தமிழ்நாட்டில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் ஏற்கெனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள். பின்னர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். தற்போது அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக மீண்டும் களமிறங்கியுள்ளனர்.
இடைத்தேர்தல் என்பது வாக்குச்சாவடியில் ஒரு நாள் நடக்கும் வாக்குப்பதிவுக்கான நாடகம் மட்டுமல்ல. அதன் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசு இயந்திரம் இயங்குகிறது. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். காவல்துறை முழுமையாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்படுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அரசு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்காக தமிழக அரசு ரூ.1,302 கோடியை தேர்தல் செலவுக்காக ஒதுக்கியிருந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகள். இந்தத் தொகையை 234 தொகுதிகளால் வகுத்துப் பார்த்தால், ஒரு தொகுதிக்கான சராசரி தேர்தல் நிர்வாகச் செலவு சுமார்: ₹5.56 கோடி!
இந்தக் கணக்கை தினமணி தனது மே 27, 2026 செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளது. இப்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். ₹5.5 கோடி × 2 = சுமார் ₹11 கோடி. இது தொடக்கமே. இன்னும் இது போல் 6 தொகுதிகளுக்கு மேல் (இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்) இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. ஆக மொத்தம் ₹5.5 கோடி × 8 = சுமார் ₹44 கோடி.
இது ஒரு தோராயமான கணக்கு. ஆனால் அந்த ₹44 கோடி யாருடையது? ஒரு கட்சியினுடையதா? ஒரு வேட்பாளருடையதா? ஒரு தலைவருடையதா? இல்லை. அது மக்களின் வரிப் பணம். இந்தக் கணக்கில் தனி வாக்காளர்களுக்கு ஏற்படும் செலவுக் கணக்கு காட்டப்படவில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு வாக்காளர் தனது ஒரு ஓட்டினைப் பதிவு செய்ய சென்னை அல்லது வேறு ஊரிலிருந்து தனது சொந்தத் தொகுதிக்கு வந்து இருக்கலாம். இதற்கான பயணச் செலவு, பயண நேரம் அனைத்தையும் நாம் சேர்க்க வேண்டும்.
மீண்டும் நடக்க போகும் கட்சிப் பொதுக்கூட்டங்கள், பிரச்சார ஊர்வலங்கள், ஒலிபெருக்கிகள், போக்குவரத்து மாற்றங்கள், கட்சித் தொண்டர்களின் வருகை, ஊடகங்களின் கவனம், சமூக வலைதளப் போர்கள், இதன் காரணமாக வாக்காளர்களுக்கு ஏற்படும் மனச்சுமை ஆகியவற்றையும் நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
ஜனநாயகத்தில் தேர்தல் என்பது மக்களின் மிகப்பெரிய உரிமை. அது சுமையாக மாறக் கூடாது. ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்குச் செல்வதால், அவருடைய வேலை நேரம் பாதிக்கப்படலாம், வியாபாரம் பாதிக்கப்படலாம், விவசாயப் பணிகள் பாதிக்கப்படலாம். மேலும் முதியவர்களும் இதனால் பாதிப்பு அதிகம். அதனால்தான் ஒரு இடைத்தேர்தலின் செலவை வெறும் அரசின் கணக்கில் மட்டும் பார்க்கக் கூடாது.
ஒரு எம்.எல்.ஏ. இயற்கையான காரணத்தால் உயிரிழந்தாலோ, அல்லது நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக பதவி பறிக்கப்பட்டாலோ, அவருடைய பதவி காலியாகிறது. அப்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டியது ஜனநாயகத்தின் தவிர்க்க முடியாத நடைமுறை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
ஆனால்...
ஒரு எம்.எல்.ஏ. தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்காக பதவியை ராஜினாமா செய்து, வேறு கட்சியில் இணைந்து, அதே தொகுதியில் மீண்டும் வேட்பாளராக நிற்பது? இதுதான் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். ராஜினாமா செய்யும் உரிமை சட்டத்தில் இருக்கலாம். ஆனால், அந்த உரிமையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பொதுச் செலவுக்கு அரசியல் பொறுப்பு வேண்டாமா?
இந்தக் கேள்வியை தவெகவை மட்டும் பார்த்துக் கேட்க வேண்டியதில்லை. நாளை வேறு கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. இதே செயலைச் செய்தாலும் இதே கேள்விதான் எழ வேண்டும். எனவே சட்டத்தில் மாற்றம் குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது. இதற்கு ஒரு சட்டரீதியான தீர்வு தேவை.
மீண்டும் சொல்வோம் "ஜனநாயகத்தில் தேர்தல் என்பது மக்களின் மிகப்பெரிய உரிமை. அது சுமையாக மாறக் கூடாது."
Sunday, September 13, 2026
மக்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ, ராஜினாமா, இடைத்தேர்தல் — செலவு யாருடையது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment