Saturday, December 31, 2011

மெளனகுரு - அமைதியான மாபெரும் வெற்றி

என்னதான் உலக சினிமாக்களை தேடித் தேடி பார்த்தாலும், ஒரு சில தமிழ் சினிமாக்கள் அவை அனைத்தையும் மிஞ்சி விடுகின்றன. அப்படி சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படம் சாந்தகுமார் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் 'மெளனகுரு'.

சிதம்பரத்திலிருந்து நண்பன் ஒருவன் "படம் சூப்பரா இருக்கு, கண்டிப்பாக பாரு" என்று சொல்லி ஒரு வாரமாகியும் திரைப்படத்தை பார்க்க முடியாமல் தள்ளிக்கொண்டே போனது. கடைசியாக நேற்று இரவுதான் அதற்கான வாய்ப்பு வாய்த்தது. மழை காரணமாக திரையரங்குக்கு கொஞ்சம் தாமதமாக செல்ல, அதற்குள் திரைப்படம் தொடங்கி பதினைந்து நிமிடங்கள் கடந்துவிட்டது. சென்னையில் சரியான நேரத்துக்கு இயங்கப்படும் ஒன்றே ஒன்று உண்டு என்றால், அது திரையரங்கு காட்சிகள் மட்டும்தான்.

நான் திரையரங்கில் நுழைந்துபோது, ஹீரோ அருள்நிதி ஒரு பிரச்சனையின் காரணமாக கல்லூரியிலிருந்து டி.சி வாங்கிக்கொண்டு இருந்தார். அதன் பின்னர் ஹீரோ சென்னை வந்துவிடுகிறார். இப்படி கதையை வரி வரி'யாக சொல்லாமல், சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், "விபத்தில் அடிப்பட்ட ஒருவனிடமிருந்து, நான்கு போலீஸ் அதிகாரிகளுக்கு பல கோடி மதிப்புள்ள பணம் கிடைக்கிறது. யாருக்கும் தெரியாமல், அதை அவர்களுக்குள் பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஹீரோ அவனுக்கே தெரியாமல் இந்த பிரச்சனையில் மாட்டிக்கொள்ள. அவன் வாழ்க்கை திசை திரும்பிவிடுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனைகள்தான் கதை"



கதையை விட திரைக்கதையில் இயக்குனர் கலக்கி உள்ளார். கிளைமாக்ஸை தவிர வேறு எங்குமே தேவையில்லாமல் ஒரு காட்சியைக் கூட சேர்க்கவில்லை. இரண்டாவது பாதியில் வரும் மனநலக் காப்பக காட்சிகள் "கோபி கிருஷ்ணன்" கதைகளை நினைவுப்படுத்துகிறது. மனநலக் காப்பகத்தில் வரும் வசனங்கள் அனைத்துமே அற்புதம்..

"எத்தனை வருஷமா இங்கே இருக்கீங்க??"

"இரண்டு வருஷமா இருக்கேன். இரண்டு வருஷமுனா, வெளியில் போய் உள்ளே வந்து, வெளியே போய் உள்ளே வந்து. அப்படி.."

மெளன குரு திரைப்படத்தின் நடித்திருக்கும் யாரையுமே பாராட்டாமல் இருக்க முடியாது. ஜான் விஜய், அருள்நிதி, இனியா, உமா ரியாஸ், பாதர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒருவர் என்று அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். உமா ரியாஸ் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடத்தும் விசாரனைகளை, இதுவரை எந்த திரைப்படத்திலும் பார்த்திருக்க முடியாது. போலிஸ் விசாரனை என்றாலே இப்படிதான் இருக்க வேண்டும் என்ற மாய தோற்றத்தை இந்த திரைப்படத்தில் உடைத்திருக்கிறார்கள்.

கதையில் ஹீரோவின் வாழ்க்கை திசைமாற, எல்லாருமே ஒரு வீதத்தில் காரணமாகிறார்கள், ஆரம்பத்தில் வரும் அந்த விலை மாது, பாதர், அவர் பையன், ஹீரோவை பழிவாங்க துடிக்கும் கல்லூரி மாணவன், மனநலக் காப்பகத்து மருத்துவர், அவரின் உதவியாளர்கள், கல்லூரி வாட்ச்மேன் என்று திரைப்படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரம் கூட ஹீரோவின் அந்த நிலைமைக்கு காரணமானவர்களே.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் வந்த அருள்நிதி, இனியா ஆகியோரின் காதல் காட்சிகளும் நன்றாகவே இருந்தது. "வாகை சூடவா" திரைப்படத்தில் இனியா செய்த மூகப்பாவனைகளை பார்த்து எங்கே அடுத்த ஜோதிகா வந்துவிட்டாரோ என்று கூட பயந்து இருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் அப்படி எந்த ஒரு மூகப்பாவனைகளும் இல்லை.

"ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங்" ஆகிய இரண்டுமே எனக்கு பிடித்த திரைப்படங்கள், அந்த திரைப்படங்கள் பிடித்துப் போக ஜான் விஜயின் நடிப்பும் ஒரு காரணம். அதே போல், மற்றும் ஒரு அற்புதமான நடிப்பை இந்த திரைப்படத்தில் வெளிகாட்டியுள்ளார் ஜான் விஜய்.

கேமராமேன் முத்துசாமி, அற்புதமான பின்னனி இசைக்கு தரண், எடிட்டர் என்று அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும். இன்னும் யாரையாவது இங்கு நான் பாராட்ட மறந்து இருந்தால், அது என் தவறு என்பதை தவிர வேறு ஒன்றும் காரணம் அல்ல...

இந்த ஆண்டில் நான் பார்த்த கடைசி திரைப்படம், மற்றும் கடைசி பதிவு ஆகிய இரண்டும்  'மெளனகுரு'வாக மாறியது எனக்கு மகிழ்ச்சியே. இப்படி ஒரு அற்புதமான திரைப்படத்தை இயக்கிய சாந்தகுமாருக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்..

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகள். 

Thursday, December 29, 2011

இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் - V

 ஒரு கதையை எங்கே ஆரம்பிப்பது என்பதில் எனக்கு எப்பொழுதும் குழப்பம் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. அந்த சூட்சமத்தை தெரிந்துக்கொள்ள எத்தனையோ கதைகள் படித்தாகிவிட்டது. ஆனால், இன்னும் கதைகளின் ஆரம்பத்தை என்னால் சரியான முறையில் யூகிக்க முடியவில்லை. நீங்கள் நினைப்பது போல் ஒரு கதையை அதன் முடிவிலிருந்தே ஆரம்பிப்பது சரியான யுக்திதான். நானும் அப்படிதான் சில கதைகளை ஆரம்பித்தேன், சில மாதங்களுக்கு முன்னால், ஒரு காதல் கதையை, அந்த கதையின் முடிவான காதலனின் தற்கொலையிலிருந்து ஆரம்பித்தேன். படித்தவர்கள் அனைவரும் அது ஒரு தன்னிரக்க கதை என்கிறார்கள். இதாவது பரவாயில்லை, ஒரு ஆணுக்கு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் நட்பைப் பற்றிய கதையை நான் ஆரம்பித்த இடம், படுக்கையறை. இந்த கதையைப் படித்தவர்கள் என்னை ஒரு கேவலமான பார்வையில் பார்க்கிறார்கள். அவர்களிடம் "எனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை, இது கதை மாந்தர்களின் இயல்பு" என்று விளக்கம் சொல்லவும் முடியாது. ஏனென்றால், என்னிடம் இருப்பதே நான்கு கதாபாத்திரம்தான், அவர்களையும் குற்றம் சொல்லிவிட்டால் பின்னர் யாரை வைத்து நான் கதைகளை எழுதுவது??

ஒரு கட்டத்தில் கதையை அதன் முடிவிலிருந்து ஆரம்பிப்பது என்ற யுக்தியை கைவிட்டேன். அதன் பின்னர்தான், கதையை நடுவிலிருந்து ஆரம்பிப்பது என்று முடிவு செய்தேன். ஆனால் அதிலும் சில பிரச்சனைகள் வந்தன. நடுவிலிருந்து ஆரம்பிக்கும் கதையை முன்னோக்கி நகர்த்துவதா இல்லை பின்னோக்கி நகர்த்துவதா என்ற குழப்பம். ஒருவேளை கதையை முன்னோக்கி நகர்த்தினால், அதற்கு முன்னால் நடந்தவற்றை குறிப்பாக சொல்லலாம். ஆனால் அப்படி சொல்வதால், நான் ஒரு பக்கமே எழுதும் கதைகள் இன்னும் சுருங்கி அரைப் பக்கம் வந்து நின்றன. பின்னர் எப்படிதான் ஒரு கதையை ஆரம்பிப்பது???

கடைசியாக நான் இன்னொரு யுக்தியை கையில் எடுத்தேன், ஒரு கதையை கட்டுரை மாதிரி தொடங்கி, பின்னர் நடுவில் எங்காவது கதையை நுழைத்து விடுவது. இப்பொழுது கூட பாருங்கள், இது அசோக்கைப் பற்றிய ஒரு கதைதான், ஆனால் படிப்பவர்கள் இதை ஒரு கட்டுரை என்றே நினைப்பார்கள்.

Tuesday, December 27, 2011

அசோக்கும் புத்தகக் கண்காட்சியும்

அசோக்கின் அறையில் படித்து முடிக்காத புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது. "ஒரு புத்தகத்தை முழுவதுமாக படித்த பின்னர்தான் அடுத்த புத்தகத்தை வாங்குவது" என்ற நல்ல கொள்கைகள் எதுவும் இல்லாதவன் அசோக். பேரின்பா கூட பல முறை கேட்டு இருக்கிறான் "ஏன்டா, வீட்டுல எதாச்சும் நூலகம் வைக்க போறீயா??".

ஞாபகம் மறதி அதிகம் உள்ள அசோக்குக்கு தான் எந்தந்த புத்தகங்களை படித்து இருக்கிறோம், எந்தந்த புத்தகங்களைப் படிக்கவில்லை என்பது கூட மறந்துவிடும். படித்த புத்தகத்தையே மீண்டும் படித்து, எதாவது ஒரு பக்கத்தின் நடுவில் இந்த கதையை எங்கேயோ படித்திருக்கிறோமே?? என்று தலையை பியித்துக்கொள்ளும் சம்பவங்களும் பல முறை நடந்து உள்ளது.

போன வருடம் நடந்த (அல்லது இந்த வருட ஆரம்பத்தில் நடந்த) புத்தகக் கண்காட்சியில், குறைந்தது இருபது புத்தகங்களாவது அசோக் வாங்கியிருப்பான். அந்த இருபதில் ஆறு புத்தகங்கள் நகுலன் எழுதியது, அதைப் பற்றி அவன் வலைப்பதிவில் தனியாக ஒரு பதிவே எழுதியிருக்கிறான். இப்பொழுது அடுத்த புத்தகக் கண்காட்சி வந்துவிட்டது. இந்த முறை என்னென்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு பெரிய பட்டியலே வைத்துள்ளான்.

'எம்.ஜி.சுரேஷ், அ.மார்க்ஸ், பிரேம்-ரமேஷ், தமிழவன்' இவர்களின் புத்தகம் எது கிடைத்தாலும் அதை உடனே வாங்குவது என்ற முடிவோடு அசோக் இருக்கிறான்.

அசோக் புதிய புத்தகங்கள் வாங்குவதுப் பற்றி எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் போன புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களே இன்னும் படித்து முடிக்காத நிலையில் புதிய புத்தகங்கள் வாங்குவது அவசியம்தானா??

சென்ற கண்காட்சியில் வாங்கிய "புயலிலே ஒரு தோணி" புத்தகத்தை ஏன் இன்னும் படிக்காமல் வைத்துள்ளாய் என்று அசோக்கிடம் கேட்டால் "அந்த புத்தகத்தை எப்பொழுது படிக்க தொடங்கினாலும் தூக்கம்தான் வருகிறது" என்கிறான்.

தஸ்தாயெவ்ஸ்கியின் மூன்று ஆங்கில புத்தகம் வேறு ரொம்ப நாட்களாக பரணில் தூங்கிக்கொண்டு இருக்கிறது. பேயோனின் மொழிபெயர்ப்பில் தஸ்தாயெவ்ஸ்கியின் நூல் ஒன்று இந்த கண்காட்சிக்கு வருகிறது, அதையும் இவன் வாங்குவது உறுதி.

சரி, இந்த புத்தகக் கண்காட்சியில் அசோக் எத்தனை புத்தகம் வாங்குகிறான் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்,

குறிப்பு:

இந்த கட்டுரையில் அசோக் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது, கண்காட்சியை தவிர்த்து இந்த வருடம் மட்டும் தனியாக இருபது புத்தகங்களாவது வாங்கியிருப்பான். அதில் "யாமம்" நாவலை தவிர மற்ற புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட்டான் என்பது ஒரு உலக மகா அதிசயச் செய்தி.  இந்த இருபது புத்தகங்களில் போன வாரம் வெளிவந்த சாருவின் எக்ஸைல் புத்தகமும் ஒன்று. எக்ஸைல் பற்றி அசோக்கிடம் கருத்து கேட்டதற்கு, அவன் கருத்து சொல்ல மறுத்துவிட்டான். அசோக்கிடம் கடன் வாங்கி எக்ஸைல் புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன் என்ற வகையில், நான் சாருவிடம் கேட்க விரும்பும் ஒரே கேள்வி "எதற்காக உங்கள் பழைய புத்தகத்தையே மீண்டும் வேறு பெயரில் வெளியீட்டு உள்ளீர்கள்??" என்பதே

Sunday, December 25, 2011

கவிதை எனும் கிறுக்கல்கள் சில

1)

தலைப்பு: காதல் கவிதை

அன்புள்ள காதலிக்கு

உனக்கு நான் எழுதும்
முப்பத்தி நான்காவது
காதல் கவிதை இது.

மொத்தத்தில்
நான் எழுதும்
எம்பத்தி ஒன்பதாவது
காதல் கவிதையும் இதுவே.

வழக்கம் போலவே இந்த கவிதையும்
என் வீட்டு குப்பை தொட்டியை மட்டுமே
அலங்கரிக்கப்போகிறது.

உன் காதலிக்கான ஒரு பூவை
வாங்குவதற்கு,
ஒருவனின் உதவி உனக்கு தேவையெற்றால்
அந்த காதலை தூக்கி எறி என்றான்
எனக்கு பிடித்த கவிஞன் ஒருவன்.

உன் காதலை சொல்வதற்கு
உனக்கு தைரியமில்லை என்றால்,
அந்த காதலை தூக்கி ஏறி என்கிறேன் நான்.

மன்னிக்கவும், இதன் தலைப்பு
இப்படிதான் இருந்திருக்கவேண்டும்.

காதல் தோல்வி.
$$$$

2)
என் ப்ரியத்திற்குரிய நண்பனுக்கு

நீயும் உன் காதலியும்
ரோஜா பூக்களை தூவுவதில்
எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால்,

அதற்கு என் கல்லறைதானா கிடைத்தது??

$$$

3)
நான் எழுதும் காதல் கவிதையில்
எழுத்துப்பிழையும் இலக்கணப்பிழையும்
இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்.

பாவம்,
அவர்களுக்கு எப்படி தெரியும்
உன்னை காதலித்த பின்
என் வாழ்க்கையே பிழையான கதை.

$$$

4)
இப்பொழுதாவது புரிந்துகொள்ளுங்கள்
என்னால் காதல் கவிதைகள்
எழுத முடியாது என்பதை

$$$

5)
காதல் கவிதை எழுதுவதற்காக
ஒரு பெண்னைக் காதலிக்க தொடங்கினேன்.

இதோ என் கவிதையின்
முதல் வரி கிடைத்துவிட்டது.
கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள்

அந்த பெண்னைக் காதலித்த பின்
என் கவிதையை தொடர்கிறேன்

$$$

6)
மீண்டும் என்னை
காதல் கவிதைகள் எழுத சொல்லாதீர்கள்.

அவை என் கைகளை நடுங்க செய்கின்றன,
கண்களில் கண்ணீர் உண்டாக்குகிறது,
நரம்புகளைக் கட்டி போடுகிறது.

எல்லாவற்றையும் விட
சில நேரங்களில்
சாம்பல் நிற பூணை ஒன்றை நினைவுப்படுத்துகிறது.
$$$

7)
இரண்டு முறை காதலித்து,
மூன்று முறை கைவிடப்பட்டு,
ஒருமுறை தற்கொலைக்கு முயற்சி செய்த
எல்லோராலும்
இதைப்போன்ற பைத்தியக்கார கிறுக்கல்களை
எழுதிவிட முடியும்.

இப்பொழுது புரிந்திருக்கும்,
இவற்றை நான் யாரிடமிருந்து திருடினேன் என்று.

Friday, December 23, 2011

சென்னை சர்வதேச திரைப்பட விழா

ஒரு வழியாக சென்னை சர்வதேச திரைப்பட விழா முடிந்துவிட்டது. மொத்தம் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த நூற்றி ஐம்பது திரைப்படங்களில் நான் ஒரு பதினைந்து திரைப்படங்களாவது பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

நான் பார்த்த திரைப்படங்களின் பெயர்களே மறந்துவிட்ட நிலையில், அந்த திரைப்படங்களை வகைப்படுத்தி இங்கே எழுதுவது என்பது முடியாத காரியம். விழா நடந்த நாட்களில் ஒரு சனிக்கிழமை எனது பிறந்தநாள் வேறு. என்னுடைய இந்த வருட பிறந்தநாளை மூன்று திரைப்படங்களுடன் கழித்து இருக்கிறேன். 

ஞாயிறு அன்று ஐந்து திரைப்படங்கள் பார்க்கலாம் என்றிருந்தேன். ஆனால், மூன்று திரைப்படங்களிலேயே தலைவலி வர தொடங்கிவிட்டது. அந்த தலைவலி தொடர்ந்து பார்த்த மூன்று திரைப்படங்களால் வந்ததா?? அல்லது சனி அன்று இரவு அடித்த ஜானி வோக்கரால் வந்ததா?? என்று தெரியவில்லை.

முதலில் திங்கள் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்களும் மதியத்திற்கு மேல் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு திரைப்பட விழாவுக்கு செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன். திங்கள் அன்று நான் திட்டமிட்டது எனது மேனேஜருக்கு தெரிந்ததோ இல்லையோ, என் அலுவலகத்தில் உள்ள ஒரு யுனிக்ஸ் சர்வருக்கு தெரிந்துவிட்டது. அந்த சர்வரில் உள்ள எல்லா அப்ளிகேஷன் டவுனாகி போக அதை அப் செய்வதற்கே திங்கள் கிழமை முடிந்துவிட்டது. அதைப் போல், புதன் அன்று இன்னொரு அலுவலக நண்பன் விடுப்பு எடுத்துவிட, நான் திரைப்பட விழாவுக்கு விடுப்பு எடுக்க வேண்டியதாயிற்று.

ஆக கடைசி நான்கு நாட்களில் நான் பார்த்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஒன்றே ஒன்று தான். அந்த திரைப்படத்தின் பெயர் மைக்கேல். ஆஸ்திரேலியா மொழி திரைப்படம். இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை சுற்றியே கதை. ஒருவன் ஒரு சிறுவனை வீட்டு சிறையில் வைத்திருக்கிறான். அந்த பையனை அவன் சந்தோஷமாக வைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறான். இதுதான் கதை. இதற்கு மேல் நான் தெளிவாக சொன்னால் அந்த திரைப்படத்தையே நான் கொலை செய்து விடுவேன். ஆகவே இது போதும்.

திரைப்பட விழாவில் அவர்கள் கொடுத்த Time Schedule எந்த திரைப்படத்தை எப்பொழுது பார்க்கலாம் என்று திட்டமிட மிகவும் உதவியாக இருந்தது. அதே Time Schedule பேப்பர்தான் நான் பார்த்த திரைப்படங்களின் பெயர்களை இப்பொழுது இங்கே டைப் செய்யவும் உதவுகிறது

1) Three-Way Wedding
2) Flying Pigs
3) The Whistle Blower
4) A Summer At Grandpa's
5) 17 girls
6) Sky Skraper
7) An Ordinary Execution
8) Crime and Punishment
9) A Burning Desire
10) Michael

இப்பொழுதே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது, இதில் இருக்கும் சில திரைப்படங்களை நான் பார்த்தேனா?? என்று. நான் பார்த்த திரைப்படங்களின் பெயர்களை நான் மறந்துவிட கூடாது என்பதற்காகவே இங்கே எழுதிவைக்கிறேன். நான் கூட முதலில் பதினைந்து படங்களாவ்து பார்த்து இருப்போம் என்று நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது நான் பார்த்தது பத்து திரைப்படங்கள்தான்.

சரி, ஒரு வழியாக திரைப்பட விழா முடிந்துவிட்டது. இனி, புத்தகக் கண்காட்சிக்கு தயாராக வேண்டும். உங்களுக்கு தேதி நினைவு இருக்குது அல்லவா?? ஜனவரி ஐந்தாம் தேதி முதல் பதினெழு தேதி வரை.....

முப்பொழுதும் உன் கற்பனைகள் - "கண்கள் நீயே..காற்றும் நீயே"

என் Playlist'ல் கடந்த இரண்டு நாட்களாக ஒரே பாடல்தான் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டு இருக்கிறது. "முப்பொழுதும் உன் கற்பனைகள்" திரைப்படத்தில் வரும் "கண்கள் நீயே..காற்றும் நீயே" என்ற அற்புதமான பாடல்.

 பா.தாமரை எழுதிய பாடல் வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் இந்த பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒரு தாய் தன் குழந்தையைப் பற்றி பாடுவது போல் இயற்றப்பட்டு உள்ளது. முக்கியமாக பாடல் வரிகள் முழுவதுமே நமக்கு புரிகிறது. அதற்காக ஜீ.வி.பிரகாஷ்க்கும் சபாஷ் சொல்லலாம்.

அந்த பாடலில் வரும் ஒரு வரி,

"நான் கொள்ளும் கர்வம் நீ"


இந்த பாடல் எனக்கு பிடித்துப்போக சில தனிப்பட்ட காரணங்களும் இருக்கிறது. என் தற்பொழுதைய உலகம் புதிதாக பிறந்த குழந்தைகளால் சூழப்பட்டு உள்ளது. என் அக்காவின் குழந்தை, நான் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட் என்னைப் பார்த்து தினமும் சிரித்து டாட்டா காட்டும் ஒரு குழந்தை, தோழிக்கு புதிதாக பிறந்திருக்கும் இரட்டை குழந்தை, அலுவலகத்தில் தன் குழந்தையைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கும் அலுவலக நண்பர்.. இப்படி குழந்தைகளால் சூழப்பட்டு, எதைப்பற்றி பேசினால் அது குழந்தைகள் பற்றியதாகவே முடிகிறது.

நண்பன் ஒருவனிடம் இந்த பாடலைப் பற்றி சொல்லி கேட்கச் சொன்னேன். இந்த பாடலை கேட்ட பின் அவன் சொன்னது "குழந்தையைப் பற்றி பாடுவது போல் இல்லையே, ஏதோ காதல் பாடல் போல இருக்கே". என்ன செய்ய எல்லாவற்றையும் காதலுடன் இணைத்து பார்க்கும் உலகில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம், என்னையும் சேர்த்து.

பாடல் வரிகள்
********************
கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ

பல நாள் கனவே
ஒரு நாள் நினைவே
இயக்கங்கள் தீர்த்தாயே
எனையே பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை

முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண் பாவை நான் செய்தேன் கண்ணே
இதழை செல்லி
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே

இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழைந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தூளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேலை
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
இசையாலே பல பல ஓசை
செய்திடும் .. ராவணன் ஈடில்லா என் மகன்

எனை தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொர்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனை கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே

என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளி போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
குறையா நீல வானம்

சுவர் மீது கிறுக்கிடும் போது ரவிவர்மன் நீ
பசி என்றால் தாயிடம் தேடும் மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ

கடலை ஐயிந்தாறு மலை ஐயிநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை

Thursday, December 15, 2011

படித்ததில் பிடித்தது


என்னை மிகவும் பாதித்த ரமேஷ்-பிரேம் எழுதிய பின்நவீனத்துவ நாவலான "சொல் என்றொரு சொல்" புத்தகத்திலிருந்து சில வரிகள்,

"அவன் இருள் நகரத்தில் இருக்கிறான். இன்னும் குறிப்பாகச் சொன்னால்-இருள் நகர எழுத்தாளனான அதீதன் எழுதிய "உடலில் வலியும் உணர்வில் இசையும்" என்ற நூலுக்குள் பதுங்கிக்கொண்டுருக்கிறான். நன்மொழித்தேவன் இருள் நகரத்தின் தேசிய நூலகத்தில் தான் பதுங்கி வாழ்ந்து வருகிறான். அங்குத் தான் அவன் அதீதன் நூலைக் கண்டெடுத்தான். சரி, இருள் நகரம் எங்கிருக்கிறது. அது அதீதனின் புனைவு நூலுக்குள் இருக்கிறது. அப்படியென்றால் அதீதன் எங்கிருக்கிறான். நன்மொழித்தேவன் படித்துக்கொண்டிருக்கும் உடலில் வலியும் உணர்வில் இசையும் என்ற நூலுக்குள் இருக்கிறான். அந்த நூல் எங்கிருக்கிறது? இருள் நகரத்தின் தேசிய நூலகத்தில்"

Wednesday, December 14, 2011

Mob Dancing

ரியால்டி ஷோக்களை அடுத்து புதிய வீதமான ஒன்று சமீப காலமாக உலாவ தொடங்கியுள்ளது.  ஒழுங்கற்ற முறையில் கும்பலாக நடனமாடப்படும் Mob Dance அது. பெங்களூர் மும்பை டில்லி போன்ற நகரங்களில் வசிப்பவர் நீங்கள் என்றால், இது உங்களுக்கு மிகவும் அறிமுகமான ஒன்று. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் மும்பை இரயில்வே நிலையத்தில் நடந்த ஒரு மாஃப் நடனம் மிகவும் பிரபலம். அந்த நடனத்தை HD வடிவில் நீங்கள் இணையத்தில் பார்க்கலாம். (http://www.youtube.com/watch?v=Iyt16efRrBo)

Mob Dancing பற்றி தெரியாதவர்களுக்கு அதைப் பற்றி ஒரு சின்ன விளக்கம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடன கலைஞர்கள் மக்களோடு மக்களாக இருப்பார்கள். தீடிர் என்று எங்கிருந்தோ பாடல் ஒலிகள் கேட்கத்தொடங்கியவுடன், அந்த நடனக் கலைஞர்களில் சிலர் நடனமாட தொடங்கிவிடுவார்கள். மற்றவர்கள் மக்களோடு மக்களாகவே நின்றுக்கொண்டு இருப்பார்கள். பாடல் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்கத்தொடங்கியவுடன், மற்ற நடனக் கலைஞர்களும் அந்த நடனத்தில் பங்குக்கொள்ள தொடங்கிவிடுவார்கள். இதைப் பார்க்கும் மக்களும் உண்மையாகவே பார்வையாளர்கள்தான் நடனமாட ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைத்து அவர்களும் அதில் பங்குபெற தொடங்கிவிடுவார்கள். இது தான் அந்த Mob Dancing.

கடந்த ஞாயிறு அன்று மாலை நீங்கள் Express Avenue'க்கு சென்றிருந்தால், இந்த மாஃப் நடனத்தை நீங்களும் நேரில் பார்த்திருக்கலாம். இதன் HD வடிவம் இன்னும் கொஞ்ச நாட்களில் இணையத்தில் வந்துவிடும் அப்பொழுது பார்த்துக்கொள்ளுங்கள்.

EA'வில் இந்த நடனத்தைப் நான் பார்த்துக்கொண்டு இருந்த போது, அருகில் நின்ற பெரியவர் சொன்னது "சந்தோஷத்தை கொண்டாட எப்பொழுதும் எதாவது காரணம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது" என்றார். அவர் சொன்ன காரணம் எனக்கு புரியவில்லை, உங்களுக்கு??

Tuesday, December 13, 2011

சென்னை சர்வதேச திரைப்பட விழா (14th Dec - 22nd Dec)

14'ஆம் தேதி தொடங்கி 22'ஆம் தேதி வரை  சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கயிருக்கிறது. இது சென்னையில் நடைபெறும் 9வது சர்வதேச திரைப்பட விழாவாகும். கடந்த ஆண்டு நடைப்பெற்ற திரைப்பட விழாவை விட இந்த வருடம் நடக்கும் திரைப்பட விழா விஷேசமானது, அதற்கு காரணம் இந்த வருடம் நானும் திரைப்ப்ட விழாவுக்கு போவதே. 500 ரூபாய் கொடுத்து முன்பதிவு ஏற்கனவே செய்தாகிவிட்டது.

சென்ற வருட திரைப்பட விழா எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நானும் செல்வாவும் விழா தொடங்கி ஆறாவது நாள்தான் உட்லண்ட்ஸ் திரையரங்கு வளாகத்துக்கு சென்றோம். பதிவு கட்டணமாக நபர் ஒருவருக்கு 500 ரூபாய் கேட்டார்கள், இன்னும் பாக்கி இருப்பதோ இரண்டு நாட்கள்தான், அதிகபட்சமாக ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் வீதம் மொத்தம் நான்கு திரைப்படங்கள் பார்க்கலாம்.  500 ரூபாய்க்கு 4 திரைப்படங்கள் என்பது கொஞ்சம் அதிகம் என்று முடிவு செய்து, உட்லண்ட்ஸ் திரையரங்கு வளாகத்தை விட்டு வெளியேறி விட்டோம். அந்த நேரத்தில் எங்கள் இருவரிடமும் 500 ரூபாய் இல்லை என்பதே உண்மையான காரணம்.

இந்த வருடம் திரைப்பட விழாவுக்கு முன்பதிவு செய்தவுடன் எதாவது ஒரு நாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அப்பாவின் மெடிக்கல் செக்-அப்பிற்காக இன்று விடுமுறை எடுத்துவிட்டதால் மீண்டும் விடுமுறை எடுக்க முடியாத சுழ்நிலை. இருந்தபோதிலும், சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காலை 10 மணி ஷோ அல்லது இரவு 8 மணி ஷோ ஆகிய இரண்டில் எதாவது ஒரு ஷோ பார்ப்பது உறுதி.

நாளை விழா தொடங்கயிருப்பதால், காலை 10 மணி ஷோவுக்கு போகலாம் என்றிருக்கிறேன். மொத்தம் ஐந்து திரையரங்கில் ஐந்து வீதமான திரைப்படங்கள் திரையிடப்படுவதால் எந்த திரைப்படத்தை பார்ப்பது என்று ஒரு சின்ன குழப்பம். 

எப்படியிருந்தாலும் நாளை காலை 10 மணிக்கு அந்த ஐந்து திரையரங்கில் எதாவது ஒன்றில் நீங்கள் என்னை சந்திக்கலாம்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா பற்றிய சில முக்கிய லிங்க்குகள் கீழே,

http://pg.indiaglitz.com/ciff/films.php
http://www.chennaifilmfest.com/schedules.html

Monday, December 12, 2011

ஒரு புகைப்படத்தை முன் வைத்து

முகநூலில், ஒரு புகைப்படத்தை தற்பொழுது பலருடைய Profile'ல் பார்க்க முடிகிறது. மூன்று மனிதர்கள் ஒரு திண்ணையில் உட்கார்ந்திருக்க இன்னொரு மனிதர் தரையில் உட்கார்ந்திருப்பார், மேலும் மூன்று குழந்தைகளும் அந்த புகைப்படத்தில் இருப்பார்கள். இங்கே குழந்தைகள், மனிதர்கள் என்று சொல்வதைவிட  எலும்புக்கூடுகள் என்று சொல்லிவிடலாம். அந்த புகைப்படத்தில் உள்ள எல்லோருடைய கண்களிலும் பசியைப் பார்க்கலாம்.

இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும், நான் எந்த புகைப்படத்தைப் பற்றி சொல்கிறேன் என்று. ஆம், முல்லை பெரியார் அணை கட்டும் முன்பு அந்த பகுதி தமிழர்கள் இப்படிதான் இருந்தார்கள் என்று சொல்லி முகநூலில் ஒரு புகைப்படம் உழாவிக்கொண்டிருக்கிறதே அதைப் பற்றி சொல்கிறேன்.

அந்த புகைப்படத்தை பார்த்தவுடனேயே, முல்லைப் பெரியாறு அணை காப்பாற்றாவிட்டால், நம் தமிழர்களின் நிலைமை இப்படியாகிவிடும் என்ற பயம் எல்லா தமிழர்களுக்கும் வந்துவிடும். அது தான் அந்த புகைப்படத்தின் வெற்றி. அந்த காலத்தில் "நேஷனல் ஜியோகிராபிக் சேனல்" வழங்கும் அற்புதமானப் புகைப்பட விருதுகள் இருந்ததா என்று தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால், கண்டிப்பாக அந்த விருது இந்தப் புகைப்படத்துக்குதான் கிடைத்திருக்கும்.

அந்த புகைப்படத்தை பார்த்தவுடனேயே எனக்கு ஒரு சந்தேகம், அந்த புகைப்படம் உண்மைதானா? அதிலிருப்பவர்கள் தமிழர்கள் தானா?? அணை கட்டப்பட்ட ஆண்டு 1895. அப்படியென்றால், அதற்கு முன்னரே இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட'தா?? அதுவும் இவ்வளவு தெளிவாக.  இந்த புகைப்படம் எடுத்தவர் யார்?? இப்படி எத்தனையோ கேள்விகள்.

அந்த புகைப்படத்தில் வலது ஓரத்தில் இருப்பவரைப் பார்த்தால், நம் தமிழர் போல்தான் தெரிகிறார். ஆனால், மற்றவர்கள்?? எதற்காக அவர்களுக்கு மொட்டை அடிக்கப்பட்டுள்ளது?? வறுமையிலிருந்தாலே மொட்டை அடிக்கப்பட வேண்டியது கட்டாயமா?? சோமாலியா நாட்டில், அவர்கள் தலைமுடியே இப்படிதான் இருக்கும் என்றல்லாவா நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது, அது வறுமையால் எற்பட்ட தலைமுடி என்று,

அந்த புகைப்படத்தைப் பற்றிய சந்தேகம் அதிகரித்துக்கொண்டே போக, இணையத்தில் தேடத் தொடங்கினேன். கூகுளின் Goggles உதவியுடன் அந்த புகைப்படத்தை தேடிய போது, அந்த புகைப்படம் விக்கிப் பக்கத்திலேயே இருப்பது தெரியவந்தது. இந்தியாவில் நடந்த பஞ்சங்களைப் பற்றி விக்கியில் சொல்ல இந்த புகைப்படம் உதவியாக இருந்துள்ளது. இந்த புகைப்படத்துக்கு விக்கியில் குறிப்பிட்டுள்ள ஆண்டு 1876–78. விக்கியில் இருந்தால் அது சரியாகதான் இருக்கும் என்று நீங்கள் நினைப்பது போலவே நானும் நினைப்பதால் இந்த புகைப்படம் பற்றி உள்ள சந்தேகங்களை இங்கேயே நான் நிறுத்திக்கொள்கிறேன்.

சரி, இப்பொழுது என் கேள்வியெல்லாம், இந்த புகைப்படங்களை இந்நேரத்தில் பரப்பத் தொடங்கியது யார்?? இது போன்ற புகைப்படங்களால் நம் மக்களை மிகவும் சுலபமாக கொந்தளிக்க வைக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி இருந்தும், எதற்காக இந்த புகைப்படத்தை நாம் அனைவரும் தொடர்ந்து Share செய்துக்கொண்டே இருக்கிறோம். கேரளாவுக்கும், நமக்கும் இப்பொழுது எற்பட்டுள்ள இந்த இறுக்கமான சுழ்நிலையில், இது போன்ற புகைப்படங்கள் பிரச்சனையை இன்னும் பெரிதாக்கவே உதவும்.  எல்லாவற்றையும் ஒருவீத பொழுதுபோக்காகவே பார்க்கும் இன்றைய சமூகத்தில், இந்த புகைப்படத்தையும் ஒரு பொழுதுபோக்காகவே பார்க்கிறோம், ஆனால் ஒரு கட்டத்தில் இது பெரும் மன எழுச்சியை உண்டாக்கும் என்ற உண்மை தெரியாமல்.

மேலும் அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் தமிழர்களோ, வங்காளர்களோ யாராக இருப்பினும், அந்த புகைப்படத்தை நான் ஒரு அவமானச் சின்னமாகவே பார்க்கிறேன்.

அந்த புகைப்படத்தை எதிர்க்கிறேன் என்பதுதான் நான் இங்கு சொல்லவருவது. அதை எப்படி தெளிவாக சொல்வது என்று தெரியாமல், எதோ எதோ சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

இதைப் போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வலம் வர நண்பர்கள் யாரும் உதவி செய்ய வேண்டாம் என்றும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

(அந்த புகைப்படத்தின் விளம்பரத்துக்கு எந்தவீதத்திலும் இந்த கட்டுரை உதவக் கூடாது என்பதற்காக அந்த புகைப்படம் இங்கே வலையேற்றப்படவில்லை).

Saturday, December 3, 2011

பங்குச்சந்தை மோகம்

என்னைப் பார்த்து என் நெடுநாள் தோழன் ஒருவனும் வலைப்பதிவு எழுத தொடங்கியுள்ளான். அவன் தொடந்து எழுத என் வாழ்த்துகள். இதைப்போல், அலுவலகத்தில் தினமும் நான் MoneyControl Portfolio'வை மேய்ந்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த ஒருவர், நான் பங்குச்சந்தையில் பெரிய புள்ளி என்று நம்பிவிட்டார். அப்படி நம்பியோடு விட்டிருந்தால் பரவாயில்லை. பங்குச்சந்தையைப் பற்றி நான் அவருக்கு சொல்லிதர வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். நானும் EPS, P/E, Dividend, Face Value. Book Value, Book Closure Date போன்று எனக்கே தெரியாத சில டெக்னிக்கல் விசயங்களை எடுத்துவிட்டேன். அமைதியாக தலையைச் சாய்த்து கேட்டுக்கொண்டவர், அடுத்த வாரமே ஷேர்கானில் அக்கவுண்ட் திறந்தார். ஷேர்கானில் அக்கவுண்ட் ஓபன் செய்ய உதவியவனும் நான்தான் என்பதை எழுத வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.

இனிதான் பிரச்சனையை, அக்கவுண்ட் திறந்தவுடனேயே "அசோக், உனக்கு தெரிந்த சில பங்குகளை சொல் வாங்குகிறேன்" என்றார். அதுவும் எப்படி, ஒரே வாரத்தில் பணம் இரண்டு மடங்காக வர வேண்டுமாம். ஏற்கனவே, எனது பழைய அலுவலகத்தில் சிலருக்கு சில பங்குகளை சிபாரிசு செய்ய போய், எனக்கும் அவர்களுக்கும் தீராப்பகை ஒன்று இன்று வரை இருந்துக்கொண்டு இருக்கிறது. நான் அவர்களுக்கு சிபாரிசு செய்த பங்குகளில் ஒன்று "Pyramid Saimira". இப்பொழுது அந்த பங்கினை பங்குச்சந்தை வணிகத்திலிருந்தே தூக்கிவிட்டார்கள். எனக்கு அந்த பங்கிலிருந்து சில ஆயிரம் லாபம் கிடைத்த காரணத்தால்தான், எனது நண்பர்களுக்கு சிபாரிசு செய்தேன். ஆனால், அவர்கள் வாங்கிய நேரம் கம்பெனியை மூடிவிட்டார்கள். நல்லவேளை, அந்த பங்கில் எனக்கு முன்னரே சில ஆயிரங்கள் லாபம் கிடைத்த விசயத்தை அவர்களிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் இந்நேரம் பெரிய வெட்டுக்குத்து சண்டையே நடந்திருக்கும். என் வாழ்நாளில் எனக்கு லாபம் கிடைத்தது அந்த பங்கிலிருந்து மட்டும்தான், மேலும் இன்று வரை மொத்தமாக என்னுடைய நஷ்டங்கள் சில லட்சத்தை எட்டிவிட்டது என்ற உண்மையை நான் யாரிடம் சொல்லி அழுவது.

நான் முதல் முதலாக பங்குவணிகத்துக்கு அடி எடுத்து வைத்தது கல்லூரி இறுதி ஆண்டில், அப்பொழுது நான் முதலீடு செய்த தொகை 2500. முதலில் வாங்கிய பங்கு ITC. அப்பொழுது அதன் விலை 180 என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது, ஆனால், இன்னும் என்னால் இந்த பங்குச்சந்தையை சரியான முறையில் புரிந்துக்கொள்ள முடியவில்லையே என்று நினைக்கும் போது, கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. நான் தோற்றுவிட்டேன் என்ற உண்மையை மனது உணர்ந்துக்கொள்ள மறுக்கிறது.

நேற்று கூட Intraday'யில் இரண்டு ஆயிரம் ரூபாய் லாபம், ஆனால், கடந்த ஒரு மாதம் என்று மொத்தமாக பார்த்தால் ஆயிர ரூபாய்க்கு அருகில் நஷ்டமே. நானும் பல முறை இதிலிருந்து வெளிவர முடிவு செய்வேன், ஆனால் அது முடியவில்லை. அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் வரை பங்குச்சந்தையிலிருந்து விலகியிருக்கிறேன். நான் அடிமையாகிவிட்டேன் என்று நன்றாக எனக்கே தெரிகிறது. இந்த போதை எனக்கு பிடித்திருக்கிறது. இது எண்களின் விளையாட்டு. இந்த உலகத்தில் ஒருவனுக்கு அதிகம் மயக்கம் தர கூடியவை எண்களே. இப்பொழுது எண்களைப் பற்றி நான் தேடித் தேடி படித்துக்கொண்டு இருப்பதற்கு காரணமும் இந்த பங்குசந்தை மோகம்தான் என்று நினைக்கிறேன்.

பதிவு கொஞ்சம் சீரியஸாக போய்க் கொண்டு இருப்பதால், மீண்டும் என் அலுவலக கதைக்கு வருவோம். அலுவலக நண்பர் அக்கவுண்ட் திறந்தவுடனேயே "அசோக், உனக்கு தெரிந்த சில பங்குகளை சொல் வாங்குகிறேன்" என்றார்.

 "இல்ல எனக்கு அந்தளவு விவரம் தெரியாது, அதனால், நீங்களே செய்திகளைப் படித்து வாங்குகள், ஒரு பங்குப் பற்றி நான்கு முறை நன்றாக படித்துவிட்டு வாங்கவும்"  என்றேன்.

அவரும் விடாமல், தொடர்ந்து இந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் அதே பதிலை பல முறை சொல்லிக்கொண்டே இருந்தேன். கடைசியில் அவரே சலித்துப்போய் நிறுத்திவிட்டார். ஆனால் இன்னும் நான் பங்குச்சந்தைப் பற்றி சில டெக்னிக்கல் வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அவருக்கு சொல்லிக்கொண்டேதான் இருக்கிறேன். அவர் அருகில் இருக்கும் போது MoneyControl Portfolio மற்றும் ஷேர்கான் இணையதளம் ஆகிய இரண்டையுமே நான் திறப்பதே இல்லை என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.
 

இந்த வாரம் பார்க்க முடிவு செய்துள்ள திரைப்படங்கள்

நான் ஒரு சினிமா பைத்தியம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. எல்லா திரைப்படங்களையும் முதல் நாளே பார்க்ககூடியவன் நான், அது எவ்வளவு பெரிய மொக்கைப் படமாக இருந்தாலும் சரி. அப்படிபட்ட நான், கடந்த ஒரு மாதத்தில் பார்த்த ஒரே திரைப்படம் "மயக்கம் என்ன" மட்டுமே. கடந்த ஒரு மாதத்தில், எஸ்.ராவின் பேச்சு, அக்காவின் புதிய பெண் குழந்தை என்று நாட்கள் விரைவாக ஓடிவிட்டதால் திரைப்படங்கள் பார்க்க முடியவில்லை.

அக்காவிற்கு குழந்தை பிறந்து ஒரு மாதம் முடியபோகிறது. பிறந்த முதல் நாளிலிருந்து அக்காவின் குழந்தையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். குழந்தைகளின் உலகம்தான் எவ்வளவு வித்தியாசமானது, பிறந்த குழந்தையை கையில் வாங்கியவுடன் மாமாவின் கண்களில்தான் எத்தனை ஆனந்தம். அந்த தருணத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.

குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே குழந்தைகளைப் பற்றி பல கதைகள் கேட்டுவிட்டேன். குழந்தை தூக்கத்தில் சிரித்தால், கடவுள் குழந்தையுடன் பேசிக்கொண்டு இருப்பதாக அர்த்தமாம். குழந்தை தூக்கத்தில் இருக்கும் போது, அதற்கு துணையாக எதாவது ஆயுதத்தை வைக்கவேண்டுமாம். எனது அம்மா, இரும்பால் செய்த ஒரு சின்ன சுத்தியலை தனது பேத்திக்கு அருகில் வைத்துள்ளார். குழந்தைக்கு விக்கல் வந்தால், அதன் தலையில் ஒரு சிறிய நூலிலை வைக்கவேண்டுமாம், இதற்காகவே எனது சித்தி கையில் நூல்கண்டுடன் அருகிலேயே உட்கார்ந்து இருக்கிறார். முப்பதாவது நாள் முடியும் போதும், கடவுள் குழந்தையிடம் "இனி நீ மனிதர்களுடன் தான் இருக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவாராம், அதனால்தான் முப்பதாவது நாள் குழந்தை பயங்கர சத்தத்துடன் அழுகிறதாம்.

கடவுள் குழந்தையின் தலையில் ஆசிர்வதித்து அனுப்புவார் அதனால் உச்சதலையை தொடக்கூடாது, குழந்தை முறுக்கிக்கொண்டே இருந்தால், அதற்கு முறுக்கு கயிறு கட்டினால் சரியாகிவிடும். இது போல் இன்னும் எத்தனையோ கதைகள். இவையெல்லாம் கடந்த முப்பது நாட்களில் கேட்ட கதைகள், இன்னும் வரும் நாட்களில் எத்தனை கதைகள் கேட்கப்போகிறேன் என்று தெரியவில்லை. மேலும் இவை எல்லாம் எங்க ஊர் பக்கம் நான் கேட்கும் கதைகள். ஒவ்வொரு ஊருக்கு இந்த கதைகள் வித்தியாசப்படும் என்கிறார்கள்.

ஒருவழியாக இப்பொழுது எல்லா வேலைகளும் முடிந்துவிட்டதால், மீண்டும் திரைப்படங்களை பார்க்க தொடங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். அதன்படி அடுத்த ஒரு வாரத்தில் திரையரங்கு சென்று பார்க்க முடிவு செய்துள்ள படங்கள்,

போராளி,
ஒஸ்தி
Rockstar
The Dirty Picture

மேலும் டிவிடியில் பார்க்க முடிவு செய்துள்ள திரைப்படம்

Fashion

பல நாட்களுக்கு முன்னாலேயே Torrent'ல் டவுன்லோட் செய்து வைத்திருக்கும், இந்த உலகச் சினிமாக்களையும் பார்த்தாக வேண்டும்..

Machan - (Srilanka Movie)
The last temptation of Christ

Joan of Arc
Throne of Blood    - (By Akira Kurosawa)
The Seventh Seal - (Swedish film)

இந்த திரைப்படங்களை எல்லாம் பார்த்த பின், கீழ் கண்ட மூன்று பதிவுகளை எழுத முடிவு செய்துள்ளேன். அவை,

1) உலக சினிமாக்களை Subtitle'வுடன் பார்ப்பது எப்படி??
2) இந்த காட்சி இங்கேயிருந்து'தான் காப்பியடிக்கபட்டுள்ளது.
3) போராளி, ஒஸ்தி மற்றும் இரண்டு ஹிந்தி திரைப்படங்கள்.

கடைசியாக இந்த பதிவை முடிக்கும் முன்னால், "The Dirty Picture" திரைப்படம் பற்றி லக்கிலூக் எழுதியிருக்கும் ஒரு வாக்கியத்தோடு முடிக்கிறேன்...

"‘நேத்து ராத்திரி யம்மா’வுக்கும், ‘பொன்மேனி உருகுதே’வுக்கும் விசிலடித்த ஒவ்வொரு ஆணும் சிலுக்குவை கொலை செய்தவர்களே."

(link::http://www.luckylookonline.com/2011/12/dirty-picture.html)

.

அன்று, எனக்காக சிறிதளவாவது
நீங்கள் வருத்தபட்டு இருக்கலாம்.

என்னுடைய ஏமாற்றங்களை,
நான் பகிர்ந்துக்கொள்ளும் போது
நீங்கள் என்னை பார்த்து சிரிப்பதை
நான் விரும்பவில்லை.

நான் வஞ்சிக்கப்பட்டதை சொல்லிய போது,
நீங்கள் அதை
ஒரு நாடகத்தோடு ஒப்பிட்டு பேசியதை
என்னால் வேடிக்கை
மட்டுமே பார்க்க முடிந்தது.

அன்று, எனக்காக ஒரு துளியாவது
கண்ணீர் சிந்தியிருக்கலாம்.

என் தனிமையின் வேதனைகளைப் பார்த்து,
நான் சாய்ந்துக்கொள்ள
உங்கள்
தோள்களை கொடுத்திருக்கலாம்.

அன்று,
நீங்கள் என்னை ஒரு பைத்தியமாக பார்த்திருக்க
வேண்டிய கட்டாயம் இல்லை.

என் காதலுக்கு
உங்களால் மட்டுமே
உதவ முடியும் என்று நான் நம்பிய போது,
நீங்களே எதிரியாக மாறியதை
இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள என்னிடமும்
சில சோகங்கள் இருக்கிறது
என்பதை,
இப்பொழுதாவது புரிந்துக் கொள்ளுங்கள்.

Tuesday, November 29, 2011

பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடித்தது எப்படி..

குறிப்பு: வாசகர்களின் விருப்பபடி "பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடிப்பது எப்படி??" என்ற தலைப்பு "பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடித்தது எப்படி" என்று மாற்றப்பட்டுள்ளது.


கொஞ்ச நாட்களாகவே நான் எழுதுவது எதுவும் புரியவில்லை என்று பலர் வருத்தப்படுகிறார்கள். எழுத்து புரியாத காரணத்தினால், என் வலைப்பதிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துக்கொண்டே போகிறது. Google analytics'ம் இதை உறுதிப்படுத்துகிறது. Visitors எண்ணிக்கை குறைய ஒருவேளை இந்த வலைப்பதிவை பலர் Google Reader'ல் படிக்கத்தொடங்கி இருப்பது  கூட காரணமாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், என்னுடைய சமீபத்திய எழுத்து புரிவதில்லை என்று புகார் சொன்னவர்களுக்காக அனைவருக்கும் புரியும் படி , "பார்க்கிங் செய்த டூ-வீலரை கண்டுபிடிப்பது எப்படி??" என்ற இந்தப் பதிவை எழுத முடிவு செய்துள்ளேன். மேலும் கொஞ்ச நாட்களாக நான் இழந்த பழைய வாசகர்களையும் இந்த பதிவின் மூலம் மீண்டும் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

சென்னையில் உள்ள பெரிய பிரச்சனைகளில் பார்க்கிங் பிரச்சனையும் ஒன்று. டூ-வீலரை கூட நீங்கள் எதாவது ஒரு சந்து கிடைத்தால் பார்க்கிங் செய்துவிடலாம், ஆனால் காரை பார்க்கிங் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் செத்தீர்கள். டி.நகரில் காரை பார்க்கிங் செய்பவர்கள் எல்லாம், காலை ஆறு மணிக்கே வந்து காரை பார்க்கிங் செய்துவிட்ட பின்னர்தான் வீட்டுக்கு குளிக்க செல்வார்கள் என்று நினைக்கிறேன்.  என்னிடம் இருப்பது டூ-வீலர் மட்டும்தான் என்பதால், கார் வைத்திருப்பவர்கள் எப்படியாவது நாசமாய் போகட்டும் என்று சொல்லிவிட்டு, இங்கு டூ-வீலர் பார்க்கிங்கை மட்டும் பேசுவோம்.

இப்பொழுது புதிதாகக் கட்டப்பட்டு இருக்கும்  EA மாலில் பார்க்கிங் செய்வதற்கு என்றே தனியாக "அன்டர் கிரவுண்ட்" இடம் இருப்பதால் பார்க்கிங்குக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால், பார்க்கிங் கட்டணத்தை கேட்டால் நாம் தலைச்சுற்றி மயங்கி கிழே விழுவது நிச்சயம். மூன்று மணிநேரம் திரைப்படம் பார்க்க EA'வில் டிக்கெட் கட்டணம் ரூபாய் 120, அதே மூன்று மணிநேரத்திற்கு பார்க்கிங் கட்டணம் குறைந்தது 50 ரூபாய். சனி, ஞாயிறு என்றால் கட்டணம் இரண்டு மடங்காகும்.

இப்படிபட்ட கொள்ளையர்கள் ரூம் போட்டு வசிக்கும் EA'வுக்குதான் போன சனி அன்று டூ-வீலரில் "மயக்கம் என்ன" திரைப்படம் பார்க்க போனேன். ராக்கியிலும், தேவி கருமாரியிலுமே திரைப்படம் பார்த்து பழக்கப்பட்ட நான், EA'வுக்கு போனதிலும் ஒரு காரணம் இருக்கிறது. எனது அலுவலக தோழி ஒருத்தியும் திரைப்படம் பார்க்க வந்திருந்தாள். அவள் தீவிர செல்வராகவன் ரசிகையாம். இங்கே தோழி என்ற வார்த்தையை கேட்டவுடனே நீங்கள் என் மீது பொறாமை கொள்ள தொடங்கியிருப்பீர்கள். இப்பொழுது உங்களுக்கு தெரிகிறதா, நான் எதனால் யாருக்கும் புரியாத மாதிரியே எழுதுகிறேன் என்று??

திரைப்படம் ஆரம்பிக்கும் வரை நன்றாக பேசிக்கொண்டு இருந்தவள், திரைப்படம் ஆரம்பித்த பின் ஒரு வார்த்தை பேசவில்லை. இந்த மவுனம் திரைப்படம் முடியும் வரை தொடர்ந்தது. இடைவேளையில் மட்டும் ஒரு முறை வாயை திறந்து "One Coke and Black Forest Cake" என்றாள். செல்வராகவனின் ரசிகைகள் கூட செல்வராகவன் திரைப்படத்தின் கதாநாயகிகள் போலவே தான் இருக்கிறார்கள். திரைப்படம் முடிந்தவுடனேயே, அவளுடைய அப்பா வெளியில் அவளுக்காக வெயிட் செய்வதாக சொல்லி அவள்  சென்றுவிட்டாள்.

இனிமேல் தான் பிரச்சனையே. இந்த பதிவின் தலைப்புக்கு இப்பொழுதுதான் வரப்போகிறோம். எனது டூ-வீலரை எடுக்க பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தால், நான் வண்டியை பார்க்கிங் செய்த இடம் மறந்துவிட்டது. எனக்கு ஞாபக மறதி அதிகம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது தான் என்றாலும், என்னுடைய ஞாபக மறதியை எடுத்துக்காட்டுடன் சொல்லவேண்டும் என்றால், என்னுடைய வண்டி நம்பர் எனக்கே ஞாபகம் இருக்காது.

ஒருவழியாக வண்டி நம்பரை ஞாபகம் செய்து, வண்டியை தேடினால் எங்கேயும் காணோம். தூரத்திலிருந்து பார்க்கும் போது நமது வண்டியை போல இருக்கும், ஆனால் பக்கத்தில் போனால், வண்டி நம்பர் வேறாக இருக்கும். நானும் எனது தோழியும் ஒன்றாகதான் வந்தோம் என்பதால், அவளுக்கு போன் செய்து கேட்கலாம் என்று பார்த்தால், அவளும் போனை எடுக்கவில்லை.

ஒருவழியாக இருபது நிமிடம் கழித்து அவள் போன் செய்து சொன்னபின்தான் தெரிந்தது " EA'வில்  B1, B2, B3 என்று மூன்று அடுக்கு இருப்பதாகவும், நான் வண்டியை நிறுத்தி இருப்பது B3'ல், நான் இப்பொழுது தேடிக்கொண்டு இருப்பது B2'வில்" என்று. கடைசியில் டூ-வீலரை எடுத்துக்கொண்டு வாயிலுக்கு செல்கையில் அங்கே இருவர் தயாராக நின்றுக்கொண்டு இருந்தனர், எனக்கான கட்டணத்தை சொல்ல.

இப்பொழுது என்னுடைய சந்தேகங்கள் எல்லாம்,
1) அவள் என்னுடன் வந்ததால்தான் நான் பார்க்கிங் செய்த இடத்தை மறந்துவிட்டேனா??
2) எதற்காக எனக்கு மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை எதாவது ஒரு பெண் மூலம் பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கிறது??
3) இந்த பெண்னை எப்பொழுது காதலிக்க தொடங்கினேன்??

Saturday, November 26, 2011

ஒரு அறிமுகம்


வார்த்தைகளோடு அலைபவன்
3.ஒரு அறிமுகம்

சொற்களுக்கும் வார்த்தைகளுக்கும்
என்ன வித்தியாசம் என்றாய்.
சொற்களுக்கு அர்த்தம் உண்டு
வார்த்தைகளுக்கு இல்லை என்றேன்,
புரிந்தவளாய் தலையாட்டினாய்.

உன்னுடைய பயம் எனக்கு புரிகிறது. நீ பயப்படுகின்றளவு இன்னும் எதுவும் எனக்கு மோசமாக நடந்து விடவில்லை. ஒரு சிறிய வித்தியாசமான முயற்சி அவ்வளவு தான். உனக்கு புரிகிறதா?? கண்டிப்பாக உனக்கு புரியும். எனக்கு இதைச் சொல்லி கொடுத்தவளே நீ தானே. எத்தனை முறை என் கண்களை உன் புடவையால் கட்டிவிட்டு இந்த உலகத்தைப் பார்க்க கற்றுக்கொடுத்திருக்கிறாய்.

முதலில் எனக்கு காதலியாக அறிமுகமாகி, பின்னர் என் தோழியாக மாறி, வரும் காலத்தில் யாருக்கோ மனைவியாக மாறப் போகும் நீ தானே, என் எழுத்துக்கு காரணம். என்னுள் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறாய். பாரதியின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் "யாதுமாகி நின்றாய்"

நம்முடைய முதல் சந்திப்பு ஏதோ  ஒரு திரையரங்கில், ஏதோ ஒரு கோயிலில், ஏதோ ஒரு கடற்கரையில்,  ஏதோ ஒரு பேருந்து நிறுத்ததில், ஏதோ ஒரு இணைய அரட்டையில் நடந்ததாக தானே நீ நம்பிக்கொண்டிருக்கிறாய். கண்டிப்பாக இல்லை.  நம்முடைய முதல் சந்திப்பு எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அது ரமேஷ்-பிரேம் எழுதிய "சொல் என்றொரு சொல்" என்ற புத்தகத்தில் நடந்தது.

முதல் பக்கத்திலிருந்து எண்ணினாலும், கடைசி பக்கத்திலிருந்து எண்ணினாலும் பக்க எண்கள் ஒன்றாக இருக்கும் ஒரு பக்கத்தில்தான் நமது முதல் சந்திப்பு நடந்தது. அந்த புத்தகத்தை முதல் முதலாக படித்த நான், ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு கதாபாத்திரம் வழியாக புத்தகத்தில் காணாமல் போய் இருந்தேன். அப்பொழுது நீ தானே வந்து என்னைக் காப்பாற்றினாய். நீ மட்டும் இல்லை என்றால், அந்த இருள் நகரத்தில் ஒரு தெருவில் இன்னும் நான் அழைந்துக்கொண்டிருந்து இருப்பேன்.

நம்முடைய முதல் சந்திப்பைப் பற்றி நான் உன்னிடம் சொல்லும் போதெல்லாம் நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாய். நீ நம்புவதாக இல்லை. எனது கற்பனை திறனைப் பாராட்டுகிறாய்.

நம்முடைய இரண்டாம் சந்திப்பு நகுலன் எழுதிய ஒரு புத்தகத்தில் தான் நடந்து என்பதை நான் சொன்ன போது, நீ அதை ஒரு மிக புனைவு என்கிறாய். நகுலன் புத்தகத்தில் ஏதோ ஒரு சுசீலாவின் வழியாக காணாமல் போக இருந்த உன்னை, நான் தானே மீட்டுக்கொண்டு வந்தேன் என்பதைக் கூடவா மறந்து விட்டாய்??

எது எப்படியிருந்தாலும் இந்த "வார்த்தைகளோடு அழைபவன்" கதைகளை உனக்கே சமர்ப்பிக்கிறேன். நீ என்னுடனோ அல்லது உன் நினைவுகள் என்னுடனோ இருக்கும்வரை இந்த பைத்தியக்காரத்தனங்கள் தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  

Friday, November 25, 2011

முகநூல் கதைகள்

நான் சிறுவனாக இருந்த போது வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் என்னிடம் கேட்கும் கேள்விகள் இப்படியாகதான் இருக்கும். " பெயர் என்ன??" "எத்தனாவது படிக்கிற??" "நல்லா படிக்கிறீயா??". கொஞ்சம் நெருங்கிய சொந்தம், மற்றும் குழந்தைகளை பிடிக்கும் என்றால் இன்னொரு கேள்வியும் சேர்ந்து வரும், அது " உனக்கு எத்தனை பிரண்ட்ஸு??". இப்பொழுது என்னிடம் யாராவது இந்த கேள்வியை கேட்டால் நான் "291" என்று பதில் சொல்லியிருப்பேன். இது என்னுடைய முகநூல் (Facebook) நண்பர்களின் எண்ணிக்கை. நீங்கள் இதைப் படித்துக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அந்த எண்ணிக்கையில் சில மாற்றங்கள் நடந்திருக்கலாம். நானாவது பரவாயில்லை, எனக்கு தெரிந்த எங்க ஊர் பெண்ணொருத்தி, முகநூலில் இருக்கிறாள், அவளின் நண்பர்களின் எண்ணிக்கை 1266. இன்னும் சில நாட்களில் அவளின் நண்பர்களின் எண்ணிக்கையை பவரில் தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன், 2 பவர் 8 என்று சொல்வோமே அப்படி. அவள் இப்பொழுதுதான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறாள் என்பது இங்கு கூடுதல் செய்தி.

முகநூலில் பல நன்மைகளும் இருக்கதான் செய்கிறது. எடுத்துக்காட்டுக்கு பல வருடங்களாக நாம் தேடிக்கொன்டு இருக்கும் நண்பர்களை சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் என்று அனைவரையும். என்னுடைய பள்ளி நண்பர்களை தேடி நான் முகநூல் வரைக்கும் போக வேண்டிய அவசியம் இல்லை. நாகையில் இருப்பதே நான்கு தெருக்கள்தான் என்பதால், ஊருக்கு போகும் போது அவர்களை நேரிலேயே சந்தித்துவிடலாம். கல்லூரி நண்பர்களை கண்டுபிடிக்கதான் முகநூல் எனக்கு ரொம்ப உதவியது. நான் மூதலாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த போது என்னுடன் கல்லூரியில் மூதலாம் ஆண்டு சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 1500 அருகில். நான் படித்த எலக்ட்ரானிக்ஸுக்கு மட்டும் ஏ, பி, சி, என்று மொத்தம் ஒன்பது வகுப்புகள், ஒரு வகுப்புக்கு 60 மாணவர்கள் என்றால், மொத்தமாக எலக்டிரானிக்ஸ் படித்தவர்களின் எண்ணிக்கை 500'யை தொடும். நான்கு ஆண்டு கல்லூரி படிப்பு முடித்தப்பின் கூட அந்த 500'ல் பாதி பேரிடம்தான் எனக்கு பழக்கம் எற்பட்டு இருந்தது.

அந்த 500'ல் ஒருவனிடம் இருந்துதான் சமீபத்தில் எனக்கு Friend Request வந்திருந்தது. நான் அவனிடம் கல்லூரியிலேயே நான்கு முறைக்கு மேல் பேசியிருக்கமாட்டேன். சரி சும்மா கொடுத்து இருப்பான் போல, நானும் என்னுடைய நண்பர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடுமே என்று முடிவு செய்து, எனது நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன்.

அடுத்த நாளே அவனிடமிருந்து முகநூலில் எனக்கு ஒரு செய்தி வந்திருந்தது. "Hi Machi, How r u??. காலையிலேயே அனுப்பி இருப்பான் போல், நான் மாலையில்தான் அந்த செய்தியை படித்தேன்.  "நலம்" என்று நானும் ஒரு செய்தியை அனுப்பினேன். பின்னர் எனக்கும் அவனுக்கும் நடந்த முகநூல் உரையாடல் கீழே,

"How is ur Class mates da?? still in Touch??"

"Yes Machi, every one fine"

"hey, i lost ur contact number, can u pls msg me from ur number. My New number: 98213######"

இனி எனக்கும் அவனுக்கும் நடந்த செல்போன் குறுஞ்செய்தி உரையாடல்..

"Ashok here. It's my Number"

"Thanks Machi"

அடுத்து அவனிடமிருந்து வந்த குறுஞ்செய்திதான் இந்த பதிவுக்கு காரணம்,

"Machi, are you having ur classmate gowri phone number??"
 
என்னுடய கேள்வி எல்லாம், ஆறுபது பேர் படித்த எங்கள் வகுப்பில் என்னிடம் மட்டும் அவன் இந்த கேள்வியை கேட்க காரணம் என்ன??. உண்மையாகவே இவர்களாம் என்னைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்???

"Sorry Da, i dont have. She is in facebook"

"ok machi..np"


Thursday, November 10, 2011

.


என்னால் இதுவரைப் பாதுகாக்கப்பட்ட ரகசியம் ஒன்று,
என் கண் முன்னே, தெரு நடுவில் நடக்க கண்டேன்.

பாதசாரிகள்
வாகன ஓட்டிகள்
பிச்சைகாரர்கள்
நண்பர்கள்
உறவினர்கள்
என்று
யாராலும் அதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

வழக்கம் போல் என் கண்களை மூடிக்கொண்டேன்
ரகசியம் பாதுகாக்கப்பட்டுவிட்டது என்ற நம்பிக்கையில்.


"ஒரு ரகசியம் உருவாகியது" கிறுக்கலின் தொடர்ச்சி

Friday, October 28, 2011

இது சூப்பர் ஹீரோக்களின் காலம்

தீபாவளிக்கு வந்திருக்கும் திரைப்படங்களை பார்க்கும் போது ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது, "இது சூப்பர் ஹீரோக்களின் காலம்" என்று.  எங்கு திரும்பினாலும் சூப்பர் ஹீரோக்களாக இருக்கிறார்கள். இந்த தீபாவளிக்கு மட்டும் மூன்று புதிய சூப்பர் ஹீரோக்கள் உருவாகியுள்ளார்கள். (நான் இன்னும் ரா-1 பார்க்கவில்ல்லை, ஆனால், அந்த திரைப்படத்தைப் பார்த்த நண்பன் சொன்ன கதையின்படி அதுவும் சூப்பர் ஹீரோ திரைப்படம் தான் என்பது உறுதியாக தெரிகிறது)

ஏழை, பணக்காரன் என்று எல்லாருக்கும் சூப்பர் ஹீரோ தேவைப்படுகிறார்கள். அதை நன்கு அறிந்த சினிமா இயக்குநர்கள், இந்த முறை மூன்று புதிய சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியுள்ளார்கள். ஒருவன் - ஏழைகளுக்காக, மற்றொருவன் - தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட, இன்னொருவன் விளையாட்டில் மூழ்கியிருக்கும் இன்றைய சமூகத்துக்காக.

முதலில், மூன்று புதிய சூப்பர் ஹீரோக்களை தாங்கும் அளவு நாம் தயாராகயிருக்கிறோமா???. ஒரு சூப்பர் ஹீரோ வீடியோ கேமிலிருந்து குதிக்கிறார். இன்னொரு ஹீரோ மரபணு என்கின்ற Intellactual வார்த்தையிலிருந்து. மூன்றாவது சூப்பர் ஹீரோ, மேலே சொன்ன இரண்டை போலவும் இல்லாமல், ஒரு சாதாரண மனிதனே சூப்பர் ஹீரோவாக மாறுகிறார். "எந்த ஒரு புதிய சக்தியும் தேவை இல்லாமல், ஒரு சாதாரண மனிதன் கூட சூப்பர் ஹீரோவாக மாறலாம்" என்று சொல்வதின் மூலம், முதல் இரண்டு ஹீரோக்களை கடைசியாக வந்தவன் வீழ்த்தி விடுகிறான்.


நாம் சொன்ன அந்த சாதாரண சூப்பர் ஹீரோவால், "எப்படி இவ்வளவு விரைவாக ஒட முடிகிறது?? அதுவும் ரயிலை விட வேகமாக,!!! எப்படி வானிலிருந்து ஒரு காரின் மேல் குதிக்க முடிகிறது?? அதுவும் குதித்தவுடன் எப்படி காரின் நான்கு பக்க கண்ணாடியும் உடைகிறது!! எப்படி ஒரு இரும்பு கம்பியால், தலையில் அடித்த பின்னரும் சண்டை போட முடிகிறது?? கோயம்பேடிலிருந்து அண்ணா நகர் போகவே ஒருமணிநேரமாகும் இந்த காலத்தில் எப்படி சென்னை முழுவதும் அந்த சாதாரண சூப்பர் ஹீரோவால் போக முடிகிறது?? தலையில் தொப்பி போட்டாலே, வானத்தை நம்மால் பார்க்க முடியாத போது, நெற்றியை பாதி வரை துணியால் மறைத்த ஒருவனால், எப்படி நாலாம் பக்கமும் பார்த்து சண்டை போட முடிகிறது??" இப்படி பல கேள்விகளை கேட்பீர்கள் என்றால் உங்களுக்கு வரும் ஒரே பதில் "இது சினிமா பாஸ்".

சரி அவர்கள் சொல்வது போல் இது சினிமாவகே இருந்துவிட்டு போகட்டும், வாழ்க இளைய தளபதி.

சரி இன்னொரு சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் என்ன செய்கிறார்கள்??? 



ஏ.ஆர். முருகதாஸ் சார், தமிழர்கள் பற்றி நன்கு தெரிந்துவைத்து இருக்கிறீர்கள். திரைப்படம் முழுவதும் தமிழன், தமிழன் என்று சொன்னாலே படம் ஓடிவிடும் என்று நம்புகிறீர்கள். நல்ல வியாபார யுக்தி, நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துகள். சர்க்கஸ் ஹீரோ தீடிர் என்று தமிழர், தமிழ் தேசம், தமிழ் மொழி என்றெல்லாம் பேசுகிறார், அந்த வசனம் வரும் வரை, அவர் தமிழ் மீது ஆர்வம் உள்ளவர் என்று திரைப்படத்தில் எங்கேயுமே காட்டவில்லை. ஒருவேளை வசனம் எழுதி தயாராக இருப்பதால், அந்த காட்சியில் மட்டும் அவர் தமிழர் தலைவனாக மாறியிருக்கலாம். தவறில்லை, இது உங்கள் திரைப்படம், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம். மீண்டும் வாழ்த்துகள்.

முருகதாஸ் சார் ஒரு சந்தேகம் சார் "இது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடக்கும் சண்டையா, இல்ல தமிழ் நாட்டுக்கும் சீனாவுக்கும் நடக்கும் சண்டையா??" நமது கேப்டன் மற்றும் ஆக்‌ஷன் கிங் கூட இந்தியாவுக்காக தான் போராடுவார்கள். தமிழனுக்காக போராடும் முதல் ஹீரோ இவர்தான் என்று நினைக்கிறேன். அப்பறம் இன்னொன்று சார், திரைப்படத்தில் ஒரு வசனம் வருகிறது "ஒரு தமிழனை முப்பது நாடுகள் சேர்ந்து கொன்றால், அது துரோகம்" என்று. (வாக்கியம் சரியாக நினைவில்லை) இந்த வசனம் எதற்காக அந்த காட்சியில் வருகிறது என்பதை இரவு முழுவதும் யோசித்தும் என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

இப்பொழுது இது போதும். இதை போல் எழுதிக்கொண்டு இருந்தால், என்னை கூட எதாவது சூப்பர் ஹீரோ தாக்க நேரிடும் அபாயம் இருக்கிறது.

மொத்தத்தில் தீபாவளிக்கு இது போன்ற திரைப்படங்கள் பார்க்க நேரிடுவது, நரகாசுரனை கொன்ற பாவத்தாலேயே என்று நினைக்கிறேன்.

Wednesday, October 26, 2011

கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன்

 இந்த பதிவு உயிரோசையில் வெளிவந்துள்ளது.http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4944
கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். எனக்கு தெரிந்த எல்லா ஆயுதங்களையும் முயற்சி செய்த பின்னர்தான், நான் இந்த ஆயுதத்தை தேர்வு செய்தேன். நீங்கள் நினைப்பது போல், இது கத்தியோ, கோடாலியோ, சுத்தியலோ இல்லை. சுத்தியல் மீதான எனது நம்பிக்கை தவிடு போடியாகி பல வருடங்கள் ஆகிறது. என் பேச்சை கேட்டு இன்னும் சுத்தியலை தூக்கி கொண்டு இருப்பவர்களிடம் நான் இப்பொழுது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சுத்தியலை இறுக்கமாக பிடித்து இருக்கும் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி "சுத்தியலை நீங்கள் பிடித்திருக்கிறீர்களா?? அல்லது, சுத்தியல் உங்களை பிடித்திருக்கிறதா??" இந்த கேள்விக்கான உண்மையான பதிலை நீங்களே உங்களுக்கு சொல்லிக்கொள்ளுங்கள். என்னிடம் வேறு வாக்குவாதங்கள் வேண்டாம். மேலும், உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதையே செய்யுங்கள். பேசி பேசி சலித்து விட்டேன்.  மனிதர்களிடம் இனி பேசுவதாக இல்லை. சலிப்பின் உச்சத்தில்தான் இதை சொல்கிறேன். இனி நான் பேச போவது எல்லாம் ஆகாயத்திடம், வானவில்லிடம், அம்மாவாசை அன்று நிலவில்லாமல் தனியாக அழைந்துக்கொண்டு இருக்கும் நட்சத்திரங்களிடம், பல வருடங்களாக என் வீட்டிலிருந்தும் - நான் கண்டுகொள்ளாத ரோஜா பூ செடியிடம், பேருந்துகளின் இரைச்சலுக்கிடையே தனியாக நின்றுக்கொண்டு இருக்கும் மரங்களிடம். இன்னும் இவைபோல் எத்தனையோ 'களிடம்'.

மீண்டும் இதன் ஆரம்ப வரிகளுக்கு செல்கிறேன். கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். இந்த ஆயுதத்தால் நான் யாரையும் இரத்த காவு வாங்க போவதில்லை. ஏற்கனவே இந்த பூமி இரத்தங்களால் நிரம்பி உள்ளது, மனிதர்கள் பல நேரங்களில் எனக்கு இரத்த பின்டங்களாக மட்டுமே தோன்றுகிறார்கள். இரக்கம் அற்ற மனிதர்கள். எத்தனையோ முறை அவர்களுக்கு இரக்கத்தைச் சொல்லி தர முயற்சி செய்திருக்கிறேன். ஒருவன் தன் வாழ்க்கையில் கண்டிப்பாக இரண்டு வீதமான மனிதர்களை மட்டும்தான் பார்க்கிறான். அவனுக்கு கீழே உள்ள மனிதர்கள், அவனுக்கு மேலே உள்ள மனிதர்கள், அல்லது இப்படியும் சொல்லலாம், அவனுக்கு கீழ் படியும் மனிதர்கள், அவன் கீழ் படியும் மனிதர்கள். அவனுக்கு கீழே உள்ள மனிதர்களிடம் இரக்கம் இல்லாமல் நடந்துக்கொண்டு, அவன் கீழ் படியும் மனிதர்களிடம் இரக்கத்தை எதிர்ப்பார்க்கிறான். ஒருவன் கீழ் படியும் மனிதர்களின் எண்ணிக்கை எப்பொழுதுமே அதிகமாகவே இருக்கிறது என்பதை ஒரு மனிதன் உணர மறுக்கும் போது. அவன் சர்வாதிகாரியாக மாறுகிறான். எனக்கு தெரிந்த பல நண்பர்கள் இப்படி மாறி உள்ளார்கள். அவர்களிடம் சில முறை இதைப்பற்றி விளக்கியிருக்கிறேன். ஆனால் அந்த விளக்கங்கள் என்னை பார்த்து நகைக்கவே உதவியாக இருந்து உள்ளது. ஆகவே தான், நான் முதலிலேயே சொன்னேன், நான் சழித்துவிட்டேன் என்று.

மீண்டும் இதன் ஆரம்ப வரிகளுக்கு செல்கிறேன். கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். இந்த ஆயுதத்தை நான் எனது எதிரிகளிடம் உபயோகப்படுத்த போவதில்லை. ஆயுதத்தை எதிரியிடம் தான் உபயோகம் செய்ய வேண்டும் என்பது தவறான கருத்து. ஒரு ஆயுதத்தை நீங்கள் உங்கள் நன்மைக்காக எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். "உங்களுக்கான ஆயுதத்தை நீங்கள் தேர்வு செய்யும் போதே, நீங்கள் சுயநலவாதியாக மாறிவிடுவதாக" ஒரு புனித புத்தகம் சொல்கிறது. சரி, நான் சுயநலவாதியாக இருந்துவிட்டு போகிறேன். என்னை சுற்றி உள்ளவர்கள் அவர்களின் ஆயுதத்தின் மூலம் என்னை தோல்வியடைய செய்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,, எனக்கான ஆயுதத்தை நான் தேர்வு செயவதில்லை எந்தவீத தவறும் இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு காதலி அவளின் காதலை ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கிறாள். ஒரு தந்தை, அவரின் தந்தை பாசத்தை ஆயுதமாக வீசுகிறார், ஒரு அம்மா, அவளின் அன்னை பாசத்தை, ஒரு நண்பன், எப்பொழுதோ கடனாக தந்த ஒரு பெரும் தொகையை, ஒரு நாய் தன் எஜமானிடம், நேற்று இரவு வீசுவாசமாக் குரைத்ததை நினைவு படுத்த முயற்சிக்கிறது. ஒரு பெரியவர் அவரின் நோயினை பயன்படுத்துகிறார், ஒரு பிச்சைக்காரன் அவனின் வயிற்றை, இப்படி ஒவ்வொருவரும் தனக்கான ஒன்றை ஆயுதமாகப் பயன்படுத்தும் போது, நானும் ஆயுதத்தை தேட வேண்டிய கட்டாயம் எற்படுகிறது.

மீண்டும் இதன் ஆரம்ப வரிகளுக்கு செல்கிறேன். கடைசியாக நான் எனக்கான ஆயுதத்தை தேர்வு செய்துவிட்டேன். இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும் நான் தேர்வு செய்து இருக்கும் ஆயுதம் மெளனம் தான் என்பது.

Tuesday, October 18, 2011

ஒரு வாசகனாக மட்டும்

"உன்னுடைய காதலியின் பெயர்??" என்று யாராவது என்னிடம் கேட்டால்,  அதற்கான பதில் ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டேயிருக்கும். அதே போல், பதில் மாறிக்கொண்டேயிருக்கும் மற்றொரு கேள்வி "உனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்??". (குறிப்பு: மிகவும்)

இந்த கேள்வியை என் கல்லூரி ஆரம்ப நாட்களில் கேட்கப்பட்டு இருந்தால், அப்பொழுது என் பதில் "தபூ சங்கர்". அதற்கு முக்கிய காரணம் விகடனில் அவர் எழுதிய கவிதைகள். இதே கேள்வியை என்னுடைய பள்ளி இறுதி நாட்களில் கேட்கப்பட்டு இருந்தால், அப்பொழுது என் பதில் "கல்கி". பள்ளி நாட்களில் நான் படித்திருந்த ஒரே புத்தகம் "பொன்னியின் செல்வன்" மட்டும்தான். அந்த நாவலில் எனக்கு நந்தினி தான் மிகவும் பிடித்தமானவள், பிடிக்காதவளும் அவளே. இன்று வரை நான் பெண்களை பார்த்து பயப்பட இந்த நந்தினியே காரணம் என்று நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு முறை படித்து உள்ளேன். இரண்டாவது முறையாக படித்தது கல்லூரி நாட்களில், நந்தினி தந்த பாதிப்பால் இந்த புத்தகத்தை இனி தொடவே கூடாது என்று முடிவு செய்தேன். அதன்படி இன்று வரை "பொன்னியின் செல்வன்" புத்தகத்தை பார்த்தால் ஒரு அடி தள்ளியே நிற்கிறேன்.

தபூ சங்கருக்கு பின் என் பட்டியலில் சேர்ந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரின் அறிமுகமும் எனக்கு விகடனின் மூலம்தான் கிடைத்தது. அப்பொழுது நான் படித்துக்கொண்டிருந்த பத்திரிக்கைகள் "ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் மற்றும் இந்தியா டூடே" மட்டுமே.

கல்லூரி மூன்றாவது வருடத்தில் விகடனில் உலக சினிமாவைப் பற்றி ஒர் தொடர் வந்தது, செழியன் எழுதியது. அந்தந்த வாரங்களில் செழியன் எழுதியிருக்கும் படத்தை உடனே மூர் மார்க்கெட்டில் தேடிபிடித்து பார்ப்பேன். மின்ட் அருகில் வசித்த சதிஷ் அந்த வழியாகதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்பதால், அவனே நான் சொல்லும் படங்களை வாங்கி தந்துவிடுவான். இன்னொரு நண்பனான போனி, இந்த திரைப்படங்கள் அனைத்தையும் முன்னரே பார்த்தவனாக இருப்பான். அவனும் பல படங்களை சிபாரிசு செய்வான்.

எழுத்தாளர்கள் பற்றி ஆரம்பித்து, கடைசியாக சினிமாவுக்கு வந்துவிட்டேன். மன்னிக்கவும். கல்லூரி இறுதி நாட்களில் இணையத்தின் மூலம் சாருவின் அறிமுகம் கிடைத்தது. இப்படியும் எழுதலாமா என்று ஆச்சர்யம் அடையவைத்தது அவர் எழுத்து. குட்டி கதைகள் வந்த போது அவருடைய தீவிரமான ரசிகனாக மாறிப்போனேன். இந்நேரத்தில் எனது அறை நண்பன் அருண் "ஆத்மநாம், சம்பத்,பாதசாரி (காசி)" இப்படி பலர் எழுதிய புத்தகங்களை வாங்கி வருவான். ஒவ்வொரு புத்தகமும் படிக்க படிக்க அவர்களின் ரசிகனாக மாறிக்கொண்டே வந்தேன்.

"எஸ்.ரா, சாரு, ஜெயமோகன், பாரதி, சுந்தர ராமசாமி, ஆத்மநாம், வண்ணதாசன், வண்ணநிலவன், மனுஷ்ய புத்திரன், அசோகமித்ரன், நகுலன், ரமேஷ் பிரேம், முத்துலிங்கம்" இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டே இருந்தது, ஒவ்வொரு எழுத்தாளரையும் எப்படி பிடித்துப்போனது என்பதை இங்கே எழுத ஆரம்பித்தால், நூறு பக்கங்கள் தாண்டி விடும்.

பிடித்த எழுத்தாளர் என்ற பட்டியலில் எப்பொழுதும் எண்ணிக்கை அதிகரித்தக் கொண்டே போகிறது, ஆனால் மிகவும் பிடித்த எழுத்தாளர் என்று கேள்வி வரும் போது அதற்கான விடை மட்டும் என்னிடம் மாறிக்கொண்டேயிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னால் என் பட்டியலில் இணைந்து, தற்பொழுது எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளராக மாறியிருப்பவர் "எம்.டி.எம்" என்று அழைக்கபடும் "எம்.டி.முத்துக்குமாரசாமி". ஒரு நான்கு மாதங்களுக்கு முன்னால், என்னிடம் யாராவது இவர் பெயரை சொல்லி இருந்தால், "அ.முத்துலிங்கம்" பற்றிதான் சொல்கிறார்கள் என்று நினைத்திருப்பேன்.

இத்தனை நாட்களாக இவரைப் பற்றி தெரியாமல் இருந்தது என் தவறுதான். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் எழுத வந்துள்ளார் "எம்.டி.எம்". இவர் ஏற்கனவே கதைகள், நாவல், நாடகங்கள், பின் நவீனத்துவ கோட்பாடு கட்டுரைகள் என்று பலவற்றை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தவர்.

இவருடைய பழைய புத்தகங்கள் ஒன்றை கூட இப்பொழுது கண்டுபிடிக்க முடியவில்லை. இணையத்தில் தேடிய போது இவரைப் பற்றிய பல பதிவுகள் கிடைக்கின்றன. இவர் தற்பொழுது வலைப்பதிவில் மட்டுமே எழுதிவருகிறார். விரைவில் ஒரு புதிய நாவல் புத்தகமாக வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

பகடியுடன் சேர்ந்து எத்தனையோ விதமான மாற்று கருத்துக்களையும் இவர் எழுத்து தருகிறது. இவருடைய வலைப்பதிவு முகவரி கீழே உள்ளது கண்டிப்பாக படித்து பார்க்கவும்.

 http://mdmuthukumaraswamy.blogspot.com/


Monday, October 17, 2011

கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும் - (சவால் சிறுகதை-2011)


கோகுல் என்ற கதாபாத்திரத்தை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த கதையை எழுதும் எனக்கே தெரியாத போது, உங்களுக்கு எப்படி தெரியக்கூடும்??. ஆகவே, எனக்கும் சேர்த்து அவனை இங்கு அறிமுகம் செய்துக்கொள்கிறேன். அதோ தெருமுனையில் ஆறு அடியில் நடந்து வந்துக்கொண்டு இருக்கிறானே அவன்'தான் எஸ்.பி கோகுல். நீங்கள் நினைப்பதுபோல் எஸ்.பி என்பது அவன் இனிஷியல்தான். ஒரே தெருவில் ஒரே பெயரில் நான்கைந்து நபர்கள் வசித்தால், அவர்களுடைய இனிஷியல் வைத்து அழைப்பது உங்களுக்கும் தெரிந்ததே. அதன்படி எஸ்.பி கோகுல், அவர்கள் தெருவில் எஸ்.பி என்றே அழைக்கப்பட்டான். இசையின்1 மீது தீவிர காதல் கொண்ட எஸ்.பி கோகுலும் மற்றவர்கள் தன்னை எஸ்.பி என்று அழைப்பதையே விரும்பினான். எஸ்.பி இப்பொழுது நின்று பேசிக்கொண்டு இருக்கிறானே அவன் பெயர் கோபி. அவன் இனிஷியல் கோ.பி (தமிழில்)2. இனிஷியல் வைத்து அழைப்பது என்ற கலாச்சாரத்தின்படி, அவனை எப்படி அழைப்பது என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். ஏனென்றால், கோபியின் கதாபாத்திரம் இங்கு தேவையில்லாத ஒன்று. கோபியின் அண்ணன் விஷ்ணுவைப் பற்றி சொல்லவே, இங்கு கோபியை அறிமுகம் செய்தேன். ஆம், சரியாக கண்டுபிடித்து விட்டீர்கள் நமது கதையின் மற்றொரு ஹீரோவான விஷ்ணுவின் தம்பிதான் கோ.பி கோபி.

இந்த கதையை படிக்கும் உங்களுக்கு தெரிந்திருக்கும் இது "சவால்" சிறுகதைப் போட்டிக்காக எழுதப்படும் கதை என்பது. புகைப்படத்தைப் பார்த்து கதை எழுத வேண்டும் என்ற வீதியின் கீழ், அந்த புகைப்படத்தில் இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களை கதையில் அறிமுகம் செய்தாகிவிட்டது. இனி இவர்களை வைத்து கதையை உருவாக்க வேண்டும். ஆனால், அதில் "சார்" என்று ஒரு வார்த்தை வருகிறதே. அந்த சாரை எப்படி கதையில் கொண்டுவருவது என்பதுதான் எனக்கு இப்பொழுதைய குழப்பம். பார்ப்போம் கதை எழுதும் போது யாராவது ஒருவன் மாட்டாமலா போய்டுவான். அப்படியும் யாரும் மாட்டவில்லை என்றால், இருக்கவே இருக்கிறீர்கள் நீங்கள், அந்த சார் நீங்கள்'தான் என்று சொல்லிக்கூட கதையை முடித்துவிடலாம். என்ன உங்களுக்கு சார் கதாபாத்திரம் வேண்டாமா?? உலகத்திலேயே மிகவும் டீசன்டான மற்றும் அதிகம் உபயோகப்படுத்தபட்ட கதாபாத்திரம் "சார்" கதாபாத்திரம்தான். அந்த கதாபாத்திரம் உங்களுக்கு வேண்டாமா?? கதை முடிவதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள்.

இன்னும் அவர்கள் இருவரும் நின்று பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். தனது அண்ணன் தர சொல்லியதாக சொல்லி கோபி ஒரு துண்டு சீட்டை எஸ்.பி'யிடம் தருகிறான். அந்த சீட்டில் என்ன எழுதியிருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்ததே. இருந்தாலும் ஒரு முறை சொல்லிவிடுகிறேன்.

Mr.கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு. கவனம்.

-விஷ்ணு.

இதை பரிசலின் வலைப்பதிவில் முதலில் படிக்கும் போது எப்படி நாம் அனைவரும் முழித்தோமோ, அதே போலதான் எஸ்.பியும் முழித்தான். விஷ்ணுவைப் பற்றி கோபியிடம் விசாரித்த போது, "அவன் வேலை விசயமாக வேலூர் வரை சென்று இருப்பதாகவும், நாளை காலைதான் வருவான்" என்றான். மேலும், விஷ்ணு செல்போனை மறந்து வீட்டிலேயே வைத்து விட்டான் என்ற கூடுதல் தகவலையும் சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து கோபி மறைந்து போனான்.

எஸ்.பி பல முறை யோசித்தும் அந்த துண்டு சீட்டில் என்ன எழுதி உள்ளது என்பதை சரியான முறையில் கணிக்க முடியவில்லை. ஒருவேளை "H2 6F" என்பது 'H' ப்ளாக் அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஆறாவது மாடியை குறிக்கலாம். ஆனால் அந்த ஆறாவது மாடி மொட்டை மாடி ஆயிற்றே. இந்த "S W" என்பது எதைக் குறிக்கிறது, சரி மொட்டை மாடிக்கு போய் என்னதான் உள்ளது என்பதை பார்த்துவிட முடிவுசெய்த எஸ்.பிக்கு அங்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது3.

அடுத்த நாள் காலை, விஷ்ணுவின் வீட்டுக்கு எஸ்.பி சென்ற போது, விஷ்ணுவிடம் 'B' ப்ளாக்கில் வசிக்கும் ஒரு பெரியவர் மிகவும் கோபமாக எதையோ பேசிக்கொண்டு இருந்தார். விஷ்ணு மிகவும் கஷ்டப்பட்டு அவரை சமாதானம் செய்துக்கொண்டிருந்தான். கடைசியில் அவர் சமாதானம் அடையாமல், வீட்டை விட்டு மிகவும் வேகமாக வெளியேறினார்.

விஷ்ணுவிடம் எஸ்.பி என்னவென்று விசாரித்த போது, விஷ்ணு ஒரு துண்டு சீட்டை எடுத்து எஸ்.பியிடம் நீட்டினான். .

Sir,

எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்.

-விஷ்ணு

"எல்லாம் இந்த கோபியால'தான் மச்சி. நேற்று அந்த 'B' ப்ளாக் பெரியவரிடம் போய் இதை கொடுத்திருக்கிறான். அவருக்கு ஒன்னுமே புரியமா, நைட்டு முழுவதும் தூங்கவே இல்லையாம். கோபியிடம் விசாரித்தால், ஏதோ சைக்காலஜி ப்ராஜெக்ட்'காக இப்படி பண்ணுனேன் என்று கொஞ்சம் கூட வருத்தப்படாமல் சொன்றான். அப்படியே அறையலாம் போல வந்துச்சு. இவன் சைக்காலஜி படிச்சு முடிக்கிறதுக்குள்ளே நம்ம உயிரை வாங்கிடுவான் போல. உங்கிட்டயும் ஏதோ தந்தானாமே?? ரொம்ப சாரி மச்சி"

எஸ்.பி தன்னிடம் இருந்த துண்டி சீட்டை விஷ்ணுவிடம் தந்தான். அவன் படித்த பின், தலையில் அடித்துக்கொண்டே "பழசாவது பரவாயில்லை போல, இதுல ஒன்னுமே புரியலயே" என்றான். பின் இரண்டு சீட்டையும் அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு, இருவரும் ஆளுக்கு ஒரு சேரில் அமர்ந்தார்கள். அப்பொழுது விஷ்ணுவின் செல்போன் அடித்தது, அதில் "Vishnu Informer" Calling4 என்று வந்தது. 



இத்துடன் கதை முடிந்து விடுகிறது, உங்களுக்கு நேரமும் பொருமையும் இருந்தால், கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும். வெளியில் மழை வருவது போல் உள்ளது, மொட்டை மாடியில் துணிகளை காயப்போட்டு உள்ளேன். நான் துணிகளை துவைப்பதே வாரம் ஒருமுறைதான் அன்றுதானா இந்த மழையும் வர வேண்டும்???

குறிப்பு:

1) தட்டினால் சத்தம் வருமே, அந்த இசையை இங்கு குறிக்கவில்லை. இங்கு இசை என்பது 'H' ப்ளாக்கில் இரண்டாவது மாடியில் வசிக்கும் இசையினி என்ற பெண்ணை குறிக்கிறது. இசையினியின் அப்பா, முற்போக்கு எழுத்தாளர்கள் என்று தன்னைதானே சொல்லிக்கொண்டு இருக்கும் கூட்டத்தை சேர்ந்தவர் என்பதால், இசையினி என்ற பெயர் அவளுக்கு எதற்காக வைக்கப்பட்டது என்பதைப் பற்றி நாம் இங்கு ஆராயத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

2) உண்மையாகவே கோபியின் இனிஷியல் ஜி.பி. கதையின் சுவாரஸ்யத்துக்காக அதை தமிழில் மாற்றி கோ.பி என்று எழுதியிருக்கிறேன். இதைப்போல் கதையின் சுவாரஸ்யத்துக்காக பல இடங்களில் பலவற்றை சேர்த்து உள்ளேன். (எ.கா)5

3) எஸ்.பி மொட்டைமாடியில் ஏறி பார்த்தப்போது, அங்கு இசையினியும் அப்பார்ட்மெண்டிற்கு புதிதாக குடி வந்திருக்கும் குமாரும் மிகவும் நேருக்கமாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

4) அந்த Vishnu Informer யார் என்பது உங்களுக்கு தெரிந்தாக வேண்டுமா?? சத்தியமா எனக்கும் தெரியாது சார். நான்தான் காய்ப்போட்ட துணிகளை எடுக்க வந்துவிட்டேனே. வேண்டுமானால் "A" ப்ளாக்கில் வசிக்கும் இன்னொரு விஷ்ணுவின் பெயர்தான் "Vishnu Informer" என்று வைத்துக்கொள்ளலாமா??. போதும் சார், இந்த புகைப்படத்துக்கு இந்த கதை போதும் சார்.

5) கதை 1500 வார்த்தைகளை தாண்ட கூடாது என்ற வீதியின் காரணமாக எ.கா பகுதி நீக்கப்பட்டு விட்டது6.

6) ஒற்றைப்படை எண்களில் குறிப்புகளை முடிக்க கூடாது என்று நண்பன் சொன்னதால், இந்த 6வது குறிப்பு. இதே நண்பன்தான், "கதையை சவால் போட்டிக்கு அனுப்ப வேண்டாம், இன்னொரு போட்டியில் பத்தாயிரம் ரூபாய் பரிசு தருகிறார்கள், அங்கு அனுப்புவோம்" என்று எனக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறான்.

கதையை படித்த அனைவரும் (பிடிக்கிறதோ இல்லையோ) கீழே உள்ள லைக் பட்டனை கிளிக் செய்யவும்.

Thursday, September 29, 2011

எதற்கும் உங்கள் மனதை தயார் படுத்திக்கொள்ளுங்கள்

சினிமாக்களைப் பற்றி எழுதவே கூடாது என்று நினைத்தாலும், மீண்டும் மீண்டும் அங்கேயே வந்து நிற்கிறேன். தமிழகத்தில் சினிமாவை தவிற்று பேச வேறு எதாவது இருக்கிறதா என்ன??

இந்தமுறை இந்த பதிவு "எங்கேயும் எப்போதும்" திரைப்படம் பற்றி. வழக்கம் போல் இந்த படத்தையும் முதல் நாளே பார்த்தாகிவிட்டது.  பார்த்த இடம் எங்க ஊரில் இருக்கும் தேவி திரையரங்கம். கொஞ்ச பேருக்கு ஸ்டார் தியேட்டர் என்றால்தான் தெரியும். அவர்களாம் நாகைக்கு வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மேலானவர்களாக இருக்ககூடும். காரைக்கால், திருவாரூர், நாகை இந்த மூன்று ஊர்களில் இருப்பதிலேயே சிறந்த தியேட்டர் தேவிதான் என்று தினேஷ் சொல்கிறான், அது உண்மையா என்று தெரியவில்லை.

திரைப்படத்தை பார்த்து இரண்டு வாரங்கள் கழித்து இந்த பதிவை எழுத காரணம், "அன்று திரைப்படத்தைப் பார்த்த போது அந்தளவு முக்கியமான திரைப்படமாக எனக்கு தோன்றவில்லை". ஆனால், இப்பொழுது திரைப்படத்திற்கு வரும் பாராட்டுக்களை பார்க்கும் போது, அந்த படத்தைப் பற்றி சிலவற்றை மேலோட்டமாக சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். எனென்றால், வரலாறு மிகவும் முக்கியம் அல்லவா??



இந்த திரைப்படத்தைப் பாராட்டுபவர்கள் சொல்லும் காரணங்கள்.... காதல் காட்சிகள் மற்றும் அந்த பேருந்து விபத்து.

எனக்கு "எங்கேயும் எப்போதும்" ஒரு "நாளைய இயக்குநர்" வகை திரைப்படம் போல்தான் தோன்றுகிறது. முதலிலேயே அந்த பேருந்து விபத்து எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு அதற்கு தகுந்தால் போல், கதையை நகர்த்தி உள்ளனர்.

ஒரு கொடூரமான காட்சியை வைத்தால் திரைப்படம் வெற்றி பெற்று விடும் என்ற பிம்பத்தை இந்த திரைப்படம் உருவாக்க அதிக வாய்ப்புள்ளது. ஆங்கில சினிமாக்களில் "Saw, Hostel மற்றும் Final Destination" போன்ற திரைப்படங்கள் மூலம் எற்கனவே இந்த பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள்.  தமிழ்சினிமாவில், "பருத்திவீரன்" தந்த பாதிப்பு "ஈசன்" திரைப்படம் வரை தொடர்ந்து வந்ததை நாம் அனைவருமே பார்த்தோம்.

அடுத்து காதல் காட்சிகள் பற்றி, உண்மையாகவே நிஜவாழ்வில் காதல் இப்படிதான் இருக்குமா??, எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.

மொத்தத்தில் என்னைப் பொறுத்த வரை "எங்கேயும் எப்போதும்" ஒரு சுமாரான திரைப்படம் மட்டுமே, நீங்கள் சொல்வது போல் "தமிழ்சினிமாவை மாற்றியமைக்க ஒரு புது முயற்சி" என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடைசியாக,

எதற்கும் உங்கள் மனதை தயார் படுத்திக்கொள்ளுங்கள், கொடூரமான காட்சிக் கொண்ட திரைப்படங்கள் இனி வரிசையாக தமிழ் சினிமாவில் வரலாம்.

Sunday, September 25, 2011

எதற்காக என்னை பின் தொடர்கிறாய்??

இந்த பதிவு உயிரோசையில் வெளிவந்துள்ளது.
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4870  

யாரப்பா நீ?? எதற்காக என்னை பின் தொடர்கிறாய்??. என்னிடம் எதை எதிர்ப்பாக்கிறாய் நீ??. என்னிடம் உனக்கு தருவதற்கு என்று எதுவும் இல்லை.

சரி, ஆம். என்னிடம் தருவதற்கு என்று சில இருக்கிறது, ஆனால் நான் அதை உனக்கு தருவதாக இல்லை. வேண்டுமானால், என் புத்தக அலமாரியில் பல நாட்களாக தூங்கிக்கொண்டு இருக்கும் பாரதியின் கவிதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு போ. உனக்கு பிடித்தவன்தான் பாரதி என்றாலும், நீ அந்த புத்தகத்தை விரும்பமாட்டாய் என்பது எனக்கு நன்றாக தெரியும். இப்பொழுது மலிவு விலையில் பாரதி எல்லா கடைகளிலும் கிடைக்கிறான். ஒரு மலிவு விலை புத்தகத்துக்காக'வா என்னை இத்தனை நாட்களாய் நீ பின்தொடர்ந்து இருப்பாய்?? கண்டிப்பாக இருக்காது.

உன்னுடைய எதிர்பார்ப்பில் ஒரு நியாயம் இருக்கிறது, ஆனால் உனக்கு நான் எதுவும் தருவதாக இல்லை. இதுவே என்னுடைய சுபாவம். இதற்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க போவதும் இல்லை. இதுவரை என்னை பின் தொடர்ந்தவர்களுக்கு நான் என்ன, என்ன? கொடுமைலாம் செய்து இருக்கிறேன் என்பது உனக்கு தெரிய வந்தால், நீ என் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு சென்றுவிடுவாய். என்னுடன் பல வருடங்களாக பழகிய தோழி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டதற்கு நான்தான் காரணம் என்பது உனக்கு தெரியுமா?? என்னுடைய கல்லூரி நண்பன் ஒருவன், ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் வெறிபிடித்த மிருகமாக மாறுவதற்கு நான்தான் காரணம் என்பதாவது உனக்கு தெரியுமா?? உன்னை போலவே என்னிடம் ஒன்றும் பேசாமல் பல நாட்களாக பின்தொடர்ந்த ஒருவன், நடுரோட்டில் மயங்கி தண்ணீர், தண்ணீர் என்று அலறிய போது, அவனை பார்க்காதவன் போல் விலகி சென்றவன் நான் என்பதாவது தெரியுமா??

இவை எல்லாம் நான் உன்னை எமாற்ற செய்யும் நாடகம் போல் தோன்றலாம். உன்னை எமாற்றுவதால் எனக்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை. வேண்டுமானால் உனக்காக வேறு ஒன்றை தருகிறேன். அது காப்காவின் சிறுகதை அடங்கிய புத்தகம். நீயே வைத்துக்கொள். நீ நினைப்பது போல் இது ஒன்றும் மலிவு விலை புத்தகம் அல்ல. ஒரு மிக சிறந்த சிறுகதை எழுத்தாளரின் மிக சிறந்த சிறுகதைகள் அடங்கிய புத்தகம். நான் இன்னும் படிக்கவில்லை, அனைவரும் சொல்வதால் நானும் சொல்கிறேன். மிக சிறந்த எழுத்தாளர்.

உனக்கு அதுவும் வேண்டாமா?? எனக்கு தேவைபடாதவற்றை உனக்கு தருவதாக நீ நினைத்துக்கொள்ளலாம். ஆனால், அதுதான் உண்மை. எனக்கு தேவையானவற்றை எதற்காக உனக்கு தர வேண்டும். நீ என்னை பின் தொடர்வது உன் குற்றமே தவிர, என்னுடைய குற்றம் இல்லை. நானா உன்னை பின் தொடர சொன்னேன். இப்பொழுது கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை, என்னை பின் தொடர்வதை நிறுத்துக்கொள். நான் உனக்கு எதாவது வகையில் உதவி செய்வேன் என்ற நம்பிக்கையில் மீண்டும் என்னை பின் தொடராதே.

இதுதான் நான். இதுவே நான். இதுவும் நான்.

ஒரு சின்ன உரையாடல்

"நியாயமா பார்த்தா இந்த சத்யபிரகாஷ் தான் ஏர்டெல் சூப்பர் சிங்கரை வாங்கியிருக்கனும். சாய்சரணுக்கு போய் கொடுத்தாங்க'டா.  நீ என்ன மச்சி நினைக்கிற??"

"ரெண்டு பேருக்குமே தந்து இருக்க கூடாது மச்சி, பேசாம எதாச்சும் பொண்ணுக்கு தந்து இருக்கலாம்"

"ஓ, நீ பூஜா ரசிகனா??"

"யாருப்பா அந்த பூஜா, எனக்கு தெரிஞ்ச ஒரே பூஜா,  என் பழைய ஆபிஸில் வேலைப்பார்த்த பொண்ணுதான். அவ முழு பெயர் பூஜா அகர்வால். அவளுடைய தீவிர ரசிகன் நான். என்ன'மா இருப்பா தெரியுமா??"

"டேய், அப்பறம் எதுக்கு பொண்ணுக்கு தந்திருக்கனும் சொல்ற?? ஃபைனலில் இருக்கும் ஒரே பொண்ணு பூஜா மட்டும் தான்".

"என்ன?? ஃபைனலில் ஒரே ஒரு பொண்ணுதானா?? எவன் மச்சி இதை Organize பண்ணுறது, கொஞ்சம் கூட டேஸ்டே இல்லாதவனா இருப்பான் போல. சரி, மாளவிகானு ஒரு பொண்ணு இருந்துச்சே அது என்னாச்சு?? என் பழைய ஆபிஸில் அந்த பெயரிலும் ஒரு பொண்ணு இருந்துச்சு, முழு பெயர் மறந்துருச்சு. அவளும் என்னமா இருப்பா தெரியுமா??"

"மியூசிக்கை பற்றி ஒன்னுமே தெரியாத உன்னிடம் பேச வந்தேன் பாரு.. என்னை அடிக்கனும் மச்சி"

Wednesday, September 14, 2011

சார், இது கொஞ்சம் சீரியஸான பதிவு


ஏர்டெல் சூப்பர் சிங்கரில் யார் வெற்றி பெறுவார் என்று தீவிரமாக சிந்தித்துக்கொண்டு இருந்த நாம், முக்கியமாக பேச வேண்டிய மூன்று விசயங்களை மறந்து விட்டோம்.

அவை::

1) பரமக்குடியில் நடந்த தூப்பாக்கி சூடு
2) கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இரண்டு கிராமங்கள் நடத்தும் உண்ணாவிரதம்
3) 2G வழக்கில் TRAI சொல்லியிருக்கும், "அனைத்துமே அரசியல் சட்டப்படிதான் நடந்து உள்ளது, யாரையும் குற்றம் சொல்ல முடியாது" என்ற வாதம்.


இதில் முதலாவதாக பரமக்குடி சம்பவம். இதை கலவரம் என்று சொல்வதா அல்லது தூப்பாக்கி சூடு என்று சொல்வதா என்று தெரியவில்லை. இரண்டு சமூகத்துக்குள் பிரச்சனை என்பது பரமக்குடி பக்கம் எப்பொழுதும் நடப்பதுதான். என்னுடைய சித்தப்பா ஒருவர், அங்கே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலைப் பார்க்கிறார் என்ற முறையில் அந்த இரண்டு சமூகத்துக்குள் நடக்கும் பிரச்சனைகள் பலவற்றை நான் கேட்டிருக்கிறேன். இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் ஒரு மாணவனின் மரணம் இரண்டும் அடுத்தது நடந்ததுதான் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு மூலக் காரணம் என்கிறார்கள். ஆனால், இது முன்னரே திட்டமிட்டு நடைப்பெற்ற ஒரு வன்முறை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

முத்துராமலிங்க தேவரின் நினைவு நாளை குரு பூஜை என்று சொல்லி கொண்டாதுவது போல, இமானுவேல் சேகரின் நினைவுநாளையும் கொண்டாட அந்த சமூக மக்கள் முடிவு செய்ததையும், இதை பிடிக்காத சிலர் திட்டமிட்டு நடத்தியதுதான் இந்த கலவரம் என்பதும் ஊர் அறிந்த ரகசியங்களில் ஒன்று. இந்த கலவரம் தமிழ் நாடு முழுவதும் பரவாமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்வதுதான் நம்மால் இப்பொழுது செய்ய முடிந்த ஒன்று.

அடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையம். அன்னா ஹாசாரேயின் உண்ணாவிரதத்தை பாராட்டி பேசிக்கொண்டு இருக்கும் பலருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இரண்டு கிராமங்கள் உண்ணாவிரதம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற விசயமே தெரியாது என்று நினைக்கிறேன். அப்படி தெரிந்து இருந்தாலும் அதைப்பற்றி இங்கே யாரும் கருத்து சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அன்னா ஹாசாரேயின் உண்ணாவிரதத்தைப் பற்றி பேசுவது என்பது Intellectual சமமந்த விசயம். ஆனால், கூடங்குளம் பற்றி பேசினால், உங்களை நாட்டுபுரத்தான் என்று கருதிவிடுவார்கள்.

ஜப்பானில் அனுமின் நிலையங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை, 1986 ஆம் வருடம் Chernobyl நட்ந்த அனுமின் விபத்தால் இன்னும் அந்த இடத்திற்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சரி அப்படியே நம்மூரில் அனுமின் நிலையம் வந்து, அதனால் எதாவது பாதிப்பு நடந்தால், நம் இந்திய அரசாங்கம், எப்படி அதை சரி செய்யும். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் போபாலில் நடந்த விபத்துக்கே இன்னும் சரியான முறையில் தீர்வு சொல்லவில்லை. விஷ வாயுவால் பாதிக்கப்பட்டோர் இன்னும் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கடைசியாக 2G வழக்கு. இந்த பதிவை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் இந்நேரம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருப்போர் ஒருவர் பின் ஒருவராக ஜாமினில் வெளிவர வாய்ப்புகள் அதிகம். கடநத ஒரு வருடமாக, C.B.I, CAG போன்றார் செய்த கடின உழைப்பு வீணாக போக போகிறது. கடைசி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய இந்நேரத்தில் TRAI புதிதாக ஒரு குண்டைப் போட்டு உள்ளது. " ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அனைத்துமே அரசியல் சட்டப்படிதான் நடந்து உள்ளது" என்று TRAI  சொல்லியுள்ளது.

எல்லாமே சட்டப்படிதான் நடந்து உள்ளது என்றால், பின் இந்த வழக்கே தேவையில்லாத ஒன்று என்றாகிவிடும். இதுவரை சிறையில் இருந்தவர்கள் அரசின் மீது மானநஷ்ட வழக்கு கூட பதிவு செய்யலாம்.

சரி இதையெல்லாம் விடுங்க, ஏர்டேல் சூப்பர் சிங்கரில் யார் வெற்றி பெற்றார்கள்??. ஏதோ, புதிய "சரவணா மீனாட்சி" என்ற தொடரில் வரும் மீனாட்சி சூப்பர் என்று என் நண்பன் சொல்கிறான், உண்மையாகவா??

இசையருவியில் எனக்கு பிடித்த "நித்யா" காம்பியரிங் செய்ய வந்துள்ளார், பார்த்துவிட்டு மீண்டும் வந்து இந்த பதிவை தொடர்கிறேன்.

Sunday, September 11, 2011

நாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை

இந்த பதிவு உயிரோசையில் வெளிவந்துள்ளது.
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4808

 அசோக் பாதி எழுதி அறையில் வைத்திருந்த கதையை, அவனுக்கு தெரியாமல் திருடி, அந்த கதையை முழுதாக எழுதி இங்கே பதிவு செய்துள்ளேன். இதுவரை இந்த வலைப்பதிவில் எழுதியவை அனைத்துமே மற்றவர்களிடமிருந்து திருடியதுதான் என்பதால், அசோக்கின் கதையை திருடி இங்கே எழுதுவது என்னை எந்த வீதத்திலும் பாதிக்கவில்லை என்பதை மிகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.


நாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை

தெற்கு பகுதியில் வசிக்கும் மக்களின் வரலாற்றைப் பற்றி ரகு ஆராய்ச்சி செய்ய தொடங்கிய சில நாட்களிலேயே, தெற்கு பகுதியில் எப்பொழுதோ வசித்த பழுப்பு நிற மனிதர்களைப் பற்றியும் அவனுக்கே தெரியாமல் ஆராய்ச்சி செய்ய தொடங்கிவிட்டான். பழுப்பு நிற மனிதர்கள் ஒரு காலத்தில் அங்கு ஆட்சி செய்தார்கள் என்ற செய்தி அவனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. ஏனென்றால், ஒன்பது வருடங்களுக்கு முன்னால் ஜெர்மனியில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய ஜார்ஜ் பிட்டரியன் ருஸ்ட் என்ற ஆராய்ச்சியாளர், பழுப்பு நிறம் கொண்ட மனிதர்கள் ஜெர்மனியில் உள்ள வடக்கு பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக சொல்லியிருந்தார். மேலும் அவர், ஒரு காலத்தில் பழுப்பு நிற மனிதர்கள் மொத்தமாக ஜெர்மனியை விட்டு வெளியேறியதாகவும், பின்பு அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதைப் பற்றிய செய்தி குறிப்புகள் இதுவரை எந்த புத்தகத்திலும் கிடைக்கவில்லை என்றும், இதற்காக அவர் பல ஆராய்ச்சிகள் செய்தும் இதுவரை எந்த பலனும் இல்லை என்றும் பேசியிருந்தார்.

பொதுவாகவே நியாபக மறதி அதிகம் உள்ள ரகுவுக்கு, அன்று ஜார்ஜ் பிட்டரியன் பேசியது இப்பொழுதும் அவன் நினைவில் நிற்பதற்கு காரணம், அவன் கலந்துக்கொண்ட முதல் கருத்தரங்கம் என்பதால் மட்டும் அல்ல. ஜார்ஜ் பிட்டரியன் அந்த கருத்தரங்கில் பேசிக்கொண்டு இருந்த போதுதான், அவன் முதல் முதலாக அனாரியாவை நேரில் சந்தித்தான். இது இந்த கதைக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத விசயம் என்பதால், அந்த சந்திப்பின் போது ரகுவுக்கும், அனாரியாவுக்கும் நடந்த நட்பு கலந்த காதல் சம்பாஷனைகளை இந்த கதையிலிருந்து நீக்கிவிட்டேன்.

ஜெர்மனியில் வாழ்ந்த பழுப்பு நிற மக்கள் எப்படி இங்கே உள்ள தெற்கு பகுதிக்கு வந்தார்கள் என்று ரகு ஆராய்ச்சி செய்ய தொடங்கினான். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஜெர்மனியிலிருந்து இங்கே நடைப்பயணம் மூலமாக மட்டுமே வருவது என்பது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று. அப்படியே நடைப்பயணமாக வந்திருந்தாலும், வரும் வழியில் கண்டிப்பாக பல ராஜ்ஜியங்களை தாண்டியே வந்திருக்க வேண்டும். ஆனால், எந்த நாட்டிலும் இந்த பழுப்பு நிற மனிதர்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. 

அனாரியாவின் உதவியுடன் ஜெர்மனியில் உள்ள நூலகத்தில் ஜார்ஜ் பிட்டரியன் எழுதிய நூல்களை தேடிப்பார்த்ததில், ரகுவுக்கு சில குறிப்புகள் கிடைத்தது. அதன்படி பழுப்பு நிற மனிதர்கள் ஜெர்மனியிலிருந்து கப்பலில் போனதாக ரகுவுக்கு தெரியவந்தது. சுமார் நாற்பது ஆயிரம் மக்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதாகவும், அந்த மக்கள் எதற்காக ஜெர்மனி நாட்டை விட்டு வெளியேறினார்கள் என்று தெரியவில்லை என்றும் ஜார்ஜ் பிட்டரியன் எழுதியிருந்தார். கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள பழுப்பு நிற மக்கள், ஒருவேளை எதாவது அபச குணங்களை பார்த்து பயந்திருக்கலாம் என்றும், இந்த வெளியேற்றத்திற்கு சில ஆண்டுகள் முன்னர் ஜரோப்பாவில் ஏற்பட்டதாக சொல்லப்படும் மிக பெரிய நிலநடுக்கம் கூட காரணமாக இருக்கலாம் என்றும் ஜார்ஜ் பிட்டரியன் எழுதியிருந்தார்.

ஜார்ஜ் பிட்டரியனை நேரில் சந்தித்தால் பழுப்பு நிற மனிதர்களைப் பற்றி மேலும் விவரங்கள் கிடைக்கும் என்று அனாரியாவும், ரகுவும் முடிவு செய்துபோது, அவர்களுக்கு கிடைத்த செய்தி அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த கருத்தரங்கம் முடிந்த இரண்டாவது மாதமே லண்டனில் ஜார்ஜ் பிட்டரியன் ஏதோ ஒரு விஷ பூச்சி கடித்து மரணம் அடைந்துவிட்டதாகவும், அவர் மரணம் அடைந்தபொழுது அவர் உடல் முழுவதும் பழுப்பு நிறத்தில் இருந்ததாகவும் ஜார்ஜ் பிட்டரியனின் மனைவி கூறினார்.

அன்று இரவு ரகு தனது பழுப்பு நிற மனிதர்களின் ஆராய்ச்சி பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான். வலைப்பதிவில் எழுதப்படும் கதைகள் ஒரு பக்கத்தை தாண்டியிருக்க கூடாது என்ற காரணத்தால், இந்த ஆராய்ச்சியை இத்துடன் முடித்துக்கொள்ள முடிவு செய்தான். இதன்படி, தனது ஆராய்ச்சியின் முடிவை எழுதி எனக்கு மெயில் செய்திருந்தான். அந்த மெயிலில் இப்படிதான் எழுதியிருந்தது.

"நாம் வசிக்கும் பூமியின் வரலாறு என்னும் கட்டுக்கதை"

Sunday, September 4, 2011

படித்ததில் பிடித்தது

"Don't you see that the whole aim of Newspeak is to narrow the range of thought? In the end we shall make thoughtcrime literally impossible, because there will be no words in which to express it. Every concept that can ever be needed, will be expressed by exactly one word, with its meaning rigidly defined and all its subsidiary meanings rubbed out and forgotten. Already, in the Eleventh Edition, we're not far from that point. But the process will still be continuing long after you and I are dead. Every year fewer and fewer words, and the range of consciousness always a little smaller." - George Orwell

கடந்த சில நாட்களில் மிகவும் பிரபலமடைந்த வாக்கியங்களில் மேலே உள்ளதும் ஒன்று. இது 1984 என்ற நாவலில் George Orwell எழுதியது. இந்த நாவலை அவர் எழுதிய வருடம் 1949. ஏற்கனவே George Orwell எழுதிய "Animal Farm" என்ற நாவலைப் பற்றி இங்கு ஒரு முறை எழுதியிருக்கிறேன்.  (Animal Farm (விலங்குப் பண்ணை) - by George Orwell)

மீண்டும் ஒரு முறை மேலே உள்ள வாக்கியங்களைப் படித்து பாருங்கள். நாட்கள் செல்ல செல்ல வார்த்தைகளின் தேவை முற்றிலுமாக அழிந்துவிடும் என்கிறார். ஒருவேளை, இந்த புத்தகம் வெளிவந்த 1950'களில் இவர் எழுதியதைப் பார்த்து சிலர் சிரித்தாலும் சிரித்திருக்கலாம். ஆனால், இப்பொழுது அவர் சொன்னவை எல்லாம் உண்மையாகவே நடந்துக்கொண்டிருக்கிறது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு, புத்தகம் என்பது கண்டிப்பாக 1000 பக்கம் குறையாமல் இருக்க வேண்டும். நமது இதிகாசங்கள் இதற்கு சிறந்த உதாரணம். மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றை சொல்லலாம். அதன் பிறகு சிறுகதைகள் வரத்தொடங்கின. கதைகளின் பக்கங்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. தமிழில் புதுமைப்பித்தன் இது போல் சுறுக்கமாக கதைகள் எழுதும் முறையை அறிமுகம் செய்தார்.

பின்னர், இணையம் வந்த பிறகு, வலைப்பதிவில் எழுதுபவர்கள் ஒரு பக்கத்துக்கும் குறைவாகவே பதிவுகளை எழுதினார்கள். இப்பொழுது டிவிட்டரில், 140 எழுத்துகளில் தாங்கள் சொல்லுவதை தெளிவாக சொல்லிவிட்டு கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் அடுத்த ட்விட்டைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். FaceBook'ல் இதை விட சுலபம், நீங்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்துக்கொண்டிருக்க தேவையில்லை, வெறும் LIKE பட்டனை அழுத்தினாலே போதும்.

இவற்றைதான் George Orwell தனது 1984 நாவலிலும் சொல்கிறார். வருடங்கள் செல்ல செல்ல வார்த்தைகள் குறைந்துக்கொண்டே போகும் என்று. அதே 1984 நாவலில் வரும் இன்னொரு வாக்கியம்.

In the end the whole notion of goodness and badness will be covered by only six words -- in reality, only one word.

அந்த ஒரு வார்த்தை எது என்பதை, இப்பொழுது நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

கடைசியாக இன்னும் சில வாக்கியங்கள் (Google Plus'யை நினைத்துக்கொள்ளவும்).....

Take "good", for instance. If you have a word like "good", what need is there for a word like "bad"? "Ungood" will do just as well -- better, because it's an exact opposite, which the other is not. Or again, if you want a stronger version of "good", what sense is there in having a whole string of vague useless words like "excellent" and "splendid" and all the rest of them? "Plusgood" covers the meaning, or "doubleplusgood" if you want something stronger still.

Saturday, September 3, 2011

கடவுளின் கோரிக்கை

இந்த முறை கடவுள் ஒரு கோரிக்கையுடன் என் முன்னால் வந்து நின்றான். கோரிக்கையுடன் இதுவரை எந்த கடவுளையும் நான் பார்த்ததில்லை என்பதால், நான் கொஞ்சம் விக்கிதான் போனேன். பிறகு சுதாரித்து கொண்டு, அவன் கோரிக்கையை நான் திட்டவட்டமாக மறுத்தேன்.

கடவுளின் கோரிக்கை மிகவும் சுலபமான ஒன்றுதான். அது "நான் அவனுக்காக ஒரு கதை எழுதி தர வேண்டும்".  இதுவரை எனக்காக எதுவும் செய்யாத கடவுளிடம் எனக்கு ஒருவித பகைமை உணர்வு எற்பட்டது உண்மையே.  அதுவே அவன் கோரிக்கையை நான் நிராகரித்தற்கு காரணம் என்று நினைக்கிறேன்.

அவன் பிடிவாதமாக இருந்தான். அவன் கோரிக்கையை ஏற்கும் வரை, எனது அறையை விட்டு வெளியேற போவதில்லை என்றான். இன்னும் சிறிது நேரத்தில் எனது தோழி வரும் நேரம் அது. அவள் வரும்பொழுது இவன் இங்கு இருந்தால் அது தேவையில்லாத பல பிரச்சனைகளை உருவாக்கும், நான் பல பொய்களை அவளிடம் சொல்ல நேரிடும். ஆகவே, அவள் வருகையின் போது, இவனின் இருப்பை நான் விரும்பவில்லை. எனது பெட்டியில் பல நாட்களாக உறங்கும் கதை ஒன்றை அவனுக்கு தர சம்மதித்தேன். என்னுடைய காதல் தோல்வியின் முதல் நாளில் எழுதிய நான்கு பக்க கதை அது. நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் முழுவதும் அவளின் பெயர் மட்டுமே இருக்கும்.

ஆனால், பழைய கதைகளை அவன் விரும்பவில்லை. ஒரு புதிய கதையை உடனே தனக்கு எழுதி தரும்படி வற்புறுத்தினான். கதைகளை உடனே எழுதிவிட முடியாது என்றும் அதற்கு பல நாட்களாகலாம் என்றும் விளக்கினேன். பரவாயில்லை, அதுவரை எனது அறையிலேயே காத்திருப்பதாக கூறினான். அவன் கட்டளையிடும் தோனியில் சொல்லவில்லை. அவனுக்கு தெரியும், என்னை கட்டளைகள் மூலம் அடிபணிய வைக்க முடியாது என்று.

நான் எவ்வளவு சொல்லியும் அவன் எனது அறையை விட்டு வெளியேறுவதாக இல்லை. இப்பொழுது இவனை எனது அறையிலிருந்து வெளியேற்றுவது மிகவும் முக்கியமான ஒன்று. அவனிடம் எனது தோழியின் வருகையைப் பற்றி கூறினேன். இந்த சந்திப்பை ஏற்பாடு செய்ய நான் பல நாட்கள் போராட வேண்டியிருந்தது என்றேன். அவன் அமைதியாக என்னைப் பார்த்து சிரித்தான். என்னை திருத்தவே முடியாது என்றான். என்னுடைய கவலை புரிகிறது என்றான். ஆனால், ஒரு சிற்றிதழ் ஆசிரியருக்கு கதையுடன் வருவதாக வாக்கு அளித்ததாகவும், இந்த அறையை விட்டு வெளியேறுவது என்பது, அது கதையுடன் மட்டுமே சாத்தியம் என்றான். கடவுள்களின் விதி 1810'ன்** கீழ், கோரிக்கைகளுடன் போகும் எந்த கடவுளும் கோரிக்கை நிறைவேறும் வரை திரும்ப கூடாது என்பதை மீண்டும் ஒரு முறை எனக்கு நினைவுப்படுத்தினான். 

கடைசியில் அவன் விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்காக ஒரு கதை எழுத தொடங்கினேன். அது இப்படி தொடங்கியது.

"இந்த முறை கடவுள் ஒரு கோரிக்கையுடன் என் முன்னால் வந்து நின்றான். கோரிக்கையுடன் இதுவரை எந்த கடவுளையும் நான் பார்த்ததில்லை என்பதால், நான் கொஞ்சம் விக்கிதான் போனேன். பிறகு சுதாரித்து கொண்டு, அவன் கோரிக்கையை நான் திட்டவட்டமாக மறுத்தேன்............"

குறிப்பு:
********
**விதி எண் 183 என்பதிலிருந்து 1810 என்று மாற்றப்பட்டு உள்ளது.

Sunday, August 28, 2011

மங்காத்தா டா...

எனக்கு பிடித்த இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபுவும், நமக்கு பிடித்த நடிகரான அஜீத்தும் இனைந்து வழங்கும் மங்காத்தா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அஜீத்தின் மீது நம்பிக்கை கம்மிதான் என்றாலும், வெங்கட் பிரவுவை கொஞ்சம் அதிகமாகவே நம்புகிறேன். பார்ப்போம்.


நான் ஒத்துக்கொள்கிறேன்

நான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு உங்களைப் போல் பேச தெரியாது என்பதை. நீங்கள் பேசுவதை பார்க்கும் போது எனக்கு உங்கள் மீது பொறாமைதான் வருகிறது. கண நேரத்தில் உங்களால் சிரித்தும் பேச முடிகிறது, சோகமாகவும் பேச முடிகிறது. நீங்கள் பேசும் போது உங்கள் முக மாற்றத்தை தான் நான் முதலில் கவனிக்கிறேன். அந்த முகத்தில் தான் எத்தனை பொழிவு. உங்கள் பேச்சைக் கூட கேட்க தோன்றவில்லை, உங்கள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்கலாம் போல் இருக்கும். அழும் குழந்தையை உங்களால் சிரிக்க வைக்க முடிகிறது, ஒரு குழந்தையை சிரிக்க வைப்பது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பது எனக்கும் தெரியும். அதில் பலமுறை தோற்றுப்போனவன் நான். இதுவரை நீங்கள் யாரிடமும் சண்டையிட்டு நான் பார்த்ததில்லை.

ஒருவன் அவனின் மகிழ்ச்சியை உங்களிடம் பகிரும் போது, உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை போல் உங்களாலும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. ஒருவன் அவனின் கவலையைச் சொல்லி அழும்போது, நீங்களும் அவனுக்காக கவலைப்படுகிறீர்கள். நீங்கள் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் உங்களை தேடி வந்து பேசும் பலரை நான் பார்த்திருக்கிறேன். உண்மையாகவே சில நேரங்களில் எனக்கு உங்கள் மீது பொறாமையாக தான் இருக்கிறது.

நான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு உங்களைப் போல் முடிவுகள் எடுக்க தெரியாது என்பதை. எந்த ஒரு பிரச்சனைக்கும் சுலபமான முடிவுகளை எடுக்கும் நீங்களும், ஒரு சின்ன பிரச்சனைக்கு கூட முடிவு எடுக்க முடியாமல் திணறும் நானும் ஏணி வைத்தாலும் ஒன்றாக முடியாது என்பதை. நீங்கள் எத்தனையோ பிரச்சனைகளை எதிர்கொண்ட போது நான் உங்கள் அருகில் நின்று அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறேன். என்னால் செய்ய முடிந்தது அது மட்டுமே.

உங்களுக்கு கிடைக்கும் மரியாதைகள், எப்பொழுதும் எனக்கு கிடைக்க போவதில்லை. உங்கள் கழுத்தில் விழும் மாலைகளின் கனத்தை கூட என்னால் ஒருபொழுதும் தாங்க முடியாது.

நான் தெருவில் நடக்கும் போது என்னைப்பார்த்து யாரோ இருவர் வணக்கம் சொல்லுகிறார்கள் என்றால், அதற்கு காரணம் நான் உங்கள் அருகில் நின்று கொண்டிருப்பதால் மட்டுமே. நான் ஒத்துக்கொள்கிறேன், எனக்கு நீங்கள்தான் ரோல் மாடல் என்பதை. நான் செய்யும் சிறு அசைவு கூட உங்களின் பாதிப்புதான் என்பதை.

ஆனால், அன்று நான் கொஞ்சம் பதறிதான் போனேன், மாடியில் இருக்கும் கிழக்கு பக்க அறையில் நீங்கள் தனியாக உட்கார்ந்து அழுதுக்கொண்டிருப்பதைப் பார்த்தபோது. நான் ஒத்துக்கொள்கிறேன், என்னால் ஒருபொழுதும் உங்களுக்கு நல்ல மகனாக இருக்க முடிந்ததில்லை என்பதை. நான் இதுவரை எந்த வீதத்திலும் உங்களை சந்தோஷப் படுத்தியதில்லை என்பதை. அன்று அந்த அறையில் நீங்கள் அழுததற்கு நான் தான் காரணம் என்பதை. என்னை மன்னித்துவிடுங்கள்.

இதற்கு மேலும் என்னை நம்பாதீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள்.

Saturday, August 27, 2011

அன்புள்ள வாசகர் சார் அவர்களுக்கு

அன்புள்ள வாசகர் சார் அவர்களுக்கு,

நலம், நலம் அறிய ஆவல். இது வாசகர் கடிதம் எழுதும் மாதம் என்று நினைக்கிறேன். எந்த வலைப்பதிவை திறந்தாலும் வாசகர் கடிதமாக நிறம்பி வழிகிறது. என்னால் அப்படி ஒன்றும் எழுத முடியவில்லையே என்று ரொம்ப நாட்களாகவே வருத்தம். என்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற உதவிய உங்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சார்.

உங்கள் வாசகர் கடிதத்தில் ஒரு குறை, நீங்கள் எங்கேயுமே சார் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை. இது சார்களின் காலம் சார். உங்கள் குழந்தையைக் கூட நீங்கள் சார் போட்டுதான் கூப்பிட வேண்டும் சார், அது பெண் குழந்தையாக இல்லாத பட்சத்தில்.  நான் கூட முதலில் சினிமா துறையில் மட்டும்தான் இந்த சார் கலாச்சாரம் உள்ளது என்று நினைத்திருந்தேன், போன வாரம் ஒரு புத்தகக் கண்காட்சிக்கு போகும் வரை. நான் சென்ற போது, கண்காட்சியில் எழுத்தாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் எல்லாருமே எல்லாரையும் சார் போட்டுதான் கூப்பிட்டார்கள். கூட்டம் நடைப்பெற்று கொண்டு இருந்த போது, யாரோ ஒருவர் யாரையோ சார் என்று மிகவும் மெதுவாக கூப்பிட்டுவிட்டார், அவ்வளவுதான் அதுவரை அவரவர்கள் டீ போப்பையில் மூழ்கியிருந்த மொத்த கூட்டமும் அவர் பக்கம் திரும்பி தன்னைதான் கூப்பிட்டாரா என்று  ஒருமுறை சரிபார்த்து கொண்டது.

இதையெல்லாம் எதற்கு நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நீங்கள் சந்தேகம் கொள்ளலாம். எனக்கு கடிதம் எழுதிய ஒரே வாசகர் சார் என்ற முறையில் உங்களிடம் இவற்றையெல்லாம் பகிர்ந்துக்கொள்ள எனக்கு முழு உரிமை இருக்கிறது என்றே கருதுகிறேன்.

முக்கியமாக நான் உங்களிடம் சொல்ல வந்ததே வேறு சார். நீங்கள் எழுதிய அந்த இரண்டு வரி வாசகர் கடிதத்தில், என்னுடைய "காக்கைகள்" கதையை அல்பேனியன் மொழியில் மொழி பெயர்த்து  அட்டாச்மென்டில் அனுப்பியிருந்தீர்கள்.  இது வரை அல்பேனியா மொழி எப்படி இருக்கும் என்று கூட பார்த்திராத எனக்கு, என்னுடைய காக்கைகள் கதையை அல்பேனியா மொழியில் பார்த்தது கட்டுக்கடங்கா சந்தோஷத்தை தந்தது சார், அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆகவே இங்கு ஒரு பத்து பதினைந்து ஸ்மைலிகளை சேர்த்துக்கொள்ளவும்.

மிகவும் அற்புதமாக மொழிபெயர்த்து இருந்தீர்கள் சார். அல்பேனியா மொழியில் எனது காக்கைகள் கதையை பார்த்தபோது, ஏதோ உயிர் உள்ள காக்கைகள் பறப்பது போல் இருந்தது. அந்தளவு அந்த கதையில் உயிர் இருந்தது. ஒரு கதையை படிக்க அதன் மொழி தேவையில்லை என்பது இது மூலம் தெரிகிறது.

இதைதான் சீனாவில் தனக்கு வாசகர் அதிகம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் ஒரு பிரபல எழுத்தாளர் கூட சமீபத்தில் சொல்லியிருப்பார். போன மாதம் சீனாவில் ஒரு சொற்பொலிவுக்கு அவர் போக நேர்ந்தது. சீனாவின் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் பற்றிய நிகழ்ச்சி அது. அவர் மேடையில் ஏறி தமிழில் பேச, அருகில் இருந்தவர் அதை சீன மொழியில் மொழி பெயர்த்து கொண்டிருந்தாராம். இரண்டு வரிகள்தான் பேசியிருப்பாராம். "நீங்கள் பேசுவதை மொழி பெயர்க்க தேவையில்லை. உங்கள் பேச்சிலேயே நீங்கள் சொல்லும் கருத்து இங்கு அனைவருக்கும்  புரிகிறது" என்று சொல்லி அந்த மொழிபெயர்ப்பாளர் சென்று விட்டாராம். உடனே நம்ப எழுத்தாளர் சார், உணர்ச்சி வசப்பட்டு இரண்டு மணிநேரம் விடாமல் தொடர்ந்து தமிழில் பேசியிருக்கிறார். கூட்டத்திலிருந்து ஒரு சத்தம் கூட வரவில்லையாம். பாவம் கண்களை மூடிக்கொண்டே பேசியிருப்பார் போல.

சரி விடுங்க சார், நமக்கு ஏன் மற்றவர்கள் பிரச்சனை. நான் இப்பொழுதுதான் அல்பேனியன் மொழியைப் பற்றி இணையத்தில் தேடிப்படித்தேன். மொத்தம் 7.6 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுவதாக விக்கி சொல்கிறது. விக்கி சொன்னால் சரியாகதான் இருக்கும். அந்த 7.6 மில்லியன் மக்களுக்கு எனது கதை சென்றதைய போகிறது என்று நினைக்கும் போது இப்பொழுதே எனக்கு தலை சுற்றுகிறது சார். இரண்டு மெடாசின் மாத்திரைகள் போட வேண்டும். 7.6 மில்லியன் அல்பேனியன் மக்களுக்கு மெடாசின் கிடைக்குமா என்று தெரியவில்லை, பாரசிடமால் மாத்திரைகள் கூடவா கிடைக்காமல் போகும்??

இந்த கடிதத்தை முடிக்கும் முன்னர், மீண்டும் ஒரு நன்றி சார். இந்த கடிதத்துக்கு நீங்கள் ஒரு பதில் கடிதம் அனுப்பிவீர்கள் என்ற நம்பிக்கையில் இப்பொழுதே இரண்டு பக்கக் கடிதத்தை டைப் செய்ய தொடங்கிவிட்டேன்.

இப்படிக்கு உங்கள்,
அசோக்

Sunday, August 21, 2011

நான் எதற்காக உங்கள் அன்னா ஹாசாரேயை ஆதரிக்க வேண்டும்

பேசி பல நாட்களான தோழியிடமிருந்து நேற்று வந்த ஒரு குறுஞ்செய்தி "Pls Support Anna Hazare". ஒரு பழைய தோழியின் நட்பை புதுபிக்க உதவினார் என்ற முறையில் அன்னா ஹாசாரேவுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். 

அன்னா ஹாசாரேயின் உண்ணாவிரதத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடிக்கொண்டே போகிறது. அன்னாவை ஆதரிப்பது இப்பொழுது ஒரு Trend. இப்படி ஆதரவு தெரிவிக்கும் பலரிடமும் எதற்காக இந்த உண்ணாவிரதம் என்று கேட்டால், அவர்கள் சொல்லும் ஒரே பதில் "ஊழலுக்கு எதிராக". இதற்கு மேல் அவர்களுக்கு வேறு எதுவும் சொல்ல தேவையில்லை. லோக்பால் மசோதா வந்தால் நமது நாட்டில் ஊழல் குறைந்துவிடும் இதுதான் அவர்கள் நினைப்பது. சரி, ஒருவேளை இந்த மக்கள் எழுச்சியின் காரணமாக லோக்பால் மசோதா (மன்னிக்கவும்) ஜன் லோக்பால் மசோதா வந்துட்டது என்று வைத்துக்கொள்வோம். அதன் பின் இந்தியாவில் மொத்தமாக ஊழல் அழிந்து விடுமா??? அல்லது குறைந்து விடுமா??. அப்படி குறையவில்லை என்றால், மக்கள் விரக்தியில் அன்னா ஹாசாரேவுக்கு எதிராக கருத்து சொல்ல நேரிடும். இதை அன்னா ஹாசாரேயும் தெரிந்துதான் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன், அதற்காக தான் அவர் ஆதரவாளர்கள், ஜன் லோக்பால் பற்றி ஒரு P.P.T தயார் செய்து அனைவருக்கும் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதை எத்தனை பேர் படித்தார்கள் என்பது கேள்வி குறி..

ஜன் லோக்பால் வந்தால், ஊழல் முற்றிலுமாக அழிந்துவிடாது என்பதை மக்களுக்கு முதலில் உணர்த்த வேண்டும். இந்த ஜன் லோக்பால் அமைப்பின் படி, ஏழு பேர் கொண்ட குழு கூடி அனைத்து ஊழல் வழக்குகளையும் விசாரிக்கும். ஏழு பேர் கொண்ட குழுவால் எத்தனை வழக்குகளை விசாரிக்க முடியும். இப்பொழுது நடந்துக்கொண்டிருக்கும் 2G வழக்கில் இதுவரை எனக்கு தெரிந்து கிட்டத்தட்ட 20000 பக்கங்களுக்கு மேல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏழு பேர் கொண்ட குழுவால் எத்தனை நாட்களில் இந்த குற்றப்பத்திரிக்கையைப் படிக்க முடியும்???

முன்னால் நடந்த அன்னாவின் உண்ணாவிரதத்துக்கும் தற்பொழுது நடக்கும் உண்ணாவிரதத்துக்கும் எத்தனை வித்தியாசங்கள். அன்னா, அவருக்கே தெரியாமல் மீடியாவின் மாய வலையில் விழ்ந்துவிட்டார் என்றே நினைக்கிறேன். அவர் ஓடி வந்து அமர்ந்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்து வைத்த காட்சி எனக்கு விஜயின் திரைப்படங்களைதான் நினைவு படுத்தியது.

நான் அன்னா ஹாசாரேயின் போராட்டத்தை முற்றிலும் எதிர்க்கவில்லை. இப்பொழுது நடக்கும் உண்ணவிரதம் ஊழல் முற்றிலும் அழிப்பதற்காக இல்லை. ஊழல் செய்பவர்களுக்கு தண்டனை தருவதற்காக மட்டுமே என்பது என் கருத்து. சொல்லபோனால் அன்னாவிடம் கேட்டால் கூட இதை தான் சொல்வார்.

ஊழலை முற்றிலுமாக அழிக்க இது போன்ற போராட்டங்களால் மட்டும் முடியாது. ஒவ்வொரு தனிமனிதனும் நினைத்தால் மட்டுமே முடியும். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், படிப்பிற்க்காக டோனேஷன் என்ற பெயரில் லஞ்சம் தர தயாராக இருக்கிறோம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புரோக்கருக்கு லஞ்சம் தர தயாராக இருக்கிறோம். நேர்மையாக ஒருவனுக்கு கிடைக்கும் வாய்ப்பை நாம் தட்டிப்பறிக்க லஞ்சத்துடன் தயாராகயிருக்கிறோம். ஒரு சின்ன விசயத்துக்கு கூட லஞ்சத்துடன் தயாராக நின்றுக்கொண்டு இருக்கிறோம். நம்புங்கள் நாம்தான் லஞ்சத்துக்கு எதிராக பேசுகிறோம்.

இன்று டிராபிக் போலிஸுக்கு 100 ரூபாய் லஞ்சம் கொடுத்தேன். இப்பொழுது சொல்லுங்கள் நான் எதற்காக உங்கள் அன்னா ஹாசாரேயை ஆதரிக்க வேண்டும்.