இந்த கதை உயிரோசையில் வெளிவந்துள்ளது. http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=3115
இப்பொழுதுதான் அவன் ஜெயமோகன், எஸ்.ரா. மனுஷ்ய புத்திரன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறான். கல்லூரி நாட்களில் அவனுக்குத் தெரிந்த எழுத்தாளர்கள், கல்கியும், தபூ சங்கரும் மட்டுமே. அதுவும் அப்பொழுது அவன் காதலில் திளைத்துக்கொண்டு இருந்த தருணம், தபூ சங்கரின் கவிதை வரிகள் எப்பொழுதும் அவன் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். முதல் முதலில் அவள் கை உடம்பில் பட்ட போது ஏற்பட்ட ஒருவித உஷ்ணம், அந்தக் காதலைச் சொல்லும்போது அவனுக்குள் எற்பட்ட ஒரு பயம், பல நாட்கள் கேட்டு எதிர்பாராமல் ஒருநாள் அவள் கொடுத்த முத்தம். இப்படி எல்லா தருணங்களிலும் தபூ சங்கர் கவிதை மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். கல்லூரி நாட்களில் உலக சினிமா மீதும் அவனுக்கு ஈடுபாடு இருந்தது. எப்படி ‘ஆனந்த விகடன்’ மூலம் தபூ சங்கர் பரிச்சயம் ஆனாரோ, அதைப் போல், போனியின் மூலம்தான் அவனுக்கு உலக சினிமா பரிச்சயம் ஆனது.
முக்கிய அறிவிப்பு: "அவன்" என்று எழுதுவதால் இந்தக் கதையின் உண்மைத் தன்மை மீது, உங்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆகவே "அவன்", "நான்" என்று மாற்றப்படுகிறது.
"பாரஸ்ட் கம்ப்" (இங்கு "Forrest Gump" என்று ஆங்கிலத்தில் இருந்தால்தான் படிக்க நன்றாக இருக்கும். ஆங்கிலம் உபயோகித்தால் இந்தக் கதை உயிரோசையில் வெளிவருவது சந்தேகமே. ஆகவே பாரஸ்ட் கம்ப் என்று தமிழிலேயே படிக்கவும்) இந்த திரைப்படத்தை என்னால் மறக்கவே முடியாது. கல்லூரி நாட்களில் இந்தத் திரைப்படத்தைப் பலமுறை பார்த்து இருப்பேன். நானும் போனியும் கடைசி பென்சில் அமர்ந்து அதன் வசனங்களை ஒன்று விடாமல் சொல்லிக்கொண்டு இருப்போம். " My name's Forrest, Forrest Gump. You want a chocolate? " இந்த வசனத்தை போனி அடிக்கடி சொல்வான், அவன் சொல்லும் விதமே அழகாக இருக்கும். அந்தக் கதாபாத்திரமாகவே நாங்கள் மாற ஆசைப்பட்டோம். அப்பொழுது எல்லாம் எனக்கு என் மீதே கோபம் என்றால் நான் செய்யும் முதல் காரியம், "Forrest Gump" திரைப்படத்தில் எதாவது ஒரு காட்சியைப் பார்ப்பதுதான். கல்லூரிக் காதல் தோல்வியின்போது ஒரு வாரத்திற்ககு அந்த திரைப்படத்தை தொடர்ந்து பார்த்தேன்.
நிற்க. இதுவும் புனைவுகதைதான். இங்கு "நான்" என்று சொல்லக் காரணம் கதையோடு படிப்பவர்களை ஒன்றாக்கவே!!.. ஆனால் இதன் காரணமாகவே என் மீது தப்பான அனுமானம் ஏற்படுவதால், "நான்" என்பது "அசோக்" என்று மாறும் கட்டாயம் ஏற்படுகிறது. அதற்காக எனக்கு இந்த "Forrest Gump" திரைப்படம் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை. ஆனால், எனக்கும் அசோக்கிற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. (எ.டு) எனக்கு யார் மீதோ கோபம் என்றால் நான் செய்யும் காரியம் புத்தகங்களைப் படிப்பது, அந்த நேரத்தில் ஏதாவது மொக்கையான புத்தகத்தைத் தந்தால் கூட ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுவேன். ஆனால், படித்தது எதுவும் மனதில் நிற்காது, மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும். இப்படித்தான் ஒரு கோபத்தில் "Notes from the Underground" புத்தகத்தை ஒரே இரவில் படித்துமுடித்தேன். அடுத்த நாள் தான் எனக்கு நினைவில் வந்தது, எனக்கு ஆங்கிலமே படிக்கத் தெரியாது என்ற விஷயம்.
இப்பொழுது என்னிடம் இன்னொரு கெட்ட பழக்கமும் சேர்ந்து இருக்கிறது, அது சோகமாக இருக்கும்போது "Eminem" பாடல்கள் கேட்பது. அதுவும் முக்கியமாக அந்த "mockingbird" பாடல். இதுவும் என்னைப் பற்றியது இல்லை,அசோக்கைப் பற்றியதுதான் என்று எழுதியிருக்க முடியும். ஆனால் பாவம் அசோக், ஏற்கனவே என்னால் பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறான்.
இதுவரை எந்தப் பெண்னுடன் சேர்ந்து "ஷேர் ஆட்டோ"வில் கூட பயணம் செய்யாத அசோக்கிடம், இப்பொழுதுதான் ஒரு பெண் "நாளைக்கு சினிமாவுக்கு போகலாமா??" என்று கேட்கின்ற அளவு நட்பாகி இருக்கிறாள். என் வலைப்பதிவைப் படித்துவிட்டு அவள் அசோக்கிடம் "யாருடா அவள், என்னிடம் மட்டும் சொல்லு" என்று நச்சரித்துக்கொண்டு இருக்கிறாள். பாவம் அசோக், வழக்கம்போல பல சில சமாளிப்புகளைப் போட்டுகொண்டு இருக்கிறான். அவர்கள் சினிமாவுக்குப் போவது வேறு ஏதாவது காரணங்களால் தடைபட்டால் கூட, நான் அசோக்கிடம் தர்மஅடி வாங்கப் போவது நிச்சயம்.
இனிமேல் அசோக்கைப் பற்றி எழுதுவதை நிறுத்திவிட்டு குமாரைப் பற்றி எழுதலாமா என்றுகூட சிலமுறை நினைக்கத் தோன்றும். ஆனால் எந்தக் குமாரைப் பற்றி எழுதுவது என்றுதான் குழப்பம். மொத்தம் முன்று குமார்களை எனக்குத் தெரியும். ஒரு சின்னக் கதையின் மூலம் இந்த முன்று குமார்களையும் அறிமுகப்படுத்துகிறேன்.
அசோக்கும் மூன்று குமார்களும் ஆபீஸ் கேன்டீனில் அமர்ந்து சாப்பிட்டுக் கொன்டு இருந்தார்கள். அசோக்தான் ஆரம்பித்தான்.
அசோக் "அடுத்தவாரம் நம்ம டீமில் யாரு மச்சி நைட் ஷிப்ட்?".
"ரகுவும், ஆனந்தும்" என்றான் முதலாவதாக அமர்ந்து இருந்த குமார்.
"உனக்கு அடுத்து அவள்தானே நைட் ஷிப்ட் வரணும், ஏன் ரகு வரான்??".
"இல்லடா, எப்பொழுதும் மூன்றாவது வாரம் அவள் நைட் ஷிப்ட் வர மாட்டாள்" இதுவும் முதல் குமார்தான் சொன்னான்.
இதுவரை இட்லியில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்த இரண்டாவது குமார் "நைட் ஷிப்ட் வருவதற்கெல்லாமா, இவள் ராசி பார்ப்பாள்?" என்றான்.
அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தான் மூன்றாவது குமார்.
அடுத்தவாரம் அதே இடத்தில் அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, மூன்றாவது குமார் முதல் குமாரிடம் கேட்டது "டேய், ஏதோ அவள் மூன்றாவது வாரம் வரமாட்டான்னு சொன்ன, இப்ப வந்துருக்கா?"
இதற்கு மேல் இவர்களைப் பற்றி தெளிவாக விவரிக்க முடியாது. இப்பொழுது சொல்லுங்கள், எந்தக் குமாரைப் பற்றி எழுதலாம்?.