Tuesday, January 11, 2011

சென்னை புத்தகக் கண்காட்சி

கையில் இருந்த கடைசி பைசா வரைக்கும் புத்தகங்கள் வாங்கியாச்சு, இனிமேல் அவற்றை படித்தாக வேண்டும். அல்லது படித்ததை போல் வெளியில் சொல்லிக்கொள்ள வேண்டும். முக்கியமாக யாரிடமாவது பேசும் போது, "நகுலன் என்ன சொல்றார் என்றால்" என்று ஆரம்பிக்க வேண்டும். நான் படித்ததிலேயே சிறந்த கவிதை நகுலனின்

எனக்கு
யாருமில்லை
நான்
கூட..

என்று என் வலைப்பதிவில் எங்காவது விரைவில் எழுதியாக வேண்டும்.

ஒரு புத்தகம் வாங்குவதால் இத்தனை பிரச்சனைகள் இருக்கா?? என்று நீங்கள் கேட்கலாம். இது வெறும் சாம்பிள் தான். இதைவிட அதிகமாக பல பிரச்சனைகள் உள்ளன.

காவ்யா பதிப்பக ஸ்டாலில் புத்தகங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது, அருகில் ஒரு பெண் நகுலனின் "இவர்கள்" நாவலை புரட்டிக்கொண்டிருந்தாள். நான் சும்மா இல்லாமல் "நகுலனின் வேறு புத்தகங்கள் இருக்கா??" என்று எதார்த்தமாக அங்கிருந்த கடை பையனிடம் கேட்க, சுறுசுறுப்பான அந்த பையன் ஆறு புத்தகங்களை என் கையில் அடுக்கினான். நகுலனின் எழுத்தை படிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள்கள் ஆசை என்பதால் நானும் வாங்கிவிட்டேன்.  பில் செய்யும் போது என் கிரெடிட் கார்டை அந்த பெண் தேய்க்கிறாள், தேய்க்கிறாள் ஒரு பிரயோசனமும் இல்லை. வேறு வழியில்லாமல் கடைசியில் பணம் கொடுத்து வாங்கினேன்.

கண்காட்சிக்கு செல்லும் முன்பே, என்ன என்ன புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் வைத்திருந்தேன்.  அதன்படி முதலில் வம்சி பதிப்பக ஸ்டாலில் மிஷ்கின் எழுதிய "நத்தை போன பாதையில்" புத்தகத்தை தேடினேன். புத்தகத்தை பார்த்தவுடனே ஒரு விரக்தி, "நூறு ஹைக்கூ கவிதைகள்", அதுவும் பக்கத்திற்க்கு ஒன்று. ஒவ்வொரு கவிதையும் நான்கு வரிகள்தான். விலை 100 ரூபாய். புத்தகத்தை அங்கேயே வைத்துவிட்டு இடத்தை காலிசெய்தேன். "யாராவது அந்த புத்தகத்தை படித்திருந்தால் எப்படியிருந்தது என்று சொல்லவும்". ஏனோ எனக்கு அந்த புத்தகத்தை வாங்க தோன்றவில்லை.

இதுவரை நான் யாருக்கும் எந்த புத்தகத்தையும் படிக்க சொல்லி சிபாரிசு செய்ததில்லை. ஆனால், இந்த முறை சொல்கிறேன், கண்டிப்பாக பேயோனின் "திசை காட்டிப் பறவை" புத்தகத்தை படிக்கவும். இந்த புத்தகத்தில் உள்ளவை அனைத்தும் அவரின் வலைப்பதிவில் ஏற்கனவே வந்ததுதான். இருந்தாலும் எத்தனைமுறை வேண்டுமானாலும் படிக்கலாம். முதல்முறை படிக்கும் போது சிரிக்கவும், இரண்டாம் முறை படிக்கும்போது சிந்திக்கவும் தூண்டும் புத்தகம் இது. கண்டிப்பாக படிக்கவும்.

4 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அவரின் வலைப்பதிவில் ஏற்கனவே வந்ததுதான்.


அவரின் வலைப்பதிவின் முகவரியைத் தரலாமே!!

சரவண வடிவேல்.வே said...

http://www.writerpayon.com

தனி காட்டு ராஜா said...

எனக்கு கூட
யாருமில்லை
நான்
கூட..

-from தனி காட்டு ராஜாவின் கவிதைகள்

சரவண வடிவேல்.வே said...

பாஸ்.. இந்த கவிதைக்கு இப்படியும் ஒரு அர்த்தமா.. அற்புதம்.

சொல்லமுடியாது நகுலன் நீங்கள் சொல்வதை மனதில் வைத்துக்(கூட) எழுதியிருக்கலாம்.