Sunday, July 25, 2010

புரிந்தும் புரியாமலும்

"ஸ ஏவ ஸர்வம் யத்பூதம் யச்ச பவ்யம் ஸனாதனம்
ஞாத்வா தம் ம்ருத்யு மத்யேதி நான்ய: பந்தா விமுக்தயே"

இதுவேதான் அவன், இப்போதும் முன்பும், வருங்காலத்திலும், நிரந்தரமானவன் - அவனைத்தெரிந்துகொள்பவன் மரணத்தை வெல்கிறான்! மோக்ஷத்துக்கு வழி இதைத் தவிர வேறெதுவுமில்லை.
1
இந்த புரளி, புரளி சொல்வாங்களே, அதை இன்றுதான் நேரில் பார்த்தேன். "இந்த யோகா வகுப்புல சேரலாம்னு இருக்கேன். அசைவம்'லாம் இப்ப சாப்பிடுறது இல்லை". இவ்வளவுதான் நான் காலையில் சொன்னது. மாலைக்குள் இதுவரை நான்கு பேர் போன் செய்துவிட்டார்கள். "என்னடா, சாமியார் ஆகப்போறியாமே!!!!!!!!!" என்று. நல்லவேலை யாரும் "என்ன, இமயமலை'ல இருக்கியா??" என்று கேட்கவில்லை. அதுவரை எனக்கு சந்தோஷமே.

2
எனக்கு அருணை அறிமுகம் செய்துவைத்தது என் அறை நண்பன்தான். இருவரும் ஒரே கம்பேனியில் வேலை பார்க்கிறார்கள். சில பேரின் முகம், முதல் தடவை பார்த்தவுடனே நம் நினைவில் அப்படியே நின்றுவிடும். அப்படி ஒரு முகம் அருணுக்கு . அவன் முகத்தில் சோம்பலை பார்க்கவே முடியாது. கம்ப்யூட்டர் அறிவில் அவனை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது. "Informatica,Unix,Pherl" என்று எல்லாவற்றையும் தெரிந்து வைத்து இருந்தான். எதை பற்றி கேட்டாலும் பொருமையாக சொல்லித் தருவான்.

3
கொஞ்ச நாட்களாக'வே சசியின் நடவடிக்கைகள் மாறிக்கொண்டு இருப்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக அறையில் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டு மாதங்களாக சசியின் நடவடிக்கை எதுவுமே சரி இல்லை. முதலில் ஈஷா'வில் ஏதோ யோகா வகுப்பு என்று சொல்லி சனி, ஞாயிறு மட்டும் போய்க் கொண்டு இருந்தான். பின்னர், ஒரு தடவை கோவையில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்றான். அதில் இருந்துதான் இந்த மாற்றம். திடீர், திடீர் என்று மணிக்கணக்கில் அறையிலேயே தியானம் செய்ய தொடங்கி விட்டான்.

4
அவனுக்கு உள்ள பிரச்சனையை பற்றி ஒரு நாள் என்னிடம் சொன்னான். "அதிகமாக அவன் யோசிக்க கூடாதாம். அப்படி செய்தால், மூளையில் உள்ள நரம்பு ஒன்றில் இரத்தம் பாய்வது நின்றுவிடும். அதை அப்பொழுதே சரி செய்யாவிட்டால், அவன் உயிருக்கே ஆபத்து" என்றான். இதை ஒரு நாள் நேரிலேயே பார்த்தேன். ரூபிக் கியூப்'யை கையில் வைத்து விளையாடி கொண்டு இருக்கும் போதே, அருணின் முகம் முழுவதும் சிகப்பு நிறமாக மாறியது. நானும் நண்பனும் அவனை பக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம். மூன்று நாட்கள் அவன் மருத்துவமனையில் இருந்தான், அதன் பிறகே அவனுக்கு சரியானது.

5
தியானம் முடித்த பிறகு சசியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே. அப்படி ஒரு பிரகாசமாக இருக்கும். எதையோ சாதித்த மகிழ்ச்சி அந்த முகத்தில் தெரியும். ஒரு வெள்ளிக்கிழமை இரவு, "சசி தொடர்ந்து ஆறு மணிநேரம் தியானம் செய்ததாக" அறை நண்பன் ராகுல் செல்வாவிடம் சொன்னான். சசிக்குள் ஏதோ ஒரு மாற்றம் எற்பட்டுவிட்டது என்பதுமட்டும் அவர்களுக்கு நன்றாக தெரிந்தது.

