Friday, January 2, 2009

2009ம் ஆண்டின் முதல் கிறுக்கல்

எப்படியோ ஒரு வழியாக 2008ம் ஆண்டு முடிந்து விட்டது. அனைத்து தொலைக்காட்சிகளிலும் ”2008ம் ஆண்டு ஒரு பார்வை” என்று உயிரை வாங்கி கொண்டு இருக்கிறார்கள். இந்திய பங்குசந்தை, இந்திய ஆரசியல் ஆகியவற்றுக்கு இது மோசமான ஆண்டு என்ற சர்வே வேறு. எப்படி தான் இந்த செய்தி சேனல்களுக்கு மட்டும் எதாவது பேச செய்திகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன என்று தெரியவில்லை.

என்னால் நண்பர்களிடம் கூட தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் மேல் பேசுவது கடினமாக இருக்கின்றது. இரண்டு நிமிடங்கள் பேசினாலே தமிழில் உள்ள வார்த்தைகள் அனைத்தும் தீர்ந்து போனது போல் ஒரு எண்ணம். நண்பர்களிடம் போனில் பேசும் போது மூன்றாவது நிமிடமே ”Bye" சொல்லும் பழக்கத்தை நானும் நிறுத்த பார்த்தால் அது இன்று வரை முடியவில்லை. யாரிடமாவது அதிகமாக பேசும் போது தேவையில்லாதவை பற்றி பேசுகிறோமோ என்று சிறிய ஐயம் எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருக்கிறது. சன் மியுசிக், இசையருவி ஆகியவற்றில் காம்பியரிங் பண்ணுபவர்களை, அதுவும் நேரடி ஒளிபரப்பில் பேசுபவர்களை கண்டிப்பாக பாராட்டிய ஆக வேண்டும். ஒரு நான்கு, ஐந்து பேர் உள்ள கூட்டத்தில் எனக்கு தெரிந்த விசயத்தை பற்றி பேசினால் கூட ஏனோ அவர்களுடன் “Involve" ஆக மனது மறுக்கிறது. எங்கேயும் எப்பொழுதும் என்னை நான் தனிமை படுத்திக்கொள்ளவே நான் விரும்புகிறேன்.

நான் இப்படி இன்று அதிகமாக பேசுவதற்கு காரணம் லா.சா.ரா’வின் சிந்தாநதி புத்தகம் படித்ததன் பாதிப்பு என்று நினைக்கிறேன். அந்த புத்தகத்தின் முன்னுரையில் லா.சா.ரா சொல்வது,,

“புரிந்தது, புரியாதது இந்த இரண்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள். ஒருவருக்கு ஒருவிதமாகப் படுவது, அடுத்தவருக்கு வேறு விதமாகப் படுகிறது. அதே ஆளுக்கே வேறு சமயத்தில் வேறு விதமாகப் புரிகிறது. அட, கடைசிவரை, புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே!!!!!!!”

உங்களுக்கு எதாவது புரிகிறதா. இன்னும் ஒரு முறை படித்து பாருங்கள் கண்டிப்பாக புரியும்.....

புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே!


2008ல் நான் செய்த ஒரே நல்ல காரியம் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தது தான் ( ஏன் தான் எங்க உயிரை வாங்குற ?? என்று நீங்கள் சொல்வது எனக்கு தெரிகிறது ). வலைபதிவில் என்ன எழுதுவது என்று தெரியாமல் எதை எதையோ எழுதி கொண்டு இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறை எழுதும் போது ஒரு வித சந்தோஷத்தை உணர்கிறேன். அந்த சந்தோஷம் தான் என்னை தொடர்ந்து கிறுக்க செய்கிறது.

இனி எல்லாம் சேனல்களிலும் வருவது போல் 2008ம் ஆண்டு ஒரு பார்வை.


2008’ல் பிடித்த திரைப்படம் : அஞ்சாதே....
பிடித்த பாடல் : கண்ணும் கண்ணும் திரைப்படத்தில் வரும் “ அன்பே அன்பே தான் வாழ்க்கையில்”..
வைரமுத்துவின் “பால் கொண்ட காபியில் இப்பொழுது பாசத்தை கலந்தது யார்” என்கின்ற வரிகளுக்காவே இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.
விரும்பி படித்த புத்தகம் : ஆதவனின் “என் பெயர் ராமசேஷன்”
மிகவும் பாதித்த சம்பவம் : ஈழ தமிழர்களுக்கு பணம் அனுப்புகிறோம் என்று சொல்லி தமிழ் அரசியல் கட்சிகள் தமிழகத்தில் நடத்திய நாடகங்கள்.
விரும்பி படித்த இனையதளம் : www.sramakrishnan.com, www.charuonline.com

இவை போது என்று நினைக்கிறேன். கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம்......!!!!!

No comments: