Thursday, December 24, 2009

அவள் Virgin பா !!

அலுவலகத்தில் இருந்து அறைக்கு பேருந்தில் சென்றுகொண்டு இருந்தேன்.

570'ல் உட்கார இடம் கிடைப்பதே கஷ்டம், அதிலும் பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தால், எனது அதிர்ஷ்டத்தை நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

பார்ப்பதற்க்கு அந்த பெண் அழகாக இருந்தாள். ( " டேய் நீ இதுவரை எதாவது ஒரு பெண்ணையாவது அழகில்லை என்று சொல்லி இருக்காயா ?? " என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. " என்ன செய்ய, பார்க்கின்ற என்ன பெண்களும் அழகாக தெரிகிறார்கள் " )

எல்லா பெண்களை போல இவளும் உட்கார்ந்தது முதல் போனில் பேசிக்கொண்டே இருந்தாள். A/C பேருந்து என்பதால், அவள் என்னதான் மெதுவாக பேசினாலும், சில வார்த்தைகள் என் காதில் விழுந்துக்கொண்டுதான் இருந்தது. நடுவில் சத்தமாக சிரிப்பது, அப்புறம் " ம் " என்று சொல்வது, அப்புறம் " இல்ல பா " என்று சொல்வது என்று எதோ பேசிக்கொண்டே இருந்தாள். நான் எதையும் கண்டு கொள்ளாதது போல , வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தேன்.

அவள் பேசிய ஒரு வார்த்தை, சட்டென்று என்னை அவள் பக்கம் திரும்ப வைத்தது. அது " யேய், அவள் Virgin பா " என்பதுதான்.

நான் என்னை அறியாமல் அவள் முகத்தை திரும்பி பார்த்து விட்டேன். " சத்தமாக பேசிவிட்டோமே!! " என்று அவள் கவலைப்பட்டு இருப்பாள் என்று நினைக்கிறேன்.
" நான் அப்புறம் பேசுறேன் " என்று சொல்லி போனை வைத்துவிட்டாள்.

" பெண்கள் எல்லாவற்றையும் எவ்வளவு Casual'ஆக பேச தொடங்கிவிட்டனர் " என்று நினைத்துக்கொண்டே, நான் எதுவும் நடக்காதது போல, மீண்டும் வேடிக்கை பார்க்க தொடங்கினேன். ஆனால்,அவள் முகத்தில் ஒரு சின்ன மாற்றம் தெரிந்தது.

மீண்டும் அவள் செல்போனை எடுக்கவே இல்லை.

அவள் வடபழனியில் இறங்கிவிட, நான் C.M.B.T'யில் இறங்கி, D70 பிடித்து அறைக்கு வந்து சேர்ந்தேன்.

நான் அறைக்குள் நுழைந்தவுடன், அங்கு பேப்பர் படித்துக்கொண்டு இருந்த குமார், என்னிடம் கேட்டது " மச்சி, Virgin'ல Incoming வந்தா, நம்ம கணக்குல நிமிடத்திற்க்கு 10 பைசா ஏறுமாமே ??. உண்மையா டா??? ".

Wednesday, December 23, 2009

சிலுவையை சுமப்பவர்கள்

உங்களுக்கான சிலுவையை எப்பொழுதும்
இயேசுதான் சுமக்கவேண்டும் என்று
எதிர்பார்காதீர்கள்

உங்கள் தோழர்களோ
அம்மாவோ, அப்பாவோ
அண்ணனோ, தங்கையோ
பழைய காதலனோ, காதலியோ
மனைவியோ, கணவரோ
தெரிந்தவரோ, தெரியாதவரோ
இப்படி
இவர்களில் யாரோ ஒருவர்
உங்களுக்கான சிலுவையை
சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

முன்னவர் அனைவரிடமும் சொல்லிவிட்டு சுமந்தார்,
இவர்கள் சொல்லாமல் சுமக்கிறார்கள்.
அந்தளவே வித்தியாசம்.

Monday, December 14, 2009

நிராகரிக்கப்பட்ட பரிசுப்பொருள்

ஏற்க மறுக்கபட்ட பரிசுப்பொருளை
வைத்துக்கொண்டு என்னதான் செய்வது.

தூக்கி எறியவோ
மற்றவர்களுக்கு கொடுக்கவோ முடியாது.
அது ஒரு பழிவாங்கும் செயல்.

நாம் உபயோகபடுத்தவும் கூடாது,
அது ஏற்க மறுத்தவரை நினைவு செய்து
ஒரு வெறுப்பை உண்டாக்கும்.

நிராகரிக்கப்பட்டவர்கள் போலவே,
நிராகரிக்கப்பட்ட பொருள்களும்
தனிமையையே விரும்புகின்றன.

இரண்டாவது காதலியால்
மறுக்கபட்ட ஒரு புத்தகம்,
நினைவுப்பொருளாய்
என் வீட்டு அலமாரியின் இடது ஓரத்தில்
இருந்துக்கொண்டு,
என்னை
தினமும் பயமுறுத்துகிறது.

“நீ பரிசுப்பொருள் என்கின்ற
ஒரே காரணத்தால், நிராகரிக்கப்பட்டாய்”
என்ற உண்மையை,
நிராகரிக்கப்பட்ட பொருள்கள்
எந்த காலத்திலும் நம்ப போவதுமில்லை.

Sunday, November 29, 2009

புரியாத கதைகள்

கண்டிப்பாக விரைவில் அவள் என்னிடம் காதலை சொல்லிவிடுவாள். சில நாட்களாகவே அவள் பேச்சில் எதோ ஒரு மாற்றம் தெரிந்தது. ஒவ்வொரு முறையும் எதோ ஒன்றை என்னிடம் சொல்ல நினைத்து, பின் அதை மறைத்துவிடுகிறாள். விரைவில் அவள் என்னிடம் காதலை சொல்லிவிடுவாள். அவள் காதலை சொல்லும் பொழுது எப்படி நான் பதில் அளிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்க்க தொடங்கினேன்.அவள் முகத்தை பார்த்துத்தான் பேச வேண்டும். " எனக்கு இந்த காதல் மீது எல்லாம் நம்பிக்கை இல்லை" என்றுதான் பேச தொடங்க வேண்டும்.

சசி எப்பொழுதும் என்னிடம் சொல்வான் " இந்த காதல், கவிதை எழுதுவதற்க்கு வேண்டுமானால் உதவியாக இருக்கும், மற்றபடி எதற்க்கும் இது உதவி செய்யாது. அவள் எங்கே சென்றாலும் பின்னாடியே சென்று, அவள் கேட்பதை எல்லாம் வாங்கிதந்து, அது ஒரு நாய் பிழைப்பு ".

கண்டிப்பாக அவள் காதலை ஒத்துக்கொள்ள கூடாது. அவள் முகத்தை அலட்சியமாக பார்க்க வேண்டும். நான் அவளிடம் பேசுவதை போல் மனக்கண்ணில் ஓட்டி பார்த்தேன். நான் காதலை மறுத்தவுடன் , அவள் அழுதுக்கொண்டு இருந்தாள். " இந்த அழுகைக்கு எல்லாம் எமாந்தவன் நான் இல்லை ".

காட்சி 1:
----------

அசோக் எதிர்பார்த்ததை போல், அவள் காதலை உடனே சொல்லவில்லை. ஒரு மாதம் சென்றுவிட்டது. ஆனால், அவள் பேச்சில் எதோ ஒரு மாற்றம் தெரிந்தது. அசோக், ஒவ்வொரு நாளும் அவன் பேச வேண்டியதை நடித்து பார்த்து கொண்டே இருந்தான். சில வாக்கியங்களை குறைத்தும், சில வாக்கியங்களை கூட்டியும் பல மாற்றங்கள் செய்துவிட்டான்.

அவன் எதிர்பார்த்ததை போல அந்த நாளும் வந்தது. சாந்தி காலணி Creamy inn'ல் உட்கார்ந்து இருக்கும் போது அவள் சொன்னாள் " அசோக், நான் உன்னை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன். நாம் இருவரும் கடைசி வரை சேர்ந்து வாழ்ந்தால் என்ன??".

இப்படி காதலை கொஞ்சம் கூட கவிநயம் இல்லாமல், தட்டையாக சொன்னது அசோக்கிற்க்கு கோபத்தை உண்டு பண்ணியது. தான் எழுதி வைத்து இருப்பதை அவளிடம் சொல்ல தயாரானான். முதலில் அவள் முகத்தை பார்த்து பேச வேண்டும்.

அசோக் அவள் முகத்தை நேராக பார்த்தான். அவன் என்ன பதில் சொல்ல போறான் என்ற ஏக்கம் அவள் கண்ணில் தெரிந்தது. " இதுவரை அசோக் அசோக் என்று சிரித்துக்கொண்டு இருந்தவளை அழ வைப்பதா, இவள் மனது தாங்குமா??. ஒரு நாய்குட்டி ரோட்டில் அடிபட்டதை பார்ததற்கே அழுதவள் ஆயிற்றே இவள் ". பக்கத்து டேபிளில் அமர்ந்து இருந்த குழந்தையின் மீது கவனத்தை குவித்தான்.

"அசோக், யோசித்தது போதும். எனக்கு எதோ மாதிரி இருக்கு. பதிலை சீக்கிரம் சொல்லு" என்று மவுனத்தை கலைத்தாள்

அசோக்கிற்க்கு எழுதிவைத்தது எல்லாம் மறந்துவிட்டது. அவனை அறியாமலயே " இதை எப்படி சொல்வது என்று தெரியாமல்தான், இத்தனை நாள் நானும் காத்துக்கொண்டு இருந்தேன். Me too Love you " என்றான். தூரத்தில் Akon'ன் "Lonely" பாடல் ஒலித்துக்கொண்டு இருந்தது.

காட்சி 2:
-----------

அசோக் இவ்வளவு சீக்கிரம இது நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, அசோக் ஒத்திகை பார்த்த அடுத்த நாளே இது நடந்தது. " அசோக், உன்னிடம் கொஞ்சம் தனியாக பேசவேண்டும். காபி குடிச்சுக்கிட்டே பேசலாமா ? " என்று அவள் அழைத்தபோது தான் எழுதி வைத்ததை மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்துக்கொண்டான்.

கேண்டினில், இரண்டு நிமிட அமைதிக்கு பிறகு அவள் பேச தொடங்கினாள். "உன்னிடம் முன்னாடியே சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் எப்படி சொல்றதுனு தெரியல, அதான் சொல்லல. அந்த தேவ் இருக்கான்'ல, அவன் எனக்கு propose பண்ணினான். நான் " எங்க வீட்ல இதுலாம் ஒத்துக்க மாட்டாங்கள் " அப்படி எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்க மாட்டேங்கிறான். நானே வந்து வீட்ல பேசுறேன் அப்படினு இப்படினு சொல்றான். எனக்கு கோபமா பேசவும் பயமா இருக்கு, செத்து போயிடுவேனு பயமுறுத்துறான். எனக்கு என்ன பண்றதுனே தெரியல " என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்.

அசோக்கிற்க்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனுடைய கற்பனை கோட்டை முற்றிலும் உடைந்தது போல தோன்றியது.

" தேவ்'யை உனக்கு எத்தனை நாளா தெரியும், சும்மா இப்படிதான் பயமுறுத்துவான். முடியாதுனு சொல்லிடு" என்றான்.

"இல்ல, தேவ் நல்ல பையந்தான். அவன் அப்பா அம்மாவை பார்த்து இருக்கேன். நல்லவங்கதான்".

"அப்பறம் என்ன?, சரினு சொல்லிடு".

"வீட்ல அம்மா அப்பாவை நினைத்தால்தான் பயமா இருக்கு"

"இதோ பாரு, இன்னும் கொஞ்ச நாள் நல்லா யோசிச்சு பாரு. உனக்கு எது சரினு தோணுதோ அதை மட்டும் செய். எனக்கு என்னமோ இந்த " தற்கொலை செய்துக்கொள்வேன் " என்று சொல்ற பசங்களை நம்ப கூடாதுனு தோணுது,"

"ம்..."

"உன் வாழ்க்கை, நீதான் தீர்மாணிக்க வேண்டும். நல்லா யோசி, ஒரு நல்ல முடிவு கிடைக்கும். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நான் இப்ப கிளம்புறேன். சாரி, இதைபத்தி அப்புறமா நாம் பேசுவோம்" என்று சொல்லிவிட்டு அசோக் விரைவாக அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டான்.

அன்று இரவு, அசோக்கும் சசியும் தண்ணியடிக்கும் போது, " இந்த பொண்ணுகளயே நம்ப கூடாது மச்சான். எல்லாமே பச்ச dash'டா " என்று அசோக் புலம்பிக்கொண்டே இருந்தான். பக்கத்தில் இருந்த ஸ்பிக்கரில் Eminem ஒரு பாட்டில் F'ல் அரம்பிக்கும் கெட்ட வார்த்தையால் யாரையோ திட்டிக்கொண்டு இருந்தான்.

Monday, November 16, 2009

படித்ததில் பிடித்தது.

"மற்றவர்களின் மீது இரக்கம் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம். இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்னை நேரில் சந்திக்கும் போது என்னை ஒரு அறையாவது அறைந்து கொள்ளுங்கள். பேசாமல் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் இப்போது நான் உண்மையைப் பேசியாக வேண்டும். இப்படி மற்றவர்கள் மீது இரக்கும் கொள்வது பச்சையான அயோக்கியத்தனம்தான். சந்தேகமே இல்லை. இப்படி இரக்கம் கொள்வதன் மூலம் நீங்கள் மற்றவர்களை விட ஒரு உயர்ந்த இடத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்கள். அந்த ‘உயர்ந்த இடத்தில் ’ இருந்துதான் இது போன்ற மனிதாபிமான வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. "

- சாரு நிவேதிதா

http://www.charuonline.com/Nov2009/Suvaasika.html

Friday, November 6, 2009

சில பல

சமீபத்தில் ஆபிஸ் நண்பர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதில் இருந்து அவர் போனும் கையுமாய் சுற்றிக்கொண்டு இருக்கிறார். இதைப் பற்றி அவரிடம் கேட்டதற்க்கு அவர் சொன்ன பதில் " நாம பேசலனா வேற எவனாவது பேசிக்கிட்டு இருப்பான், சரவணா".

**********************************************************************************

போன வாரம் ஞாயிற்றுக்கிழமை, நானும் செல்வாவும் அறையை மதியானமே பூட்டிவிட்டு Sky Walk, Spencer plaza, மாலையில் கமலாவில் பேராண்மை திரைப்படம், அப்பறம் மெரீனா என்று சுற்றிவிட்டு இரவு 11 மணிக்குதான் அறைக்கு திரும்பினோம். நான் எனது செல்போனை அறையிலேயே மறந்து வைத்துவிட்டேன். எனக்கு வரும் ஒரே போன் ஆபிஸ் Cab Driver'யிடம் இருந்துதான், அதுவும் Missed Call. Sky walk'ல் புதிதாக திறந்து உள்ள கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதுதான் அறையிலேயே போனை மறந்துவைத்தது நினைவில் வந்தது. சரி, நமக்கு யாரு போன் செய்ய போறா என்று நானும் அதைப்பற்றி வருத்தபடவில்லை.

இரவு பதினோரு மணிக்கு நாங்கள் அறைக்குள் நுழையவும், என்னை தேடிக்கொண்டு ஆபிஸ் நண்பன் நரேன் வருவதற்க்கும் சரியாக இருந்தது. இந்த இரவு நேரத்தில் தேடிக்கொண்டு வந்து இருக்கிறானே என்ன அவசரமோ என்று நரேனிடம் கேட்டபோது " இல்ல சரவணா, உனக்கு மத்தியத்தில் இருந்து போன் பண்ணிட்டு இருக்கிறேன். நீ போனை எடுக்கவே இல்லை. அதான் எனக்கு பயமா போச்சு, சரி ஒரு தடவை நேரில் பார்த்துவிட்டு வந்துடலாம் கிளம்பி வந்தேன்" என்றான்.

பி.கு 1: நரேனின் அறை இருப்பது வேளச்சேரியில், எனது அறை இருப்பது அண்ணா நகரில்.

பி.கு 2: நானும் நரேனும் அறிமுகமாகி நான்கு மாதங்கள்தான் இருக்கும்.

**********************************************************************************

நேற்று நானும் குமாரும் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது, குமார் என்னிடம் " உனக்கு சின்ன வயசுல திக்குவாய் இருந்துச்சா??" என்று கேட்டான். என்னதான் நாம் சில விஷயங்களை மறைத்தாலும், அது சிலருக்கு மட்டும் தெரிந்துவிடுகிறது.

**********************************************************************************

பத்தாவதில் என்னுடன் ஒன்றாக படித்தவன் ரவி. இவனுக்கு வகுப்பில் பட்டப்பெயர் " கேள்விக்கு பிறந்தவன் ". எதாவது கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பான். எங்கள் அறிவியல் வாத்தியார் மிகவும் கண்டிப்பானவர். ஒவ்வொரு அடியும் மின்னல் போல் விழும்.

தனக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது என்று சொல்லி, அவர் வகுப்பில் உள்ள அனைவருக்கும் இனிப்பு தந்தார். " குழந்தையின் பெயர் " என்று ஒரு மாணவன் கேட்டான். அவர் பெயர் சொன்னவுடனே, ரவி கேட்ட அடுத்த கேள்வி,

"சார், குழந்தைக்கு இனிசியல் என்ன?? ". அதன்பிறகு அவனுக்கு தனியாக விருந்து நடந்தது.

**********************************************************************************

வலைப்பதிவு எழுத தொடர்ந்து ஊக்கம் அளித்துவரும் அருண் என்னிடம் சொன்னது " மச்சி, தயவுசெய்து இனிமேல் கவிதை மட்டும் எழுதாதே டா ".

**********************************************************************************

நேற்று நானும் நண்பனும் பேராண்மை திரைப்படத்துக்கு சென்றோம். கம்யூனிச கருத்துக்கள் படம் முழுவதும் வரும் ஒரே காரணத்திற்காக எல்லாரும் இதை தலையில் தூக்கிவைத்து எழுதுகிறார்கள் என்று தோன்றுகிறது. படத்தில்வரும் கம்யூனிச கருத்துகளுக்கு ஒரு சபாஷ் சொன்னாலும் என்னை பொருத்தவரை இது ஒரு " கற்பனை மிகுதியான, மாசாலா தூவிய வழக்கமான தமிழ் திரைப்படம் ".

படம் பார்த்த பின் என் நண்பன் என்னிடம் சொன்னது " ஒரு காடு, ஐந்து பெண்கள், ஒரு ஹீரோ. இதை மட்டும் செல்வராகவனிடம்தந்து இருந்தால் என்னமா விளையாடி இருப்பார் ".

Thursday, November 5, 2009

காதல் தோல்வி - II

வழக்கம்போல்
எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்
இந்த முறை
சற்று ஜாக்கிரதையாகவே செயல்பட்டேன்.

முதலில் அந்த காகிதங்களை கிழித்து
பின், அவற்றை தீயில் எரித்துவிட்டேன்.

நினைவு பொருள் என்று என்னிடம்
இருந்த ஒரேஒரு பேனாவையும் உடைத்து
கடல் நீரில் தூக்கி எறிந்துவிட்டேன்.

இ-மெயில் உரையாடல்களை மொத்தமாக
இன்பாக்ஸில் இருந்து நீக்கிவிட்டேன்.

நினைவுகளை அழிக்க கையில்
எப்பொழுதும் ஒரு ஸ்காட்சை
வைத்து உள்ளேன்.

இனி ஒரு தடயமும் இல்லை.

யாராலும் சந்தேகிக்க முடியாது
யாராலும் கண்டுபிடிக்க முடியாது
யாராலும் நீருபிக்க முடியாது

நீருபித்தாலும்

எங்கள் பிரிவை உங்களால்
தடுக்க முடியாது

இந்த முறை சற்று உரக்கமாகவே
சொல்கிறேன்
எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்.

Thursday, October 29, 2009

என்னை துரத்திய வாசனை

எனக்கு எந்த நாளில் இருந்து என்று சரியாக ஞாபகம் இல்லை. சூரியன் அஸ்தமிக்கும் ஒரு மாலை பொழுதில், அவள் எனது அருகில் நின்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுது முதல்முதலாக அவளிடம் இருந்து அந்த வாசனைவந்ததாக ஞாபகம். நன்றாக ஆறிய பாலையும் ரோஜாவையும் சேர்த்து நுகரும் பொழுது ஒரு வாசனை வருமே, அப்படி ஒரு வாசனை. திடீர் என்று அந்த வாசனை வந்ததால், நான் அவளிடம் அதைப்பற்றி ஒன்றும் கேட்கவில்லை. அவள் அந்த இடத்தைவிட்டு விலகி சென்றவுடன், அந்த வாசனையும் விலகி சென்றது.

அடுத்த இரண்டு நாட்கள் அவள் அருகில் வரும்பொழுது எல்லாம் அந்த வாசனையும் வந்தது. ஒவ்வொரு முறையும் அந்த வாசனை தீவிரம் அடைந்து வருவது போலவே எனக்கு தோன்றியது. மூன்றாவது நாள் அவளிடமே கேட்டுவிட்டேன், "என்ன perfume use பண்ணுகிறாய் ?" என்று. நான் எதிர்பார்த்ததை போல, அவளிடம் இருந்து ஒரு முறைப்பு மட்டும் பதிலாக வந்தது. அருண் எப்பொழுதும் சொல்வான், இந்த உலகத்தில் இரண்டு வகையான பெண்கள் மட்டுமே உண்டு, கண்ணகி போல் வாழாதவர்கள் - கண்ணகி போல நடிப்பவர்கள். இவள் இரண்டாம் வகையை சேர்ந்தவள்.

அடுத்தநாள், நான் நரேன் கேபினில் அமர்ந்து அவனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, நரேனிடம் சந்தேகம் கேட்க அவள் அங்கே வந்தாள். முந்தைய நாளை விட இன்று வாசனை கொஞ்சம் அதிகமாகவே வந்தது. நான் நரேனிடம் மெதுவாக " உனக்கு எதாவது வாசனை வருகிறதா ?" என்றேன்.

"இன்னைக்கு, தம் அடித்த பின் Halls போட மறந்துவிட்டோம்" என்று சொல்லிவிட்டு அவளிடம் பேசுவதில் தீவிரமானான்.

இப்படியே இரண்டு வாரங்கள் சென்றன. எனக்கு அந்த வாசனை சந்தேகம் மட்டும் போகவே இல்லை. இப்பொழுது எல்லாம், நூறு அடிக்கு அப்பால் அவள் கடந்து சென்றால் கூட, அவள்தான் நடந்து செல்கிறாள் என்று வாசனையை வைத்துசொல்ல முடிந்தது.

மீண்டும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவளிடமே கேட்டு விடுவது என்று முடிவு செய்தேன். இந்தமுறை " என்ன சோப் use பண்ணுகிறாய் ?" என்று சற்று வித்தியாசமாக கேட்டேன்.

"Johnson Baby Soap" என்று முறைத்துக்கொண்டே சொன்னாள்.

இதுவரை அவள் பொய் சொல்லி நான் பார்த்தது இல்லை. எனவே அதுதான் உண்மை என்று முடிவு செயது, அடுத்தநாள் நானும் Johnson Baby Soap'ல் குளித்து பார்த்தேன். அதில் ஒருவிதமான பால் வாசனை வந்தாலும், அவளிடம் இருந்த வாசனைக்கும் இதற்க்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தன.

அறை நண்பன் அருணிடம் இதை பற்றி கூறினேன். " இந்த உலகத்தில் எல்லா மனிதர்களுக்கும் தனி தனியா வாசனை இருக்கு டா " என்றான்.

"இல்லை எனக்கு அவளிடம் இருந்து மட்டும்தான் வாசனை வருகிறது" என்றேன். அருண் என்னை ஒருமாதிரி பார்த்தான்.

சில நாட்களில், அவள் இல்லாத போதும் அந்த வாசனை என்னை தொடர்வது போலவே இருந்தது. என் அறைகளில், என் தலையனைகளில் கூட அந்த வாசனை வர தொடங்கியது. அவள் அருகில் இருக்கும் நேரம் மட்டும் வாசனை சற்று அதிகமாக இருக்கும்.

இப்படியே சென்றால், எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று தோன்றவே ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான நாகபட்டினத்திற்கு சென்றேன்.

ஊரின் கடற்கரை மணலை பார்த்தவுடனே, என்னை சுற்றி இருந்த வாசனை முற்றிலும் மறைந்தது போல தோன்றியது. ஆனால் வீட்டில் நுழைந்தவுடனே மீண்டும் அந்த வாசனை என்னை வந்து அப்பிக்கொண்டது.

வீட்டில் அம்மாவும் அக்காவும் " ஏன் டா, பேய் அடிச்சமாதிரி வந்துருக்க?" என்று கேள்விகளால் துளைத்து எடுத்தனர். எப்படி அவர்களிடம் சொல்வது " என்னை ஒரு வாசனை துரத்திக்கொண்டு வருகிறது" என்று.

அன்று மாலை அக்கா அறையில் அமர்ந்து அக்காவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது Ponds Powder அருகில் இருந்த ஒரு வெள்ளை நிற பாட்டில் என் கண்ணில்பட்டது. எதோ ஒரு பொறி தட்ட, அந்த பாட்டிலை எடுத்து முகர்ந்து பார்த்தேன். அதே வாசனை, என்னை இத்தனை நாட்களாக துரத்திக்கொண்டு இருந்த அதே பெண்ணின் வாசனை. அதில் "Palmolvi Milk Moisturizers Cream" என்று எழுதியிருந்தது.

கடைசியில் வாசனையை கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில், அக்காவிடம் " இதை நீயும் போட ஆரம்பிச்சிட்டியா ?" என்றேன்.

அக்கா " இரண்டு வருடங்களாக Use பண்ணிகிட்டு இருக்கேன் " என்றாள்.

இரண்டு வருடங்களாக இல்லாமல், என் இப்பொழுதும் மட்டும் இந்த வாசனை புதிதாக தெரிகிறது என்று யோசிக்க அரம்பித்த என்னிடம் " உனக்கு எதோ ஆயிடுச்சு" என்று அக்கா சொல்லிவிட்டு போனாள்.

Saturday, October 10, 2009

உண்மையை சொல்

கடவுள் என் முன்னால் நின்றுக்கொண்டு இருந்தான்.

"உண்மையை சொல், நீ யார்?" என்றான்.

சாதித்து விட்ட மகிழ்ச்சியில், அவனை பார்த்து ஏளனமாக சிரித்துக்கொண்டு இருந்தேன்.

"புலியை படைத்து பயமுறுத்துவேன்" என்றான்.

"புலி இனத்தை அழித்தவர்கள் நாங்கள்" என்றேன்.

கொதிக்கும் எண்ணெய் கொப்பரையை காட்டி பயம் காட்டினான்."சென்னையில் வெயில் இதோடு அதிகம்" என்றேன் சிரித்துக்கொண்டே. என் சிரிப்பு மேலும் அவனுக்கு கோபத்தை எற்படுத்தியது.

என்னிடம் இருந்து உண்மையை வரவழைக்க அவனும் பல வழிகளை கையாண்டான். நான் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தேன்.

கடைசியில் ஒரு மனிதனை உருவாக்கி என் கண் முன்னே நிறுத்தினான்.

நான் சகமனிதனை பார்த்த பயத்தில் "நான்தான் இந்த உலகத்தின் கடைசி மனிதன்" என்ற உண்மையை உரக்கக் கத்தினேன்.

Monday, September 28, 2009

காற்று ஒரே இடத்தில் நிற்காது

என் முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, எனக்கே வெறுப்பாக இருந்தது. அறையில் இப்பொழுது யாருமே இல்லை, இந்த தனிமை என்னை மிகவும் பாதித்தது. செல்வா,அருண்,சசி,நரேன் எல்லாரும் எங்கே போனார்கள்??. ஒரு புதிய திரைப்படத்திற்க்கு போக போவதாக நேற்று செல்வா சொன்னது நினைவில் வந்தது. பேசாமல் நானும் சென்று இருக்கலாம். "தீடிர் என்று தற்கொலை செய்துக்கொள்ளலாமா??" என்ற எண்ணம் வந்தது. செல்போன் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, நான் எடுக்கவில்லை. கண்டிப்பாக அது அவள்தான். இப்பொழுது எனக்குள் என்ன நடந்துக்கொண்டுயிருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை.

இன்னும் சிறிது நேரம் இங்கு இருந்தால், கண்டிப்பாக தற்கொலை செய்துக்கொள்வேன் என்று தோன்றியது. அறையை பூட்டிவிட்டு வெளியில் வந்தேன். இந்த இரவு நேரத்தில் எங்கே போவது. அருகில் இருக்கும் பூங்கா நினைவில் வந்தது. நானும் நரேனும் ஒரு ஆறு மாதங்கள் முன்னால் இதே பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தது ஞாபகம் வருகிறது. வசந்தமான நாட்கள் அவை.

பூங்கா பூட்டியிருந்தது. ஒரு வாட்ச்மேன் மட்டும் வெளியில் தூங்கிக்கொண்டு இருந்தான். மீண்டும் அறைக்கே திரும்ப எண்ணி, பின் ஏதோ ஒரு தைரியத்தில் பூங்கா சுவர் ஏறி உள்ளே குதித்தேன். நானும் நரேனும் அமர்ந்து இருந்த அதே பெஞ்சில் அமர்ந்தேன்.

எண்ணங்கள் எங்கெங்கோ அலைந்துக்கொண்டு இருந்தது. "சாய்ந்துக்கொள்ள தோள்கள் இல்லாத மனிதன் பைத்தியமாகிறான்" என்ன உண்மையான வரிகள் இவை. நான் சாய்ந்துக்கொள்ள தோள்கள் பல உள்ளன், ஆனால் எனக்குத்தான் சாய்ந்துக்கொள்ள தெரியவில்லை.

எனக்கு எதிரே ஒரு செடி ஆடிக்கொண்டு இருந்தது. என்ன செடி என்று பெயர் சரியாக தெரியவில்லை. அந்த செடி என்னிடம் பேசுவது போல இருந்தது. இல்லை இல்லை, அந்த செடி என்னிடம் தான் பேசுகிறது. அந்த பச்சை இழைகள் என்னை நோக்கி திரும்புகின்றன். "நான் உன்னிடம் பேசவில்லை, காற்றுடன் பேசிக்கொண்டு இருக்கிறேன்" என்றது அந்த செடி.

"காற்றுக்கு பேச தெரியுமா??" என்றேன்.

"ஏன், செடிகள் உன்னிடம் பேசும் பொழுது, காற்று எங்களிடம் பேசக்கூடாதா??" என்றது அந்த செடி.

"உன் பெயர் என்ன??"

"உன்னைபோல் மனிதர்கள்தான் தங்களுக்குள் பெயர்வைத்து தங்களை பிரித்துக்கொள்வார்கள். உங்கள் பிரிவினையே இந்த பெயர்களில் இருந்துதான் அரம்பிக்கிறது." என்றது.

சிறிது நேரம் செடி அமைதியாக இருந்தது.

"என்ன, மாநாட்டில் பேசுவது போல் ஆரம்பித்த உன் பேச்சை உடனே நிறுத்துவிட்டாய்" என்றேன்.

"நான் உன் அமைதியை கெடுப்பதாக இந்த காற்று சொல்கிறது"

"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் காற்றின் பேச்சை என்னால் கேட்க முடியவில்லையே"

"அதற்க்கு நீ செடியாக மாற வேண்டும்"

உடல் எங்கும் ஒரு குளிர்ச்சி பரவியது. உடல் எங்கும் பச்சைவண்ணாம் அப்பிக்கொண்டது. நரம்புகள் வேர்களை போல வளர்ந்து மண்ணை பற்றிக்கொண்டது. நான் இப்பொழுது செடியாக மாறிவிட்டேன்.

"நான் செடியாக மாறிவிட்டேன்" என்று உரக்க கட்டினேன்.

"என் கத்துகிறாய், அருகில் காவல்காரன் தூங்கிக்கொண்டுயிருக்கிறான்" என்று காற்று என் காது அருகில் சொல்லிசென்றது. அந்த குரலில் அப்படி ஒரு இனிமை.

"இப்பொழுது நீ காற்றின் குரலை கேட்க முடிகிறதா??" என்றது அந்த செடி.

"ஆம், மிகவும் இனிமையான குரல். அந்த காற்றை கூப்பிடு, மீண்டும் பேசலாம்"

"அந்த காற்று சென்றுவிட்டது. நம்மால் மீண்டும் அதோடு பேச முடியாது."

"அது பறந்துவிட்டது, என்னிடம் பேசுங்கள்" என்றது இப்பொழுது வந்த காற்று. ஆனால் அந்த பழைய காற்றின் இனிமையான குரல் இதனிடம் இல்லை.

"அந்த காற்றின் குரல் இனிமையாக இருந்தது" என்றேன்.

"ஆம், இனிமையாகத்தான் இருந்தது. நானும் இப்படி ஒரு குரலை இதுவரை கேட்டதுயில்லை. நீ வரும் வரை அதனிடம்தான் பேசிக்கொண்டுயிருந்தேன். உன் முகம் வாடிப்போய் இருப்பதாக அது என்னிடம் கூறியது" என்று செடி என்னை பார்ர்த்து பேசியது.

"அப்படி என்றால், அந்த காற்றை கூப்பிடு நாம் பேசுவோம்" என்றேன்.

"காற்று எப்பொழுதும் ஒரே இடத்தில் நிற்காது. அது பறந்துக்கொண்டே இருக்கும். அதுதான் அதன் சுபாவம். நம்முடைய நலனுக்காக அதை தடுத்து நிறுத்த நினைப்பது தவறு".

திடுக்கிட்டு எழுந்தேன். காலை வெயில் ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்துக்கொண்டு இருந்தது. அருகில் நரேன், செல்வா தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

அருகில் இருந்த செல்போனை எடுத்தேன். அவளிடம் இருந்து "GM" என்று ஒரு SMS வந்துயிருந்தது.