Monday, May 24, 2010

தேவதைகள் இல்லாத ஊர்

ஒரு சமூக அறிவியல் வகுப்பில்,
கடைசி பென்ச்சில் அமர்ந்து
எங்கள் ஊரின் தேவதைகள் பட்டியலை
உருவாக்கினோம்.

எங்கள் ஊரின் முதல் தேவதை
காணாமல் போனபோது,
நாங்கள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு
எழுதிக்கொண்டு இருந்தோம்.

சங்கர் "எனக்கு அப்பொழுதே தெரியும்,
ஒரு நாள் கடற்கரையில்
ஜோடியாக பார்த்தேன்" என்றான்.

எங்கள் ஊரின் இரண்டாவது தேவதை
காணாமல் போனபோது,
எங்கள் கணித வாத்தியாரும்
காணாமல் போய் இருந்தார்.

பனிரெண்டாம் வகுப்பில்
கணிதத்தில் மதிப்பெண் குறைந்ததற்க்கு
இதுதான் காரணம் என்று
அனைவரையும் நம்ப வைத்தோம்.

எங்கள் ஊரின் முன்றாவது, நான்காவது தேவதைகள்
காணாமல் போனது,
கல்லூரி விடுதியில் தங்கி படித்துக்கொண்டு
இருந்த எனக்கு சில நாட்கள் கழித்தே தெரிந்தது,

இதன் பின்னர் தேவதைகள் யாரும்
காணாமல் போகவில்லை.
ஆனால், எங்கள் ஊர் தேவதைகள் கடத்தப்பட்டார்கள்.

"தேவதைகள் கடத்தப்படுகிறார்கள்"
என்று நாங்கள் கூச்சலிட்டதை ஊர்மக்கள்
யாருமே கண்டுகொள்ளவில்லை.
மாறாக பூக்கள் தூவி தேவதைகளை
வழியனுப்பினார்கள்.

எங்கள் ஊரின் கடைசி தேவதை அகல்யா
முதிர்கன்னியாக சென்ற மாதம்
தற்கொலை செய்துகொண்ட போது,
அவள் வயது 34.

இப்பொழுது தேவதைகள் இல்லாத ஊரில்,
தேவதைகளை பற்றி
எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

Friday, May 14, 2010

உறவுகள்

"தான் நேசிக்குமளவு தன்னை மகள் நேசிக்கிறாளா என்ற கேள்வி எல்லா அப்பாக்களின் மனதிலும் இருந்து கொண்டேயிருக்கிறது போலும். உண்மையில் இது ஒரு ஆதங்கம். தன்னை போல வேறு ஒருவர் தன் மகளை நேசிக்க முடியாது என்ற உரிமை கொண்டாடுவது. அது முழுமையான நிஜமில்லை என்று தெரிந்த போதும் அந்த மனவலி தாங்க முடியாதது. ஆயிரம் வருசத்திற்கும் மேலாக இருந்து வரும் அப்பா மகள் உறவின் பிணைப்பு எளிய சொற்களால் புரிந்து கொள்ள முடியாதது" - எஸ். ராமகிருஷ்ணன்.

முழு கட்டுரை : http://www.sramakrishnan.com/view.asp?id=405&PS=1

இந்த கட்டுரையில் எஸ்.ரா, தந்தைக்கும் மகளுக்கு உள்ள உறவை பற்றி பேசுகிறார்.

ஒரு தந்தைக்கு மகளுக்கு உள்ள உறவு, விசித்திரமானது. அது யாராலும் எளிதாக விவரிக்க முடியாது.

எனது அக்கா, அப்பாவின்தோளில் கைப்போட்டு தெருவில் நடந்து சென்ற நாட்கள், என் நினைவில் எப்பொழுதும் இருக்கிறது. அவர்கள் நண்பர்களை போல்தான் பழகினார்கள். ஆனால் அதே மகள், "தான் ஒருவரை விரும்புகிறேன், அவரைதான் திருமணம் செய்வேன்" என்று சொல்லியபோது, என் அப்பாவால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். எப்படியும் தன் மகள், தன் பேச்சைதான் கேட்பாள் என்று நினைத்தார், அக்காவின் மனதை மாற்ற எவ்வளவோ பேசி பார்த்தார்.

தன்னைவிட யாராலும் தன் மகள் மீது இந்தளவு அன்பு செலுத்த முடியாது என்று எண்ணிக்கொண்டு இருந்த என் அப்பாவிற்கு, அது ஒரு பெரிய எமாற்றம்தான். கடைசியில் என் அக்காவே ஜெயித்தாள். அவர்கள் திருமணம் என் அப்பாவின் சம்மதத்தோடு இனிதே நடைப்பெற்றது. உண்மையில் சொல்ல போனால், இது என் அப்பாவின் வெற்றியே.

திருமணம் முடிந்து, கணவர் வீட்டுக்கு அக்கா செல்லும் போது, என் அப்பாவும் அக்காவும், கட்டிப்பிடித்து அழுத காட்சி ஒன்றே போதும், அவர்களின் பாசத்தையும் உறவையும் சொல்வதற்க்கு.

தன் மகளுக்குகாக தன்னுடைய கொள்கையை மாற்றிக்கொண்டார். தன்னையே மாற்றிக்கொண்டார். இதன் காரணமாகவே நான் என் அப்பா மீது வைத்து இருந்த மரியாதை பலமடங்கு உயர்ந்தது.

தந்தைக்கும் மகளுக்மான உறவு எல்லா காலங்களிலும், எல்லா தேசங்களிலும் ஒரே மாதிரிதான் இருந்து இருக்கிறது, இருந்துகொண்டும் இருக்கிறது. இதை எஸ்.ரா, தன் "லியரின் மகள்" கட்டுரையில் தெளிவாக சொல்கிறார்.

Thursday, May 13, 2010

ஒரு எதிரி உருவான கதை

உங்களால் மட்டுமே எனக்கு
உதவ முடியும்
என்று நம்பிக்கொண்டு இருந்தேன்.

எங்கள் முதல் சந்திப்பில்,
முதல் பேச்சில்,
முதல் புன்னகையில்,
முதல் சண்டையில்,
முதல் பேச்சுவார்த்தையில்,
எல்லாவற்றிலும் நீங்களும்
இருந்தீர்கள்.

பல நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டு
இருந்தீர்கள்,
சில நேரம் உள்ளே புகுந்து
உங்களால் ஆனவற்றை
நடித்து காட்டிக்கொண்டு இருந்தீர்கள்.

எப்பொழுதும் என்னுடனே இருந்த உங்களுக்கு,
ஒரு நொடிகூடவா தோன்றவில்லை
"எனக்கு உதவி தேவை" என்று.

கடைசியாக,
நீங்களே எனக்கு வில்லனாக மாறியதை
இன்னும் என்னால்
நம்ப முடியவில்லை.

கேட்காத உதவிகளும் எதிரிகளை
உருவாக்கும் என்பதை
இப்பொழுது புரிந்து கொண்டேன்.

Friday, May 7, 2010

So what?

இப்பொழுது எல்லாம் அசோக்கிற்க்கு எதைப் பற்றி பதிவு எழுதுவது என்றே தெரியவில்லை. "இனிமேல், சொந்த அனுபவங்களை பதிவாக எழுத மாட்டேன்" என்று அவளிடம் சத்தியம் செய்ததில் இருந்துதான் இந்த பிரச்சனை. நமது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மட்டுமே புனைவுகளாக எழுத முடியும் என்று நம்புகின்றவன் அசோக். அவன் போய் இப்படி ஒரு சத்தியம் செயதால், பின் எப்படி அவனால் பதிவுகள் எழுத முடியும்.

கற்பனை கதைகளை எழுத அசோக் முயற்சி செய்தான், சிலவற்றை பதிவும் செய்தான். அவை எல்லாம் சுறா திரைப்படதை விட கேவலமான தோல்வியில் முடிந்தது. எஸ்.ராவின் "நகுலன் வீட்டில் யாரும் இல்லை" என்ற புத்தகதை படித்து முடித்த அன்றே அவன் எழுதிய கதைதான் "எது கற்பனை". அந்த கதையை எழுதி முடித்த பிறகு, அதை எஸ்.ராவிற்க்கு மெயில் அனுப்பலாம் என்று நினைத்தான். அந்த அசம்பாவிதம் மட்டும் நடந்து இருந்தால், எஸ்.ரா தற்கொலைக்கு முயற்சி செய்து இருப்பார். அசோக்கின் நண்பன் பேரின்பா எப்பொழுது சொல்வான், "நீ, மற்றவர்களின் பாதிப்பு டா". அது உண்மைதான் போல.

அடுத்து அவன் எழுதிய "இதோ, ஒதோ" கதையும் நூறு சதவீதம் கற்பனை கதைதான்.ஆனால், பலர் அதை நம்ப மறுத்து விட்டார்கள். ராகுல் மட்டும்தான் சரியா கண்டுபிடித்தான் "machi, ur girl is missing da" என்றான்.

இந்த அசோக்கிற்க்கு எப்பொழுதும் ஒரு பிரச்சனை உண்டு, தான் சொல்ல நினைப்பதை சரியாக சொல்ல தெரியாது. இந்த மொக்கை பதிவை இவ்வளவு நேரம் படிக்கும் உங்களுக்கே இது நன்றாக தெரிந்து இருக்கும். எதை பற்றி சொல்ல நினைக்கிறானோ, அதை தவிர்த்து மற்ற அனைத்தை பற்றியும் பேசுவான் என்று. இப்பொழுது கூட பாருங்கள் அவன் சொல்ல வந்தது அந்த nikkle'யை பற்றிதான். அசோக்கின் வலைபதிவை ஒருவர் பொறுமையாக படிப்பதே பெரிய விசயம், அதிலும் படித்துவிட்டு ஒருவர் பின்னூடம் எழுதியிருந்தால் அவர் எந்தளவு பொறுமைசாலியாக இருப்பார். nikkle'னின் பின்னூடத்திற்க்கு பதில் அளிக்கிறேன் என்று சொல்லி அந்த பொறுமைசாலியை tension ஆக்கிட்டான் இந்த அசோக். நல்லவேளை இப்பொழுது இருவருமே சமாதானம் அடைந்து நண்பர்களாக மாறிவிட்டார்கள்.

இந்த பின்னூடம் பற்றி சொல்லும் போது, இந்த சுப்புரமணியை பற்றி சொல்லியே ஆகவேண்டும். அசோக்கின் எல்லா பதிவுக்கும் பின்னூடம் அளிக்கும் ஒரே மனிதன் இந்த சுப்புரமணி மட்டும்தான். அசோக், அந்த சத்தியத்திற்க்கு பின் எதை பற்றி எழுதுவது என்று தெரியாமல் ஒரு பாடலின் வரிகளை பதிவாக போட்டான். அந்த பதிவுக்குகூட சுப்புரமணி பின்னூடம் போட்டு "super" என்றான். அப்படிபட்ட நல்ல உள்ளம் படைத்தவன் சுப்புரமணி. அசோக் சொஞ்ச நாட்களுக்கு முன்னால் தன் வலைபதிவில் இருந்து எல்லா பதிவுகளையும் அழித்த போது, அசோக்கைவிட சுப்புரமணி ரொம்ப வருத்தப்பட்டான். எனென்றால் "அவனுடைய எல்லா பின்னூடங்களும் அழிந்து விட்டதாம்."

நம்ம அசோக் அவளிடம் சத்தியம் செய்த பிறகு, வலைப்பதிவில் என்ன எழுதுவது என்று தெரியாமல், இரவு 10 மணி அளவில் குப்புறபடுத்து யோசனை செய்து கொண்டு இருந்தான். மின்சாரம் நின்று விட்டது. மீண்டும் 11க்கு தான் வரும். சென்னையிலாவது பாராவாயில்லை, தினமும் இரண்டு மணிநேரம்தான் மின்சாரம் கட், நீடாமங்கலம் பக்கம் வந்து பாருங்கள். இரண்டு மணிநேரம்தான் மின்சாரம் இருக்கும். சட்டசபையில் தாத்தா சொல்கிறார் "தமிழக்கத்தில் மின்சார பஞ்சமே இல்லையாம்". அரசியல் இங்கே வேண்டாம் பாஸ். நாம் அசோக்கின் கதைக்கே போவோம் என்கிறீர்களா??. கதையா, அவ்வளவுதான் கதை முடிந்துவிட்டது. இதைதான் அசோக் இந்த வாரம் வலைபதிவில் எழுத போகிறான். என்ன தலைப்புதான் கிடைக்கவில்லையாம்.

பின் அந்த சத்தியம் என்ன ஆச்சு?? என்கிறீர்களா. நானும் அதைதான் அவனிடம் கேட்டேன். அதற்க்கு அசோக் சொன்ன பதில் " so what ??". கடைசியாக தலைப்பும் கிடைச்சாச்சு.

Thursday, April 8, 2010

அங்காடித் தெரு

வசந்தபாலனின் "வெயில்" திரைப்படத்தை பார்த்துவிட்டு என் நண்பன் திரையரங்கில் உட்கார்ந்து அழுதுக்கொண்டு இருந்தது, இன்னும் என் நினைவில் இருக்கிறது. அதுவரை அவன் அழுது நான் பார்த்ததே இல்லை. இதுவே வசந்தபாலனின் அடுத்த படைப்பான "அங்காடித் தெரு" மீது எனக்கு ஒருவித ஈடுபாட்டை உண்டு பண்ணியது.

ஒருவித பயத்தோடுதான் இந்த திரைப்படத்தை பார்க்க போனேன். இதுவரை நான் எதிர்பார்ப்போடு பார்த்த எந்த திரைப்படமும் நன்றாக இருந்தது இல்லை. அப்படி நான் பார்த்து மறக்க முடியாத ஒரு திரைப்படம் "மாயக்கண்ணாடி". "தவமாய் தவமிருந்து"படத்தை எடுத்த சேரனா அது??.

"அங்காடித் தெரு"வை பற்றி எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை. முதலில் இந்த படத்தைப்பற்றி எழுதுவதற்க்கு, நான் முற்றிலும் தகுதியற்றவன். வாழ்வின் இன்பங்களை மட்டுமே பார்த்து வளர்ந்தவன் நான். ஆனால், வாழ்க்கையில் துன்பங்களை மட்டுமே கொண்டவர்களின் கதை இது. என் நண்பன் எப்பொழுதும் என்னிடம் ஒன்று சொல்வான் " For some ppls, life is more complicated".

ஜெயமோகனின் வசனங்கள் படம் முழுவதும் நம்மை கலங்க வைக்கின்றன. "இந்த உலகத்தில் அவன் ஒருத்தனிடமாவது, நான் சூடு, சொரனையுடன் இருக்கிறேனே!!" என்று தன் தோழியிடம், அஞ்சலி சொல்லும் வசனம் ஒன்றே போதும் ஜெயமோகனை பற்றி சொல்வதற்க்கு.

இரண்டே நிமிடங்கள் வந்தாலும் அஞ்சலியின் அப்பா கதாபாத்திரம் நம்மை முற்றிலும் பாதித்துவிடுகிறது. கேமராவும், பின்னனி இசையும் படத்திற்க்கு ஒரு பெரிய மைனஸ். இதன் காரணமாக திரைப்படத்தை பார்க்கும்போது ஒரு சலிப்பு உண்டாகிறது.

அஞ்சலியை பற்றி எதாவது கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். "கற்றது தமிழ்"க்கு பிறகு மீண்டும் அதை போன்றே சோகமும், குறும்பும் சேர்ந்த ஒரு கதாபாத்திரம். அருமையாக நடித்து உள்ளார்.

திரைப்படத்தின் கதை: இதை பற்றி ஏற்கனவே பலர் எழுதிவிட்டனர். எனக்கு சோகக்கதைகளை சோகமாக எழுத தெரியாது, ஆகவே கதையை இங்கே கொலை செய்ய விரும்பவில்லை.

திரைப்படத்தை பார்க்கும் யாரும் ஒரு நிமிடம் கூட தொடர்ந்து சிரித்துவிட கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் வசந்தபாலன் இந்த படத்தை எடுத்து இருக்கிறார். ஆனால், சங்கமம் திரையரங்கில் எனது அருகில் அமர்ந்து படம் பார்த்துகொண்டு இருந்த ஒரு காதல் ஜோடி படம் முடியும்வரை பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். எனது நண்பன் சொன்னது போல் " life is more complicated, only for some ppls "

Thursday, April 1, 2010

கேட்டதில் பிடித்தது

காரணங்கள் இல்லாமலேயே நமக்கு சில பாடல் வரிகள் பிடித்துவிடும். அப்படி எனக்கு சமீபத்தில் பிடித்த பாடல் வரிகள் , "முந்தினம் பார்த்தேனே" திரைப்படத்தில் வரும் "பேசும் பூவே" . அந்த வரிகள்,

பெண்ணே
உன் கண்களா
உன் கன்னமா உன் பின்னலா
உன் தேகமா உன் ஆசையா
உன் வார்த்தையா உன் வாசம்தான்
எனை ஈர்த்ததா?
உன் வெட்கமா உன் வேகமா
உன் கிண்டலா உன் கிள்ளலா
உன் துள்ளலா உன் பார்வையா
உன் அன்புதான் எனை ஈர்த்ததா?


ஒரு பெண் நம்மை ஈர்ப்பதற்கு இத்தனை காரணங்கள் இருக்கிறது என்பதை இப்பொழுதுதான் புரிந்துக்கொண்டேன்.

------------------------------------------------------------

எப்படியாவது அங்காடித் தெரு திரைப்படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று நினனத்தேன். ஆனால் அக்காவின் கல்யாண வேலைகளால் படத்தை பார்க்க முடியவில்லை. திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் படத்தை புகழ்கிறார்கள், வசந்தபாலனுக்கு வாழ்த்துகள். விரைவில் இந்த திரைப்படத்தை பற்றி எழுத எனக்கு ஆசை.

Wednesday, March 17, 2010

இதோ, இதோ, அவள் எனை பதம் பார்க்கிறாள்

"அசோக், தண்ணி எடுத்துகிட்டு வந்துரேன்" என்று சொல்லிவிட்டு அவள் போனாள். அவள் போவதை பார்க்க கூடாது என்றுதான் நினைத்தேன், முடியவில்லை. அவள் நடந்து சென்றுக்கொண்டு இருந்தாள். இறுக்கமான சுடிதார், அந்த வளைவுகள் நெளிவுகள் எதோ செய்தன. அவளே சொல்லி இருக்கிறாள் "எனக்கு இந்த Jeans, T-Shirt’லாம் பிடிக்காது. அவை ரொம்ப expose பண்ணும்". Jean, T-Shirt’ல எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்து பார்த்தேன். இப்படிதான் இப்பொழுது எல்லாம் எதோ எதோ எண்ணங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அவளே இன்று கேட்டுவிட்டாள் "அசோக், இப்பொழுதுலாம் நீ என்னை பார்த்தே பேச மாட்டேங்கிற !!".

இரண்டு டம்ளரில் தண்ணி எடுத்துக்கொண்டு எதிரே வந்து அமர்ந்து இருந்தாள். "நாளைக்கும் உன் கூடவே பைக்'ல வந்துரேன். Cab’ல வந்தா, அரை மணிநேரம் முன்னாடியே கிளம்ப வேண்டியதா இருக்கு".

நான் இதுவரை எந்த பெண்னையும் பைக்கில் அழைத்து சென்றது கிடையாது. முதல் முறை இவளை அழைத்து செல்லும் போதே ஒரு மாதிரி கூச்சமாகதான் இருந்தது. அதன்பின் பலமுறை அவளை அழைத்து சென்று இருக்கிறேன். ஆனால் அவை எல்லாம் மாலை நேரம்தான்.

இன்று Morning Shift என்பதால், காலை 5 மணிக்குகே எழுந்து குளித்துக்கொண்டு இருந்தேன். அப்பொழுதுதான் அவளிடம் இருந்து போன் வந்தது, "அசோக், இப்பதான் எழுந்தேன், அனேகமாக Cab Miss ஆயிடும்னு நினைக்கிறேன். நான் உன்கூட பைக்ல வந்துறேன்" என்றாள். அவள் என்னிடம் அனுமதிகூட கேட்கவில்லை. இந்தளவு உரிமையுடன் பேசுபவளிடம் எப்படி முடியாது என்பது. நானும் "சரி, ரெடியா இரு. நான் ஒரு இருபது நிமிடத்தில் வந்துவிடுவேன்" என்றேன்.

மார்கழி குளிரில், காலை ஆறு மணிக்கு, ஒரு பெண்னை பின்னாடி உட்கார வைத்துக்கொண்டு OMR ரோட்டில் போனால், எப்படி இருக்கும். நான் வைத்து இருப்பது கரிஸ்மா பைக். அதில் பின்சீட் 60 டிகிரியில் இருக்கும். பிரேக் போடும்போது பின்னாடி உட்கார்ந்து இருப்பவர்கள், வண்டி ஒட்டுபவர் மீது சாய்ந்தால் மட்டுமே கீழே விழாமல் தப்பிக்க முடியும். கரிஸ்மாவில் ஒரு பக்கம் மட்டும் காலை போட்டு உட்காரவும் முடியாது. அந்த OMR ரோட்டில், டோல்கேட்டுக்கு பக்கத்தில் ஒரு Speed-Breaker இருக்கிறது. Thermometer’யை அந்த நேரம் மட்டும் வைத்து பார்த்து இருந்தால், கண்டிப்பாக் நூற்றி ஜந்துக்கு மேல் காட்டி இருக்கும். அதுவும் அந்த டாம் பாய் perfume, அவளை ஆபிஸில் இறக்கிவிட்ட பிறகும் என் கூடவே வந்துக்கொண்டு இருப்பது போல் தோன்றியது.

இதுல நாளைக்கும் பைக்'ல வராளாம். எனக்கு இப்பொழுதே ஜன்னி வந்தது போல, உடம்பு எல்லாம் நடுக்கம் கண்டது.

நாளைக்கு என்ன பொய் சொல்லி அவளிடம் இருந்து தப்பிப்பது என்று, எனது கேபினில் அமர்ந்து யோசித்துக்கொண்டு இருந்தேன். "என்ன மச்சி, செட் ஆயிடுச்சு போல?" என்று சிரித்துக்கொண்டே குமார் கேட்டான்.

நான் அவனை குழப்பத்தோடு பார்த்தேன். அவனே "இன்னைக்கு காலை’ல பார்த்தேன், பைக்’ல இரண்டு பேரும் ஜோடியா வந்திங்க?"

"நீ வேற, Cab Miss ஆயிடுச்சாம். அதான் அழைத்து வந்தேன்".

"பார்த்து மச்சி, எல்லாமே இப்படிதான் ஆரம்பிக்கும்" என்றான்.

குமாரை பற்றி இங்கு கண்டிப்பாக சொல்லி ஆக வேண்டும். எனக்கு ஆபிஸில் நண்பர்கள் அதிகம் கிடையாது, நான் எல்லா விஷயங்களை பகிர்ந்து கொள்வது என்றால் அது குமாரிடம் மட்டும்தான். இவன் ஒருமுறை கூட என்னிடம் பொய் சொல்லியது கிடையாது. எனக்கே இது வியப்பாக இருந்தது. நான் எதாவது பொய் சொன்னாலும், "ஏன், மச்சி பொய் சொல்ற?" என்று சொல்லிவிட்டு அலட்டிக்கொள்ளாமல் போய் விடுவான். அவனிடம் பழகி பழகி கொஞ்ச நாட்களாக நானும் உண்மை மட்டும்தான் பேசி வருகிறேன். அந்தளவு என்னுள் மாற்றத்தை எற்படுத்தியவன் குமார்.

அடுத்தநாள், அவளை அழைக்க சென்ற போது, "தம்பி, உள்ளே வந்து காப்பி சாப்பிட்டு போகலாம்’ல?" என்று அவள் அப்பா உரிமையுடன் அழைத்தார். இதுவே எங்க ஊராக இருந்து இருந்தாள் "என்ன நடந்து இருக்கும்" என்று கற்பனை செய்து பார்த்தேன். பின்னாடி கொலைவெறியோடு ஒரு கும்பல் என்னை துரத்திக்கொண்டு வந்தது.

நானும் அவளும் உள்ளே நுழைவதற்கும், குமார் வருவதற்கும் சரியாக இருந்தது. "என்ன மச்சி, இன்னைக்கும் Cab miss ஆயிடுச்சா" என்று நக்கலாக கேட்டான்.

இந்த குமாரை பற்றி இன்னொரு விஷயம் உங்களிடம் சொல்லியாக வேண்டும். பெண்களின் பின்நவீனத்துவும் பற்றி ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு பேசுவான். "பெண்கள் இப்படி கோணலாக நடப்பதற்கு காரணமே எல்லோரும் தன்னை பார்க்கவேண்டும் என்பதற்குதான். வலது காலை லேசாக Cross'ஆக வைத்து நடந்தால், எல்லாருக்கும் நடை நேராகவரும், அப்படிதான் நடக்க வேண்டும். ஆனால், இந்த பெண்கள் வேண்டும் என்றே இரண்டு காலையும் நேராக வைத்து நடக்கிறார்கள், அப்பொழுதுதான் பின்னழகு கூடுமாம்". இதை போல் பல விஷயங்களை குமார் சொல்வான், அவற்றை இங்கு எழுதினால், பின் இது போர்னோ கதையாக மாறிவிடும்.

சரி, கதைக்கு வருவோம்.

அடுத்த ஆறு மாதங்களில் சத்தியம், மாயாஜால், வி.ஜி.பி, மெரினா என்று சென்னையில் அனைத்து இடங்களையும் ஒன்றாக சுற்றினோம். இந்த ஆறு மாதங்களில், எங்கள் இருபத்தைந்து வருட வாழ்கை கதைகள் எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டோம். சில நாட்களின் முடிவில் இனி பேசுவுதற்கு ஒன்றுமே இல்லாதது போல தோன்றும், ஆனால் அடுத்த நாள் காலையிலேயே அவளிடம் சொல்வதற்கு ஓராயிரம் கதைகள் காத்துக்கொண்டு இருக்கும். "உனக்கு பொது அறிவு அதிகம்" என்று அவள் பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறாள்.

இதைபோல் எனக்கு எல்லாமே தெரியும் என்று நம்பிக்கொண்டு இருக்கும் இன்னொருவன் குமார். அவன் எதை செய்வதற்கு முன்னாலும் என்னிடம் கருத்து கேட்காமல் செய்ய மாட்டான். நானும் எதாவது அவனிடம் பேசி சாமாளித்துவிடுவேன். "மச்சி 5800 மாடல் போன் வாங்கலாமா?, அந்த கம்பெனி சேர் வாங்கலாமா?, அந்த கம்பெனிக்கு resume அனுப்பலாமா?" என்று என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பான். இது எல்லாம் பரவாயில்லை, போன வாரம் அவன் தோழிக்கு Dress வாங்க வேண்டுமாம், "எங்க வாங்குறது, என்ன கலர் வாங்கலாம்?" என்று எல்லாவற்றையும் என்னிடம் கேட்கிறான்.

சே, எனக்கு காதலிக்கதான் தெரியவில்லை என்று நினைத்தால், காதல் கதை எழுதுவதற்கு தெரியவில்லை. இந்த கதையில் இப்பொழுது இந்த குமாரை பற்றி ஏன் பேசவேண்டும். அவன் ஒரு மூனா கேனா, இனி அவனை பற்றி பேசவேண்டாம்.

மறந்தே போய்விட்டேன் இன்னும் அரைமணிநேரத்தில் அண்ணா நகர் diva'வில் அவள் எனக்காக காத்துக்கொண்டு இருப்பாள். நான் போக வேண்டும். நேற்று சத்தியம் தியேட்டரில் பத்து நிமிடம் காக்க வைத்தற்கே ஒரு மணிநேரம் திட்டினாள். அவள் திட்டிய அந்த ஒரு மணிநேரமும் அவள் டிரஸை தான் பார்த்துக்கொண்டு இருந்தேன். நேற்று அவள் Ghagra Dress போட்டு இருந்தாள். என்ன அழகு, நான் டிரஸை'யை சொல்லவில்லை, அவளை சொல்கிறேன்.

இப்பொழுது அதை போல், Ghagra Dress வாங்கதான் Diva போகிறோம். சரி நேரம் ஆயிடுச்சு. Bye bye.

Wednesday, March 10, 2010

பின்நவீனத்துவம் - ஒரு பார்வை

இப்பொழுது எல்லாம் எதாவது பேசும்பொழுது பின்நவீனத்துவம் என்ற வார்த்தையை நடுவில் சேர்த்தால்தான் நமக்கு நாலு விசயம் தெரியும் என்று நம்புகிறார்கள்.

பின்நவீனத்துவம் என்பதை ஆங்கிலத்தில் எப்படி உச்சரிக்கவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. சிலர் "post-modernism" என்றும், சிலர் "existentialism" என்றும் சொல்கிறார்கள். எது சரியான வார்த்தை என்று என்னிடம் யாராவது சொன்னால் அவர்களுக்கு புண்ணியமாக போகும்.

பின்நவீனத்துவத்தை பற்றி சகா ஒருவன் எழுத சொன்னவுடனே, எனக்கு செம சந்தோஷம். நமக்கும் நாலு விசயம் தெரியும் என்று ஒருவன் நம்புகிறானே என்று.

எப்படியாவது எல்லாருக்கும் புரிவதை போல எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை எழுத தொடங்கினேன். உங்களுக்கு புரிகிறதா?? இல்லையா?? என்பதை படித்த பிறகு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

முதலில் நவீனத்துவம் என்றால் என்ன??. தற்பொழுதைய காலத்திற்க்கு ஏற்றவாறு, நாம் மாற்றம் அடைவது நவீனத்துவம். இந்த மாற்றம் அறிவியல், தோற்றம், எண்ணங்கள் என்று ஏது சம்மந்தமாகவும் இருக்கலாம். இந்த மாற்றங்களால், எற்படும் பாதிப்புகளை பற்றி மிகவும் விரிவாக பார்பதே பின்நவீனத்துவம். அந்த பாதிப்புகளை பற்றி ஒரு வாக்கியத்தில் சொல்லாமல், மிகவும் ஆளமாக அதை பற்றி எடுத்து சொல்வதே பின்நவீனத்துவம. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டும்தான். மற்றவர்களிடம இருந்து மாறுப்பட்டு சிந்திப்பது என்று கூட சொல்லாம். அல்லது இப்படிகூட சொல்லலாம், ஒரு மாற்றத்தால் எற்படும் நன்மைகளை பற்றி சொல்வது நவீனத்துவம், அந்த மாற்றத்தால் எற்படும் பாதிப்புகளை பற்றி தீவிரமாக ஆராய்வது பின்நவீனத்துவம்.

பின்நவீனத்துவம் பற்றி சிந்திப்பவர்கள் pessimist என்றால் அது முற்றிலும் தவறு. உலகத்தில் உள்ள மக்கள் அனைவராலும் ஏற்றுகொள்ளபட்ட கருத்துக்கள் என்று எதுவும் இல்லை. பெரும்பாண்மையான மக்களால் ஏற்று கொள்ளபட்ட கருத்துகளே சரியான கருத்துகள் என்ற ஒரு மாயை உருவாகியிருக்கிறது. எதனால் அந்த கருத்துக்களை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, என்று யோசிப்பது இல்லை. இந்த மாற்று கருத்துகளைப் பற்றி விரிவாக அலசுவதும் பின்நவீனத்துவம்தான்.

அதற்காக மாறுபட்டு சிந்திக்கபடும் அனைத்துமே பின்நவீனத்துவம் என்று சொல்லிவிட முடியாது.

"ஜே ஜே சில குறிப்புகள், ஜீரோ டிகிரி" ஆகிய இரண்டும் தமிழின் மிக சிறந்த பின்நவீனத்துவ புத்தகங்கள். " ராஸலீலா, கோபாலபுர கிராமம், உபபாண்டவம்" போன்றவை மாறுபட்ட எழுத்து நடையை கொண்டாலும், அவை பின்நவீனத்துவ புத்தகங்கள் அல்ல.

எஸ்.ராவின் "கடவுளின் குரலில் பேசி" என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்த பின்நவீனத்துவ சிறுகதை. அந்த சிறுகதையை இங்கே படிக்கலாம்.

http://www.moderntamilworld.com/illakiyam/story_ramakrishnan.asp

"ஆயிரத்தில் ஒருவன்" வித்தியாசமான கதை கொண்ட திரைப்படம் என்றாலும், அந்த ஒரு சில வித்தியாசமான காட்சிகளை வைத்து அது பின்நவீனத்துவ திரைப்படம் என்று சொல்லிவிட முடியாது. குத்துப்பாட்டு, ஹீரோயிஸம், ஓவர் பில்டப் கொண்ட ஒரு கமர்ஸியல் திரைப்படம் என்பதே சரி. "கற்றது தமிழ்" ஒரு பின்நவீனத்துவ திரைப்படம். இந்த திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை நவீனம் என்ற மாயத்தால் ஒரு மனிதன் அடையும் இன்னல்களை தெளிவாக சொல்லி இருப்பார்கள்.

ஆங்கிலத்தில் பின்நவீனத்துவ புத்தகங்கள் பல உள்ளன. ஆங்கில புத்தகங்களை நானே குத்துமதிப்பாகவே அர்த்தம் புரிந்து படிப்பதால், அதை பற்றி இங்கு பேசவேண்டாம். இத்துடன் பின்நவீனத்துவ கட்டுரை முடிவு பெறுகிறது. இது கடந்த இரண்டு வருடங்களாக நான் படித்து புரிந்துகொண்டது.

இது தவறு, இது பின்நவீனத்துவம் அல்ல என்று யாராவது சொன்னால், அவர்கள் சொல்வதையும் கேட்பதற்க்கு தயாராக இருக்கிறேன். பின்நவீனத்துவம் பற்றி படித்தும், அதை பற்றி விவாதிக்கும் போதுதான் அதன் சரியான அர்த்தம் நமக்கு புலப்படும். ஏனென்றால் பின்நவீனத்துவம் என்பது ஒரு feelings. புரிகிறதோ இல்லையோ, தொடர்ந்து அதை பற்றி படியுங்கள், தொடந்து விவாதியுங்கள், கண்டிப்பாக ஒருநாள் நமக்கு அந்த feelings கிடைக்கும். எனக்கு லா.சா.ரா சொன்ன ஒன்று நினைவில் வருகிறது

"புரிந்தது, புரியாதது இந்த இரண்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள். ஒருவருக்கு ஒருவிதமாகப்படுவது, அடுத்தவருக்கு வேறு விதமாகப்படுகிறது. அதே ஆளுக்கே வேறு சமயத்தில் வேறு விதமாகப்புரிகிறது. அட, கடைசிவரை புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே".

**************************************

எப்படியாவது என் சொந்த அனுபவங்கள் எதுவும் இல்லாம ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று நினைத்தால், அதற்க்கு வாய்ப்பே இல்லை போல. இந்த கட்டுரையில் பாருங்கள் எத்தனை இடங்களில் சொந்த அனுபவங்கள் புகுந்து விளையாடுகின்றன என்று. ஆங்கில புத்தகங்களை நானே குத்துமதிப்பாக அர்த்தம் புரிந்து படிப்பதாக சொன்னேன் அல்லவா, அப்படிதான் ஒரு புத்தகதில் பல இடங்களில் "I Have Lust On You" என்ற வாக்கியம் வந்தது. அதுவும் ஒரு வயதான கிழவி, ஒரு பதினைந்து வயது பையனிடம் சொல்வாள். கதை கொஞ்சம் Decent'ஆக இருந்ததால், அந்த வாக்கியத்துக்கு அர்த்தம் ஏதோ "ஒரு வித ஈர்ப்பு" என்று நானே யூகித்து கொண்டேன். அடுத்த நாள் ஒரு பெண்ணுக்கு எனது ஆங்கில புழமையை காட்டுவதற்காக "I Have Lust On You" என்று SMS அனுப்பிவிட்டேன். அடுத்த இரண்டு நாட்கள் அவள் என்னிடம் சரியாக பேசவில்லை. வேற எதோ பிரச்சனையால்தான் பேச மாட்டேங்கிறாள் என்று நினைத்தேனே தவிர, அந்த SMS'யை சுத்தமாக மறந்துவிட்டேன். பின்னர் அவள் சொல்லிதான் அதன் அர்த்தம் எனக்கு புரிந்தது. நல்லவேளை அடுத்தமுறை ஒரு கட்டுரையில் dildos'யை பற்றி நானே எதுவும் யூகிக்காமல், , Googleல் அர்த்தம் பார்த்துவிட்டேன்.

Saturday, March 6, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - "i am crazy about you"

காதல், காதல், காதல் இதை தவிர இந்த திரைப்படத்தில் வேறு ஒன்றுமே இல்லை. காதல் படம் என்றாலே அதில் சண்டைக்காட்சிகள் , ஒரு குத்துபாட்டு, ஹீரோவுக்கு நண்பனாக ஒரு காமெடியன், இப்படி இவை எல்லாம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் தமிழ்சினிமாவில் உருவாகிவிட்டது. இதை கெளதம் இந்த திரைப்படத்தில் உடைத்துவிட்டார்.

திரைப்படம் முடிந்தவுடன், "மச்சி, இதே மாதிரி எனக்கும் நடந்து இருக்குடா!!" என்று என் நண்பன ஒருவன் சொன்னான். நீங்கள் இதுவரை யாரையாவது காதலித்து இருந்தாள், கண்டிப்பாக இந்த திரைப்படம் "உங்களின் உண்மை கதை".

"இந்த உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெசிய லவ் பண்ணேன்...??".

இதில் ஜெசிக்கு பதிலா உங்கள் காதலியின் பெயரை போட்டால் இது உங்கள் கதை.

படம் முழுவதும் சிம்புவும், த்ரிஷாவும் மட்டுமே ஆக்கிரமித்து இருக்கிறார்கள். ஒரு தெளிந்த நீரோடை போல படம், மிகவும் மெதுவாக செல்கிறது. ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை கதை எங்கும் திரும்பாமல், காதல் என்ற ஒரே கோட்டில் செல்கிறது. இதை போல் Slow moving movies தமிழுக்கு புதியது, ஆகவே பலருக்கு இந்த திரைப்படம் பிடிக்காமல் போகலாம்.

சிம்பு திரைப்படத்தின் ஆரம்பத்தில் பேசும் வசனம்

" காதல் என்பது, அதுவா நமக்கு நடக்கனும்.. நம்மளப் போட்டு தாக்கனும்... நம்மள அப்படியே தலகீழா திருப்பி போடனும்...அது எனக்கு நடந்துச்சு ".

அதே போலவே இந்த திரைப்படம் முதல் அரைமணி நேரத்திலேயே நம்மை போட்டு தாக்கிவிடுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை படத்திற்க்கு இன்னொரு ப்ளஸ்.

நவயுக காதல் எல்லாம் உடலை மையபடுத்தியே வருகின்ற என்பதை நாசுக்காக சொல்லியிருக்கிறார்கள்

----------------------------------------------------------------------------

இப்பொழுது எல்லாம் தமிழ் திரைப்படம் பற்றி கருத்து சொல்லவே பயமாக இருக்கிறது. இப்படிதான் நண்பன் ஒருவன் "ஆயிரத்தில் ஒருவன்" பற்றி கருத்து கேட்டான். நான் படம் ரொம்ப மோசம், சுத்தமாக பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். அதற்க்கு அவன் ஒரு மணிநேரம் அட்வைஸ் கொடுத்தான். " உங்களை போன்றவர்களுக்கு வேட்டைக்காரன் போன்ற திரைப்படங்கள்தான் பிடிக்கும். இதனால்தான் தமிழ் சினிமா ரொம்பவும் பின்னோக்கி இருக்கிறது. செல்வராகவன் எப்படி ஒரு மாஸ்டர் பீஸை உருவாக்கியிருக்கிறார்". இப்படி அவன் பேசிக்கொண்டே போனான்.

என்னை பொருத்தவரை, ஆயிரத்தில் ஒருவன் ஒரு மசாலா திரைப்படம் மட்டுமே. சோழர்களை இந்தளவு இழிவாக சித்தரிக்க காரணம் என்ன என்பது எனக்கு கடைசிவரை புரியவே இல்லை.

சிலர் இது தமிழின் "முதல் பின்நவீனத்துவ திரைப்படம்" என்று சொல்கிறார்கள். நான் இதுவரை பார்த்து உள்ள ஒரே தமிழ் பின்நவீனத்துவ திரைப்படம் "கற்றது தமிழ்" மட்டுமே.

Thursday, March 4, 2010

இது கற்பனை அல்ல

பூமியில் இருந்து 100 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஒரு கிரகம் இருக்கிறது. அங்கும் மனிதர்களை போன்றவர்களே வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களை மனிதர்கள் என்று ஒருபொழுதும் சொல்லிக்கொள்வது இல்லை. தாங்கள் யார் என்று அறிந்து கொள்வதற்கும் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

அங்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசத்தை உடல் அளவிலேயே கண்டார்கள். அவர்கள் தங்கள் உடல்களை எதை கொண்டும் மூடவில்லை, எனவே அங்கு யாரும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகவில்லை.

யாரும் யாருக்கும் கட்டளைகள் இடவில்லை, இதனால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பிரச்சனை எழவில்லை. தங்களுக்குள் கருத்துகளை பரிமாறி கொள்ள அவர்கள் நினைத்தது இல்லை, இதனால், மொழிகளின் தேவை அவர்களுக்கு சுத்தமாகவே இல்லாமல் போனது.

மொழிகள் இல்லாததால், காவியங்கள், கவிதைகள், கதைகள் என்று எதுவும் தோன்றவில்லை. கவிதைகள் தோன்றாததால், அவர்கள் மனது குழப்பம் அடைவது இல்லை. கதைகள் இல்லாததால், அங்கு பொய்களுக்கு இடமே இல்லை.

அவர்கள் நெருப்பை கண்டார்கள், தண்ணிரை கண்டார்கள், மரத்தை கண்டார்கள், பெண்களை கண்டார்கள், ஆனால் அவற்றின் மூலத்தை அறிந்துகொள்ள அவர்கள் விரும்பியது இல்லை.

நிலத்தை பார்த்தார்கள், ஆகாயத்தை பார்த்தார்கள், நட்சத்திரதை பார்த்தார்கள், எரிகல்களை பார்த்தார்கள், ஆனால் அவைகளை உரிமையாக்கிகொள்ள அவர்கள் எண்ணவே இல்லை.

இயேசு, நெப்போலியன், லெனின், ஐன்ஸ்டைன், ஹிட்லர் போன்றவர்கள் அங்கேயும் நிறைய தோன்றினார்கள். ஆனால், தங்களை நீருபித்து கொள்ள அவர்களுக்கு எந்த ஒரு கட்டாயமும் எற்படவில்லை. இதனால் புகழ்ச்சி, புரட்சி என்ற வார்த்தைகள் தோன்றவே இல்லை.

அங்கு சுவர்களே இல்லை, எனவே அவர்கள் மற்றவர்களிடம் எதையும் மறைக்கவில்லை. அவர்கள் இருளை பார்த்து பயப்படவில்லை. எனவே அவர்களுக்கு நெருப்பும், ஒளியும் தேவைபடவில்லை. அவர்கள் இறப்பை நம்பவே இல்லை. ஆகவே, அவர்களுக்கு பயமே இல்லை.

அவர்கள் சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள். உங்களையும் என்னையும் விட பல மடங்கு சந்தோஷமாகவே வாழ்ந்தார்கள்.

இந்த கிரகம் கற்பனை கிரகம் அல்ல. ஏனென்றால், அங்கு கற்பனையில் இருந்து உருவாக்கபட்ட எந்த பொருளும் இல்லை.

நாம் வாழ்வதுதான் கற்பனை உலகில். "மொழி, நடை, உடை" என்று நம்மோடு இருக்கும் எல்லாமே, கற்பனையில் இருந்து தோன்றிய உலகில்.