Wednesday, September 14, 2011

சார், இது கொஞ்சம் சீரியஸான பதிவு


ஏர்டெல் சூப்பர் சிங்கரில் யார் வெற்றி பெறுவார் என்று தீவிரமாக சிந்தித்துக்கொண்டு இருந்த நாம், முக்கியமாக பேச வேண்டிய மூன்று விசயங்களை மறந்து விட்டோம்.

அவை::

1) பரமக்குடியில் நடந்த தூப்பாக்கி சூடு
2) கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இரண்டு கிராமங்கள் நடத்தும் உண்ணாவிரதம்
3) 2G வழக்கில் TRAI சொல்லியிருக்கும், "அனைத்துமே அரசியல் சட்டப்படிதான் நடந்து உள்ளது, யாரையும் குற்றம் சொல்ல முடியாது" என்ற வாதம்.


இதில் முதலாவதாக பரமக்குடி சம்பவம். இதை கலவரம் என்று சொல்வதா அல்லது தூப்பாக்கி சூடு என்று சொல்வதா என்று தெரியவில்லை. இரண்டு சமூகத்துக்குள் பிரச்சனை என்பது பரமக்குடி பக்கம் எப்பொழுதும் நடப்பதுதான். என்னுடைய சித்தப்பா ஒருவர், அங்கே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலைப் பார்க்கிறார் என்ற முறையில் அந்த இரண்டு சமூகத்துக்குள் நடக்கும் பிரச்சனைகள் பலவற்றை நான் கேட்டிருக்கிறேன். இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் ஒரு மாணவனின் மரணம் இரண்டும் அடுத்தது நடந்ததுதான் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு மூலக் காரணம் என்கிறார்கள். ஆனால், இது முன்னரே திட்டமிட்டு நடைப்பெற்ற ஒரு வன்முறை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

முத்துராமலிங்க தேவரின் நினைவு நாளை குரு பூஜை என்று சொல்லி கொண்டாதுவது போல, இமானுவேல் சேகரின் நினைவுநாளையும் கொண்டாட அந்த சமூக மக்கள் முடிவு செய்ததையும், இதை பிடிக்காத சிலர் திட்டமிட்டு நடத்தியதுதான் இந்த கலவரம் என்பதும் ஊர் அறிந்த ரகசியங்களில் ஒன்று. இந்த கலவரம் தமிழ் நாடு முழுவதும் பரவாமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்வதுதான் நம்மால் இப்பொழுது செய்ய முடிந்த ஒன்று.

அடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையம். அன்னா ஹாசாரேயின் உண்ணாவிரதத்தை பாராட்டி பேசிக்கொண்டு இருக்கும் பலருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து இரண்டு கிராமங்கள் உண்ணாவிரதம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்ற விசயமே தெரியாது என்று நினைக்கிறேன். அப்படி தெரிந்து இருந்தாலும் அதைப்பற்றி இங்கே யாரும் கருத்து சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அன்னா ஹாசாரேயின் உண்ணாவிரதத்தைப் பற்றி பேசுவது என்பது Intellectual சமமந்த விசயம். ஆனால், கூடங்குளம் பற்றி பேசினால், உங்களை நாட்டுபுரத்தான் என்று கருதிவிடுவார்கள்.

ஜப்பானில் அனுமின் நிலையங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை, 1986 ஆம் வருடம் Chernobyl நட்ந்த அனுமின் விபத்தால் இன்னும் அந்த இடத்திற்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சரி அப்படியே நம்மூரில் அனுமின் நிலையம் வந்து, அதனால் எதாவது பாதிப்பு நடந்தால், நம் இந்திய அரசாங்கம், எப்படி அதை சரி செய்யும். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் போபாலில் நடந்த விபத்துக்கே இன்னும் சரியான முறையில் தீர்வு சொல்லவில்லை. விஷ வாயுவால் பாதிக்கப்பட்டோர் இன்னும் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

கடைசியாக 2G வழக்கு. இந்த பதிவை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கும் இந்நேரம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் இருப்போர் ஒருவர் பின் ஒருவராக ஜாமினில் வெளிவர வாய்ப்புகள் அதிகம். கடநத ஒரு வருடமாக, C.B.I, CAG போன்றார் செய்த கடின உழைப்பு வீணாக போக போகிறது. கடைசி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய இந்நேரத்தில் TRAI புதிதாக ஒரு குண்டைப் போட்டு உள்ளது. " ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அனைத்துமே அரசியல் சட்டப்படிதான் நடந்து உள்ளது" என்று TRAI  சொல்லியுள்ளது.

எல்லாமே சட்டப்படிதான் நடந்து உள்ளது என்றால், பின் இந்த வழக்கே தேவையில்லாத ஒன்று என்றாகிவிடும். இதுவரை சிறையில் இருந்தவர்கள் அரசின் மீது மானநஷ்ட வழக்கு கூட பதிவு செய்யலாம்.

சரி இதையெல்லாம் விடுங்க, ஏர்டேல் சூப்பர் சிங்கரில் யார் வெற்றி பெற்றார்கள்??. ஏதோ, புதிய "சரவணா மீனாட்சி" என்ற தொடரில் வரும் மீனாட்சி சூப்பர் என்று என் நண்பன் சொல்கிறான், உண்மையாகவா??

இசையருவியில் எனக்கு பிடித்த "நித்யா" காம்பியரிங் செய்ய வந்துள்ளார், பார்த்துவிட்டு மீண்டும் வந்து இந்த பதிவை தொடர்கிறேன்.

No comments: