எதற்காகக் குப்பையை வெளியேற்ற வேண்டும்,
நான்தான் வெளியேறிருக்க வேண்டும்,
எப்பொழுதோ.
பல யுகங்களுக்கு முன்னால், ஊர் ஊராகச் சென்று கதை சொல்லும் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் புகழ் நாடு முழுவதும் பரவியிருந்தது. அவன் எப்பொழுதும் வார்த்தைகளை மூட்டையில் கட்டி, அவன் செல்லும் ஊர்களுக்கெல்லாம் எடுத்துச் செல்வான். அவன் எந்தக் கதையையும் திட்டமிட்டுச் சொல்வதில்லை; மூட்டையைப் பிரித்து, அதில் கிடைக்கும் முதல் வார்த்தையிலிருந்து கதை சொல்லத் தொடங்குவான். அவன் ஊரில் நுழைந்தவுடனேயே கதைகள் சொல்ல ஆரம்பிப்பதில்லை. முதலில், அந்த ஊர் முழுவதையும் சுற்றிப் பார்ப்பான்; பின்னர் அந்த ஊர் மக்களைக் கூர்ந்து கவனித்து, அவர்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்வான். ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேச மாட்டான். ஊரில் உள்ள அனைவரும் அவன் எப்பொழுது கதை சொல்லத் தொடங்குவான் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அதன் பின்னர்தான் கதை சொல்லத் தொடங்குவான்.
அவன் எந்த நேரத்திலும் கதை சொல்லத் தொடங்குவான் என்பதை ஊர் மக்களும் அறிந்தே இருந்தார்கள். எனவே, அவனை இருபத்தி நான்கு மணி நேரமும் ஊர் மக்கள் கண்காணித்துக்கொண்டே இருந்தனர். சில ஊர்களில், ஒரு மாதம் வரைகூடக் கதை சொல்லாமல் ஊரைச் சுற்றி இருக்கிறான்; ஆனால் அதற்காக ஊர்மக்கள் யாரும் அவனைக் குற்றம் சொல்வதில்லை.
ஊர்மக்கள் வீட்டுக்கு ஒருவர் வீதம் தினமும் அவனைக் கண்காணிப்பார்கள். கண்காணிப்பாளன் தயாராக எப்பொழுதும் கையில் ஒரு மணியை வைத்திருந்தான். அவன் கதை சொல்ல ஆரம்பித்தவுடனேயே கண்காணிப்பாளன் அந்த மணியை அடித்து, ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிவித்துவிடுவான். சில நிமிடங்களிலேயே அந்த இடம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும். தான் வைத்திருக்கும் மூட்டையிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாகக் கோர்த்து, கதையைச் சொல்லிக்கொண்டே போவான். சில கதைகள் இரண்டு நாள் வரை போகும்; சில கதைகள் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும். அவன் சொல்லும் கதைகளில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது; "நல்லவன், கெட்டவனை" பார்வையாளன்தான் முடிவு செய்ய வேண்டும்.
கதை சொல்லி முடித்த அடுத்த நொடியே, அவன் தான் உபயோகப்படுத்திய எல்லா வார்த்தைகளையும் மீண்டும் மூட்டை கட்டி, அந்த ஊரை விட்டுப் புறப்பட்டுவிடுவான். அவன் அடுத்து எந்த ஊருக்குப் போகிறான் என்பது யாருக்கும் தெரியாது. அவன் போய் ஆறு மாதங்கள் ஆன பின்பும், அந்த ஊரில் அவன் சொன்ன கதையைப் பற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்கள்.
அவன் சொந்த ஊர், அவனுடைய குடும்பம் இதைப் பற்றி யாருக்குமே தெளிவாகத் தெரியாது. ஆனால், அவனைப் பற்றிச் சில மர்மமான கதைகள் மக்களிடையே பரவியிருந்தன. அவனுடைய அப்பா வடக்குப் பகுதியில் உள்ள ஊரின் பெரிய செல்வந்தர். அவருடைய நண்பன் ஒருவனால் வஞ்சிக்கப்பட்டு, தனது செல்வங்கள் முழுவதையும் இழந்துவிட்டார். கடைசியாக அவரிடம் மிஞ்சியது வார்த்தைகள்தான். தன் மகனுக்குத் தன்னால் எந்தவொரு சொத்தையும் தர முடியவில்லையே என்று வருத்தப்பட்ட அவர், தன்னிடம் கடைசியாக மிஞ்சிய வார்த்தைகளையெல்லாம் ஒரு மூட்டையில் கட்டி, அதைத் தனது மகனுக்குத் தந்துவிட்டு இறந்துவிட்டார். அன்று முதல் இவன் வார்த்தைகளைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறான்.
அவன் இதுவரை எந்தவொரு வார்த்தையையும் தொலைத்தது இல்லை. அதே போல், இதுவரை எந்தவொரு வார்த்தையையும் புதிதாக அந்த மூட்டையில் சேர்த்ததும் இல்லை. அவனுடைய எல்லாக் கதைகளிலும் அதே வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்தன. வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் வருமே தவிர, அவனுடைய கதைகளெல்லாம் வித்தியாசமாகவே இருக்கும். ஒருமுறை சொன்ன கதையை மீண்டும் அவன் சொல்வதில்லை.
அப்படி அவன் சொன்ன பல கதைகள் இன்னும் எங்கள் ஊரில் பிரபலம். முடிந்தால் உங்களுக்கு அவற்றைச் சொல்கிறேன்.
Keep the end very short otherwise memories will burn you
its true, i am burning by life.