முன்குறிப்பு:
எல்லோருக்கும் வரும் ஆசைதான்.
நண்பன் ஒருவன், "குறும்படம் ஒன்றை எடுப்போம்" என்று சொல்ல, சும்மா திரைக்கதையாக ஒரு கதையை எழுதி பார்ப்போமே என்று ஆரம்பித்தது.
ரமேஷ் பிரேம் "மகாமுனி" தொகுப்பில் வரும் ஒரு பக்கக் கதை இது.
வழக்கம் போல் இதையும் பாதியில் விட்டாச்சு.
கிட்டத்தட்ட பதினைந்து வருடத்திற்கு முன்னால் எழுதியது.
ஆனால் நண்பன் இன்னும் எப்படியாவது ஒரு குறும்படத்தையாவது எடுத்துவிட வேண்டும் என்று வெறிகொண்டு அலைகிறான்.
நான் அவன் வரும் பக்கம் அறிந்துகொண்டு இரண்டு கிலோமீட்டர் சுற்றிச் செல்கிறேன்.
(சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ஒரு மரத்தின் நிழலில் ஒரு சிறுவன் உட்கார்ந்து இருக்கிறான்.) (காட்சி நடக்கும் வருடம் 1995 வருடம் போல் தோன்ற வேண்டும். ஆனால் வருடத்தை காட்ட தேவையில்லை).
முருகேஷ் (கேமராவைப் பார்த்து):
வணக்கம்.
என் பெயர் முருகேசன்.
அப்பா என்னை முருகேஷ்னுதான் கூப்பிடுவார்.
அதோ அங்கு இடிச்சு கிடக்குதுல ஒரு கொட்டகை. அங்கதான் அப்பா கடை வைத்திருந்தார்.
பஞ்சர் கடை.
இந்தக் கடற்கரைச் சாலையில் எங்க கடையை விட்டா, அடுத்த கடைக்கு பத்து கிலோமீட்டர் வரை போகணும்.
எங்க அப்பா பஞ்சர் பார்க்காத காரே இல்லை.
சோப்பு டப்பா சைஸ் கார், கப்பல் சைஸ் கார், பத்து வீல் இருக்கும் கார் என்று எத்தனையோ கார்களுக்கு அவர்தான் பஞ்சர் பார்ப்பார்.
சில நேரங்களில் வண்டி பஞ்சராகி ரொம்ப தூரத்தில் நிக்குதுனு சொல்லி, அவரை அழைத்துப் போக ஆள் வரும்.
ஒருதடவை அப்படித்தான்.
நல்ல மழை.
காரில் இரண்டு பேர் வந்தாங்க.
இன்னொரு கார் பஞ்சர் ஆயிடுச்சுனு சொல்லி, எங்களை அவங்க காரில் அழைச்சுட்டுப் போனாங்க.
காருக்குள் நுழைந்தவுடனே ஏதோ சென்ட் வாசனை கும்முனு மூக்கில் ஏறுச்சு.
காருக்குள்ளேயே டி.வி., ப்ரிட்ஜ் எல்லாம் இருந்துச்சு.
அன்னைக்கு நைட் அப்பா அந்தக் காரை வைத்து நிறைய கதை சொன்னார்.
நான், அம்மா, தம்பி, அப்பா எல்லோரும் காரில் சென்னைக்கு போறோம்.
அப்புறம் கடற்கரையில் எங்க கார் கப்பல் மாதிரி மிதக்குது.
அப்பா சொன்ன கதை எனக்கு சரியா ஞாபகம் இல்லை.
எங்க அப்பா இதுமாதிரி நிறைய கதை சொல்வார்.
எல்லாம் நிஜம் மாதிரியே இருக்கும்.
அம்மா சொல்லும்:
"இப்படியே கதை சொல்லித்தான் என் அப்பனையும் ஏமாத்திட்டாருனு."
அம்மாவுக்கு அப்பா சொல்ற கதைகளெல்லாம் ரொம்ப பிடிக்கும்.
ஆனா அதை பிடிச்ச மாதிரி காட்டிக்க மாட்டாங்க.
நைட்ல சாப்பிடும்போது நைசா அம்மா கேட்பாங்க:
"ஏன்டா முருகா, நேற்று உங்க அப்பா சின்ன வயசுல தனியா சுடுகாட்டுக்குப் போய் மாட்டிக்கிட்டேனு ஒரு கதை சொன்னாரே... அப்புறம் என்னாச்சு?"
எங்க அப்பா, அம்மா சொன்னது எதுவுமே கேட்காத மாதிரி, என் கிட்ட கதை சொல்ல ஆரம்பிப்பார்.
**********************************************************************
காட்சி 2: (அதே இடம். ஆனால் ஒரு இரண்டு மூன்று வருடம் பின்னோக்கி போகிறோம். மீண்டும் எங்கேயும் வருடத்தை காட்ட தேவையில்லை. இப்பொழுது அங்கு இடிந்த போன கொட்டகையில் ஒரு பஞ்சர் கடை உள்ளது. அந்த கடையில் அப்பாவும் முருகேஷும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கிழக்கு கடற்கரை சாலை கொஞ்சம் சிறியதாக உள்ளது. )
(பஞ்சர் கடையில் முருகேஷும் அப்பாவும் பேசிக்கொள்வது போல்)
அப்பா:
"டேய் முருகேஷ், என்னடா காலையிலிருந்து ஒரு கிராக்கியும் காணோம்."
இப்படி சொன்னாலே அப்பா ஏதோ கதை சொல்லப் போகிறார் என்று அர்த்தம் என்பதை முருகா நன்றாகவே உணர்ந்திருந்தான்.
வழுவழு என்று இருந்த கடற்கரைச் சாலையில் வண்டிகள் பறந்துகொண்டு இருந்தன.
முன்னால் கிடந்த ஒரு பழைய டயர் அருகில் ஒரு மரவட்டை, ரயில் வண்டியைப் போல் ஊர்ந்துகொண்டு இருந்தது.
அப்பா:
"முருகேஷா, நம்ம ஊருல மரவட்டைகள் அதிகமாக இருக்கும் காரணம் தெரியுமா?
முன்னாடி இங்க மக்கள் யாருமே இருக்க மாட்டாங்களாம்.
மீன் பிடிக்கிறவங்களெல்லாம் படகை இந்தப் பக்கம் கொண்டு வரவே மாட்டாங்களாம்.
நம்ம கும்மினி ஊருலயே நிறுத்திடுவாங்களாம்.
ஏன்னு தெரியுமா?
அந்தக் காலத்தில் நம்ம ஊரை மரவட்டைகள்தான் ஆட்சி செய்ததாம்.
இந்தப் பக்கம் எந்த மனிதனும் வர இந்த மரவட்டைகள் அனுமதிக்காதாம்.
ஊரைச் சுற்றி புதைகுழிகள் நிறைய உண்டுபண்ணி வைத்திருந்துச்சுங்க இந்த மரவட்டைகள்.
இந்த ஊருக்குள் யாரு நுழைந்தாலும், ஏதாவது ஒரு புதைகுழியில் விழுந்து செத்துப் போயிடுவாங்களாம்.
அதனாலயே மக்கள் யாரும் இந்தப் பக்கம் வரமாட்டாங்களாம்.
மரவட்டைகளும் சந்தோஷமா இருந்துச்சுங்க.
இங்க ஒரு ராஜா மரவட்டைதான் ஆட்சி செய்துச்சாம்.
நம்ம ரங்காயி கடை பக்கத்தில் ஒரு பழைய மண்டபம் இருக்குல்ல?
அதுதான் ராஜா மரவட்டையின் அரண்மனை.
நம்ம ராஜா மரவட்டைக்கு இரண்டு ராணிகள்.
ராஜா மரவட்டை ஆட்சியில் எல்லா மரவட்டைகளும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சுங்க."
முருகா அப்பாவிடம் ஒரு கேள்வியை எழுப்பினான்.
முருகா:
"எப்படிப்பா, இதுதான் ராஜா மரவட்டைன்னு கண்டுபிடிக்கிறது?
எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கும்?"
அப்பா:
"முருகேஷு, அதெல்லாம் மரவட்டைகளுக்குத் தெரியும்டா.
நமக்குத்தான் எல்லா மரவட்டையும் ஒண்ணா தெரியும்.
அதுங்களுக்கு இது ராஜா, இது மந்திரி, இது தளபதின்னு தெரியும்."
முருகா:
"மரவட்டைகளுக்கு மந்திரி, தளபதியெல்லாம் இருக்காப்பா?"
அப்பா:
"ஆமாம்டா, எல்லாம் இருக்கு."
(கதையை நம்பாதவனாக முருகேஷின் முகம் மாறுகிறது. அவன் இந்தக் கதையை நம்புவதற்கு இப்போது அப்பா ஏதாவது சொல்லியாக வேண்டும்.)
அப்பா:
"டேய் முருகேஷ்...
மரவட்டைகள் முதுகில் இருக்கும் கோடுகளை வைத்து, அது ராஜாவா, ராணியா, மந்திரியா, தளபதியான்னு சொல்லிடலாம்.
சிகப்பு கலரில் கோடு இருந்தா அது சாதாரண மரவட்டை.
மஞ்சள் கலரில் இருந்தா அது ராணி மரவட்டை.
பச்சை கலரில் இருந்தா அது ராஜா மரவட்டை."
முருகா:
"அப்ப மந்திரி, தளபதியெல்லாம்?"
அப்பா:
"ஆமாம்டா, அதுகளுக்கும் கலர் இருக்கு.
அது என்னன்னா...
ம்..."
(கொஞ்சம் யோசித்த பின்)
"தளபதின்னா நீலம்.
மந்திரின்னா கருப்பு கோடு."
(டயர் அருகில் சுற்றிக்கொண்டு இருந்த மரவட்டை இப்போது சாலைக்கு அருகில் சென்று இருந்தது.)
ஒடிப்போய் அந்த மரவட்டையின் முதுகை முருகேஷ் பார்க்கிறான்.
முருகா:
"அப்பா!
முதுகு சிகப்பு கலருப்பா!
இது சாதாரண மரவட்டை."
(இப்போது மரவட்டை அந்தச் சாலையைக் கடப்பது போல் கருப்பான சாலையின் மேல் ஏறுகிறது.)
மீண்டும் அப்பா அருகில் முருகேஷ் வருகிறான்.
முருகா:
"அப்பா...
சாதாரண மரவட்டை ராஜா மரவட்டையாக மாற முடியாதா?"
(இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல அப்பா வாய் திறக்கும் முன்பே, அந்த மரவட்டை ஒரு டூ-வீலரின் சக்கரத்தில் அடிபட்டு நசுங்கிப் போகிறது.)
*******************************************************************
காட்சி 3
(காட்சி ஒன்று நடைப்பெற்ற இடம். இப்பொழுது கிழக்கு கடற்கரை சாலையில் விரிவாக்க பணிகள் நடந்து இரண்டு வழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.கடற்கரைச் சாலையில் இருக்கும் ஒரு மரத்தின் நிழலில் முருகேஷ் உட்கார்ந்து இருக்கிறான். இன்னொரு சிறுவன் பள்ளிக்குச் செல்கிறான்.)
பள்ளிச் சிறுவன்:
"டேய் முருகா, இன்னைக்கும் ஸ்கூலுக்கு வரலையா?
என்னடா, எப்ப பார்த்தாலும் இங்கேயே உட்கார்ந்து இருக்க?"
(முருகன் சாலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.)
பள்ளிச் சிறுவன்:
"இரு... வாத்தியார் கிட்ட சொல்றேன்."
(காட்சி மாறுகிறது. காட்சி 2 நடைபெற்ற காலம். பஞ்சர் கடையில், முருகேஷ், அப்பா மற்றும் அப்பாவின் நண்பர்.)
அப்பா:
"இப்ப யாரு இந்த ரோட்டை விரிவுபடுத்தச் சொல்லி கெஞ்சியது?
ஏற்கனவே வண்டிகளெல்லாம் ஜெட் வேகத்தில் போய்க்கிட்டு இருக்கான்.
இதுல இதை நான்கு வழிப் பாதையா மாற்றப் போறாங்களாம்.
நம்ம கடைகளெல்லாம் அடிபடும்னு பேசிக்கிறாங்க."
நண்பர்:
"ம்...
அதெல்லாம் கவலைப்படாதீங்க அண்ணே.
ரோட்டை விரிவுபடுத்தினா கூட நமக்கு ஒரு வழி கிடைக்காமலா போயிடும்?
ரோடு பெரிசா இருந்தா நமக்குத்தானே நல்லது."
அப்பா:
"நீ வேற...
இப்பவே இந்த ரோட்டை கடக்க முடியல.
எந்த வண்டிக்காரன் எப்ப வந்து இடிப்பானோன்னு பயமா இருக்கு.
நாமலாவது பரவாயில்லை...
பாவம் இந்த மரவட்டைகள்.
அப்படி எங்குதான் போக ஆசைப்படுங்கலோ!"
***********************************************************************
(அதே கடற்கரைச் சாலை. காலையில் பள்ளி செல்லும் நேரம்.)
முருகேஷ் அதே மரத்தடியில் உட்கார்ந்து இருக்கிறான்.
அவன் அருகில் ஒரு பழைய டயர் துண்டு.
சாலையில் வண்டிகள் பறந்துகொண்டு இருக்கின்றன.
ஒரு மரவட்டை சாலையை நோக்கி ஊர்ந்து செல்கிறது.
முருகேஷ் வேகமாக எழுந்து, அதை எடுத்து சாலையிலிருந்து தூரமாக மணலில் விடுகிறான்.
அது மீண்டும் சாலையை நோக்கி திரும்புகிறது.
(அதே நேரம். பள்ளிக்கூடச் சீருடையில் இரண்டு சிறுவர்கள் நடந்து செல்கிறார்கள்.)
சிறுவன் 1:
"டேய் முருகா, இன்னைக்கும் ஸ்கூலுக்கு வரலையா?"
முருகேஷ் பதில் சொல்லவில்லை.
சிறுவன் 2:
"விடுடா... அவன் இனிமே ஸ்கூலுக்கு வரமாட்டானாம்."
இருவரும் நடந்துகொண்டே போய்விடுகிறார்கள்.
முருகேஷ் சாலையையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
(சாலையின் மறுபக்கம்.)
ஒரு JCB இயந்திரம்.
சில ஆட்கள்.
உடைந்த சிமெண்டு தூண்கள்.
சிதறிக்கிடக்கும் ஓடுகள்.
முருகேஷ் மெதுவாக எழுந்து அங்கே செல்கிறான்.
மண்ணில் பாதியாக புதைந்திருக்கும் ஒரு பழைய பலகை.
அதில் தெரியும் சில எழுத்துகள் மட்டும்:
"...ஞ்சர் கடை"
அதை எடுத்து துடைக்கிறான்.
கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
மீண்டும் கீழே வைக்கிறான்.
(மாலை.)
முருகேஷின் அம்மா சாலையில் நடந்து வருகிறாள்.
அம்மா:
"முருகா..."
முருகேஷ் திரும்பவில்லை.
அம்மா:
"வீட்டுக்கு வாடா."
முருகேஷ் அமைதியாக இருக்கிறான்.
அம்மா:
"என்னடா தினமும் இங்கயே வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்க?"
முருகேஷ் சாலையைப் பார்த்தபடியே கேட்கிறான்.
முருகேஷ்:
"அம்மா..."
அம்மா:
"என்னடா?"
முருகேஷ்:
"அப்பா சொன்னாருல..."
அம்மா:
"ம்..."
முருகேஷ்:
"ராஜா மரவட்டை... ராணி மரவட்டை..."
அம்மா:
"ம்..."
முருகேஷ்:
"அந்த ராஜா மரவட்டை இப்ப எங்க இருக்கும்?"
அம்மா பதில் சொல்லவில்லை.
முருகேஷ் கொஞ்ச நேரம் யோசிக்கிறான்.
பிறகு மெதுவாகக் கேட்கிறான்.
முருகேஷ்:
"அது கூட ரோட்டைக் கடக்கும்போது அடிபட்டிருக்கும் இல்லம்மா?"
அம்மா திடீரென்று முகத்தைத் திருப்பிக்கொள்கிறாள்.
கண்களில் நீர்.
தொலைவில் ஒரு லாரி வேகமாகக் கடந்து செல்கிறது.
(இரவு.)
சாலை வெறிச்சோடி இருக்கிறது.
தொலைவில் லாரி விளக்குகள்.
முருகேஷ் தனியாக நடந்து வருகிறான்.
சாலையின் ஓரத்தில் ஒரு மரவட்டை.
அதை எடுத்து கையில் வைத்துக்கொள்கிறான்.
மரவட்டையின் முதுகைப் பார்க்கிறான்.
பச்சை நிறக் கோடு.
முருகேஷின் முகத்தில் ஒரு சிறிய அதிர்ச்சி.
அவன் சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கிறான்.
மீண்டும் மரவட்டையைப் பார்க்கிறான்.
முருகேஷ் (மெதுவாக):
"ராஜா மரவட்டை..."
அதை மிகவும் கவனமாக இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு சாலையின் மறுபக்கம் நடக்கிறான்.
புதர்களுக்கு அருகில் அதை விடுகிறான்.
மரவட்டை மெதுவாக ஊர்ந்து இருளுக்குள் மறைகிறது.
முருகேஷ் அதையே பார்த்துக்கொண்டு நிற்கிறான்.
கண்கள் கலங்குகின்றன.
தொலைவில் ஒரு லாரி ஹார்ன்.
முருகேஷ் மெதுவாகச் சொல்கிறான்:
"உனக்கும் ரோட்டைக் கடக்கத் தெரியாதாப்பா..."
அவன் சாலையைப் பார்க்கிறான்.
வண்டிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்றன.