Sunday, June 23, 2013

மோடி Vs மோதி

நம் வருங்கால வல்லரசு இந்தியாவின் வருங்கால பிரதமர் என்று எண்ணப்படும், மோடி (என்கின்ற) மோதி பற்றிய ஒரு பதிவு எழுத வேண்டும் என்று ரொம்ப நாட்களாகவே ஆசை.

சரி, அந்த ஆசையை நிறைவேற்றிவிடுவோம் என்று உட்கார்ந்தால், மனதில் ஒரு சின்ன சந்தேகம்.

மோதி-யா அல்லது மோடி-யா?

சற்று முன் பார்த்த "புதிய தலைமுறை" தொலைக்காட்சியில் "மோதி" என்றுதான் சொன்னார்கள். ஆனால், உள்ளதை உள்ளபடி சொல்லும் ஒரே நாளிதழ் என்று என் அப்பா நம்பும் "தினமலர்" செய்தித்தாளில் "மோடி" என்றுதான் போடுகிறார்கள்.

இப்போது நான் நம் வருங்கால பிரதமரை எப்படி அழைப்பது?

"மோடி"யா அல்லது "மோதி"யா?

ஒருவேளை நான் அவர் பெயரைத் தவறாக எழுதிப் போய், நாம் அனைவரும் நினைப்பது போல் அவர் பிரதமராகி, இந்தப் பெயர் பிரச்சனை அவருக்குத் தெரிய வந்தால், என் நிலைமை என்ன ஆகும்?

அவ்வளவு பெரிய கலவரத்தையே நம் இந்திய மக்கள் நினைவிலிருந்து அழிக்கச் செய்தவர் ஆயிற்றே?

இப்போது கூட நான் அந்தக் கலவரத்தின் பெயரையும் ஆண்டையும் நினைவுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறேன். ஆனால் முடியவில்லை.

அப்படிப்பட்டவரின் பெயரை நான் தவறாக எழுதினால் நன்றாக இருக்குமா?

ஆகவே, மோடி என்கின்ற மோதியைப் பற்றியோ, அல்லது மோதி என்கின்ற மோடியைப் பற்றியோ, இப்போதைக்கு எந்தப் பதிவும் எழுதும் எண்ணம் இல்லை.

வாழ்க பாரதம்.






Monday, March 25, 2013

கனவுக்கும் நிஜத்துக்கும் நடுவில்

மீண்டும் பைத்தியக்கார எண்ணங்கள் மனதில் துளிர்விட ஆரம்பித்துவிட்டன. எதனால் இந்த எண்ணங்கள் என்று ஆராயத் தொடங்கினால், அது பிரச்சனைகளை இன்னும் பூதாகரமாக்கிவிடும்.

காலை ஏழு மணிக்கு மீண்டும் கண்கள் தூங்கச் சென்றுவிட்டன. விதவிதமான கனவுகள். மொத்தம் பத்துக்கும் குறையாத கனவுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஏதோ ஒரு கனவிலிருந்து திடீரென்று அலறி அடித்துக்கொண்டு எழுந்தால், மணி வெறும் 7:05 தான்.

இந்த ஐந்து நிமிடங்களில் கிட்டத்தட்ட பத்து கனவுகள்.

எழுந்தபோது அந்தப் பத்து கனவுகளும் நினைவில் இருந்தன. ஆனால் இப்போது நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தால், ஒரு கனவு கூட நினைவில் வர மறுக்கிறது.

ஒருவேளை தூக்கத்தில் நான் பத்து கனவுகள் கண்டதாகக் கண்டது கூட கனவுதானா?

இல்லை, பத்து கனவுகள் கண்டது உண்மைதான். ஆனால் நினைவில் வரத்தான் மறுக்கிறது.

ஒருவேளை அதே கனவுகள் மீண்டும் வந்தால், எங்கேயோ நிஜத்தில் நடந்ததாக அப்போது தோன்றலாம். அது நிஜம் அல்ல, கனவுதான் என்று அந்தக் கனவுக்கு எப்படி புரியவைப்பது?

இந்தக் கனவுகள் சம்பந்தமாகத்தான் எத்தனை புத்தகங்கள், எத்தனை திரைப்படங்கள்.

Inception திரைப்படம் எனக்குப் புரிந்த அளவுக்குக் கூட, கனவுகளைப் பற்றி நான் படித்த எந்தப் புத்தகங்களும் எனக்குப் புரியவில்லை.

(கனவுகளைப் பற்றி நான் படித்த புத்தகங்கள் மற்றும் பார்த்த திரைப்படங்களில் எனக்கு Inception மட்டுமே கொஞ்சம் புரிந்தது என்பதைத்தான் கொஞ்சம் குழப்பி மேலே எழுதியிருக்கிறேன். எழுதிய பின் படித்துப் பார்த்தபோது, எழுதிய எனக்கே அந்த வரிகள் புரியவில்லை என்றாலும், ஏனோ அதை நீக்க மனது வரவில்லை.)

எனக்கு சில கனவுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன.

மீண்டும் மீண்டும் என்பதற்கு தினமும் என்று அர்த்தம் இல்லை.

கொஞ்ச நாட்களாக நான் பறப்பது போல் எனக்குக் கனவு வருகிறது.

யாரோ என்னைத் துரத்துகிறார்கள். நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். கொஞ்ச நேரம் பறக்கவும் செய்கிறேன்.

பறப்பது எனக்குக் கடினமான வேலையாகத் தெரியவில்லை. தினமும் நான் பறப்பவன் போல் பறந்துகொண்டு இருக்கிறேன்.

பறப்பது என்றால் பறவையைப் போல் அல்ல. Matrix திரைப்படத்தில் ஓடிப்போய், கால்களை தரையில் அமர்த்திய பின் பறப்பார்களே, அது போல்.

நான் மட்டும்தான் பறக்கிறேன். என்னைத் துரத்துபவர்கள் பறக்கவில்லை. அவர்கள் ஓடித்தான் வருகிறார்கள்.

நான் பறப்பதைப் பார்த்து அவர்கள் வியந்ததாகவும் தெரியவில்லை.

அவ்வளவுதான் நினைவில் இருக்கிறது.

ஆனால் எழுந்த பின் இப்போது நினைத்துப் பார்த்தால், அதே போல் நான் பறப்பது போன்ற கனவுகள் அடிக்கடி எனக்கு வருவது போல் தோன்றுகிறது.

இன்னொரு நாள் — ஒரு கனவில், ஒரு அறையில் நான் மட்டுமே இருக்கிறேன்.

எனக்குப் பறப்பது மறந்துவிடுகிறது.

நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன். ஆனால் பறக்க முடியவில்லை.

என்னுடைய கையாலாகாத்தனத்தை நினைக்கும்போது கண்களில் தண்ணீர் வருகிறது.

கதறி அழுகிறேன்.

இன்னொரு கனவில் ஒவ்வொரு வீட்டு மொட்டைமாடியாகப் பறந்துகொண்டு இருக்கிறேன்.

என்னுடன் இன்னொருவனும் வருகிறான்.

எங்கள் இருவரையுமே யாரோ துரத்துகிறார்கள்.

நாங்கள் ஓடியும் பறந்தும் அவர்களிடமிருந்து தப்பிக்கிறோம்.

ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் பிரிகிறோம்.

இப்போது நான் மட்டும் தனியாக ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

ஒரு கோயிலின் கோபுரங்களில் ஒளிந்துகொண்டு இருக்கிறேன்.

அங்கேயிருந்து கோயிலுக்குள் எட்டிப்பார்க்கிறேன்.

உள்ளே சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

சொல்லப்போனால், மேலே சொன்ன கனவில் எனக்கு "நானும் அவனும்" பிரிவது வரைதான் நினைவில் இருக்கிறது.

அதற்குப் பின் எழுதியது எல்லாம் நானே எழுதியது.

இல்லை, அதுவும் கனவில் வந்ததுதான் என்று உள்மனம் சொல்கிறது.

உண்மையாக அது கனவில் வந்ததா, இல்லை நானே கதைகட்டி எழுதுகிறேனா என்று தெரியவில்லை.

என் பைத்தியக்கார எண்ணங்களைப் பற்றி சொல்ல வந்த நான், கனவுகளோடு முடித்துக்கொள்கிறேன்.

பைத்தியக்கார எண்ணங்களைப் பற்றி இன்னொரு முறை எழுதுகிறேன்.

அதற்கு முன்னால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி —

"நீ கடைசியாக ஒரு பைத்தியத்தை எப்போது நேரில் பார்த்தாய்?" என்று யாராவது உங்களிடம் கேட்டால், உங்கள் பதில் எப்படியாக இருக்கும்?

Wednesday, February 13, 2013

நண்பர் ஆறுமுகத்தின் ஆராதனாவுக்காக.....

கவிதைகளாலும் வார்த்தைகளாலும் உருவான ஆராதனாவுக்கு உருவம் கொடுக்க முயற்சித்து கொண்டு இருக்கிறேன். யாரோ ஒருவரின் ஆராதனாவுக்கு நான் உருவம் கொடுப்பது தவறான செயல்தான் என்ற போதிலும், இனியும் ஆராதனாவை வெறும் வார்த்தைகளால் மட்டுமே பார்க்க நான் தயாரில்லை. ஆராதனாவுக்கு ஒரு உருவம் தேவை. வார்த்தைகளுக்கு உருவம் கொடுப்பதில் நான் கைதேர்ந்த வித்தகன் கிடையாது, சொல்ல போனால் வார்த்தைகளுக்கு உருவம் கொடுப்பது இதுதான் எனக்கு முதல் முறை. இதோ ஆராதனாவுக்கு உருவம் கொடுக்க தொடங்கிவிட்டேன். முடிந்தவுடன் சொல்லி அனுப்புகிறேன், வந்து வாழ்த்திவிட்டு போங்கள்.

முடிவில்லா கதை


"நீ இதை கதையாக எழுதலாம்" என்று அசோக் என்னிடம் சொன்ன "அவனுக்கும், அவன் நண்பனுக்கும்" நடந்த உரையாடலை வைத்துதான் இந்த கதையை எழுதுகிறேன். இந்த கதையை எழுதுவதற்கு அசோக் ஒரே ஒரு நிபந்தனைதான் போட்டான் அது " எந்த காரணம் கொண்டும் அவனின் நண்பனின் பெயரை எங்கேயும் எழுதிவிட கூடாது" என்பதே.

இந்த கதையை நீங்கள் படிக்கும் முன்னர் சில விசயங்கள்.

"இணையம்", இதற்கு இன்னொரு அர்த்தம் வேகம் என்று நினைக்கிறேன். இணையம் வந்தபிறகு எல்லாவற்றிலும் ஒரு வேகம். அது நீங்கள் செய்யும் வேலையாகத்தும், காதலாகத்தும், நட்பாகத்தும் எல்லாவற்றிலும் ஒரு வேகம். அதே போல் அவை வந்த வேகத்தில் உடனே மறைந்தும் விடுகிறது. நீங்கள் ஒருவனின் உயிர் நண்பன் என்றால் கண்டிப்பாக அவனின் Facebook'லும் நண்பனாக இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் நீங்கள் இருவரும் தோழர்கள் இல்லை. உங்களுக்கு ட்விட்டர் பற்றியும் தெரிந்திருக்கும், அசோக்கிற்கும் அவனது ட்விட்டர் நண்பனுக்கும் இடையில் நடந்த உரையாடல்தான் கதை. நான் முன்னரே சொன்னது போல், அசோக் என்னிடம் காட்டிய இணைய உரையாடல்களை வைத்துதான் இந்த கதையை எழுதுகிறேன். ப்ரைவசி கருதி சிலவற்றை அவன் என்னிடம் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆகவே எனக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து இந்த கதையை உருவாக்க முயற்சித்து இருக்கிறேன்.

அசோக் சொன்ன கதையை வைத்து நானே எழுதிய ட்விட்டர் மற்றும் இ-மெயில் உரையாடல்கள்தான் கிழே உள்ளவை. இதில் எது ட்விட்டர் உரையாடல், எது இ-மெயில் உரையாடல் என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளவும்

சகா, உனது வலைப்பதிவை படித்தேன். நன்றாக எழுதுகிறாய், தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.


நன்றி நண்பா. தொடர்ந்து படிக்கவும்.

சகா! நீங்க மொபைல் மூலமா ட்விட் பண்றதா சொல்லியிருந்தீங்க. என்ன மாடல்?
லேப்ல பண்ற மாதிரியே எல்லா ட்விட்டர் ஆப்சனும் பண்ணமுடியுமா? ஏதாச்சும் டிரா பேக் இருக்குதா சகா!?


சகா,  இப்பொழுது உள்ள எல்லா செல்போனிலிலும் தமிழில் டைப் செய்யும் வசதி வந்துவிட்டது. நான் இப்பொழுது உபயோகப்படுத்துவது சோனி எக்ஸ்பீரியா. இது ஆண்ட்ராய்டு மாடல். எல்லா ஆண்ட்ராய்டு மாடல் போன்களிலும் தமிழில் டைப் செய்யாலாம், அதற்கு "தமிழ் விசை" என்ற மென்பொருள் தேவை. இதை இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம். தமிழ் பக்கங்களை படிக்க "Opera Mini" என்ற மென்பொருள் இருக்கிறது. இந்த மென்பொருள் நோக்கியா மற்றும் ஐ-போனுக்கும் உபயோகப்படுத்தலாம். இப்பொழுதுலாம், தமிழில் டைப் செய்வது ரொம்ப சுலபம் சகா. உங்களுக்கு இன்னும் சந்தேகம் என்றால், தங்கள் மொபைல் நம்பர் தரவும், நான் போன் செய்து விளக்குகிறேன். தங்களுடைய போனின் மாடல் என்ன??

உனது இ-மெயிலுக்கு நன்றி நண்பா. சில சொந்த பிரச்ச்னைகளால் கடந்த மூன்று மாதங்களாக செல்போன்கள் உபயோகப்படுத்துவது இல்லை. செல்போனில் எப்படி டைப் செய்ய முடியும் என்ற சந்தேகத்தால் அந்த கேள்வியை கேட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். மற்றபடி நாம் ட்விட்டர் மற்றும் மெயில் மூலமே பேசிக்கொள்வோம்.

என்னது, இந்த நூற்றாண்டில் போன் உபயோகப்படுத்தாத மனிதனா??? ஆச்சர்யம் தான். எப்படி சகா இது சாத்தியமானது. நானும் பல முறை இப்படி முயற்சி செய்துள்ளேன். ஆனால் அவை எல்லாம் தோல்வியில்தான் முடிந்து உள்ளது. இன்னும் என்னால் உங்கள் வார்த்தைகளை நம்ப முடியவில்லை.

என்னது போன் உபயோகப்படுத்துவதில்லையா>> உண்மை தான் தோழர். சில அந்தரங்க காரணங்கள். ஒரு காலத்தில் இந்த உலகத்திலேயே செல்போனை அதிகம் உபயோகப்படுத்தியது நான் தான் சகா. இரவு எது?? பகல் எது?? என்ற தெரியாத காலம் அது.

சகா, தங்கள் வலைப்பதிவை படித்தேன். சாருவைப் பற்றி தாங்கள் எழுதிய கட்டுரை அருமை, நான் சாருவின் ரசிகன், இருந்தாலும் அந்த கட்டுரை எனக்கு பிடித்திருந்தது. அது மதுரை பொண்ணோ, ஜெர்மனி பொண்ணோ யாராக இருந்தால் எனக்கு என்ன, நான் இன்னும் சாருவின் ரசிகன் தான்.
சகா, இருக்கிறீர்களா??


நேற்று தூங்க அதிகாலை ஆகி விட்டது. இப்போது தான் எழுந்தேன்.உங்களை தேட வைத்து விட்டேன். நான் எப்போதும் இப்படித் தான். சாரி சகா.

சகா, ஒரு சந்தேகம். தற்பொழுது பிரேம்-ரமேஷின் 'மகாமுனி' புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். உங்கள் வலைப்பதிவில் அவரைப் பற்றி மனித மாமிசம் உண்பவர் என்று யாரோ சொன்னதாக குறிப்பிட்டு உள்ளீர். அப்படி சொன்னது யார்?? ரமேஷ் - பிரேமின் "சொல் என்றொரு சொல்" என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் ஒன்று. இப்படியும் எழுத முடியுமா என்ற குழப்பம். இதை போல் எழுதுவதால்தானே அவர்களுக்கு இப்படி ஒரு கேட்டப்பெயர்.

சகா! நான் உடனடியாக பதிலளிக்காததை தயவு செய்து பொருட்படுத்தாதீர்கள். எனது சூழல் அப்படி. மன்னிக்கவும் தோழர்.

மகாமுனியை நான் தரிசித்ததில்லை சகா. வலைப்பூவில் முனியை பற்றி பகிருங்களேன் சகா.
வெளிப்படையாக சொல்லப் போனால் இலக்கியம் என்ற ஒன்று படித்தே இரு வருடங்களாயிற்று சகா.
நான் படித்தவரையில் "முன்பொரு காலத்தில் 108 கிளிகள்" தான் தமிழின் ஆகச்சிறந்த தொகுப்பென ஒருமுறை ஜெமோவிடம் கூறினேன்.அன்பாய் புன்னகைத்தார்.


மகாமுனி பிரேம்- ரமேஷ் சிறுகதைகளின் தொகுப்பு. இதில் நீங்கள் சொன்ன ”108 கிளிகள்" இருக்கிறது.
ஏனோ அந்த சிறுகதை என்னை அதிகம் கவரவில்லை. எனக்கு மிகவும் பிடித்தக் கதை “பரமபத காதைகள்”. கிளிகள் கதையை மீண்டும் ஒரு முறை படித்து பார்க்கனும்.
ஒரு வேளை அந்த கதை எனக்கு பிடிக்க கொஞ்ச நாட்கள் ஆகலாம்.முழுதும் இந்த புத்தகத்தை படித்த பின், விரைவில் வலைப்பதிவில் எழுதுகிறேன்.நன்றி சகா.


சகா.. நகுலனைப் பற்றி நாஞ்சில்நாடன் எழுதியது..http://tiny.cc/f6mh0
ஏனோ, கண்கள் கலங்கி விட்டது....


படித்தேன் தோழர். பகிர்வுக்கு நன்றி. நகுலன் பற்றி சொல்ல சில இருக்கின்றன. பின்னர்.. தற்சமயம் மனம் சற்று இலகுவாயில்லை.


RT @ashok338 நகுலனின் சுசிலா நியாபகம் இப்பொழுது தேவையில்லாமல் வருகிறது.

சகா, நகுலனை நேரில் சந்தித்தது உண்டா??


இல்லை நண்பா, கடந்த ஒரு வருடமாக புத்தகம் மூலமாக மட்டுமே பழக்கம்.

அவரை சந்தித்திருக்கிறேன் சகா, இரு முறை..

இரண்டு முறையா??? நீங்கள் உண்மையாகவே அதிர்ஷ்டம் செய்தவர் சகா.. வாசகராக சந்தித்தீர்களா???


வாசகராகத் தான் சகா. இப்போதும் அவ்வப்போது அவரது வீடும் அந்த நாற்காலியும் கனவில் வந்து கொண்டுதான் இருக்கின்றது.


சகா, நீங்கள் பத்திரிக்கையில் துறையில் வேலை செய்கிறீர்களா??

என்ன செய்கிறீர்கள்? என்பதைப் போன்ற அச்சம் தரும் கேள்வி வேறேதும் தற்போதைக்கு எனக்கில்லை :) சில வருடங்கள் கழித்து பகிர்கிறேன் சகா.

இணையத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர்கள் நட்பு இத்துடன் காணாமல் போனது.

************************************
இது தான் அசோக் சொன்ன கதை இதை வைத்து நானும் ஒரு முழு கதையை எழுத எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை.

Tuesday, February 12, 2013

இன்னொரு கதை

பசி வயிற்றை கிள்ளுகிறது. அது எப்படி கிள்ளும் என்றும் கேட்காதீர்கள். சிலவற்றை அனுபவித்தால் மட்டுமே நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். அப்படிதான் இதுவும். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. மாதத்தில் ஒரு நாளாவது இப்படி காலையிலிருந்து இரவு வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பது என்று முடிவுசெய்து இருக்கிறேன். காரணம் என்று எதுவும் இல்லை.

வீட்டில் இருந்தால், கண்டிப்பாக எதாவது சாப்பிட வேண்டிய கட்டாயம் எற்பட்டுவிடும். "இல்லை, இன்று முழுவதும் எதுவும் சாப்பிட போவதில்லை" என்று மனைவியிடம் சொல்ல முடியாது. அப்படி சொன்னால், அதற்கு காரணம் கேட்பாள். காரணம் எதுவும் இல்லை என்று சொன்னால், நான் எதையோ ஒன்றை மறைப்பதாக அவள் எண்ணக்கூடும்.

எதற்கு இந்த தேவையில்லாத பிரச்சனை என்று காலை 8 மணிக்கே அலுவலகத்துக்கு வந்துவிட்டேன். அப்படியிருந்தும் அவள் விடவில்லை,  ஒரு கப் டீ போட்டு வைத்துவிட்டாள். ஏற்கனவே காலையில் டிபன் வேண்டாம் என்று சொல்லியாச்சு என்பதால் டீயை குடித்துவிட்டேன். எங்களுக்கு திருமணமாகி ஏழு மாதங்கள் கடந்துவிட்டது. இந்த ஏழு மாதத்தில் ஒருநாள் கூட அவள் கோபப்பட்டோ, டென்ஷனாகியோ நான் பார்த்ததில்லை. 

"ஏன்பா, உனக்கு கோபமே வராதா??" என்று கேட்டால். "கோபப்பட்டு என்ன நடக்க போகிறது" என்பாள்.

அவளைப் பற்றி எழுத ஆரம்பித்தாள் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்று தெரியவில்லை. தனியாக அவளைப் பற்றி ஒரு பதிவு எழுத ஆசை. ஆபிதீன் அவரின் மனைவியைப் பற்றி கலகலப்பாக எழுதுவாரே அதைப்போல். கல்யாணமான புதிதில் அவளை சிரிக்க வைக்க படாதப் பாடுபட்டேன். எந்த காமெடி சொன்னாலும் சிரிக்க மாட்டாள். பின்னர்தான் தெரிந்தது நான் சொல்லும் காமெடிகள் அவளுக்கு புரிவதில்லை என்ற விசயம். அவளிடம் காமெடிக்கு விளக்கம் சொல்லியே முதல் இரண்டு மாதங்கள் கழிந்துவிட்டன.

இப்பொழுதுலாம் அவள் உஷார் ஆகிவிட்டாள், நான் காமெடி சொல்வதற்கு முன்னரே சிரித்துவிடுகிறாள். "எதற்கு சிரித்தாய்" என்று கேட்டால் " அப்பறம் நான் சிரிக்க'லைனா அந்த காமெடிக்கு விளக்கம் வேறு சொல்லுவீங்க" என்கிறாள்.

அவள் விழுந்து விழுந்து சிரிக்கும் அதிசயமும் ஒருநாள் நடந்தது . அது "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" திரைப்படத்தை பார்த்த போது. சில்லரையைக் கொட்டியது போல் சிரிப்பு என்பார்களே, அது போல் அப்படியோரு சிரிப்பு. இப்பொழுது கூட அந்த திரைப்படத்தின் எதாவது ஒரு வசனத்தை சொன்னால் விடாமல் சிரிப்பாள். அப்படி ஒருநாள் அவள் சிரித்த சிரிப்பை கேட்டு பக்கத்து வீட்டு பாட்டி பயந்து போய் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். அந்த பாட்டிக்கு காது கேட்காது என்பது இங்கே ஒரு கூடுதல் செய்தி.

காலை எட்டு மணிக்கு அலுவலகம் வந்தேன். இப்பொழுது மணி மூன்று. நான்கு முறை போன் செய்துவிட்டாள். " காலையில் சாப்பிட்டாச்சா??" "மதியம் சாப்பிட்டாச்சா??" என்று இரண்டு முறையும், "நான் சாப்பிட போகிறேன்" என்று இரண்டு முறையும் மொத்தம் நான்கு முறை.  இதுவரை காலையிலிருந்து ஆறு முறை தண்ணீர் குடித்ததைதவிர வேறு எதுவும் சாப்பிடவில்லை என்று அவளிடம் சொல்லவா முடியும்.

"இல்லை, இன்னைக்கு முழுவதும் எதுவும் சாப்பிடவேண்டாம் என்று முடிவுசெய்து இருக்கிறேன். சும்மாதான் இந்த முடிவு" என்ற உண்மையை சொல்லலாம். அதற்கு அவளிடமிருந்து வரும் பதில் இப்படியாகதான் இருக்கும்,

"இப்ப அடி வாங்க போறீங்க. முதல்ல இந்த புக் படிக்கிறதை நிறுத்துங்க. மொத்தமா ஒருநாள் எடைக்கு போட்டுறேன் பாருங்க". ஆனால் இதை சொல்லும் போது அவள் மூகத்தில் கொஞ்சம் கூட கோபத்தை பார்க்க முடியாது.

இன்னும் பசி வயிற்றை கிள்ளுகிறது. இன்றைய பசியால் ரொம்ப நாட்களாக தூங்கிக்கொண்டு இருந்த என் வலைப்பதிவுக்கு ஒரு பதிவு கிடைத்துள்ளது என்பதை தவிர உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் இந்த பசிக்கான வேறு காரணங்கள் எதுவும் இல்லை.

குறிப்பு:
இரண்டு வருடங்களுக்கு முன்னால், இரண்டு நாட்கள் டீ தண்ணீரை தவிர வேறு எதுவும் உண்ணாமல் அறையிலேயே கிடந்தது இப்பொழுது தேவையில்லாமல் நினைவில் வருகிறது.

Friday, August 10, 2012

சுதந்திர தின வாழ்த்துகள்

இன்னும் நான்கு நாட்களே உள்ளன. Facebook'ல் இந்திய கொடியை போட்டு அதற்கு கீழே "Proud to be Indian" என்று எழுதுவதற்கு. கொடியை மட்டும் போடாமல் கூடவே இந்தியாவின் வரலாற்றையும் சாதனைகளையும் சேர்த்து போட்டால் கண்டிப்பாக ஒன்று இரண்டு லைக்குகளாவது வரும். சுதந்திர தினத்தன்று குறுஞ்செய்திகளுக்கு ஒரு ரூபாய் எடுக்கவில்லை என்றால், "Wish u happy independance Day" என செல்போனில் இருக்கும் அனைத்து நம்பர்களுக்கும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பலாம். ஒருவேளை ஒரு ரூபாய் எடுத்தாலும், பெண் தோழிகளுக்கு மட்டும் வாழ்த்து செய்தி அனுப்பி நமது நாட்டுப்பற்றை நிலைநாட்டிக்கொள்ளலாம். நீங்கள் இந்த குறுஞ்செய்தி அனுப்பும் வேலையை "இந்திய தொலைக்காட்சியில் முதல் முறையாக" என்று காட்டப்படும் எதாவது ஒரு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டே கூட செய்யலாம்.

முன்னொரு காலத்தில் சுதந்திர தினம் என்பது "மிட்டாய்" கிடைக்கும் நாள், அதுவும் ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு மிட்டாய்களின் மவுசு குறைந்த இந்த காலத்தில், சுதந்திர தினம் என்பது "ஒரு விடுமுறை நாள்".

வெள்ளையர்களை விரட்டி வாங்கிய சுதந்திரம், உண்மையாகவே நமக்கு தேவைதானா??. அந்நியர்களை விரட்டிவிட்டு, இப்பொழுது அவர்களுக்கு தானே நமது பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அடகு வைத்துக்கொண்டு இருக்கிறோம். இதற்காகவா நாம் சுதந்திரம் பெற்றோம்.

எல்லா துறைகளிலும் அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம். முதலில் 25 சதவீதம், பின்னர் 49%, 51% என்று போய் இப்பொழுது 100 சதவீத அந்நிய மூதலீட்டிற்கு நமது அரசாங்கம் ஏற்பாடுகளை  செய்துக்கொண்டு இருக்கிறது. கேட்டால் இதற்கு உலகமயமாக்கல் என்று பெயர் வேறு.

அரசாங்கத்தை மட்டும் சொல்லி குற்றம் இல்லை. இது நமது அனைவரின் குற்றம். நான் வேலைப் பார்க்கும் கம்பெனி அமெரிக்க கம்பெனி என்று சொல்லிக்கொள்ளதானே நமக்கும் ஆசை. இது என்னையும் சேர்த்துதான்.

Wednesday, July 11, 2012

நான் ஈ ( ஒரு மவுத் டாக் )

இரண்டு வாரங்களுக்கு முன்:

"அது என்னடா 'நான் ஈ' படத்துக்கு இவ்வளவு விளம்பரம் பண்றாங்க?? யாருடா ஹீரோ??"

"தெரியலடா.. சந்தானம் போஸ்டர் பார்த்தேன். சந்தானம் தான் ஹீரோனு நினைக்கிறேன்."

"இல்ல இல்ல. இது தெலுங்கு படம். தமிழில் டப்பிங். வேற யாரோ, தெலுங்கு ஹீரோ."

"ஓ.. டப்பிங் படத்துக்கே இவ்வளவு சீன்'னா"

"தயாரிப்பு PVP குரூப் டா. பெரிய பணம் பார்ட்டி. பணத்தை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம அலச்சுட்டு இருக்காங்கலாம். விக்ரம் வச்சு ஒரு மொக்கை படம் தந்தாங்களே, அந்த குரூப் தான்"

"பில்லா-2 ரெண்டு வாரம் லேட்டுல, அதான் இந்த படத்தை ரீலிஸ் பண்றாங்கனு நினைக்கிறேன்"

வியாழன்: (05/07/12)

"மச்சி, பில்லா அடுத்த வாரம் ரீலிஸா?? கன்ஃபார்ம் ஆயிடுச்சா??"

"ஆமாம் பா, அடுத்த வாரம் எங்க தலைக்கு ஓபனிங்'கை மட்டும் பாரு. தமிழ்நாடே அதிர போகுது"

"ம். நாளைக்கு என்ன படம் ரீலிஸ் ஆகுது??"

"அந்த 'நான் ஈ" ரீலிஸ்"

"இவுங்க தொல்லை தாங்க முடியலயே... ஏதோ ஈ தான் ஹீரோ'வாம். வில்லனை பழிவாங்குமாம்"

"கார்ட்டூன் படமா??"

திங்கள்: (09/07/12)

"என்ன மச்சி 'நான் ஈ' படம் நல்லாயிருக்காம். நிறைய பேரு சொல்றாங்க"

"ஆமாம் டா. ஆபிஸ் பசங்களும் சொன்னாங்க.  எஸ்.எஸ்.ராஜமெளலி தான் இயக்குநர். அந்த "மாவீரன்" படம் எடுத்தாருல அவருதான்"

"இந்த வாரம் பில்லா வேற வருது, தேவையில்லாமல் இப்ப ரீலிஸ் பண்ணிடாங்க. முன்னாடியே ரீலிஸ் செய்திருந்தால், கொஞ்சமாவது ஓடி இருக்கும்"

"சரி, இன்னைக்கு நைட் ஷோ போலாமா??"

படம் இடைவேளை: (11:00 PM)

"படம் நல்லாதான் இருக்கு மச்சி. ஒரு 'ஈ' வச்சு என்ன ஆட்டம் காட்டுறாங்க பாரேன்"

"மச்சி, கிராபிக்ஸ் சூப்பரா பண்ணியிருக்காங்க டா. இது மாதிரி கிராபிக்ஸ் பண்றப்ப கொஞ்சம் சொதப்பினாலும் காமெடியா மாறிடும். ஆனால் இதுல சூப்பரா பண்ணியிருக்காங்க"

"செலவே இல்லை'ல??. ஒரு 'ஈ' வச்சே ஒட்டுறாங்க"

"டேய், இந்த படத்துக்கு மொத்தம் 30 கோடி செலவாம்"

" 30 கோடியா?? சரி வா, உள்ளே போவோம். பில்லா டிரய்லர் போடுவாங்க"

படம் முடிந்தவுடன்: (12:30 AM)

"ஏன் மச்சி?? இந்த படத்தால பில்லா ஓபனிங் கொஞ்சம் குறையுமோ??"

"டேய் அதுக்குலாம் வாய்ப்பே இல்ல. எல்லா தியேட்டரலையும் பில்லா படத்தை ஏற்கனவே வாங்கிட்டாங்க. ஒரு வேளை பில்லா படம் நல்லா இல்லைனா. கொஞ்ச நாள் கழிச்சு திரும்ப "நான் ஈ" படத்தையே போட வாய்ய்பு இருக்கு"

"ம்"

"நாளைக்கு அக்கா, மாமா, அம்மா எல்லாரையும் அழைச்சுகிட்டு வந்து திரும்ப 'நான் ஈ'  பார்க்கனும் மச்சி"

Thursday, April 19, 2012

கண்காணிப்பு கேமரா

கண்காணிப்பு கேமராக்களைப் பார்க்கும் போதேல்லாம் தேவையில்லாமல் பதற்றம் அடைகிறேன். எனக்கும் என் முகத்துக்கும் சம்மந்தம் இல்லாத ஒரு சிரிப்பை வரவழைக்கிறேன். ஒரு கையால் தலையை கோதுகிறேன். நான் கண்காணிப்பு கேமராவை பார்ததை வேறு யாராவது பார்த்தார்களா? என்று ஒருமுறை சுற்றி முற்றி பார்க்கிறேன். அதே இடத்தில் நிற்பதா அல்லது வேறு இடத்திற்கு சென்று விடுவதா என்று ஒரு முறை யோசிக்கிறேன்.



ஒரு கண்காணிப்பு கேமராவை பார்க்கும் போது உங்களுக்கு என்னவிதமான எண்ணங்கள் உதிக்கும் என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை அந்த கேமரா உங்களை எந்தவீதத்திலும் பாதிக்காமல் இருக்கலாம், அப்படி இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செய்தவர். நானும் உங்களை போல்  இருக்கதான் ஆசைப்படுகிறேன், ஆனால் முடியவில்லை. யாரோ ஒருவர் கேமராவில் நம்மை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பதை நினைக்கும் போதே, நெஞ்சு கொஞ்சம் அதிகமாக துடிக்க தொடங்கிவிடுகிறது.

கண்காணிப்பு கேமராவின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே போகிறது. கடைகள் என்றில்லாமல் இப்பொழுது தெருவுக்கு தெரு கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. நான் போகும் இடமெல்லாம், என்னைப் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கிறார்களோ? என்று எனக்கு ஒரு மாயை. எப்பொழுதுமே, என் ரகசியங்களை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்துக்கொண்டு இருக்கும் எனக்கு, இந்த கேமராக்கள் ஒரு பயத்தை உண்டு பண்ணுகின்றன. ரகசியங்களை பாதுகாப்பது என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனது விருப்பங்களை இந்த கேமராக்கள் நிராகரிக்கின்றன. ஒரு தனிமனித சுதந்திரத்தை இந்த கேமராக்கள் அழிக்கின்றன. சில நேரங்களில் என் வீட்டிற்கு உள்ளே கூட நான் கண்காணிக்கப்படுகிறேனோ என்ற அச்சம் தோன்றுகிறது.

யாருக்கு தெரியும், என் படுக்கையறையில் கூட கண்காணிப்பு கேமராக்கள் இருக்கலாம், "என் படுக்கையறையில் யாரோ ஒழிந்து இருக்கிறார்கள்" என்று மனுஷ்ய புத்திரன் எழுதியது போல்.

சமீபத்தில் நடந்த வங்கி கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில், அவர்களை எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் கொலை செய்தமைக்கு போலீஸ் சொல்லும் ஆதாரம், கண்காணிப்பு கேமராவில் அவன் முகம் பதிவானது என்பதுதான். ஒருவேளை அந்த நேரத்தில் நான் அந்த வங்கிக்கு சென்று கொஞ்சம் முழித்து இருந்தால், நானும் அந்த லிஸ்டில் சேர்ந்து இருப்பேனோ?? என்று பயமாக உள்ளது.

"இது எல்லாம் தேவையில்லாத பயம். இதற்கெல்லாம் பயந்தால் இப்படியே பயந்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்" என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால், கண்காணிப்பு கேமராக்களை பார்க்கும் போதேல்லாம் பதற்றம் அடையும் ஒருவனால் பின் வேறு எப்படி எழுத முடியும்.

Thursday, March 29, 2012

உங்களுக்கு இதைப்போல் இன்னும் எத்தனையோ கவிதைகள் கிடைக்கலாம்


தோழிகள் அவர்களின் காதலர்களைப் பற்றி பேசும்போது
எந்தவிதமான முகபாவனைகளை நான் தருவது என்று
கொஞ்சம் குழம்பிதான் போகிறேன்.

வாசகர்களே, கொஞ்சம் பொறுங்கள்
ஒரு கவிதைக்கான முதல் வரி கிடைத்ததுபோல் தெரிகிறது
இந்த வரிகளை வைத்துக்கொண்டு, ஒரு முழு கவிதையை எழுதுவதற்காக
எனது இரண்டு தோழிகளை இந்த கவிதையில் இணைக்கிறேன்.

ஒருத்தி அவளின் கணவனைப் பற்றியும்
மற்றொருத்தி அவளின் காதலனைப் பற்றியும்
என்னிடம் பேசுவாள் என்று சொல்லும் போதே
ஒரு தோழிக்கு திருமணம் முடிந்துவிட்டதை
குறிப்பால் வாசக்ர்களுக்கு உணர்த்துகிறேன்.

அந்த இரண்டு தோழிகளில்
ஒருத்தியை நான் மிகவும் தீவிரமாக நேசித்தேன். என்பதின் மூலம்
நான் காதலித்தவளுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? என்ற குழப்பத்தை
வாசகர்களாகிய உங்களுக்கு எற்படுத்துகிறேன்.

அதில் ஒரு தோழியின் பெயர் கவிதா என்று எழுதுகிறேன்.
இதை படித்தவுடன் எனது நெடுநாளைய வாசகர்கள் முகத்தில்
ஒரு சிறு புன்னகையையும்
புதிய வாசகர்களுக்கு இது ஒரு கதையின் தொடர்ச்சி என்ற மாயத்தையும்
உருவாக்குகிறேன்.

இதற்குமேல் இந்த கவிதையை எப்படி தொடர்வது என்று தெரியவில்லை
வாசகர்களின் வாசிப்பு இன்பத்திற்காக
எந்த ஒரு விபரீத முடிவையும் இப்பொழுது எடுக்கபோவதில்லை.

உங்களுக்கு இதைப்போல் இன்னும் எத்தனையோ கவிதைகள் கிடைக்கலாம்
ஆனால், எனக்கு அப்படியல்ல.

Tuesday, March 27, 2012

.

    எனக்கு தெரிந்த எல்லா வழிகளையும் அடைத்துவிட்டீர்கள்

இனி நீங்கள் காட்டும் வழியில்தான் நான் செல்லவேண்டும்
வழி காட்டுவதற்கு நன்றி.

    என் குரலின் ஓசையினை மறக்க செய்தீர்கள்

என் வாழ்நாள் முழுவதும் எனக்காக குரல் கொடுத்துக்கொண்டும்,
இனி கொடுக்கவும் செய்யும் உங்களுக்கு
மீண்டும் என் மனமார்ந்த நன்றி.

    எனது கனவின் மேலோட்டத்தை அழித்துவிட்டீர்கள்

இதுவே
நான் கண்ட கனவு
என்று நம்பவைக்க முயற்சிக்கிறீர்கள்,
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    எனது சுயகருத்துக்கள் அனைத்தும் போலியானவை
    என என்னை நம்பவைத்தீர்கள்.

இருந்தும் என் அடிமனதில் சில வார்த்தைகள்
கேட்டுக்கொண்டே இருக்கிறது

    "நான் செய்வது அனைத்தும் தவறாகவோ, முட்டாள்தனமாகவோ
      இருந்துவிட்டு போகட்டுமே"

நான் உங்களை போல்தான்
பேசவேண்டும்,
அழவேண்டும்,
சிரிக்கவேண்டும்,
நடிக்கவேண்டும்
என்றால்

பின் நான் எதற்கு.