முதலில் ஒரு விஷயம். இந்தியாவின் Dis-Investment Policy சரியா, தப்பா என்பதைப் பற்றியது அல்ல இந்தக் குறிப்பு. எண்களைப் பற்றிய ஒரு சின்ன விளையாட்டு, அவ்வளவே.
சென்ற ஆண்டு செபி ஆணையிட்டபடி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் குறைந்தது 25% பங்குகளையாவது பொதுச் சந்தையில் (பொதுமக்கள், மியூச்சுவல் பண்டுகள், நிதி நிறுவனங்கள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) விற்றிருக்க வேண்டும். அதாவது, அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் 75% பங்குகள் மட்டுமே இருக்க வேண்டும்.
இந்த ஆணை அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆனால் அரசு நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்த சதவீத எண்கள் 10% மற்றும் 90%.
இப்போது நெய்வேலியில் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்திற்கும் இதுதான் காரணம்.
இந்த ஆணையைச் செயல்முறைக்குக் கொண்டுவர ஏதுவாக, ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் OFS மூலம் புதிய பங்குகளை விற்கலாம் என்று செபி அறிவித்தது.
OFS என்றால் என்ன? எதற்காக 75% - 25%? எதற்காக இப்படி ஒரு ஆணை? இதனால் யாருக்குப் பயன்?
என்ற கேள்விகளுக்குப் பதில் தேடிக்கொண்டு போனால், இந்தப் பதிவு கன்னித் தீவு போல நீண்டுவிடும். ஆகவே, மேட்டருக்கு வருவோம்.
பங்குச்சந்தையில் உள்ள அனைவருக்குமே MMTC-யைப் பற்றித் தெரிந்திருக்கும். MMTC ஒரு அரசு நிறுவனம். ஒரு காலத்தில் இதன் பங்கு 18,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. பின்னர் Split மூலம் 1000 ரூபாய்க்கு வந்தது.
இது பழைய கதை.
இப்போது MMTC-யை Dis-Investment Policy காரணமாக OFS மூலம் அதன் பங்குகளை கடந்த மாதம் விற்றார்கள். OFS-ல் ஒரு பங்கின் விலை 60 ரூபாய் என்று நிர்ணயம் செய்தார்கள்.
இந்த விற்பனை மூலம் இந்திய அரசாங்கத்துக்குக் கிடைத்த பணம் 560 கோடி ரூபாய்.
இந்த விற்பனை நடந்தபோது MMTC-யின் ஒரு பங்கு 200 ரூபாய்க்கு பங்குச்சந்தையில் விற்றுக்கொண்டு இருந்தது.
200 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்த பங்கினை அரசாங்கம் 60 ரூபாய்க்கு விற்றதால், MMTC நிறுவனப் பங்கின் விலை கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து குறையத் தொடங்கியது.
இன்றைக்கு NSE-யில் அதன் விலை 67.80.
அதாவது, MMTC பங்கினை விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு லாபம் 560 கோடி ரூபாய்.
ஆனால் MMTC நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 16,000 கோடி ரூபாய் குறைந்துள்ளது.
இதுவே MMTC ஒரு தனியார் நிறுவனமாக இருந்தால் இப்படி நடந்திருக்குமா?
MMTC நிறுவனத்தை Dis-Investment செய்யாமல் De-list செய்திருந்தால், இந்தச் சரிவை மிகவும் சுலபமாகத் தடுத்திருக்கலாம்.
இல்லை, Dis-Investment மூலம் Liquidity அதிகமாகும். MMTC நிறுவனத்தின் உண்மையான மதிப்பு இதுதான் என்கிறார்கள்.
சரி, அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே.
இப்போது MMTC-யின் மதிப்பை அதிகமாகக் காட்டுவதால் யாருக்கு என்ன நஷ்டம்?
எது எப்படியோ, நான் MMTC பங்கு எதையும் வாங்கவில்லை.
MMTC பங்கு வாங்காமலேயே எனது Portfolio 70% நஷ்டத்தில்தான் போய்க்கொண்டு இருக்கிறது.

No comments:
Post a Comment