6
இது எல்லாவற்றுக்கும் காரணம் இந்த செல்வாதான். என் மீது அவனுக்கு அப்படி என்ன கொலைவெறி என்று தெரியவில்லை. இதைபோல் அவன் எனக்கு செய்வது, இது இரண்டாவது முறை. அந்த "சாமியார்" என்ற வார்த்தையை இன்னும் என்னால் சீரணிக்க முடியவில்லை. எனக்கு போன் செய்த நான்கு பேரில், ஆனந்தும் ஒருவன். "ஏதோ புக்ஸ் படிக்கிற, ப்ளாக்'லாம் எழுதறேன் பார்த்தா, இப்படி மாறிட்டியே'டா" என்றான். அடப்பாவிங்களா, "புக் படிக்கிறவன் எல்லாம் சாமியாரா??". இப்பொழுது நான் படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம் "சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்". இந்த புத்தகத்தின் ஏதாவது ஒரு பக்கத்தை மட்டும் ஆனந்த் படித்து இருந்தால் " ஏன்டா, இப்படி போர்னோ அடிக்ட்'டாக மாறிவிட்டாய்" என்று கேட்டு இருப்பான் போல.

7
சசி ஒரு நாள் தன் வேலையை விட்டுவிட்டதாக சொன்னான். செல்வாவும் ராகுலும் அதை முதலில் நம்பவே இல்லை. சசி ஏதோ ஏதோ புத்தகங்கள் படித்தான். அவை தமிழ் புத்தகங்களா? என்பதே செல்வாவிறகு சந்தேகம். அந்த காலத்து பழந்தமிழில் கிறுக்கப்பட்ட புத்தகங்கள். "நான்தான் சிவன், எனக்கான அறம் காத்துக்கொண்டு இருக்கிறது, நான் விரைவில் செல்ல வேண்டும்" என்று ஒருநாள் சசி சொன்னபோதுதான், இது வேறு எங்கேயோ போய் கொண்டு இருப்பதை செல்வாவும் ராகுலும் உணர்ந்தார்கள். அடுத்த நாள் காலையில் இருந்தே சசி'யை காணவில்லை. கடந்த ஒரு வாரமாக செல்வா, ராகுல், சசியின் பெற்றோர் என அனைவரும் அவனைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால் சசி கிடைக்கவே இல்லை.

8
செல்வா மீது எனக்கு சரியான கோபம். போன் செய்தே கேட்டுவிட்டேன் " நான் எப்படா, சாமியாரா போகப்போறேனு சொன்னேன்". அவன் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் "நீதான சொன்ன, ஈஷா'ல சேர போறேன்னு. ஏற்கனவே நண்பன் ஒருவன் இப்படி சொல்லித்தான் சாமியாரா மாறிட்டான்" என்றான்.

9
மீண்டும் ஒரு வாரம் கழித்து அவன் முகத்தில் அதே பிரகாசம். அருணுக்கு இந்த பிரச்சனை சின்ன வயதில் இருந்தே இருப்பதாக சொன்னான். இதை முழுமையாக குணப்படுத்த மருந்து எதுவும் இல்லை என்றான். சின்ன வயதில் இருந்தே அவன் தியானம் செய்வதாகவும், அதன் காரணமாகவே அவனால் இந்த வியாதியில் இருந்து தப்பித்து வாழ முடிகிறது என்றான். பின்னர், அவன் தியானத்தை பற்றியும், ஈஷா வகுப்புகள் பற்றியும் அரை மணிநேரம் பேசினான். என்னையும் என் நண்பனையும் அந்த தியான வகுப்பில் சேர சொன்னான். அவன் பேசிக்கொண்டு இருந்த போது, எனக்கு அவனின் சிகப்பு நிற முகமே நினைவில் வந்துக்கொண்டு இருந்தது.

பின்குறிப்பு:
---------------
"இந்த கதையை 168357249 என்று படித்தால் புரியலாம். இல்லை என்றால், 329172564 என்று கூட படிக்கலாம். யாருக்கு தெரியும்."

No comments: