Thursday, December 16, 2010

அருணின் கடிதம்

அருண் (பேரின்பா), ஏன் இப்பொழுது எல்லாம் எதுவுமே எழுதுவதில்லை என்று தெரியவில்லை.

சமீபத்தில் சாருவின் புத்தக வெளியீட்டு விழா பற்றி சாருவுக்கு அருண் எழுதிய கடிதம் (சாருவின் வலைப்பதிவிலிருந்து).

( குறிப்பு : எனக்கும் இந்த புத்தக வெளியீட்டு விழா பற்றி எழுத ஆசைதான். என்ன செய்ய, எனது இலக்கிய ஆர்வம் அருண் சொல்வது போல் "சமோசா சாப்பிடணும்னா சாப்ட்டு வா” என்பதிலேயே முடிந்து விடுகிறது. )

சாருவுக்கு,

நேற்றைய விழா பற்றி ஒன்றும் பேசாமல் இருந்தால் பழநிமலை முருகன் என்னை கோபித்துக் கொள்வான்.  நான் எம்.பி.ஏ.  படிக்கிறேன். நேற்று எனக்கு Corporate Finance பரிட்சை. இரவு தூங்குவதற்கு மூன்று மணி ஆகிவிட்டது. பரிட்சை முசுவில் காலையில் சாப்பிடவில்லை. தூக்கமில்லாமல் படிப்பதால் சமயங்களில் பரிட்சை ஹாலில் தூக்கம் வந்து விடுகிறது; அதனால் காலையில் சாப்பிடுவதில்லை.  மதியம் இங்கே  நல்ல சோறு கிடைப்பதில்லை என்பதால் ப்ரெட்டும் ஜாமும் மட்டும் சாப்பிட்டுவிட்டு ஒரு மணி நேரம் கண்ணயர்ந்து விட்டுக் கிளம்பலாம் என்று படுக்கையில் விழுந்தேன்.  மொபைலை சார்ஜ் போட்டுவிட்டுப் படுத்தவன் கண் விழித்த போது மணி ஐந்து!

வெளியீட்டு விழா பற்றி என் தோழியிடம் ஒரு மாதமாக சொல்லி வந்திருக்கிறேன். அவளும் என்னை எழுப்புவதற்கு  ஆறு முறை போன் செய்திருக்கிறாள். எனக்கு அது காதில் விழவில்லை. அப்படி ஒரு தூக்கம்.  நான் இருக்கும் அம்பத்தூர் OTயில் இருந்து மவுண்ட் ரோடு வர  ஒன்றரை மணி நேரம். அதுவும் நான் இருக்கும் இடத்தில் இருந்து அம்பத்தூர் OT வரவே 15 நிமிடம். என் நண்பனுக்கு பெட்ரோல் போட்டுக் கொள்ள 30 ரூபாய் கொடுத்து அம்பத்தூரில் கொண்டு விடச் சொன்னேன். வண்டி பாதியிலேயே நின்று விட்டது. வழியில் என் தோழி நான் வண்டியில் போவதை பார்த்திருக்கிறாள் போலும்; “Formals போட்டியே.. பெல்ட் போட்டியா?” என்று கேட்டு எஸ்ஸெம்மெஸ் அனுப்பினாள்.

சரவணன் வழியில் போன் செய்து தான் ஆபீஸில் இருந்து அப்போதுதான் வந்ததாகவும், வழியில் சேர்ந்து கொள்வதாகவும் சொன்னான். அதனால் திருமங்கலத்தில் இறங்கி அவனுக்காகக் காத்திருந்து இருவரும் வந்து சேர்ந்தோம். அங்கு வரும் போது மணி 6 45 ஆகிவிட்டது. அரங்கம் நிரம்பியிருக்க வேண்டும் என்பதே எங்கள் இருவரின் கவலை. முக்கால்வாசிக்கும் சற்று கம்மியாக இருந்தது. பரவாயில்லை;  கொஞ்சம் சிறிய ஹாலில் வைத்திருந்தால் சிரமம் என்று பேசிக் கொண்டோம். கடும் பசி. புத்தகம் வாங்கிவிட்டு வந்த சரவணன் “சமோசா சாப்பிடணும்னா சாப்ட்டு வா” என்றான். அப்போதுதான் எனக்கு உயிர் வந்தது.  காது கேட்க ஆரம்பித்தது.

புத்தக வெளியீட்டைப் பற்றி நான் சொல்லப் போவதில்லை. நான் கண்டது, கேட்டது, பார்த்தது எல்லாம் அனைவரும் பார்த்தது; அனைவரும் உணர்ந்தது. அனைவரும் உண்மையாய் இருந்த தருணத்தில் நானும் இருந்தேன் என்பதே மிகப் பெரிய சந்தோஷம்.  நான் உங்களின் ‘கலகம் காதல் இசை’ மட்டுமே முழுமையாய்ப் படித்திருக்கிறேன். மற்றும் உங்கள் வலைமனையின் தீவிர வாசகன். உங்களைப் பின் தொடர்பவன். அவ்வளவே. ஒருகாலத்தில் உங்களை வசை பாடியிருக்கிறேன். அது என் காதுகளும் கண்களும் மூடியிருந்த காலம்.  மாற்றுக் கருத்துக்களை விரும்பாத காலம். உங்களை என்னால் மறுக்கமுடியாமல் கொண்டு செல்வது எது என்று புரியவில்லை. ஒருவேளை நேற்று மதன் சொன்னது போல் உங்களின் நேர்மையான எழுத்தாக இருக்கலாம்..

விழா முடிந்து இரவு 10:30 மணிக்கு நானும் சரவணனும் ஜெமினி வரை நடந்து,  ஓடிப் பிடித்து ஆவடி பஸ்சில் ஏறினோம். அதை விட்டால் அவ்வளவு தூரம் போக இன்னும் நேரமாகிவிடும் என்பதால் ஏறிவிட்டோம். 11 30 மணிக்கு அம்பத்தூரில் எல்லா கடைகளும் மூடப்பட்டிருந்தது. அன்று மதியம் முதல் இன்று காலை வரை நீங்கள் கொடுத்த சமோசாதான் என்னை காப்பற்றியது.  ஆதலால் சமோசாவுக்கும், காப்பிக்கும் உங்கள் நண்பர்களுக்கும், உங்களுக்கும் நன்றி.

அன்புடன்,
அருண். T.
http://perinba.wordpress.com/

No comments: