Saturday, August 27, 2011

அன்புள்ள வாசகர் சார் அவர்களுக்கு

அன்புள்ள வாசகர் சார் அவர்களுக்கு,

நலம், நலம் அறிய ஆவல். இது வாசகர் கடிதம் எழுதும் மாதம் என்று நினைக்கிறேன். எந்த வலைப்பதிவை திறந்தாலும் வாசகர் கடிதமாக நிறம்பி வழிகிறது. என்னால் அப்படி ஒன்றும் எழுத முடியவில்லையே என்று ரொம்ப நாட்களாகவே வருத்தம். என்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற உதவிய உங்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் சார்.

உங்கள் வாசகர் கடிதத்தில் ஒரு குறை, நீங்கள் எங்கேயுமே சார் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை. இது சார்களின் காலம் சார். உங்கள் குழந்தையைக் கூட நீங்கள் சார் போட்டுதான் கூப்பிட வேண்டும் சார், அது பெண் குழந்தையாக இல்லாத பட்சத்தில்.  நான் கூட முதலில் சினிமா துறையில் மட்டும்தான் இந்த சார் கலாச்சாரம் உள்ளது என்று நினைத்திருந்தேன், போன வாரம் ஒரு புத்தகக் கண்காட்சிக்கு போகும் வரை. நான் சென்ற போது, கண்காட்சியில் எழுத்தாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதில் எல்லாருமே எல்லாரையும் சார் போட்டுதான் கூப்பிட்டார்கள். கூட்டம் நடைப்பெற்று கொண்டு இருந்த போது, யாரோ ஒருவர் யாரையோ சார் என்று மிகவும் மெதுவாக கூப்பிட்டுவிட்டார், அவ்வளவுதான் அதுவரை அவரவர்கள் டீ போப்பையில் மூழ்கியிருந்த மொத்த கூட்டமும் அவர் பக்கம் திரும்பி தன்னைதான் கூப்பிட்டாரா என்று  ஒருமுறை சரிபார்த்து கொண்டது.

இதையெல்லாம் எதற்கு நான் உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நீங்கள் சந்தேகம் கொள்ளலாம். எனக்கு கடிதம் எழுதிய ஒரே வாசகர் சார் என்ற முறையில் உங்களிடம் இவற்றையெல்லாம் பகிர்ந்துக்கொள்ள எனக்கு முழு உரிமை இருக்கிறது என்றே கருதுகிறேன்.

முக்கியமாக நான் உங்களிடம் சொல்ல வந்ததே வேறு சார். நீங்கள் எழுதிய அந்த இரண்டு வரி வாசகர் கடிதத்தில், என்னுடைய "காக்கைகள்" கதையை அல்பேனியன் மொழியில் மொழி பெயர்த்து  அட்டாச்மென்டில் அனுப்பியிருந்தீர்கள்.  இது வரை அல்பேனியா மொழி எப்படி இருக்கும் என்று கூட பார்த்திராத எனக்கு, என்னுடைய காக்கைகள் கதையை அல்பேனியா மொழியில் பார்த்தது கட்டுக்கடங்கா சந்தோஷத்தை தந்தது சார், அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆகவே இங்கு ஒரு பத்து பதினைந்து ஸ்மைலிகளை சேர்த்துக்கொள்ளவும்.

மிகவும் அற்புதமாக மொழிபெயர்த்து இருந்தீர்கள் சார். அல்பேனியா மொழியில் எனது காக்கைகள் கதையை பார்த்தபோது, ஏதோ உயிர் உள்ள காக்கைகள் பறப்பது போல் இருந்தது. அந்தளவு அந்த கதையில் உயிர் இருந்தது. ஒரு கதையை படிக்க அதன் மொழி தேவையில்லை என்பது இது மூலம் தெரிகிறது.

இதைதான் சீனாவில் தனக்கு வாசகர் அதிகம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் ஒரு பிரபல எழுத்தாளர் கூட சமீபத்தில் சொல்லியிருப்பார். போன மாதம் சீனாவில் ஒரு சொற்பொலிவுக்கு அவர் போக நேர்ந்தது. சீனாவின் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்கள் பற்றிய நிகழ்ச்சி அது. அவர் மேடையில் ஏறி தமிழில் பேச, அருகில் இருந்தவர் அதை சீன மொழியில் மொழி பெயர்த்து கொண்டிருந்தாராம். இரண்டு வரிகள்தான் பேசியிருப்பாராம். "நீங்கள் பேசுவதை மொழி பெயர்க்க தேவையில்லை. உங்கள் பேச்சிலேயே நீங்கள் சொல்லும் கருத்து இங்கு அனைவருக்கும்  புரிகிறது" என்று சொல்லி அந்த மொழிபெயர்ப்பாளர் சென்று விட்டாராம். உடனே நம்ப எழுத்தாளர் சார், உணர்ச்சி வசப்பட்டு இரண்டு மணிநேரம் விடாமல் தொடர்ந்து தமிழில் பேசியிருக்கிறார். கூட்டத்திலிருந்து ஒரு சத்தம் கூட வரவில்லையாம். பாவம் கண்களை மூடிக்கொண்டே பேசியிருப்பார் போல.

சரி விடுங்க சார், நமக்கு ஏன் மற்றவர்கள் பிரச்சனை. நான் இப்பொழுதுதான் அல்பேனியன் மொழியைப் பற்றி இணையத்தில் தேடிப்படித்தேன். மொத்தம் 7.6 மில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுவதாக விக்கி சொல்கிறது. விக்கி சொன்னால் சரியாகதான் இருக்கும். அந்த 7.6 மில்லியன் மக்களுக்கு எனது கதை சென்றதைய போகிறது என்று நினைக்கும் போது இப்பொழுதே எனக்கு தலை சுற்றுகிறது சார். இரண்டு மெடாசின் மாத்திரைகள் போட வேண்டும். 7.6 மில்லியன் அல்பேனியன் மக்களுக்கு மெடாசின் கிடைக்குமா என்று தெரியவில்லை, பாரசிடமால் மாத்திரைகள் கூடவா கிடைக்காமல் போகும்??

இந்த கடிதத்தை முடிக்கும் முன்னர், மீண்டும் ஒரு நன்றி சார். இந்த கடிதத்துக்கு நீங்கள் ஒரு பதில் கடிதம் அனுப்பிவீர்கள் என்ற நம்பிக்கையில் இப்பொழுதே இரண்டு பக்கக் கடிதத்தை டைப் செய்ய தொடங்கிவிட்டேன்.

இப்படிக்கு உங்கள்,
அசோக்

No comments: