இந்த உலகத்தில் எதிரிகள் இல்லாதவன் அதிர்ஷ்டம் இல்லாதவன். அவனுக்கான எதிரிகளை அவனே உருவாக்கிக்கொள்ள வேண்டும். எனக்கு எதிரி என்று ஒருவன் இருக்கிறான். அவன் எப்பொழுதும் எனக்கான எல்லா கதவுகளையும் மூடியே வைத்திருக்கிறான். ஒரு கரிய இருளில் என்னை அடைத்து வைத்திருக்கிறான். அந்த இருட்டில் என்னால் கதவுகளின் சாவித் துவாரங்களைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. நான் ஒவ்வொரு முறையும் கதவு என்று நினைத்து சுவர்களில் முட்டிக்கொண்டு கீழே விழும்போதெல்லாம், அவன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான். மற்றவர்களையும் என்னைப் பார்த்துச் சிரிக்க வைக்கிறான். கடவுள் அதைத்தான் விரும்புகிறான்.
மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றில் வரும் வரிகள்:
"எனக்கான நேரம் வரும்போது மட்டும், கடவுள் கொஞ்சமாகவே புன்னகைக்கிறான்."
அந்த வரிகள் எனக்கு முற்றிலும் பொருந்தும். இதுவரை அவன் எனக்கு எதையும் கொடுத்ததில்லை. ஒரே ஒரு முறை ஒரு கதவைத் திறந்து ஒளியைக் காட்டினான். ஆனால், அதில் நான் வெளியேறும் முன்பே கதவை அடைத்துக்கொண்டான்.
நான் கடவுளின் இருப்பைப் பலமுறை சந்தேகப்பட்டிருக்கிறேன். அந்த சந்தேகம் அதிகமாகும் போதெல்லாம், அவன் சிறு ஒளியைக் காட்டிவிட்டு ஒளிந்துகொள்கிறான். கண்ணில் தெரியாத ஒருவனிடம் எப்படி சண்டையிடுவது என்று எனக்குத் தெரியவில்லை.
அவனை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், என் தோல்வியை அவனிடம் ஒத்துக்கொள்ள வேண்டும். அவனுக்கு என் மீது இன்னும் சிறிதளவாவது கருணை இருந்தால், என் மனதில் நீங்காமல் இருக்கும் தோல்வியின் நினைவுகளை அழிக்கச் சொல்ல வேண்டும்.
இல்லை, இல்லை.
அவனை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், அவன் எனக்குச் செய்த அநீதிகளுக்கு நியாயம் கேட்க வேண்டும். என் கனவுகளுக்கு இடையூறு தருவதால் அவனுக்கு அப்படி என்ன இன்பம் என்று கேட்க வேண்டும். அவனின் அன்பு, பாசம், கருணை இவை எப்பொழுதுமே எனக்குத் தேவையில்லை என்று சூளுரைக்க வேண்டும். எத்தனை தோல்விகள் கண்டாலும் எழுந்து நிற்கும் என்னைப் பார்த்து அவன் பொறாமை கொள்ள வேண்டும்.
கொஞ்சம் பொறுங்கள், ஏதோ ஒரு கதவு திறக்கப்படும் ஓசை கேட்கிறது. அது எனக்கான கதவா? என்று பார்த்துவிட்டு வருகிறேன்.
4 comments:
ம்ம்ம்ம்... நல்லாருக்கு - புனைவு!
நன்றி...
saga asathitinga. sema sema sema :)
தாங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சரவணா. மேலும் என் வலைப் பதிவுக்கு நீங்கள் வந்தது மிக்க மகிழ்ச்சி. நானும் உங்கள் வலைப்பதிவு பார்த்தேன். சுருக்கமாகவும் எழுதுகிறீர்கள். நானும் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். எழுத ஆரம்பித்ததும்தான் தெரிகிறது நிறையப் படிக்க வேண்டுமென்று. நட்பு தொடரட்டும்.
Post a Comment