கப்பல் சைஸ் கார், பத்து வீல் இருக்கும் கார் என்று எத்தனையோ கார்களுக்கு அவர்தான் பஞ்சர் பார்ப்பார்.

சில நேரங்களில் வண்டி பஞ்சராகி ரொம்ப தூரத்தில் நிக்குதுனு சொல்லி, அவரை அழைத்துப் போக ஆள் வரும்.

ஒருதடவை அப்படித்தான்.

நல்ல மழை.

காரில் இரண்டு பேர் வந்தாங்க.

இன்னொரு கார் பஞ்சர் ஆயிடுச்சுனு சொல்லி, எங்களை அவங்க காரில் அழைச்சுட்டுப் போனாங்க.

காருக்குள் நுழைந்தவுடனே ஏதோ சென்ட் வாசனை கும்முனு மூக்கில் ஏறுச்சு.

காருக்குள்ளேயே டி.வி., ப்ரிட்ஜ் எல்லாம் இருந்துச்சு.

அன்னைக்கு நைட் அப்பா அந்தக் காரை வைத்து நிறைய கதை சொன்னார்.

நான், அம்மா, தம்பி, அப்பா எல்லோரும் காரில் சென்னைக்கு போறோம்.

அப்புறம் கடற்கரையில் எங்க கார் கப்பல் மாதிரி மிதக்குது.

அப்பா சொன்ன கதை எனக்கு சரியா ஞாபகம் இல்லை.

எங்க அப்பா இதுமாதிரி நிறைய கதை சொல்வார்.

எல்லாம் நிஜம் மாதிரியே இருக்கும்.

அம்மா சொல்லும்:

"இப்படியே கதை சொல்லித்தான் என் அப்பனையும் ஏமாத்திட்டாருனு."

அம்மாவுக்கு அப்பா சொல்ற கதைகளெல்லாம் ரொம்ப பிடிக்கும்.

ஆனா அதை பிடிச்ச மாதிரி காட்டிக்க மாட்டாங்க.

நைட்ல சாப்பிடும்போது நைசா அம்மா கேட்பாங்க:

"ஏன்டா முருகா, நேற்று உங்க அப்பா சின்ன வயசுல தனியா சுடுகாட்டுக்குப் போய் மாட்டிக்கிட்டேனு ஒரு கதை சொன்னாரே... அப்புறம் என்னாச்சு?"

எங்க அப்பா, அம்மா சொன்னது எதுவுமே கேட்காத மாதிரி, என் கிட்ட கதை சொல்ல ஆரம்பிப்பார்.

**********************************************************************

காட்சி 2: (அதே இடம். ஆனால் ஒரு இரண்டு மூன்று வருடம் பின்னோக்கி போகிறோம். மீண்டும் எங்கேயும் வருடத்தை காட்ட தேவையில்லை. இப்பொழுது அங்கு இடிந்த போன கொட்டகையில் ஒரு பஞ்சர் கடை உள்ளது. அந்த கடையில் அப்பாவும் முருகேஷும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கிழக்கு கடற்கரை சாலை கொஞ்சம் சிறியதாக உள்ளது.  )



(பஞ்சர் கடையில் முருகேஷும் அப்பாவும் பேசிக்கொள்வது போல்)

அப்பா:
"டேய் முருகேஷ், என்னடா காலையிலிருந்து ஒரு கிராக்கியும் காணோம்."

இப்படி சொன்னாலே அப்பா ஏதோ கதை சொல்லப் போகிறார் என்று அர்த்தம் என்பதை முருகா நன்றாகவே உணர்ந்திருந்தான்.

வழுவழு என்று இருந்த கடற்கரைச் சாலையில் வண்டிகள் பறந்துகொண்டு இருந்தன.

முன்னால் கிடந்த ஒரு பழைய டயர் அருகில் ஒரு மரவட்டை, ரயில் வண்டியைப் போல் ஊர்ந்துகொண்டு இருந்தது.

அப்பா:
"முருகேஷா, நம்ம ஊருல மரவட்டைகள் அதிகமாக இருக்கும் காரணம் தெரியுமா?

முன்னாடி இங்க மக்கள் யாருமே இருக்க மாட்டாங்களாம்.

மீன் பிடிக்கிறவங்களெல்லாம் படகை இந்தப் பக்கம் கொண்டு வரவே மாட்டாங்களாம்.

நம்ம கும்மினி ஊருலயே நிறுத்திடுவாங்களாம்.

ஏன்னு தெரியுமா?

அந்தக் காலத்தில் நம்ம ஊரை மரவட்டைகள்தான் ஆட்சி செய்ததாம்.

இந்தப் பக்கம் எந்த மனிதனும் வர இந்த மரவட்டைகள் அனுமதிக்காதாம்.

ஊரைச் சுற்றி புதைகுழிகள் நிறைய உண்டுபண்ணி வைத்திருந்துச்சுங்க இந்த மரவட்டைகள்.

இந்த ஊருக்குள் யாரு நுழைந்தாலும், ஏதாவது ஒரு புதைகுழியில் விழுந்து செத்துப் போயிடுவாங்களாம்.

அதனாலயே மக்கள் யாரும் இந்தப் பக்கம் வரமாட்டாங்களாம்.

மரவட்டைகளும் சந்தோஷமா இருந்துச்சுங்க.

இங்க ஒரு ராஜா மரவட்டைதான் ஆட்சி செய்துச்சாம்.

நம்ம ரங்காயி கடை பக்கத்தில் ஒரு பழைய மண்டபம் இருக்குல்ல?

அதுதான் ராஜா மரவட்டையின் அரண்மனை.

நம்ம ராஜா மரவட்டைக்கு இரண்டு ராணிகள்.

ராஜா மரவட்டை ஆட்சியில் எல்லா மரவட்டைகளும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சுங்க."

முருகா அப்பாவிடம் ஒரு கேள்வியை எழுப்பினான்.

முருகா:
"எப்படிப்பா, இதுதான் ராஜா மரவட்டைன்னு கண்டுபிடிக்கிறது?

எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கும்?"

அப்பா:
"முருகேஷு, அதெல்லாம் மரவட்டைகளுக்குத் தெரியும்டா.

நமக்குத்தான் எல்லா மரவட்டையும் ஒண்ணா தெரியும்.

அதுங்களுக்கு இது ராஜா, இது மந்திரி, இது தளபதின்னு தெரியும்."

முருகா:
"மரவட்டைகளுக்கு மந்திரி, தளபதியெல்லாம் இருக்காப்பா?"

அப்பா:
"ஆமாம்டா, எல்லாம் இருக்கு."

(கதையை நம்பாதவனாக முருகேஷின் முகம் மாறுகிறது. அவன் இந்தக் கதையை நம்புவதற்கு இப்போது அப்பா ஏதாவது சொல்லியாக வேண்டும்.)

அப்பா:
"டேய் முருகேஷ்...

மரவட்டைகள் முதுகில் இருக்கும் கோடுகளை வைத்து, அது ராஜாவா, ராணியா, மந்திரியா, தளபதியான்னு சொல்லிடலாம்.

சிகப்பு கலரில் கோடு இருந்தா அது சாதாரண மரவட்டை.

மஞ்சள் கலரில் இருந்தா அது ராணி மரவட்டை.

பச்சை கலரில் இருந்தா அது ராஜா மரவட்டை."

முருகா:
"அப்ப மந்திரி, தளபதியெல்லாம்?"

அப்பா:
"ஆமாம்டா, அதுகளுக்கும் கலர் இருக்கு.

அது என்னன்னா...

ம்..."

(கொஞ்சம் யோசித்த பின்)

"தளபதின்னா நீலம்.

மந்திரின்னா கருப்பு கோடு."

(டயர் அருகில் சுற்றிக்கொண்டு இருந்த மரவட்டை இப்போது சாலைக்கு அருகில் சென்று இருந்தது.)

ஒடிப்போய் அந்த மரவட்டையின் முதுகை முருகேஷ் பார்க்கிறான்.

முருகா:
"அப்பா!

முதுகு சிகப்பு கலருப்பா!

இது சாதாரண மரவட்டை."

(இப்போது மரவட்டை அந்தச் சாலையைக் கடப்பது போல் கருப்பான சாலையின் மேல் ஏறுகிறது.)

மீண்டும் அப்பா அருகில் முருகேஷ் வருகிறான்.

முருகா:
"அப்பா...

சாதாரண மரவட்டை ராஜா மரவட்டையாக மாற முடியாதா?"

(இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல அப்பா வாய் திறக்கும் முன்பே, அந்த மரவட்டை ஒரு டூ-வீலரின் சக்கரத்தில் அடிபட்டு நசுங்கிப் போகிறது.)

*******************************************************************

காட்சி 3


(காட்சி ஒன்று நடைப்பெற்ற இடம். இப்பொழுது கிழக்கு கடற்கரை சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து இரண்டு வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.கடற்கரைச் சாலையில் இருக்கும் ஒரு மரத்தின் நிழலில் முருகேஷ் உட்கார்ந்து இருக்கிறான். இன்னொரு சிறுவன் பள்ளிக்குச் செல்கிறான்.)

பள்ளிச் சிறுவன்:
"டேய் முருகா, இன்னைக்கும் ஸ்கூலுக்கு வரலையா?

என்னடா, எப்ப பார்த்தாலும் இங்கேயே உட்கார்ந்து இருக்க?"

(முருகன் சாலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.)

பள்ளிச் சிறுவன்:
"இரு... வாத்தியார் கிட்ட சொல்றேன்."


(காட்சி மாறுகிறது. காட்சி 2 நடைபெற்ற காலம். பஞ்சர் கடையில்,  முருகேஷ், அப்பா மற்றும் அப்பாவின் நண்பர்.)

அப்பா:
"இப்ப யாரு இந்த ரோட்டை விரிவுபடுத்தச் சொல்லி கெஞ்சியது?

ஏற்கனவே வண்டிகளெல்லாம் ஜெட் வேகத்தில் போய்க்கிட்டு இருக்கான்.

இதுல இதை நான்கு வழிப் பாதையா மாற்றப் போறாங்களாம்.

நம்ம கடைகளெல்லாம் அடிபடும்னு பேசிக்கிறாங்க."

நண்பர்:
"ம்...

அதெல்லாம் கவலைப்படாதீங்க அண்ணே.

ரோட்டை விரிவுபடுத்தினா கூட நமக்கு ஒரு வழி கிடைக்காமலா போயிடும்?

ரோடு பெரிசா இருந்தா நமக்குத்தானே நல்லது."

அப்பா:
"நீ வேற...

இப்பவே இந்த ரோட்டை கடக்க முடியல.

எந்த வண்டிக்காரன் எப்ப வந்து இடிப்பானோன்னு பயமா இருக்கு.

நாமலாவது பரவாயில்லை...

பாவம் இந்த மரவட்டைகள்.

அப்படி எங்குதான் போக ஆசைப்படுங்கலோ!"

***********************************************************************


(அதே கடற்கரைச் சாலை. காலையில் பள்ளி செல்லும் நேரம்.)

முருகேஷ் அதே மரத்தடியில் உட்கார்ந்து இருக்கிறான்.

அவன் அருகில் ஒரு பழைய டயர் துண்டு.

சாலையில் வண்டிகள் பறந்துகொண்டு இருக்கின்றன.

ஒரு மரவட்டை சாலையை நோக்கி ஊர்ந்து செல்கிறது.

முருகேஷ் வேகமாக எழுந்து, அதை எடுத்து சாலையிலிருந்து தூரமாக மணலில் விடுகிறான்.

அது மீண்டும் சாலையை நோக்கி திரும்புகிறது.


(அதே நேரம். பள்ளிக்கூடச் சீருடையில் இரண்டு சிறுவர்கள் நடந்து செல்கிறார்கள்.)

சிறுவன் 1:
"டேய் முருகா, இன்னைக்கும் ஸ்கூலுக்கு வரலையா?"

முருகேஷ் பதில் சொல்லவில்லை.

சிறுவன் 2:
"விடுடா... அவன் இனிமே ஸ்கூலுக்கு வரமாட்டானாம்."

இருவரும் நடந்துகொண்டே போய்விடுகிறார்கள்.

முருகேஷ் சாலையையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்.


(சாலையின் மறுபக்கம்.)

ஒரு JCB இயந்திரம்.

சில ஆட்கள்.

உடைந்த சிமெண்டு தூண்கள்.

சிதறிக்கிடக்கும் ஓடுகள்.

முருகேஷ் மெதுவாக எழுந்து அங்கே செல்கிறான்.

மண்ணில் பாதியாக புதைந்திருக்கும் ஒரு பழைய பலகை.

அதில் தெரியும் சில எழுத்துகள் மட்டும்:

"...ஞ்சர் கடை"

அதை எடுத்து துடைக்கிறான்.

கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.

மீண்டும் கீழே வைக்கிறான்.


(மாலை.)

முருகேஷின் அம்மா சாலையில் நடந்து வருகிறாள்.

அம்மா:
"முருகா..."

முருகேஷ் திரும்பவில்லை.

அம்மா:
"வீட்டுக்கு வாடா."

முருகேஷ் அமைதியாக இருக்கிறான்.

அம்மா:
"என்னடா தினமும் இங்கயே வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்க?"

முருகேஷ் சாலையைப் பார்த்தபடியே கேட்கிறான்.

முருகேஷ்:
"அம்மா..."

அம்மா:
"என்னடா?"

முருகேஷ்:
"அப்பா சொன்னாருல..."

அம்மா:
"ம்..."

முருகேஷ்:
"ராஜா மரவட்டை... ராணி மரவட்டை..."

அம்மா:
"ம்..."

முருகேஷ்:
"அந்த ராஜா மரவட்டை இப்ப எங்க இருக்கும்?"

அம்மா பதில் சொல்லவில்லை.

முருகேஷ் கொஞ்ச நேரம் யோசிக்கிறான்.

பிறகு மெதுவாகக் கேட்கிறான்.

முருகேஷ்:
"அது கூட ரோட்டைக் கடக்கும்போது அடிபட்டிருக்கும் இல்லம்மா?"

அம்மா திடீரென்று முகத்தைத் திருப்பிக்கொள்கிறாள்.

கண்களில் நீர்.

தொலைவில் ஒரு லாரி வேகமாகக் கடந்து செல்கிறது.


(இரவு.)

சாலை வெறிச்சோடி இருக்கிறது.

தொலைவில் லாரி விளக்குகள்.

முருகேஷ் தனியாக நடந்து வருகிறான்.

சாலையின் ஓரத்தில் ஒரு மரவட்டை.

அதை எடுத்து கையில் வைத்துக்கொள்கிறான்.

மரவட்டையின் முதுகைப் பார்க்கிறான்.

பச்சை நிறக் கோடு.

முருகேஷின் முகத்தில் ஒரு சிறிய அதிர்ச்சி.

அவன் சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கிறான்.

மீண்டும் மரவட்டையைப் பார்க்கிறான்.

முருகேஷ் (மெதுவாக):
"ராஜா மரவட்டை..."

அதை மிகவும் கவனமாக இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு சாலையின் மறுபக்கம் நடக்கிறான்.

புதர்களுக்கு அருகில் அதை விடுகிறான்.

மரவட்டை மெதுவாக ஊர்ந்து இருளுக்குள் மறைகிறது.

முருகேஷ் அதையே பார்த்துக்கொண்டு நிற்கிறான்.

கண்கள் கலங்குகின்றன.

தொலைவில் ஒரு லாரி ஹார்ன்.

முருகேஷ் மெதுவாகச் சொல்கிறான்:

"உனக்கும் ரோட்டைக் கடக்கத் தெரியாதாப்பா..."

அவன் சாலையைப் பார்க்கிறான்.

வண்டிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்றன.


 

 

 

 


Tuesday, July 14, 2026

வார்த்தைகளோடு அலைபவன் - Amazon Kindle Book

 

 

"வார்த்தைகளோடு அலைபவன்" என்ற தலைப்பில் நான் எழுதிய பதிவுகள் அனைத்தையும் தொகுத்து, Amazon Kindle eBook-ஆக வெளியிட்டுள்ளேன்.

வாசிக்க விரும்புபவர்களுக்கு:

Amazon Kindle 


Tuesday, June 23, 2026

Ricoh SP 111 Laser Printer

மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று ஒரு பழமொழி உண்டு. அது எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பொருந்தும். சில எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கிய சில நாட்களிலேயே ரிப்பேராகிவிடும். சில பொருட்கள் வாரண்டி முடியும் நாளை காலண்டரில் குறித்துவைத்து, அதற்கு அடுத்த நாள் உயிரை விடும். இன்னும் சில எலக்ட்ரானிக் பொருட்கள், "போதும் போதும்" என்று நாம் சொல்லும் வரைக்கும் உழைத்துக்கொண்டே இருக்கும். அப்படி எனக்கு வாய்த்த ஒரு பொருள்தான் Ricoh SP 111 Laser Printer.

SP 111-க்கும் எனக்கும் முன் ஜென்மத்தில் ஏதோ ஒரு பந்தம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால்தான் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எந்த ரிப்பேரும் இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கிறது.

ஒரு முறை ஒரே நாளில் ஐந்நூறு பேப்பர்கள் கூட பிரிண்ட் அவுட் எடுத்திருக்கிறேன். ஆனால் எந்தப் பிரச்சனையும் செய்ததில்லை.

அலுவலகத்தில் கணினி மாறியது. மேசை மாறியது. UPS மாறியது. பணியாளர்கள் மாறினார்கள். ஆனால் இந்த Ricoh மட்டும் மாறவில்லை. அமைதியாக தனது வேலையைச் செய்துகொண்டே இருந்தது.

இதற்கு நடுவில், தொழில்நுட்ப வளர்ச்சியோடு நாமும் செல்ல வேண்டும் என்று நினைத்து மற்றொரு அலுவலகத்திற்காக HP Wi-Fi Ink Tank Printer ஒன்றை வாங்கினேன். வாங்கிய ஒரே வாரத்தில் Print Head ரிப்பேர்.

பின்னர் சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து, அவர்கள் புதிய Print Head-ஐ மாற்றுவதற்கு ஒரு மாதம் ஆனது.

அதில் நான் கற்றுக்கொண்ட ஒரு பாடம் என்னவென்றால், HP Customer Care-க்கு போன் செய்து உங்கள் புகாரைப் பதிவு செய்ய வேண்டும் என்றால், நீங்கள் கண்டிப்பாக உங்கள் அலுவலகத்திற்கு அரை நாள் விடுமுறை விட வேண்டும்.

அப்போதுதான் எனக்கு Ricoh-வின் அருமை மீண்டும் புரிந்தது. அது எந்த வசதிகளும் இல்லாத ஒரு சாதாரண லேசர் பிரிண்டர். Wi-Fi இல்லை. Mobile App இல்லை. Cloud Printing இல்லை. ஆனால் ஒரு முக்கியமான விஷயம் இருந்தது — நம்பகத்தன்மை.

இன்று தொழில்நுட்ப உலகில் புதிய வசதிகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு சாதனத்தின் உண்மையான மதிப்பு, அது எத்தனை அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதில் இல்லை. அது எவ்வளவு காலம் நம்மை ஏமாற்றாமல் வேலை செய்கிறது என்பதில்தான் இருக்கிறது.

Ricoh பிரிண்டர்கள் தற்போது இந்தியாவில் அதிகம் கிடைப்பதில்லை. அதன் பின்னணியில் ஒரு பெரிய கார்ப்பரேட் கதை உள்ளது.

Ricoh பிரிண்டர்களின் தலைமையகம் ஜப்பானில் உள்ளது. இந்தியாவில் ஒரு கிளை அலுவலகம் மட்டுமே வைத்திருந்தார்கள். தயாரிப்பு அனைத்தும் ஜப்பானில்தான். அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்தியாவில் இருந்த சில நிர்வாகிகள் பல தில்லுமுல்லுகள் செய்து, விற்பனையை குறைத்துக் காட்டியுள்ளனர். Ricoh ஜப்பான் நிறுவனம் ஒரு மறைமுக கணக்கெடுப்பு நடத்தியபோது, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரிண்டர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவை விற்பனையாகாமல் குடோனில் இருப்பதாக கணக்கில் காட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

பின்னர் விசாரணையில், குடோனில் எந்த ஸ்டாக்கும் இல்லை. அனைத்தும் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவை கணக்கில் பதிவு செய்யப்படவில்லை.

இதற்கு நடுவில் ஆடிட்டிங் வரப்போகிறது என்று தெரிந்தவுடன், இந்திய நிர்வாகிகள் உடனடியாக Fake Invoice-கள் மூலம் விற்பனையை அதிகப்படுத்திக் காட்டினர். எல்லாவற்றையும் Fake Invoice மூலம் காட்டினால் சந்தேகம் வரும் என்பதால், Ricoh பிரிண்டர்களின் விலையை  பாதியாக குறைத்து உண்மையான விற்பனையும் செய்தார்கள்.

Ricoh-வின் விற்பனை திடீரென இந்தியாவில் அதிகரித்தது. ஆனால் நூற்றில் தொண்ணூறு விற்பனைகள் Fake Invoice-களாக இருந்தன.

அந்த நேரத்தில்தான் நான் இந்த SP 111 பிரிண்டரை Paytm Mall App-ல் வெறும் ₹1,800-க்கு வாங்கினேன்.

இந்தக் கதையெல்லாம் நமக்கு தேவையில்லாதது. நான் சொல்ல வந்தது வேறு.

சமீபத்தில் எனது கணினி ஒன்றை Ubuntu-வில் இருந்து Linux Mint-க்கு மாற்றினேன். Ubuntu-வில் நன்றாக வேலை செய்த SP 111, Linux Mint-ல் பிரிண்ட் செய்ய மறுத்தது.

Printer-ஐ Plug-in செய்த உடனேயே Linux Mint அதை தானாகவே கண்டுபிடித்து நிறுவியது. ஆனால் பிரிண்ட் மட்டும் வரவில்லை.

/var/log/cups/error_log கோப்பைப் பார்த்தபோது,

"Cups-brf must be called as root"

என்று பிழைச் செய்தி காட்டியது.

sudo போட்டு CUPS-ஐ மறுபடியும் நிறுவிப் பார்த்தேன். Driver-ஐ நீக்கி மீண்டும் சேர்த்துப் பார்த்தேன். எதுவும் வேலை செய்யவில்லை.

பதினைந்து வருடங்களாக என்னை ஏமாற்றாத பிரிண்டர், இப்போது Linux Mint-க்கு வந்தவுடன் பிடிவாதம் பிடித்தது போல இருந்தது.

இறுதியில் Google ஆண்டவர் அருளால் கீழே உள்ள கட்டளைகள் கிடைத்தன.

அவற்றை இயக்கியவுடன், பல நாட்களாக கோமாவில் இருந்த நோயாளி கண் திறப்பது போல, Ricoh SP 111 மீண்டும் உயிர்பெற்று பிரிண்ட் செய்ய ஆரம்பித்தது.

sudo apt-get install jbigkit-bin inotify-tools

git clone https://github.com/droidzone/ricoh-sp100.git

sudo cp pstoricohddst-gdi /usr/lib/cups/filter/

sudo chown root:root /usr/lib/cups/filter/pstoricohddst-gdi

பின்னர்:

Add Printer → Choose Ricoh SP 111 → Select PPD File → RICOH_Aficio_SP_111.ppd

அவ்வளவுதான். மீண்டும் பழைய Ricoh திரும்பி வந்துவிட்டது.

இன்னும் பல வருடங்களுக்கு இந்த பிரிண்டர் வேலை செய்யும் என்று நினைக்கிறேன்.

ஒருவேளை, அடுத்ததாக நான் கணினியை மாற்றும் போது கூட இந்த Ricoh வேலை செய்து கொண்டிருக்கும். ஆனால் அப்போது Linux Mint இருக்குமா, Ubuntu இருக்குமா, இல்லை நானே இருப்பேனா என்பது மட்டும் தெரியாது.

பின்குறிப்பு:

Journal Economics-ல் வெளியான RICOH India Scam பற்றிய ஆய்வு:

https://journaleconomics.org/index.php/AJEFM/article/view/114


Thursday, June 11, 2026

வார்த்தைகளோடு அலைபவன் (என்னும் மாயை)

 

வார்த்தைகளோடு அலைபவன்

8.வார்த்தைகளோடு அலைபவன் (என்னும் மாயை)

விசித்திரமான உடையணிந்த அந்தப் பெண்ணின் வருகை பற்றிய செய்தி, சுற்றுவட்டாரக் கிராமங்கள் எங்கும் ஒரு காட்டுத்தீயைப் போலப் பரவியது. இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னால் வார்த்தைகளோடு அலைபவன் நிகழ்த்திய அந்த விசித்திரங்களுக்குப் பிறகு, அந்த ஊரே ஒரு பெரும் புனைவு வெளியாகவும், கதைகளின் புண்ணிய பூமியாகவும் மாறியிருந்தது. நிஜத்திற்கும் கற்பனைக்கும் இடையே இருந்த மெல்லிய திரை அங்கு எப்போதோ அறுந்துபோயிருந்தது. மனிதர்களின் மூச்சுக்காற்று கூட அங்கே கதைகளாகவே உருவெடுத்தது. மரங்கள் இலைகளை உதிர்ப்பதும், மேகங்கள் மழை பொழிவதும் கூட ஏதோ ஒரு கதையின் தொடர்ச்சியாகவே அங்கு பார்க்கப்பட்டது. அதனால், அவனோடு தொடர்புடைய ஒருத்தி வந்திருக்கிறாள் என்ற செய்தி காற்றில் கலந்த உடனே, அடுத்த நாள் விடியற்காலையிலேயே அண்டை ஊர்களிலிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக மைதானத்தை நோக்கித் திரளத் தொடங்கினர்.

தற்போது மிகவும் வயதாகிவிட்ட தனவந்தனும், அவனது மனைவியும், அவர்தம் இரு மருமகள்களும் கூட அன்றைய அதிகாலையில் அந்த இளைப்பாறும் கூடாரத்திற்கு வந்திருந்தனர். தனவந்தனின் இரு மகன்களும் கடல் கடந்து வணிகம் செய்ய வெளியூர் சென்றிருந்ததால் அவர்களால் வர முடியவில்லை. ஒருகாலத்தில் அவனைப் பின்தொடர்ந்த அந்த ஆறு நினைவூட்டும் வேலையாட்களில் மூவர் இறந்துவிட்டனர்; மீதமிருந்த மூவரும் இன்னும் அந்தப் பழைய நினைவுகளின் எச்சமாய் மக்கள் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்.

சூரியன் கிழக்கே தன் முதல் ஒளிக்கீற்றை வீசுவதற்கு முன்பாகவே, அந்த இளைப்பாறும் கூடாரம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. மைதானத்தில் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மனிதர்களின் அமைதி, விடியலின் பனியை விடக் கனமாக இருந்தது. ஆனால் அவர்கள் தேடிவந்த அந்தப் பெண் மட்டும் அங்கே இல்லை; காற்றோடு காற்றாகக் கரைந்திருந்தாள்.

அங்கேயே இரவு தங்கியிருந்த மற்ற வழிப்போக்கர்களிடமும், யாத்திரிகர்களிடமும் மக்கள் பதற்றத்துடன் விசாரித்தனர். அவளை முந்தைய நாள் பார்த்ததாகச் சொன்ன அந்த முதியவரும் பெரும் குழப்பமடைந்தார். இரவு முழுவதும் தான் அந்த ஆலமரத்தின் அடியில் விழித்திருந்ததாகவும், ஆனால் அவள் எப்போது, எப்படிச் சென்றாள் என்பது எவருக்குமே தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

விடிவதற்குச் சில நாழிகைகளுக்கு முன்னால், இளைப்பாறும் கூடத்தின் வெளியே இருந்த பழைய ஆலமரத்திலிருந்து இலைகள் உதிரும் சத்தம் மட்டுமே கேட்டதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். விசித்திரமாக, உதிர்ந்த அந்த இலைகளின் பரப்பில் அவளது ஈரமான கால்தடங்கள் இருந்ததற்கான எந்தவொரு வெளிப்புற அடையாளமும் எஞ்சியிருக்கவில்லை. நேற்று பெய்த பனி, அவளது வருகையின் சாட்சியங்களை முற்றிலும் துடைத்துவிட்டிருந்தது.

மக்கள் கூட்டத்திற்குள் மெல்லப் பல விசித்திரமான, மர்மமான பேச்சுகள் எழத் தொடங்கின.

ஒரு முதியவர், “வார்த்தைகளோடு அலைபவன் இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னர் சொன்ன கதையில் வரும் ஒரு கதாபாத்திரம்தான் அந்தப் பெண்” என்றார்.

லில்லி மாதத்தவன் எழுதிய குறிப்பேட்டின் ஒரு பக்கத்திலிருந்து உதிர்ந்து வந்த நிழல் அவள் என்றார்கள் சிலர். இன்னும் சிலர், அவளது உடல் சதையாலும் குருதியாலும் ஆனதல்ல; வார்த்தைகளோடு அலைபவன் தன் ஆயுளில் தொலைத்ததாகச் சொல்லப்படும் ‘காதலி’ என்ற ஒரே ஒரு அரிய வார்த்தைதான் மனித உருவம் எடுத்து, அவனது கால்தடங்களைத் தேடி வந்திருக்கிறது என்றார்கள். அந்த ‘காதலி’ என்ற சொல் இன்னும் அவனது கதைகளுக்குள் சேராததால், அவளால் இந்த நிஜ உலகத்தில் அதிக நேரம் நிலைத்து நிற்க முடியவில்லை என்று வாதிட்டார்கள்.

மற்றொரு கூட்டம் அதைவிட விசித்திரமான, பிரபஞ்ச தத்துவம் ஒன்றைக் கூறியது. இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் இந்த இடுகாட்டு மைதானத்தில் சொல்லப்பட்ட கதைகள், இத்தனை வருடங்களாக மக்களின் வாய்களில் சுற்றிக்கொண்டே இருந்ததால், அந்தக் கதைகளே தங்களுக்குள் ஒன்றிணைந்து, ஒரு மங்கலான மாலைப் பொழுதில் ஒரு பெண்ணின் உடலை உருவாக்கியிருக்கின்றன என்றார்கள். மனிதர்கள் கதைகளை உருவாக்குவதில்லை; கதைகள்தான் மனிதர்களை உருவாக்குகின்றன என்பதன் சாட்சியாக அவள் அங்கே நின்றிருந்தாள். மக்களின் கூட்டு நினைவுகளிலிருந்து உதிர்ந்த சொற்கள் சேர்ந்து ஒரு சதையாலான வடிவத்தை எடுக்க முடியும் என்ற விசித்திரம் அந்த ஊருக்குப் புதிதல்ல.

அந்த மாலைப் பொழுது முதல், அந்த ஊரில் ஒரு புதிய கதை பிறந்தது. அந்தக் கதை இப்படி ஆரம்பித்தது:

“இருபத்தெட்டு வருடங்களாக வார்த்தைகளோடு அலைபவனைத் தேடி வந்த ஒரு பெண், ஒரு நாள் வந்தாள். மறுநாள் காணாமல் போனாள்.”

அந்தக் கதையை யார் முதலில் சொன்னார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு, அந்தக் கதையையும் மக்கள் தங்களின் நிஜமான வரலாற்றைப் போல உண்மையாக நம்பத் தொடங்கினார்கள். இளைப்பாறும் கூடத்திற்கு வரும் வழிப்போக்கர்களுக்கு இந்த விசித்திரமே ஒரு புதிய கதையாகச் சொல்லப்பட்டது. பச்சை நிறத் தலையணையை வைத்துக்கொண்டு கதைகளைத் தேடித் தூங்கும் மனிதர்களுக்கு மத்தியிலும் இந்த வதந்தி ஒரு தீராத கனவாக ஓடியது.

ஏனென்றால் அந்த ஊரில், ஒரு கட்டத்திற்குப் பிறகு, உண்மைகளும் கதைகளும் ஒரே மாதிரியாகத்தான் ஒலிக்க ஆரம்பித்துவிடும். எதார்த்தத்தின் எல்லையும் புனைவின் எல்லையும் ஒன்றோடொன்று கலந்துவிட்ட அந்த மைதானத்தில், நிஜமான மனிதர்களை விடக் கதைகளுக்கே நீண்ட ஆயுள் இருந்தது.

 

                                 **************முற்றும்************** 

Saturday, June 6, 2026

வார்த்தைகளோடு அலைபவன் - விசித்திரமான உடையணிந்த இளம் பெண்

வார்த்தைகளோடு அலைபவன்

7.விசித்திரமான உடையணிந்த இளம் பெண் 

வார்த்தைகளோடு அலைபவன் அந்த ஊரை விட்டு சென்ற இருபத்தெட்டு ஆண்டுகள் கழித்து, அந்த ஊருக்கு விசித்திரமான உடையணிந்த இளம் பெண்ணொருத்தி வந்தாள்.

தற்போது இளைப்பாறும் கூடமாகவும், மாலை நேரங்களில் கதைகளைப் பற்றி மக்கள் பேசும் இடமாகவும் மாறியிருந்த, வார்த்தைகளோடு அலைபவன் கதை சொன்ன அந்த இடுகாட்டுக்கு அருகிலுள்ள இளைப்பாறும் கூடத்திற்குச் சென்றாள்.

தனவந்தனின் மூத்த மகன் அந்த இடத்தில் மிகவும் விசாலமான இளைப்பாறும் கூடத்தைத் தனது சொந்தச் செலவில் கட்டியிருந்தான். அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள் அனைவரும் அந்தக் கூடாரத்தில் ஒரு நாள் இரவு தங்கிவிட்டு, வார்த்தைகளோடு அலைபவன் சொன்னதாகச் சொல்லப்படும் கதைகளைக் கேட்டுவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அங்கு வரும் அனைவருக்கும் இரவு உணவு தனவந்தனின் குடும்பத்திலிருந்து இலவசமாக வழங்கப்பட்டது.

பலர் உணவுக்காக வந்தார்கள். பலர் கதைகளுக்காக வந்தார்கள்.

இன்னும் சிலர், அந்த இடத்தில் ஒரு இரவு தூங்கினால் விசித்திரமான கனவுகள் வரும் என்று நம்பி வந்தார்கள். அப்படி வந்தவர்கள் மறுநாள் காலை எழுந்ததும் தாங்கள் கண்ட கனவுகளை மற்றவர்களிடம் சொல்லுவார்கள். சில நேரங்களில் அந்தக் கனவுகள், வார்த்தைகளோடு அலைபவன் சொன்ன கதைகளோடு ஒத்துப் போகும். சில நேரங்களில் முற்றிலும் வேறுபட்டிருக்கும். ஆனால் அந்தக் கனவுகளும் பின்னர் கதைகளாக மாறிவிடும். அதனால் அந்த ஊரில், எது கதை, எது கனவு, எது நினைவு என்பதைப் பிரித்தறிவது நாளாக நாளாக கடினமாகிக் கொண்டே போனது.

விசித்திரமான உடையணிந்த அந்த இளம் பெண் அங்கு யாரையோ தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு முதியவர், அவளிடம் விசாரிக்கத் தொடங்கினார்.

அவள், தான் வார்த்தைகளோடு அலைபவனின் கால்தடங்களைப் பின்தொடர்ந்து இங்கு வந்திருப்பதாகச் சொன்னாள். மேலும், அவனை நீண்ட நாட்களாகப் பின்தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், அதை அவனும் அறிந்தே இருந்தான் என்றும் கூறினாள்.

அவள் அப்படிச் சொன்னவுடனேயே கூட்டத்தில் சிறிய சலசலப்பு எழுந்தது.

"இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் இங்கு வந்த மனிதனின் கால்தடங்களை இன்னும் பார்க்க முடியுமா?"

என்று ஒருவரிடம் ஒருவர் கேட்டுக்கொண்டார்கள்.

ஆனால் அந்தப் பெண் யாருடைய பேச்சையும் கேட்காதவள் போல அமைதியாக நின்றிருந்தாள். அவளுடைய கையில் இருந்த புத்தகத்தை மட்டும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருந்தாள்.

மேலும் அவள் பின்வருமாறு கூறினாள்:

"கடைசியாக வார்த்தைகளோடு அலைபவன் இந்த ஊருக்கு வரும் முன், கழுத்திலிருந்த ஒரு பொருளை ஆற்றில் தூக்கி எறிந்தான். அதன் பிறகு மிகவும் மகிழ்ச்சியாகச் சிரித்தான். பல வருடங்களாக அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கும் நான், இதுவரை அவன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததைப் பார்த்ததில்லை. அவன் அப்படி எந்தப் பொருளைத் தூக்கி எறிந்தான் என்று பார்க்கும் ஆவலில் நான் ஆற்றில் இறங்கி தேடினேன். அப்போது ஒரு நீர்ச் சுழலில் சிக்கி, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டேன். இதை அனைத்தையும் வார்த்தைகளோடு அலைபவன் பார்த்துக்கொண்டேதான் இருந்தான். ஆனால், அவன் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. பின்னர் ஒரு மரக்கிளையைப் பிடித்து கரை சேர்ந்தேன். அதன் பிறகு, இதோ இங்கு உள்ள அவன் கால்தடங்களைப் பின்தொடர்ந்து இங்கு வந்து சேர்ந்தேன்."

அவள் கை நீட்டிக் காட்டிய இடத்தை அந்த முதியவர் பார்த்தார். ஆனால் அங்கு எந்தக் கால்தடங்களும் இல்லை. மாறாக, அவளுடைய கால்தடங்கள் மட்டுமே ஈரமாக அவள் வந்த வழியெங்கும் இருந்தன.

அதற்குள் அவளையும் அந்த முதியவரையும் சுற்றி ஒரு கூட்டம் கூடியிருந்தது. அந்த இளைப்பாறும் கூடத்தில் இருந்தவர்களுக்கும் அவள் வந்த முதல் நொடியிலிருந்தே ஒரு ஆர்வம் தோன்றியிருந்தது. அந்த ஊருக்கு தினமும் புதியவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். சிலர் வணிகர்கள். சிலர் யாத்திரிகர்கள். சிலர் வார்த்தைகளோடு அலைபவனைப் பற்றிய கதைகளைக் கேட்கவே வருபவர்கள். ஆனால் வார்த்தைகளோடு அலைபவனின் கால்தடங்களைப் பின்தொடர்ந்து வந்ததாகச் சொன்னவள் இவள் ஒருத்திதான்.

கூட்டத்தில் இருந்த ஒருவன், அவள் கையில் வைத்திருந்தது என்ன என்று கேட்டான்.

"இது ஒரு கதைப் புத்தகம். புத்தகத்தின் பெயர் 'சொல் என்றொரு சொல்'. இந்தப் புத்தகத்தின் மூலமாகத்தான் நானும் வார்த்தைகளோடு அலைபவனும் முதல் முறையாகச் சந்தித்துக்கொண்டதாக அவனே என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறான்."

என்றாள்.

அந்த முதியவர் கொஞ்சம் வியப்புடன்,

"கதைகளை எப்படி புத்தகமாக எழுத முடியும்? கதைகள் ஒவ்வொரு முறையும் சொல்பவருக்கும் கேட்பவருக்கும் தகுந்தபடி மாறும் அல்லவா? இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னால் வார்த்தைகளோடு அலைபவன் இங்கு சொன்ன ஒரு கதை, இப்போது பல ஆயிரம் கதைகளாக மாறி தினமும் ஒருவரால் இங்கு சொல்லப்பட்டு வருகிறதல்லவா? அப்படியிருக்க, கதைகளை எப்படி எழுத்துகளால் ஒரு புத்தகத்திற்குள் அடைத்து வைக்க முடியும்?"

என்றார்.

அவள் அமைதியாக இருந்தாள். மாலை காற்று மெதுவாக வீசியது. இளைப்பாறும் கூடத்தின் வெளியே இருந்த பழைய ஆலமரத்திலிருந்து சில உலர்ந்த இலைகள் கீழே விழுந்தன. அவற்றில் ஒன்று அவள் காலடியில் வந்து விழுந்தது. அதை எடுத்துப் பார்த்த அவள், ஏதோ ஒன்றை நினைவுகூர்ந்தவளைப் போல நீண்ட நேரம் அமைதியாக நின்றாள். அப்போது அந்த ஊரில் இருந்த யாருக்கும் தெரியவில்லை.

இருபத்தெட்டு வருடங்களாக அவர்கள் கதைகளாகச் சொல்லிக்கொண்டிருந்த மனிதனைப் பற்றி, அவர்களைவிட அதிகமாக அறிந்த ஒரே நபர், அந்த மாலை அவர்களுக்கிடையே நின்றுகொண்டிருந்தாள்.

Wednesday, June 3, 2026

வார்த்தைகளோடு அலைபவன் - தனவந்தனின் மூன்றாவது மகன் - 2

 

வார்த்தைகளோடு அலைபவன்

6.தனவந்தனின் மூன்றாவது மகன் 

2 

வார்த்தைகளோடு அலைபவன் எப்போது வேண்டுமானாலும் கதை சொல்லத் தொடங்குவான் என்பதை அறிந்திருந்த ஊர் மக்கள், அவன் கதை சொல்லப் போவதை ஊர் முழுவதும் தெரியப்படுத்த ஒரு மணியைத் தயாராக வைத்திருந்தனர்.

வார்த்தைகளோடு அலைபவன் அந்த ஊருக்குள் வந்து ஆறு நாட்கள், ஆறு நாழிகைகள், ஆறு நொடிகள் ஆனபோது, கடைசியாக அந்த மணி ஒலித்தது. ஊர் மக்கள் அனைவரும் திரளாக மணி ஒலித்த திசையை நோக்கி ஓடத் தொடங்கினர்.

தனவந்தனின் வீட்டிலும் அந்தப் பரபரப்பு ஒட்டிக்கொண்டது.

ஆறு நாட்களுக்கு முன்னர், தனவந்தனும் அவனது மனைவியும் வார்த்தைகளோடு அலைபவனைச் சந்தித்து, தங்களுக்காகத் தனியாக, பிரத்யேகமாகக் கதை சொல்லுமாறு கேட்டிருந்தார்கள். ஆனால், வார்த்தைகளோடு அலைபவன் அதை முற்றிலுமாக மறுத்துவிட்டான். தனவந்தனின் மனைவி கொடுத்த பொற்காசுகளையும் அவன் வாங்கவில்லை.

கடைசியாக, அவனது மனைவி, தங்களுக்குச் சொந்தமான ஒரு பரந்த இடத்தில் அனைத்து விதமான சௌகரியங்களும் கிடைக்கும் என்றும், மக்கள் கூட்டமாக அமரவும் அதுவே சரியான இடமாக இருக்கும் என்றும் கூறி, அங்கிருந்து கதை சொல்லுமாறு வேண்டினாள்.அதற்கும் அவன் மறுத்துவிட்டான்.

இப்போது மணி ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த இடம், ஊரின் இடுகாட்டுக்கு அருகில் இருந்தது.

தனவந்தன், அவனது மனைவி மற்றும் இரு மகன்களும் தங்களது வேலையாட்களுடன் அந்த ஒலி வந்த திசையை நோக்கிச் சென்றனர். அவர்கள் சென்ற விதம், ஒரு பெரிய கோயில் திருவிழா ஊர்வலத்தைப் போல இருந்ததாக ஊருக்குள் ஒரு பேச்சு உண்டு. தனவந்தன், அவனுடைய நினைவூட்டும் ஆறு வேலையாட்கள், அவனது மனைவி, அவளது மூன்று பணிப்பெண்கள், தனவந்தனின் இரு மகன்கள், அவர்களுக்குத் தலா இரண்டு வேலையாட்கள், அவர்கள் அமர்வதற்கான அரியாசனங்கள், அவற்றைத் தூக்க நான்கு வேலையாட்கள், அவர்கள் பயணிப்பதற்காக இரண்டு யானைகள், அதற்கான இரு பாகன்கள் என ஒரு பெரும் பட்டாளமாகவே அவர்கள் கதை கேட்கச் சென்றார்கள்.

யானையின் மீது செல்லும்போது கூட, தனவந்தன் தனது இல்லாத மகனிடம்,

பத்திரமாக அமர்ந்துகொள்”

என்றும்,

கீழே எட்டிப் பார்க்காதே”

என்றும் சொல்லிக்கொண்டே, கொஞ்சமும் விருப்பமில்லாமல் கதை கேட்கச் சென்றான்.

வார்த்தைகளோடு அலைபவன் கதை சொல்ல இருந்த அந்த இடுகாட்டுக்கு அருகில், ஏற்கனவே ஊர் மக்கள் வெள்ளம் போல் திரண்டிருந்தனர்.

தனவந்தன் தனது குடும்பத்துடன் வந்திருப்பதைக் கண்ட மக்கள், அவன் மீது வைத்திருந்த மரியாதைக்காகவும், அவனது வானுயர்ந்த செல்வத்திற்காகவும் தாங்களாகவே வழிவிட்டு, முன் வரிசையில் அவர்களுக்கு இடம் கொடுத்தார்கள்.

வார்த்தைகளோடு அலைபவன் தனது மூட்டையை அவிழ்த்து, அதிலிருந்து வெளிவந்த முதல் வார்த்தையை வைத்து இவ்வாறு கதை சொல்லத் தொடங்கினான்:

இந்தக் கதை நான் உருவாக்கியது அல்ல. நம் பிரபஞ்சத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் ஒரு விசித்திரக் கிரகத்தின் ரகசியம் இது. லில்லி மாதத்தில் பிறந்தவன் தனது குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்திருந்த ஓர் உண்மைச் சம்பவம்...”

வார்த்தைகளோடு அலைபவன் ஒரு முக்கோண வடிவக் கருவியின் வழியே கதை சொன்னதால், அங்கு வந்திருந்த அனைவருக்குமே அவனது குரல் தெளிவாகக் கேட்டது. அவன் கதை சொல்லச் சொல்ல, மக்கள் கூட்டம் பேரமைதியில் ஆழ்ந்தது. அன்றைய இரவு முழுவதும் அவன் கதை சொன்னான். ஊர் மக்கள் அனைவரும் இருந்த இடத்தை விட்டு நகராமல் கதை கேட்டுக்கொண்டிருந்தனர். சில குழந்தைகள் தங்களின் அம்மாக்களின் மடியிலேயே தூங்கிப்போயின. தங்கள் காதலியைப் பார்ப்பதற்காகவே அங்கு வந்திருந்த சில இளைஞர்கள், கதையோடு கலந்து தங்களின் காதலியையே மறந்தார்கள்.

தனவந்தனுக்கு அந்தக் கதை பிடித்ததா இல்லையா என்பது அவனுக்கே தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவனை அங்கிருந்து எழுந்து செல்ல விடவில்லை. அவன் அருகிலிருந்த தனது இல்லாத மகனையும் சில நிமிடங்களுக்கு ஒருமுறை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டான். தனவந்தனின் நினைவூட்டும் வேலையாட்களோ தங்களின் கடமையை முற்றிலும் மறந்து கதையோடு ஒன்றியிருந்தனர். சிரிப்பதையே மறந்து, வணிகத்தில் பெரும் செல்வம் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கும் மூத்த மகனும், கதைக்குத் தகுந்தவாறு சிரித்தும், தனது முகபாவங்களை மாற்றியும் கதையை ரசித்துக்கொண்டிருந்தான். இப்படியே இரவு முழுவதும் நகர்ந்தது.

விடிந்தவுடன் கதையை நிறுத்திய வார்த்தைகளோடு அலைபவன், மீண்டும் இன்றைய மாலை நேரத்தில் கதை தொடங்கும் என்றான். மக்கள் அனைவரும் மெல்லக் கலைந்து சென்றனர். இதே போல் தினமும் நடந்தது.

அந்தக் கதையைச் சொல்லி முடிக்க வார்த்தைகளோடு அலைபவன் மொத்தம் இருபத்தெட்டு இரவுகளை எடுத்துக்கொண்டான். ஒரு பௌர்ணமி அன்று தொடங்கிய கதை, அடுத்த பௌர்ணமி நாளில்தான் நிறைவடைந்தது.

முதல் நாள் கதை கேட்டுவிட்டு வந்த தனவந்தன்,

இனி நான் கதை கேட்கப் போவதில்லை”

என்று பிடிவாதம் பிடித்தான். ஆனால் அன்று மாலையே, யாரிடமும் எதுவும் சொல்லாமல், தன் குடும்பத்தோடு மீண்டும் அவனே முன்னால் சென்று கதை கேட்க அமர்ந்தான்.

இரண்டாம் நாள் கதையிலும் மக்கள் கூட்டம் குறையவில்லை. மாறாக இன்னும் அதிகரித்திருந்தது. முதல் நாள் கதை கேட்காதவர்களும் இப்போது வந்து சேர்ந்திருந்தார்கள். சிலர் தங்களுடைய வீட்டிலிருந்து பாய்களைக் கொண்டு வந்தார்கள். சிலர் சமைத்த உணவுகளைக் கொண்டு வந்தார்கள்.

மூன்றாம் நாள், தனவந்தன் ஒரு விசித்திரமான விஷயத்தை கவனித்தான் வார்த்தைகளோடு அலைபவன் கதை சொல்லிக்கொண்டிருக்கும்போது, தனது மூன்றாவது மகனைப் பார்க்க அவன் திரும்பினான். ஆனால் அந்த இடம் காலியாக இருந்தது. உடனே பதறிப்போனான். சில நொடிகளுக்குப் பிறகுதான் மீண்டும் அவன் மகன் அங்கே அமர்ந்திருப்பது போலத் தோன்றியது. அதைப் பற்றி அவன் யாரிடமும் சொல்லவில்லை.

நான்காம் நாள், அவனுடைய நினைவூட்டும் வேலையாட்கள் ஆச்சரியத்தில் இருந்தார்கள். ஏனென்றால், அன்று காலை முதல் அவன் தனது இல்லாத மூன்றாவது மகனிடம் வழக்கத்தை விடக் குறைவாகப் பேசிக்கொண்டிருந்தான்.

ஐந்தாம் நாள், அவனுடைய வேலையாள் ஒருவன் வந்து, “சின்ன ஐயா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.” என்று நினைவூட்டினான். தனவந்தன் அவனைப் பார்த்து, “எனக்குத் தெரியும்.” என்றான்.

இரண்டு வருடங்களில் அவன் முதல் முறையாக அப்படிச் சொன்னான். வேலையாட்கள் மூலம் இதை கேள்விப்பட்ட தனவந்தன் மனைவி கொஞ்சம் நிம்மதி அடைந்தாள்.

ஏழாம் நாள், ஊரில் ஒரு வதந்தி பரவத் தொடங்கியது. கதை கேட்க வந்தவர்கள் தூங்கும்போது, அவர்கள் கனவுகளிலும் வார்த்தைகளோடு அலைபவன் சொல்லும் அதே கதை தொடர்கிறது என்று சிலர் சொன்னார்கள். கனவில் கேட்ட பகுதியை மறுநாள் இரவு அவன் கதையில் சொல்வதாகவும் கூறினார்கள்.

பத்தாம் நாள், தனவந்தனின் மூத்த மகன் தனது தந்தையைப் பார்த்து பயந்தான். இரண்டு வருடங்களுக்குப் பிறகு தனவந்தன் முதல் முறையாக அனைவரிடமும்  சிரித்துப்பேசினான்.

பன்னிரண்டாம் நாள், நினைவூட்டும் வேலையாட்களின் எண்ணிக்கை ஆறு பேரிலிருந்து நான்கு பேராகக் குறைக்கப்பட்டது. மற்ற இருவருக்கும் தோட்ட வேலைகள் ஒதுக்கப்பட்டன. அந்த இருவரும் மாலை நேரத்தில் வேலைகளை வேகமாக முடித்துவிட்டு, கதை கேட்கும் கூட்டத்தின் பின் வரிசையில் அமர ஆரம்பித்தார்கள்.

பதினாறாம் நாள், தனவந்தன் ஒரு முழு நாளை தனது மூன்றாவது மகனிடம் பேசாமல் கழித்தான். அந்த மாலை வீட்டுக்குத் திரும்பிய பிறகுதான் அதை அவன் உணர்ந்தான். அவன் அழவில்லை. மகிழ்ச்சியும் அடையவில்லை. நீண்ட நேரம் அமைதியாக மட்டும் அமர்ந்திருந்தான்.

அதே நாளில், ஊரில் மற்றொரு வதந்தியும் பரவியது. கதை கேட்க வந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான வேறு கதையைத்தான் கேட்கிறார்கள் என்று சிலர் சொன்னார்கள். ஒரே இடத்தில் அமர்ந்திருந்தாலும், ஒவ்வொருவருக்கும் வேறு கதை.

இருபதாம் நாள் முதல் தனவந்தன் மற்ற சிலரை போல், வீட்டுக்கு செல்லாமல் அங்கேயேயிருந்து மாலை சொல்லப் போகும் கதைக்காக காத்திருக்க தொடங்கினான்.

இருபத்தெட்டாம் நாள். பௌர்ணமி. கதை முடிந்தது. வார்த்தைகளோடு அலைபவன் கடைசி வார்த்தையைச் சொன்னான். மூட்டையை மூடினான். அடுத்த ஊருக்கு செல்ல மூட்டையை தூக்கி கொண்டு நடக்க தொடங்கினான்.

கூட்டம் நீண்ட நேரம் அமைதியாக அதே இடத்தில் இருந்தது. சிலர் போக மனம் இன்றி அங்கேயே அமர்ந்தனர். அடுத்த பல வருடங்களுக்கு அந்த இடம் அந்த ஊர் மக்களுக்கு கதைகள் பேசும் கூடாரமாக அமைந்தது.

தனவந்தன் வீட்டுக்கு சென்று தனது ஆறு நினைவூட்டும் வேலையாட்களையும் அழைத்தான்.அவன் அவர்களிடம்,

நாளையிலிருந்து நீங்கள் வீட்டில் உள்ள தோட்ட வேலையைப் பாருங்கள்"

என்றான்.

வேலையாட்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இரண்டு வருடங்களாக அவர்கள் செய்த வேலை அன்றோடு முடிந்தது.

அன்றிலிருந்து தனவந்தன் தனது இல்லாத மகனைப் பற்றி பேசுவதில்லை. அது எப்படி நடந்தது என்பதை அவனுக்கே சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இதே போல் அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒரு மாற்றத்தை கண்டனர்.

கடல் கடந்து வணிகம் செய்து வரும் தனவந்தனின் மூத்த மகன் மூலம் வார்த்தைகளோடு அலைபவனின் புகழ் பக்கத்து நாடுகளுக்கும் பரவியது.