crontab -time - Version 1
crontab -time - Version 2
crontab -time - Version 3
ஒரு கதை அதன் போக்கில் செல்லும் போது அதை அப்படியே விட்டுவிட வேண்டும். நாம் அதை தடுக்க நினைத்தால், நம்மால் அந்த கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது.
ஆனால் அதே நேரம், ஒரு கதையை எங்கு தொடங்க வேண்டும் என்று தெரிந்தவனுக்கு, கண்டிப்பாக அதை எங்கு முடிக்க வேண்டும் என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.
நான் எழுதிய crontab கதைகள் அந்த சுழற்சியில்தான் சிக்கிக்கொண்டன என்று நினைக்கிறேன். முதல் கதையோடு நிறுத்தி இருக்கலாம். கதையின் முடிவு அங்கு சரியாக இருந்தது. அல்லது இரண்டாவது கதையோடு நிறுத்தி இருக்கலாம். அதுவும் சரியான முடிவு. படிக்கும் வாசகர்களே என்ன நடந்து இருக்கும் என்ற யூகிப்போடு முடித்திருக்கலாம். ஆனால் மூன்றாவது கதை அப்படி இல்லை. கண்டிப்பாக அதற்கு ஒரு தொடர்ச்சி தேவை. அதுவும் தெளிவாக முடிக்க வேண்டும் என்றால், இன்னும் இரண்டு பதிவுகளாவது இழுக்கும். அதற்கான கதை கருவும் என்னிடம் இல்லை.
உண்மையில் பிரச்சனை என்னவென்றால், அந்த கதையில் இருக்கும் அசோக் அவனது கதாபாத்திரத்தை அவனே எழுத ஆரம்பித்துவிட்டான்.
முதல் கதையில் அவன் ஒரு சாதாரண யூனிக்ஸ் இன்ஜினியர் மாதிரி இருந்தான். இரண்டாவது கதையில் கொஞ்சம் கான்ஃபிடென்ஸ் வந்தது. இப்போது மூன்றாவது கதையில் என்னை கேட்காமலேயே அவனாகவே முடிவெடுக்க ஆரம்பித்துவிட்டான்.
நான் ஒரு சீன் எழுத நினைத்தால், அவன் வேறு பக்கம் போய்விடுகிறான். நான் கிருபாவை இரண்டு வரியில் முடித்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது அவளும் Conf கால்'ல் வந்து பேச ஆரம்பித்துவிட்டாள். வெங்கட் வேறு ஆபீஸ் முழுக்க சுற்றிக்கொண்டு இருக்கிறான். அப்துல் ஏதாவது அன்னெசசரி பில்டப் கொடுத்துக்கொண்டே இருக்கிறான். அசோக்கின் நண்பர்களில் முக்கியமான சிவா இன்னும் முழுமையான என்ட்ரி தரவில்லை. ஒரு ஸ்டேஜ்க்கு பிறகு இது என் கதை மாதிரியே தெரியவில்லை.
ஆபீஸில் சில பிராஜெக்ட்கள் இப்படித்தான் இருக்கும்.
முதலில்: “சின்ன சேஞ்ச்தான்…” என்று ஆரம்பிக்கும்.
ஒரு விர்ச்சுவல் ரிக்வெஸ்ட் போட்டு முடித்து விடலாம் என்பார்கள்.
பிறகு ஒரு வாரம் கழித்து: “இதுக்கு பேக்கெண்டும் சேஞ்ச் பண்ணணும்…”என்பார்கள்.
யாராவது ஒரு ஆள் சேஞ்ச் ரிக்வெஸ்ட் ரெய்ஸ் செய்ய வேண்டும்.
அதற்குப் பிறகு: “புரொடக்ஷன் டிப்ளாய்மென்ட் பிளான் தேவை…” என்று மீட்டிங் வைப்பார்கள்.
யூனிக்ஸ் அட்மின் சர்வர் அப்கிரேட் செய்ய வேண்டும் என்பார்கள்.
டிபிஏ: “ஆரக்கிள் பேட்ச் போட வேண்டும்…” என்பார்கள்.
கடைசியில் பார்த்தால், ஒரிஜினல் ரிக்வையர்மென்ட் என்னவென்றே யாருக்கும் ஞாபகம் இருக்காது.
இந்த crontab கதையும் அப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது. அதிலும் இன்னொரு பெரிய பிரச்சனை என்னவென்றால், நான் இந்த கதையை சீரியஸாக முடிக்கலாமா, இல்ல ஹியூமரில் முடிக்கலாமா என்பதே இன்னும் முடிவாகவில்லை.
ஏனென்றால் வாழ்க்கையில் ஆரம்பத்தில் நடந்த பல சீரியஸான விஷயங்களை இப்போது நினைத்துப் பார்த்தால் நமக்கு காமெடியாகத்தானே தோன்றும்.
கல்லூரியில் ஃபெயில் ஆன சப்ஜெக்ட் கூட இப்போது ரீயூனியனில் ஜோக் ஆக மாறிவிடுகிறது. ஒரு காலத்தில் தூங்கவிடாமல் செய்த காதல் தோல்விகள் கூட, இப்போது டீ குடித்துக்கொண்டு சொல்லும் கதையாக மாறிவிடுகிறது. அதனால்தான் வாழ்க்கையில் எந்த விஷயம் டிராஜெடி, எந்த விஷயம் காமெடி என்று உடனே முடிவு செய்ய முடியவில்லை.
இந்த மாதிரி ஃபிலாசபிக்கல் வரி போட்டு கதையை முடித்து விடலாம் என்றால், அடுத்த நொடியே வெங்கட் கதாபாத்திரம் கதைக்குள் வந்து: “மச்சி… ஆன்சைட் கால்'ல் அந்த கிருபா உன் பேரை இரண்டு தடவை மென்ஷன் பண்ணிருக்கா…” என்று முழு கதையின் போக்கையும் மாற்றிவிடுகிறான்.
இப்பொழுது கூட பாருங்கள், இந்த பதிவில் ஒரு ஆங்கில வார்த்தை கூட வரக்கூடாது என்று முடிவோடு எழுதிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் “Crontab” என்ற வார்த்தையை அசோக் நடுவில் சில இடங்களில் சேர்த்து விட்டான்.
அதே மாதிரி தான் போன முறை கதை டெக்னிக்கலாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று வந்து: “tail -f logfilename” என்று போட்டுவிட்டு போய்விட்டான். அதை நீக்க எனக்கும் மனசே வரவில்லை.
அதனால்தான் இந்த கதையை எழுதுவதற்கும் கொஞ்சம் பயமாக இருக்கிறது.
சில கதைகளை எழுத ஆரம்பிக்கும் போது நமக்கு ஃபுல் கண்ட்ரோல் இருக்கும். ஆனால் சில கதைகளில் கதாபாத்திரங்கள் நம்மை ஓவர்டேக் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
அவர்கள் நம்மை கேட்காமல் பேச ஆரம்பித்துவிடுவார்கள். நாம் எழுத நினைக்காத இடத்துக்கு போய்விடுவார்கள். அப்புறம் நாம் ரைட்டர் இல்லை. மினிட்ஸ் ஆஃப் மீட்டிங் எழுதிக்கொண்டிருக்கும் ஒருத்தன் மாதிரி ஆகிவிடுவோம்.
சில நேரங்களில் அதுவும் நல்லதுதான்.
ஏனென்றால் வாழ்க்கையிலேயே நமக்கு முழு கண்ட்ரோல் இல்லாத போது, கதையில் மட்டும் ஏன் இருக்க வேண்டும்.
