Thursday, August 26, 2010

படித்ததில் பிடித்தது

"அழும்போது அழகாக இருக்கும் பெண்கள்" - மனுஷ்ய புத்திரன்

அழும்போது
அழகாக இருக்கும் பெண்ணை
அதற்காகவே
அழவைக்கத் தொடங்கினேன்

அவள் காரணமின்றி
அழுகிறாள் என்றே
எல்லோரும் நினைத்தார்கள்

அவளது நண்பர்கள்
அவளது கண்ணீரைத் துடைக்க
எவ்வளவோ முயன்றார்கள்

அவளது காதலர்கள்
ஒவ்வொருமுறை அவள் அழும்போது
அவளை அணைத்துக்கொண்டார்கள்

அவை ஹார்மோன்களின் குழப்பம் என்றோ
அழமான மன அழுத்தம் என்றோகூட
அதைப் புரிந்துக்கொண்டார்கள்

அது இழந்த காதல்களின் கண்ணீர் என்றோ
உடைந்த மனோரதங்களின் கேவல்கள் என்றோ
சந்தேகித்தார்கள்

நான் அவளுக்கு
விதவிதமான அழுகைகளை
கற்றுக் கொடுத்தேன்
ஒவ்வொரு அழுகைக்கும்
வேறு வேறு அழகினை
அவள் வெளிப்படுத்துகிறாள்

படுக்கையில் படுத்தபடி
படிக்கட்டுகளில் அமர்ந்தபடி
பேருந்தில் ஜன்னலோர இருக்கையிலிருந்தபடி
கழிவறையில் தாழிட்டுக்கொண்டபடி
தெய்வத்தின்முன் கைகூப்பியபடி
திரையரங்க இருளிலிருந்தபடி
கடற்கரையில் நடந்தபடி
வேலை செய்வதுபோல நடித்தபடி
எல்லாப் பின்புலங்களிலும்
அவளது அழுகை
வெகு நேர்த்தியாக பொருந்திப் போகிறது

அழும்போது
அழகாக இருக்கும் பெண்ணிற்கு
எங்கே அழவேண்டும்
எங்கே அழக்கூடாது என்கிற
கட்டுப்பாடுகள் இல்லை

மழைபெய்வதைப் பார்க்கும்போது
ஒரு எளிய கவிதைப் படிக்கும் போது
ஒரு அர்த்தமற்ற பாடலைக் கேட்கும்போது
பாதிப் புணர்ச்சியின்போது
பாதிக் கனவின்போது
கைகளைப் பற்றிக் கொள்ளும்போது
கைகளை விடுவித்துக்கொள்ளும்போது
விருந்தினர்கள் வரும்போது போகும்போது
யாரையாவது நினைத்துக்கொள்ளும்போது
யாரையுமே நினைத்துக் கொள்ளாதபோது
ஏற்கப்படும்போதும்
மறுக்கப்படும்போதும்
அன்னியர்கள் இருக்கும்போது
அழுகிற யாரையாவது பார்க்கும்போது

எல்லா சந்தர்ப்பங்களையும்
பயன்படுத்துகிறாள்
அழும்போது
அழகாக இருக்கும் பெண்

ஒரே ஒரு பிரச்சனை
உண்மையாகவே
அழுவதற்கான காரணங்கள் வரும்போது
எப்படி அழவேண்டும் என்று தெரியாமல்
குழப்பமடைந்துவிடுகிறாள்.

- மனுஷ்ய புத்திரனில் "அதீதத்தின் ருசி" புத்தகத்தில் இருந்து

2 comments:

Unknown said...

Good one.
Thanks for Sharing.

நிலவுக்காதலன் said...

really nice :) i hav sent to my loved one :)