Tuesday, October 18, 2011

ஒரு வாசகனாக மட்டும்

"உன்னுடைய காதலியின் பெயர்??" என்று யாராவது என்னிடம் கேட்டால்,  அதற்கான பதில் ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டேயிருக்கும். அதே போல், பதில் மாறிக்கொண்டேயிருக்கும் மற்றொரு கேள்வி "உனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்??". (குறிப்பு: மிகவும்)

இந்த கேள்வியை என் கல்லூரி ஆரம்ப நாட்களில் கேட்கப்பட்டு இருந்தால், அப்பொழுது என் பதில் "தபூ சங்கர்". அதற்கு முக்கிய காரணம் விகடனில் அவர் எழுதிய கவிதைகள். இதே கேள்வியை என்னுடைய பள்ளி இறுதி நாட்களில் கேட்கப்பட்டு இருந்தால், அப்பொழுது என் பதில் "கல்கி". பள்ளி நாட்களில் நான் படித்திருந்த ஒரே புத்தகம் "பொன்னியின் செல்வன்" மட்டும்தான். அந்த நாவலில் எனக்கு நந்தினி தான் மிகவும் பிடித்தமானவள், பிடிக்காதவளும் அவளே. இன்று வரை நான் பெண்களை பார்த்து பயப்பட இந்த நந்தினியே காரணம் என்று நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு முறை படித்து உள்ளேன். இரண்டாவது முறையாக படித்தது கல்லூரி நாட்களில், நந்தினி தந்த பாதிப்பால் இந்த புத்தகத்தை இனி தொடவே கூடாது என்று முடிவு செய்தேன். அதன்படி இன்று வரை "பொன்னியின் செல்வன்" புத்தகத்தை பார்த்தால் ஒரு அடி தள்ளியே நிற்கிறேன்.

தபூ சங்கருக்கு பின் என் பட்டியலில் சேர்ந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரின் அறிமுகமும் எனக்கு விகடனின் மூலம்தான் கிடைத்தது. அப்பொழுது நான் படித்துக்கொண்டிருந்த பத்திரிக்கைகள் "ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் மற்றும் இந்தியா டூடே" மட்டுமே.

கல்லூரி மூன்றாவது வருடத்தில் விகடனில் உலக சினிமாவைப் பற்றி ஒர் தொடர் வந்தது, செழியன் எழுதியது. அந்தந்த வாரங்களில் செழியன் எழுதியிருக்கும் படத்தை உடனே மூர் மார்க்கெட்டில் தேடிபிடித்து பார்ப்பேன். மின்ட் அருகில் வசித்த சதிஷ் அந்த வழியாகதான் கல்லூரிக்கு வர வேண்டும் என்பதால், அவனே நான் சொல்லும் படங்களை வாங்கி தந்துவிடுவான். இன்னொரு நண்பனான போனி, இந்த திரைப்படங்கள் அனைத்தையும் முன்னரே பார்த்தவனாக இருப்பான். அவனும் பல படங்களை சிபாரிசு செய்வான்.

எழுத்தாளர்கள் பற்றி ஆரம்பித்து, கடைசியாக சினிமாவுக்கு வந்துவிட்டேன். மன்னிக்கவும். கல்லூரி இறுதி நாட்களில் இணையத்தின் மூலம் சாருவின் அறிமுகம் கிடைத்தது. இப்படியும் எழுதலாமா என்று ஆச்சர்யம் அடையவைத்தது அவர் எழுத்து. குட்டி கதைகள் வந்த போது அவருடைய தீவிரமான ரசிகனாக மாறிப்போனேன். இந்நேரத்தில் எனது அறை நண்பன் அருண் "ஆத்மநாம், சம்பத்,பாதசாரி (காசி)" இப்படி பலர் எழுதிய புத்தகங்களை வாங்கி வருவான். ஒவ்வொரு புத்தகமும் படிக்க படிக்க அவர்களின் ரசிகனாக மாறிக்கொண்டே வந்தேன்.

"எஸ்.ரா, சாரு, ஜெயமோகன், பாரதி, சுந்தர ராமசாமி, ஆத்மநாம், வண்ணதாசன், வண்ணநிலவன், மனுஷ்ய புத்திரன், அசோகமித்ரன், நகுலன், ரமேஷ் பிரேம், முத்துலிங்கம்" இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டே இருந்தது, ஒவ்வொரு எழுத்தாளரையும் எப்படி பிடித்துப்போனது என்பதை இங்கே எழுத ஆரம்பித்தால், நூறு பக்கங்கள் தாண்டி விடும்.

பிடித்த எழுத்தாளர் என்ற பட்டியலில் எப்பொழுதும் எண்ணிக்கை அதிகரித்தக் கொண்டே போகிறது, ஆனால் மிகவும் பிடித்த எழுத்தாளர் என்று கேள்வி வரும் போது அதற்கான விடை மட்டும் என்னிடம் மாறிக்கொண்டேயிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னால் என் பட்டியலில் இணைந்து, தற்பொழுது எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளராக மாறியிருப்பவர் "எம்.டி.எம்" என்று அழைக்கபடும் "எம்.டி.முத்துக்குமாரசாமி". ஒரு நான்கு மாதங்களுக்கு முன்னால், என்னிடம் யாராவது இவர் பெயரை சொல்லி இருந்தால், "அ.முத்துலிங்கம்" பற்றிதான் சொல்கிறார்கள் என்று நினைத்திருப்பேன்.

இத்தனை நாட்களாக இவரைப் பற்றி தெரியாமல் இருந்தது என் தவறுதான். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பின் எழுத வந்துள்ளார் "எம்.டி.எம்". இவர் ஏற்கனவே கதைகள், நாவல், நாடகங்கள், பின் நவீனத்துவ கோட்பாடு கட்டுரைகள் என்று பலவற்றை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தவர்.

இவருடைய பழைய புத்தகங்கள் ஒன்றை கூட இப்பொழுது கண்டுபிடிக்க முடியவில்லை. இணையத்தில் தேடிய போது இவரைப் பற்றிய பல பதிவுகள் கிடைக்கின்றன. இவர் தற்பொழுது வலைப்பதிவில் மட்டுமே எழுதிவருகிறார். விரைவில் ஒரு புதிய நாவல் புத்தகமாக வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

பகடியுடன் சேர்ந்து எத்தனையோ விதமான மாற்று கருத்துக்களையும் இவர் எழுத்து தருகிறது. இவருடைய வலைப்பதிவு முகவரி கீழே உள்ளது கண்டிப்பாக படித்து பார்க்கவும்.

 http://mdmuthukumaraswamy.blogspot.com/


No comments: