Thursday, June 24, 2010

கதாபாத்திரங்களின் உரையாடல்

இந்த கதை உயிரோசையில் வெளிவந்துள்ளது. http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=3115


இப்பொழுதுதான் அவன் ஜெயமோகன், எஸ்.ரா. மனுஷ்ய புத்திரன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறான். கல்லூரி நாட்களில் அவனுக்குத் தெரிந்த எழுத்தாளர்கள், கல்கியும், தபூ சங்கரும் மட்டுமே. அதுவும் அப்பொழுது அவன் காதலில் திளைத்துக்கொண்டு இருந்த தருணம், தபூ சங்கரின் கவிதை வரிகள் எப்பொழுதும் அவன் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். முதல் முதலில் அவள் கை உடம்பில் பட்ட போது ஏற்பட்ட ஒருவித உஷ்ணம், அந்தக் காதலைச் சொல்லும்போது அவனுக்குள் எற்பட்ட ஒரு பயம், பல நாட்கள் கேட்டு எதிர்பாராமல் ஒருநாள் அவள் கொடுத்த முத்தம். இப்படி எல்லா தருணங்களிலும் தபூ சங்கர் கவிதை மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். கல்லூரி நாட்களில் உலக சினிமா மீதும் அவனுக்கு ஈடுபாடு இருந்தது. எப்படி ‘ஆனந்த விகடன்’ மூலம் தபூ சங்கர் பரிச்சயம் ஆனாரோ, அதைப் போல், போனியின் மூலம்தான் அவனுக்கு உலக சினிமா பரிச்சயம் ஆனது.

முக்கிய அறிவிப்பு:
"அவன்" என்று எழுதுவதால் இந்தக் கதையின் உண்மைத் தன்மை மீது, உங்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆகவே "அவன்", "நான்" என்று மாற்றப்படுகிறது.

"பாரஸ்ட் கம்ப்" (இங்கு "Forrest Gump" என்று ஆங்கிலத்தில் இருந்தால்தான் படிக்க நன்றாக இருக்கும். ஆங்கிலம் உபயோகித்தால் இந்தக் கதை உயிரோசையில் வெளிவருவது சந்தேகமே. ஆகவே பாரஸ்ட் கம்ப் என்று தமிழிலேயே படிக்கவும்) இந்த திரைப்படத்தை என்னால் மறக்கவே முடியாது. கல்லூரி நாட்களில் இந்தத் திரைப்படத்தைப் பலமுறை பார்த்து இருப்பேன். நானும் போனியும் கடைசி பென்சில் அமர்ந்து அதன் வசனங்களை ஒன்று விடாமல் சொல்லிக்கொண்டு இருப்போம். " My name's Forrest, Forrest Gump. You want a chocolate? " இந்த வசனத்தை போனி அடிக்கடி சொல்வான், அவன் சொல்லும் விதமே அழகாக இருக்கும். அந்தக் கதாபாத்திரமாகவே நாங்கள் மாற ஆசைப்பட்டோம். அப்பொழுது எல்லாம் எனக்கு என் மீதே கோபம் என்றால் நான் செய்யும் முதல் காரியம், "Forrest Gump" திரைப்படத்தில் எதாவது ஒரு காட்சியைப் பார்ப்பதுதான். கல்லூரிக் காதல் தோல்வியின்போது ஒரு வாரத்திற்ககு அந்த திரைப்படத்தை தொடர்ந்து பார்த்தேன்.

நிற்க. இதுவும் புனைவுகதைதான். இங்கு "நான்" என்று சொல்லக் காரணம் கதையோடு படிப்பவர்களை ஒன்றாக்கவே!!.. ஆனால் இதன் காரணமாகவே என் மீது தப்பான அனுமானம் ஏற்படுவதால், "நான்" என்பது "அசோக்" என்று மாறும் கட்டாயம் ஏற்படுகிறது. அதற்காக எனக்கு இந்த "Forrest Gump" திரைப்படம் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை. ஆனால், எனக்கும் அசோக்கிற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. (எ.டு) எனக்கு யார் மீதோ கோபம் என்றால் நான் செய்யும் காரியம் புத்தகங்களைப் படிப்பது, அந்த நேரத்தில் ஏதாவது மொக்கையான புத்தகத்தைத் தந்தால் கூட ஒரே மூச்சில் படித்து முடித்துவிடுவேன். ஆனால், படித்தது எதுவும் மனதில் நிற்காது, மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும். இப்படித்தான் ஒரு கோபத்தில் "Notes from the Underground" புத்தகத்தை ஒரே இரவில் படித்துமுடித்தேன். அடுத்த நாள் தான் எனக்கு நினைவில் வந்தது, எனக்கு ஆங்கிலமே படிக்கத் தெரியாது என்ற விஷயம்.

இப்பொழுது என்னிடம் இன்னொரு கெட்ட பழக்கமும் சேர்ந்து இருக்கிறது, அது சோகமாக இருக்கும்போது "Eminem" பாடல்கள் கேட்பது. அதுவும் முக்கியமாக அந்த "mockingbird" பாடல். இதுவும் என்னைப் பற்றியது இல்லை,அசோக்கைப் பற்றியதுதான் என்று எழுதியிருக்க முடியும். ஆனால் பாவம் அசோக், ஏற்கனவே என்னால் பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறான்.

இதுவரை எந்தப் பெண்னுடன் சேர்ந்து "ஷேர் ஆட்டோ"வில் கூட பயணம் செய்யாத அசோக்கிடம், இப்பொழுதுதான் ஒரு பெண் "நாளைக்கு சினிமாவுக்கு போகலாமா??" என்று கேட்கின்ற அளவு நட்பாகி இருக்கிறாள். என் வலைப்பதிவைப் படித்துவிட்டு அவள் அசோக்கிடம் "யாருடா அவள், என்னிடம் மட்டும் சொல்லு" என்று நச்சரித்துக்கொண்டு இருக்கிறாள். பாவம் அசோக், வழக்கம்போல பல சில சமாளிப்புகளைப் போட்டுகொண்டு இருக்கிறான். அவர்கள் சினிமாவுக்குப் போவது வேறு ஏதாவது காரணங்களால் தடைபட்டால் கூட, நான் அசோக்கிடம் தர்மஅடி வாங்கப் போவது நிச்சயம்.

இனிமேல் அசோக்கைப் பற்றி எழுதுவதை நிறுத்திவிட்டு குமாரைப் பற்றி எழுதலாமா என்றுகூட சிலமுறை நினைக்கத் தோன்றும். ஆனால் எந்தக் குமாரைப் பற்றி எழுதுவது என்றுதான் குழப்பம். மொத்தம் முன்று குமார்களை எனக்குத் தெரியும். ஒரு சின்னக் கதையின் மூலம் இந்த முன்று குமார்களையும் அறிமுகப்படுத்துகிறேன்.

அசோக்கும் மூன்று குமார்களும் ஆபீஸ் கேன்டீனில் அமர்ந்து சாப்பிட்டுக் கொன்டு இருந்தார்கள். அசோக்தான் ஆரம்பித்தான்.

அசோக் "அடுத்தவாரம் நம்ம டீமில் யாரு மச்சி நைட் ஷிப்ட்?".

"ரகுவும், ஆனந்தும்" என்றான் முதலாவதாக அமர்ந்து இருந்த குமார்.

"உனக்கு அடுத்து அவள்தானே நைட் ஷிப்ட் வரணும், ஏன் ரகு வரான்??".

"இல்லடா, எப்பொழுதும் மூன்றாவது வாரம் அவள் நைட் ஷிப்ட் வர மாட்டாள்" இதுவும் முதல் குமார்தான் சொன்னான்.

இதுவரை இட்லியில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்த இரண்டாவது குமார் "நைட் ஷிப்ட் வருவதற்கெல்லாமா, இவள் ராசி பார்ப்பாள்?" என்றான்.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தான் மூன்றாவது குமார்.

அடுத்தவாரம் அதே இடத்தில் அமர்ந்து நாங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, மூன்றாவது குமார் முதல் குமாரிடம் கேட்டது "டேய், ஏதோ அவள் மூன்றாவது வாரம் வரமாட்டான்னு சொன்ன, இப்ப வந்துருக்கா?"

இதற்கு மேல் இவர்களைப் பற்றி தெளிவாக விவரிக்க முடியாது. இப்பொழுது சொல்லுங்கள், எந்தக் குமாரைப் பற்றி எழுதலாம்?.

Friday, June 18, 2010

ராவணன்

"ராவணன்", எதற்காக இந்த டைட்டிலை வைத்தார்கள் என்று எனக்கு புரியவில்லை. இராமாயணத்தின் கதையைதான் எடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால், அந்த கதையை முழுமையாக சொல்லி இருக்கலாமே?? இராமயணத்தின் முக்கிய அம்சமே ராவணன் சீதை மேல் கொண்ட மோகம்தான். அதை இந்த படத்தில் இப்படி சொதப்பி இருக்கவேண்டாமே. சரி, இராமாயணத்தை வெளிப்படையாக சொல்லவில்லை என்றால், அந்த அனுமான் கதாபாத்திரம் எதற்க்கு. அதுவும் கட்டிய சேலையுடன் மட்டும் இருக்கும் ஐஸ்வர்யாவிடம் “உங்களை சந்திதற்க்கு சாட்சியாக எதாவது பொருள் தாருங்கள்” என்று கார்த்திக் கேட்கும் காட்சி, இது மணிரத்னம் திரைப்படமா?? என்று சந்தேகம் அடைய செய்தது.

கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே நன்றாகதான் இருக்கிறது. ஆனால், இதே போன்ற திரைப்படத்தை யாராலும் எடுக்க முடியும், ”மணிரத்னம் உங்களிடம் இருந்து ஒரு புதிய, மாறுபட்ட திரைப்படத்தை அல்லவா எதிர்பார்கிறோம்”.

விக்ரம், ஐஸ்வர்யா எப்பொழுதுமே நன்றாக நடிப்பார்கள் . சந்தோஷ் சிவன் கேமரா எப்பொழுதுமே நன்றாக இருக்கும், ஏ.ஆர் ரஹ்மானின் இசையை பற்றி யாருக்கும் அறிமுகம் தேவை இல்லை. இவர்கள் வழக்கம் போல் இந்தபடத்திலும் ஒரு படி மேலே செல்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

திரைப்படத்தில் குறைசொல்வதற்க்கு ஒன்றும் இல்லை, ஒரு வித்தியாசமான திரைப்படத்தை எதிர்பார்த்து சென்றேன், அது கிடைக்கவில்லை அவ்வளவே!!

”ராவணன்” ஹிந்தியிலும் வந்து இருக்கிறது. ஹிந்தியிலும், தமிழிலும் ஒரே மாதிரி எடுத்து இருக்கிறார்கள் என்று கேள்வி. ஒருவேளை ஹிந்தியில் இந்த திரைப்படம் ஒரு மாறுபட்ட திரைப்படமாக இருக்கலாம். ஏனென்றால் “குரு” திரைப்படமும் அப்படிதான் இருந்தது. “ராவணன்” ஹிந்தியில் ஒரு மாபெறும் வெற்றிபடமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.

மணிரத்னத்தின் நேரடியான ஒரு தமிழ் திரைப்படத்திற்க்குகாக காத்துக்கொண்டு இருக்கிறேன். அது நடக்குமா???.

---------------------------------------------------------------------------------

”உசிரே போகுதே” பாடல், திரைப்படம் ஆரம்பத்திலேயே வந்துவிடுகிறது. அந்த காட்சியில்தான் விக்ரமிற்க்கு, ஜஸ்வர்யா மீது முதல் முறையாக ஒரு ஈர்ப்பு வருகிறது. ஆனால், அந்த பாடல் வரிகளோ காதலின் உச்சியில்,மோகத்தில் பாட வேண்டிய பாடல் வரிகள் அவை,

"ஒடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நெனைக்க ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல,
தவியா தவிச்சி, உசிர் தடங்கெட்டு திரியுதடி,
தைலான் குருவி என்னை தள்ளி நின்னு சிரிக்குதடி"


நடராஜர் சிலை முன்னால் விக்ரம் பேசும் போது, வந்து இருக்க வேண்டிய பாடல். எப்பொழுதும் பாடல்களை, காட்சிகளோடு சரியாக பொருத்தும் மணிரத்னம் இந்த பாடலை எப்படி தவறவிட்டார்!!!!!

Wednesday, June 16, 2010

பேயோன்

கடந்த சில நாட்களாக அவரின் வலைப்பதிவை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டு இருக்கிறேன். அப்படி ஒன்றும் உலகமகா கருத்துகள் எதுவும் அவர் சொல்லவில்லை. சொல்லபோனால் அவர் பதிவில் கருத்துகள் என்று ஒன்றுமே இல்லை, கதைகளும் இல்லை, கவிதைகளும் இல்லை, கட்டுரைகளும் இல்லை. ஆனால் எதோ ஒன்று அவரின் எழுத்துகளை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது. அவர் "எழுத்தாளர் பேயோன்". பேயோன் அதுதான்யா அவர் பெயர். அது என்ன பெயர் பேயோன் என்கிறீர்களா, உலகமகா எழுத்தாளர்கள் இப்படிதான் பெயர் வைத்துக்கொள்வார்களாம். இதுவும் அவர் சொன்னதுதான்.

அவர் வலைப்பதிவு முகவரி:http://www.writerpayon.com/

சில மாதஙகளுக்கு முன்னால், பா.ரா தான் இவரை பற்றி பதிவு எழுதி எனக்கு அறிமுகப்படுத்தினார். பேயானின் உண்மையான பெயர், வயசு, இருப்பிடம் போன்றவை யாருக்குமே தெரியாது. அதனால்தான், அவரால் இந்தளவு கேலியாகவும், கற்பனையாகவும் எழுத முடிகிறது.

பேயோன் twitter'மூலம்தான் முதலில் அனைவருக்கும் அறிமுகமானார். இவரின் 1000 ட்விட்கள் புத்தகமாக வந்து இருக்கிறது.

இவர் சோதனை முயற்சிக்காக எழுதுகிறாரா ?? இல்லை, இதுதான் அவர் எழுத்து நடையா என்று எதுவும் புரியவில்லை.

அவரைபற்றி ஒன்றும் அதிகமாக நான் புகழவில்லை. நீங்களே இந்த கவிதையை படித்துபாருங்கள். பின்னூடம் பார்த்துதான் எனக்கே இது கவிதை என்பது தெரியும்.

Thursday, June 3, 2010

Reality Show

"Reality Show", எனக்கு பிடிக்காத டி.வி நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இங்கு "இதுவும் ஒன்று" என்ற வார்த்தையை ஒரு சம்பிரதாயத்துக்காக பயன்படுத்தியிருக்கிறேன். இப்பொழுது எந்த சேனலை பார்த்தாலும் "Reality Show'கள்" மட்டும்தான் நடந்துக்கொண்டு இருக்கின்றன.

"நீயா, நானா?, சூப்பர் சிங்கர், மானாட மயிலாட" என்று பட்டியலை பெரியதாக்கிக்கொண்டே போகலாம் (எனக்கு பலவற்றின் பெயர்கள் கூட நினைவில் இல்லை).

சென்ற வாரம், ஒரு நிகழ்ச்சியில் " Dance Competition " என்று சொல்லி மேடையில் அமைத்த கொட்டும் அருவியில் இருவர் ஜல்சா பண்ணிக்கொண்டு இருந்தார்கள். சனிக்கிழமை இரவு 12க்கு வசந்த் டி.வி.யில் கூட இந்தளவு தெளிவாக காட்டமாட்டார்கள். நம்பாவிட்டால் நீங்களே ஒரு சனிகிழமை இரவு வசந்த் தொலைக்காட்சியை பாருங்கள்.

"Airtel Junior Super singer" என்று இன்னொரு அபத்தம். இந்த நிகழ்ச்சியால் எப்படி குழந்தைகள் மனதளவால் பாதிப்பு அடைகிறார்கள் என்பது, குழந்தைகள் வலைப்பதிவு எழுத தொடங்கினால் மட்டுமே நமக்கு புரியும்.

"நீயா, நானா?" நிகழ்ச்சியை பற்றி சாரு தனது வலைப்பதிவில் தெளிவாக எழுதி இருக்கிறார். எப்பொழுதும் எதைபற்றியும் கவலைப்படாமல், தனது மனதில் தோன்றியதை தெளிவாக எழுதும் சாரு, இதைபற்றியும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

அதன் முகவரி http://charuonline.com/blog/?p=594

Reality Show'வை பற்றி Jim Carrey நடித்து "truman show" என்ற திரைப்படம் 1998'ல் வெளிவந்தது. நேரம் கிடைத்தால் பாருங்கள்.

Monday, May 24, 2010

தேவதைகள் இல்லாத ஊர்

ஒரு சமூக அறிவியல் வகுப்பில்,
கடைசி பென்ச்சில் அமர்ந்து
எங்கள் ஊரின் தேவதைகள் பட்டியலை
உருவாக்கினோம்.

எங்கள் ஊரின் முதல் தேவதை
காணாமல் போனபோது,
நாங்கள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு
எழுதிக்கொண்டு இருந்தோம்.

சங்கர் "எனக்கு அப்பொழுதே தெரியும்,
ஒரு நாள் கடற்கரையில்
ஜோடியாக பார்த்தேன்" என்றான்.

எங்கள் ஊரின் இரண்டாவது தேவதை
காணாமல் போனபோது,
எங்கள் கணித வாத்தியாரும்
காணாமல் போய் இருந்தார்.

பனிரெண்டாம் வகுப்பில்
கணிதத்தில் மதிப்பெண் குறைந்ததற்க்கு
இதுதான் காரணம் என்று
அனைவரையும் நம்ப வைத்தோம்.

எங்கள் ஊரின் முன்றாவது, நான்காவது தேவதைகள்
காணாமல் போனது,
கல்லூரி விடுதியில் தங்கி படித்துக்கொண்டு
இருந்த எனக்கு சில நாட்கள் கழித்தே தெரிந்தது,

இதன் பின்னர் தேவதைகள் யாரும்
காணாமல் போகவில்லை.
ஆனால், எங்கள் ஊர் தேவதைகள் கடத்தப்பட்டார்கள்.

"தேவதைகள் கடத்தப்படுகிறார்கள்"
என்று நாங்கள் கூச்சலிட்டதை ஊர்மக்கள்
யாருமே கண்டுகொள்ளவில்லை.
மாறாக பூக்கள் தூவி தேவதைகளை
வழியனுப்பினார்கள்.

எங்கள் ஊரின் கடைசி தேவதை அகல்யா
முதிர்கன்னியாக சென்ற மாதம்
தற்கொலை செய்துகொண்ட போது,
அவள் வயது 34.

இப்பொழுது தேவதைகள் இல்லாத ஊரில்,
தேவதைகளை பற்றி
எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

Friday, May 14, 2010

உறவுகள்

"தான் நேசிக்குமளவு தன்னை மகள் நேசிக்கிறாளா என்ற கேள்வி எல்லா அப்பாக்களின் மனதிலும் இருந்து கொண்டேயிருக்கிறது போலும். உண்மையில் இது ஒரு ஆதங்கம். தன்னை போல வேறு ஒருவர் தன் மகளை நேசிக்க முடியாது என்ற உரிமை கொண்டாடுவது. அது முழுமையான நிஜமில்லை என்று தெரிந்த போதும் அந்த மனவலி தாங்க முடியாதது. ஆயிரம் வருசத்திற்கும் மேலாக இருந்து வரும் அப்பா மகள் உறவின் பிணைப்பு எளிய சொற்களால் புரிந்து கொள்ள முடியாதது" - எஸ். ராமகிருஷ்ணன்.

முழு கட்டுரை : http://www.sramakrishnan.com/view.asp?id=405&PS=1

இந்த கட்டுரையில் எஸ்.ரா, தந்தைக்கும் மகளுக்கு உள்ள உறவை பற்றி பேசுகிறார்.

ஒரு தந்தைக்கு மகளுக்கு உள்ள உறவு, விசித்திரமானது. அது யாராலும் எளிதாக விவரிக்க முடியாது.

எனது அக்கா, அப்பாவின்தோளில் கைப்போட்டு தெருவில் நடந்து சென்ற நாட்கள், என் நினைவில் எப்பொழுதும் இருக்கிறது. அவர்கள் நண்பர்களை போல்தான் பழகினார்கள். ஆனால் அதே மகள், "தான் ஒருவரை விரும்புகிறேன், அவரைதான் திருமணம் செய்வேன்" என்று சொல்லியபோது, என் அப்பாவால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். எப்படியும் தன் மகள், தன் பேச்சைதான் கேட்பாள் என்று நினைத்தார், அக்காவின் மனதை மாற்ற எவ்வளவோ பேசி பார்த்தார்.

தன்னைவிட யாராலும் தன் மகள் மீது இந்தளவு அன்பு செலுத்த முடியாது என்று எண்ணிக்கொண்டு இருந்த என் அப்பாவிற்கு, அது ஒரு பெரிய எமாற்றம்தான். கடைசியில் என் அக்காவே ஜெயித்தாள். அவர்கள் திருமணம் என் அப்பாவின் சம்மதத்தோடு இனிதே நடைப்பெற்றது. உண்மையில் சொல்ல போனால், இது என் அப்பாவின் வெற்றியே.

திருமணம் முடிந்து, கணவர் வீட்டுக்கு அக்கா செல்லும் போது, என் அப்பாவும் அக்காவும், கட்டிப்பிடித்து அழுத காட்சி ஒன்றே போதும், அவர்களின் பாசத்தையும் உறவையும் சொல்வதற்க்கு.

தன் மகளுக்குகாக தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொண்டார். தன்னையே மாற்றிக்கொண்டார். இதன் காரணமாகவே நான் என் அப்பா மீது வைத்து இருந்த மரியாதை பலமடங்கு உயர்ந்தது.

தந்தைக்கும் மகளுக்மான உறவு எல்லா காலங்களிலும், எல்லா தேசங்களிலும் ஒரே மாதிரிதான் இருந்து இருக்கிறது, இருந்துகொண்டும் இருக்கிறது. இதை எஸ்.ரா, தன் "லியரின் மகள்" கட்டுரையில் தெளிவாக சொல்கிறார்.

Thursday, May 13, 2010

ஒரு எதிரி உருவான கதை

உங்களால் மட்டுமே எனக்கு
உதவ முடியும்
என்று நம்பிக்கொண்டு இருந்தேன்.

எங்கள் முதல் சந்திப்பில்,
முதல் பேச்சில்,
முதல் புன்னகையில்,
முதல் சண்டையில்,
முதல் பேச்சுவார்த்தையில்,
எல்லாவற்றிலும் நீங்களும்
இருந்தீர்கள்.

பல நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டு
இருந்தீர்கள்,
சில நேரம் உள்ளே புகுந்து
உங்களால் ஆனவற்றை
நடித்து காட்டிக்கொண்டு இருந்தீர்கள்.

எப்பொழுதும் என்னுடனே இருந்த உங்களுக்கு,
ஒரு நொடிகூடவா தோன்றவில்லை
"எனக்கு உதவி தேவை" என்று.

கடைசியாக,
நீங்களே எனக்கு வில்லனாக மாறியதை
இன்னும் என்னால்
நம்ப முடியவில்லை.

கேட்காத உதவிகளும் எதிரிகளை
உருவாக்கும் என்பதை
இப்பொழுது புரிந்து கொண்டேன்.

Friday, May 7, 2010

So what?

இப்பொழுது எல்லாம் அசோக்கிற்க்கு எதைப் பற்றி பதிவு எழுதுவது என்றே தெரியவில்லை. "இனிமேல், சொந்த அனுபவங்களை பதிவாக எழுத மாட்டேன்" என்று அவளிடம் சத்தியம் செய்ததில் இருந்துதான் இந்த பிரச்சனை. நமது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மட்டுமே புனைவுகளாக எழுத முடியும் என்று நம்புகின்றவன் அசோக். அவன் போய் இப்படி ஒரு சத்தியம் செயதால், பின் எப்படி அவனால் பதிவுகள் எழுத முடியும்.

கற்பனை கதைகளை எழுத அசோக் முயற்சி செய்தான், சிலவற்றை பதிவும் செய்தான். அவை எல்லாம் சுறா திரைப்படதை விட கேவலமான தோல்வியில் முடிந்தது. எஸ்.ராவின் "நகுலன் வீட்டில் யாரும் இல்லை" என்ற புத்தகதை படித்து முடித்த அன்றே அவன் எழுதிய கதைதான் "எது கற்பனை". அந்த கதையை எழுதி முடித்த பிறகு, அதை எஸ்.ராவிற்க்கு மெயில் அனுப்பலாம் என்று நினைத்தான். அந்த அசம்பாவிதம் மட்டும் நடந்து இருந்தால், எஸ்.ரா தற்கொலைக்கு முயற்சி செய்து இருப்பார். அசோக்கின் நண்பன் பேரின்பா எப்பொழுது சொல்வான், "நீ, மற்றவர்களின் பாதிப்பு டா". அது உண்மைதான் போல.

அடுத்து அவன் எழுதிய "இதோ, ஒதோ" கதையும் நூறு சதவீதம் கற்பனை கதைதான்.ஆனால், பலர் அதை நம்ப மறுத்து விட்டார்கள். ராகுல் மட்டும்தான் சரியா கண்டுபிடித்தான் "machi, ur girl is missing da" என்றான்.

இந்த அசோக்கிற்க்கு எப்பொழுதும் ஒரு பிரச்சனை உண்டு, தான் சொல்ல நினைப்பதை சரியாக சொல்ல தெரியாது. இந்த மொக்கை பதிவை இவ்வளவு நேரம் படிக்கும் உங்களுக்கே இது நன்றாக தெரிந்து இருக்கும். எதை பற்றி சொல்ல நினைக்கிறானோ, அதை தவிர்த்து மற்ற அனைத்தை பற்றியும் பேசுவான் என்று. இப்பொழுது கூட பாருங்கள் அவன் சொல்ல வந்தது அந்த nikkle'யை பற்றிதான். அசோக்கின் வலைபதிவை ஒருவர் பொறுமையாக படிப்பதே பெரிய விசயம், அதிலும் படித்துவிட்டு ஒருவர் பின்னூடம் எழுதியிருந்தால் அவர் எந்தளவு பொறுமைசாலியாக இருப்பார். nikkle'னின் பின்னூடத்திற்க்கு பதில் அளிக்கிறேன் என்று சொல்லி அந்த பொறுமைசாலியை tension ஆக்கிட்டான் இந்த அசோக். நல்லவேளை இப்பொழுது இருவருமே சமாதானம் அடைந்து நண்பர்களாக மாறிவிட்டார்கள்.

இந்த பின்னூடம் பற்றி சொல்லும் போது, இந்த சுப்புரமணியை பற்றி சொல்லியே ஆகவேண்டும். அசோக்கின் எல்லா பதிவுக்கும் பின்னூடம் அளிக்கும் ஒரே மனிதன் இந்த சுப்புரமணி மட்டும்தான். அசோக், அந்த சத்தியத்திற்க்கு பின் எதை பற்றி எழுதுவது என்று தெரியாமல் ஒரு பாடலின் வரிகளை பதிவாக போட்டான். அந்த பதிவுக்குகூட சுப்புரமணி பின்னூடம் போட்டு "super" என்றான். அப்படிபட்ட நல்ல உள்ளம் படைத்தவன் சுப்புரமணி. அசோக் சொஞ்ச நாட்களுக்கு முன்னால் தன் வலைபதிவில் இருந்து எல்லா பதிவுகளையும் அழித்த போது, அசோக்கைவிட சுப்புரமணி ரொம்ப வருத்தப்பட்டான். எனென்றால் "அவனுடைய எல்லா பின்னூடங்களும் அழிந்து விட்டதாம்."

நம்ம அசோக் அவளிடம் சத்தியம் செய்த பிறகு, வலைப்பதிவில் என்ன எழுதுவது என்று தெரியாமல், இரவு 10 மணி அளவில் குப்புறபடுத்து யோசனை செய்து கொண்டு இருந்தான். மின்சாரம் நின்று விட்டது. மீண்டும் 11க்கு தான் வரும். சென்னையிலாவது பாராவாயில்லை, தினமும் இரண்டு மணிநேரம்தான் மின்சாரம் கட், நீடாமங்கலம் பக்கம் வந்து பாருங்கள். இரண்டு மணிநேரம்தான் மின்சாரம் இருக்கும். சட்டசபையில் தாத்தா சொல்கிறார் "தமிழக்கத்தில் மின்சார பஞ்சமே இல்லையாம்". அரசியல் இங்கே வேண்டாம் பாஸ். நாம் அசோக்கின் கதைக்கே போவோம் என்கிறீர்களா??. கதையா, அவ்வளவுதான் கதை முடிந்துவிட்டது. இதைதான் அசோக் இந்த வாரம் வலைபதிவில் எழுத போகிறான். என்ன தலைப்புதான் கிடைக்கவில்லையாம்.

பின் அந்த சத்தியம் என்ன ஆச்சு?? என்கிறீர்களா. நானும் அதைதான் அவனிடம் கேட்டேன். அதற்க்கு அசோக் சொன்ன பதில் " so what ??". கடைசியாக தலைப்பும் கிடைச்சாச்சு.

Thursday, April 8, 2010

அங்காடித் தெரு

வசந்தபாலனின் "வெயில்" திரைப்படத்தை பார்த்துவிட்டு என் நண்பன் திரையரங்கில் உட்கார்ந்து அழுதுக்கொண்டு இருந்தது, இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதுவரை அவன் அழுது நான் பார்த்ததே இல்லை. இதுவே வசந்தபாலனின் அடுத்த படைப்பான "அங்காடித் தெரு" மீது எனக்கு ஒருவித ஈடுபாட்டை உண்டு பண்ணியது.

ஒருவித பயத்தோடுதான் இந்த திரைப்படத்தை பார்க்க போனேன். இதுவரை நான் எதிர்பார்ப்போடு பார்த்த எந்த திரைப்படமும் நன்றாக இருந்தது இல்லை. அப்படி நான் பார்த்து மறக்க முடியாத ஒரு திரைப்படம் "மாயக்கண்ணாடி". "தவமாய் தவமிருந்து"படத்தை எடுத்த சேரனா அது??.

"அங்காடித் தெரு"வை பற்றி எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை. முதலில் இந்த படத்தைப்பற்றி எழுதுவதற்க்கு, நான் முற்றிலும் தகுதியற்றவன். வாழ்வின் இன்பங்களை மட்டுமே பார்த்து வளர்ந்தவன் நான். ஆனால், வாழ்க்கையில் துன்பங்களை மட்டுமே கொண்டவர்களின் கதை இது. என் நண்பன் எப்பொழுதும் என்னிடம் ஒன்று சொல்வான் " For some ppls, life is more complicated".

ஜெயமோகனின் வசனங்கள் படம் முழுவதும் நம்மை கலங்க வைக்கின்றன. "இந்த உலகத்தில் அவன் ஒருத்தனிடமாவது, நான் சூடு, சொரனையுடன் இருக்கிறேனே!!" என்று தன் தோழியிடம், அஞ்சலி சொல்லும் வசனம் ஒன்றே போதும் ஜெயமோகனை பற்றி சொல்வதற்க்கு.

இரண்டே நிமிடங்கள் வந்தாலும் அஞ்சலியின் அப்பா கதாபாத்திரம் நம்மை முற்றிலும் பாதித்துவிடுகிறது. கேமராவும், பின்னனி இசையும் படத்திற்க்கு ஒரு பெரிய மைனஸ். இதன் காரணமாக திரைப்படத்தை பார்க்கும்போது ஒரு சலிப்பு உண்டாகிறது.

அஞ்சலியை பற்றி எதாவது கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். "கற்றது தமிழ்"க்கு பிறகு மீண்டும் அதை போன்றே சோகமும், குறும்பும் சேர்ந்த ஒரு கதாபாத்திரம். அருமையாக நடித்து உள்ளார்.

திரைப்படத்தின் கதை: இதை பற்றி ஏற்கனவே பலர் எழுதிவிட்டனர். எனக்கு சோகக்கதைகளை சோகமாக எழுத தெரியாது, ஆகவே கதையை இங்கே கொலை செய்ய விரும்பவில்லை.

திரைப்படத்தை பார்க்கும் யாரும் ஒரு நிமிடம் கூட தொடர்ந்து சிரித்துவிட கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் வசந்தபாலன் இந்த படத்தை எடுத்து இருக்கிறார். ஆனால், சங்கமம் திரையரங்கில் எனது அருகில் அமர்ந்து படம் பார்த்துகொண்டு இருந்த ஒரு காதல் ஜோடி படம் முடியும்வரை பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். எனது நண்பன் சொன்னது போல் " life is more complicated, only for some ppls "

Thursday, April 1, 2010

கேட்டதில் பிடித்தது

காரணங்கள் இல்லாமலேயே நமக்கு சில பாடல் வரிகள் பிடித்துவிடும். அப்படி எனக்கு சமீபத்தில் பிடித்த பாடல் வரிகள் , "முந்தினம் பார்த்தேனே" திரைப்படத்தில் வரும் "பேசும் பூவே" . அந்த வரிகள்,

பெண்ணே
உன் கண்களா
உன் கன்னமா உன் பின்னலா
உன் தேகமா உன் ஆசையா
உன் வார்த்தையா உன் வாசம்தான்
எனை ஈர்த்ததா?
உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன் பார்வையா
உன் அன்புதான் எனை ஈர்த்ததா?


ஒரு பெண் நம்மை ஈர்ப்பதற்கு இத்தனை காரணங்கள் இருக்கிறது என்பதை இப்பொழுதுதான் புரிந்துக்கொண்டேன்.

------------------------------------------------------------

எப்படியாவது அங்காடித் தெரு திரைப்படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று நினனத்தேன். ஆனால் அக்காவின் கல்யாண வேலைகளால் படத்தை பார்க்க முடியவில்லை. திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் படத்தை புகழ்கிறார்கள், வசந்தபாலனுக்கு வாழ்த்துகள். விரைவில் இந்த திரைப்படத்தை பற்றி எழுத எனக்கு ஆசை.