Monday, March 25, 2013

கனவுக்கும் நிஜத்துக்கும் நடுவில்

மீண்டும் பைத்தியகார எண்ணங்கள் மனதில் துளிர் விட ஆரம்பித்து விட்டன. எதனால் இந்த எண்ணங்கள் என்று ஆராய தொடங்கினால், அது பிரச்சனைகளை இன்னும் பூதாகரமாக்கிவிடும்.

காலை எழு மணிக்கு மீண்டும் கண்கள் தூங்க சென்று விட்டன. வீத வீதமான கனவுகள், மொத்தம் பத்துக்கும் குறையாத கனவுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். எதோ ஒரு கனவிலிருந்து தீடிர் என்று அலறி அடித்துக்கொண்டு எழுந்தால், மணி வெறும் 7:05 தான். இந்த 5 நிமிடங்களில் கிட்டத்தட்ட பத்து கனவுகள். எழுந்த போது அந்த பத்து கனவுகளும் நினைவில் இருந்தது. ஆனால் இப்பொழுது நினைவில் கொண்டு வர முயற்சித்தால், ஒரு கனவு கூட நினைவில் வர மறுக்கிறது. ஒருவேளை தூக்கத்தில் நான் பத்து கனவுகள் கண்டதாக கண்டது கூட கனவு தானா??

இல்லை, பத்து கனவுகள் கண்டது உண்மைதான். ஆனால் நினைவில் வர தான் மறுக்கிறது. ஒருவேளை அதே கனவுகள் மீண்டும் வந்தால், எங்கேயோ நிஜத்தில் நடந்ததாக அப்பொழுது தோன்றலாம். அது நிஜம் அல்ல கனவு தான் என்று அந்த கனவுக்கு எப்படி புரியவைப்பது?

இந்த கனவுகள் சம்மந்தமாக தான் எத்தனை புத்தகங்கள், எத்தனை திரைப்படங்கள். Inception திரைப்படம் எனக்கு புரிந்தளவு கூட கனவினை பற்றி நான் படித்த எந்த புத்தகங்களும் எனக்கு புரியவில்லை ( கனவுகளைப் பற்றி நான் படித்த புத்தகங்கள் மற்றும் பார்த்த திரைப்படங்களில் எனக்கு Inception மட்டுமே கொஞ்சம் புரிந்தது என்பதைதான் கொஞ்சம் குழப்பி மேலே எழுதியிருக்கிறேன். எழுதிய பின் படித்து பார்த்த போது எழுதிய எனக்கே அந்த வரிகள் புரியவில்லை என்றாலும், எனோ அதை நீக்க மனது வரவில்லை).

எனக்கு சில கனவுகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. மீண்டும் மீண்டும் என்பதற்கு தினமும் என்று அர்த்தம் இல்லை, கொஞ்சம் நாட்களாக நான் பறப்பது போல் எனக்கு கனவு,

யாரோ என்னை துரத்துகிறார்கள். நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன், கொஞ்சம் நேரம் பறக்கவும் செய்கிறேன். பறப்பது எனக்கு கடினமான வேலையாக தெரியவில்லை. தினமும் நான் பறப்பவன் போல் பறந்துக்கொண்டு இருக்கிறேன். பறப்பது என்றால் பறவையை போல் அல்ல, Matrix திரைப்படத்தில் ஒடி போய் கால்களை தரையில் அமர்த்திய பின் பறப்பார்களே அது போல். நான் மட்டும் தான் பறக்கிறேன், என்னை துரத்துபவர்கள் பறக்கவில்லை. அவர்கள் ஓடிதான் வருகிறார்கள். நான் பறப்பதை பார்த்து அவர்கள் வியந்ததாக தெரியவில்லை. அவ்வளவு தான் நினைவில் இருக்கிறது.  ஆனால் எழுந்த பின் இப்பொழுது நினைத்து பார்த்தால், அதே போல் நான் பறப்பது போன்ற கனவுகள் அடிக்கடி எனக்கு வருவது போல் தோன்றுகிறது.

இன்னொரு நாள் - ஒரு கனவில், ஒரு அறையில் நான் மட்டுமே இருக்கிறேன். எனக்கு பறப்பது மறந்துவிடுகிறது. நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் பறக்க முடியவில்லை. என்னுடைய கையாளாகத்தனத்தை நினைக்கும் போதும் கண்களில் தண்ணிர் வருகிறது. கதறி அழுகிறேன்.

இன்னொரு கனவில் ஒவ்வொரு வீடு மொட்டை மாடியாக பறந்துக் கொண்டு இருக்கிறேன். என்னுடன் இன்னொருவனும் வருகிறான். எங்கள் இருவரையுமே யாரோ துரத்துகிறார்கள். நாங்கள் ஒடியும் பறந்தும் அவர்களிடமிருந்து தப்பிக்கிறோம். ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் பிரிகிறோம். இப்பொழுது நான் மட்டும் தனியாக ஓடிக்கொண்டு இருக்கிறேன். ஒரு கோயிலின் கோபுரங்களில் ஒளிந்துக்கொண்டு இருக்கிறேன். அங்கேயிருந்து கோயிலுக்குள் எட்டிப்பார்க்கிறேன். உள்ளே சிறுவர்கள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

சொல்ல போனால், மேலே சொன்ன கனவில் எனக்கு "நானும் அவனும்" பிரிவது வரைதான் நினைவில் இருக்கிறது. அதற்கு பின் எழுதியது எல்லாம் நானே எழுதியது. இல்லை,அதுவும் கனவில் வந்ததுதான் என்று உள்மனது சொல்கிறது. உண்மையாக அது கனவில் வந்ததா இல்லை நானே கதைகட்டி எழுதுகிறேனா என்று தெரியவில்லை.

என் பைத்தியக்கார எண்ணங்களைப் பற்றி சொல்லவந்து, கனவுகளோடு முடித்துக்கொள்கிறேன். பைத்தியக்கார எண்ணங்களைப் பற்றி இன்னொரு முறை எழுதுகிறேன். அதற்கு  முன்னால் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி  --

" நீ கடைசியாக ஒரு பைத்தியத்தை எப்பொழுது நேரில் பார்த்தாய்?" என்று யாராவது உங்களிடம் கேட்டால் உங்கள் பதில் எப்படியாக இருக்கும்??

No comments: