Friday, June 17, 2011

வார்த்தைகளோடு அலைபவன்

பல யுகங்களுக்கு முன்னால், ஊர் ஊராக சென்று கதை சொல்லும் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் புகழ் நாடு முழுவதும் பரவியிருந்தது. அவன் எப்பொழுதும் வார்த்தைகளை மூட்டையில் கட்டி அவன் செல்லும் ஊர்களுக்கு எல்லாம் எடுத்து செல்வான். அவன் எந்த கதையையும் திட்டமிட்டு சொல்வதில்லை, மூட்டையை  பிரிந்து அதில்  கிடைக்கும் முதல் வார்த்தையிலிருந்து கதை  சொல்ல தொடங்குவான். அவன் ஊரில் நுழைந்தவுடனேயே கதைகள் சொல்ல ஆரம்பிப்பதில்லை. முதலில், அந்த ஊர் முழுவதையும் சுற்றி பார்ப்பான, பின்னர் அந்த ஊர் மக்களை கூர்ந்து கவனித்து  அவர்களின் வாழ்க்கை  முறையை  தெரிந்துக்கொள்வான். ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேச மாட்டான். ஊரில் உள்ள அனைவரும் அவன் எப்பொழுது கதை சொல்ல தொடங்குவான் என்று ஆவலுடன் எதிர்ப்பார்ப்பார்கள்.  அதன் பின்னர்தான் கதை  சொல்ல தொடங்குவான்.

அவன் எந்த நேரத்திலும் கதை சொல்ல தொடங்குவான், என்பதை ஊர் மக்களும் அறிந்தே இருந்தார்கள், எனவே அவனை  இருபத்தி நான்கு மணிநேரமும்  ஊர் மக்கள் கண்காணித்துக்கொண்டே இருந்தனர். சில ஊர்களில், ஒரு மாதம் வரைகூட  கதை சொல்லாமல் ஊரை  சுற்றி இருக்கிறான், ஆனால் அதற்க்காக ஊர்மக்கள் யாரும் அவனைக்  குற்றம் சொல்வதில்லை. 
 
ஊர்மக்கள் வீட்டுக்கு ஒருவர் வீதம் தினமும் அவனைக்  கண்காணிப்பார்கள். கண்காணிப்பாளன் தயாராக எப்பொழுதும் கையில் ஒரு மணியை வைத்திருந்தான். அவன் கதை  சொல்ல ஆரம்பித்தவுடனேயே கண்காணிப்பாளன் அந்த மணியை அடித்து ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிவித்துவிடுவான. சில நிமிடங்களிலேயே அந்த இடம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும். தான் வைத்திருக்கும் மூட்டையிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக கோர்த்து, கதையை சொல்லிக்கொண்டே போவான்.  சில கதைகள் இரண்டு நாள் வரை  போகும், சில கதைகள் ஒரு மணிநேரத்தில் முடிந்துவிடும். அவன் சொல்லும் கதைகளில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது, "நல்லவன், கெட்டவனை"  பார்வையாளன்தான் முடிவு செய்ய வேண்டும்.

கதை சொல்லிமுடித்த அடுத்த நொடியே, அவன் தான் உபயோகப்படுத்திய எல்லா வார்த்தைகளை மீண்டும் மூட்டைக்கட்டி அந்த ஊரை  விட்டு  கிளம்பிவிடுவான். அவன் அடுத்து எந்த ஊருக்கு போகிறான் என்பது யாருக்கும் தெரியாது.  அவன் போய் ஆறு மாதங்கள் ஆன பின்பும், அந்த ஊரில் அவன் சொன்ன கதையைப் பற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்கள்.

அவன் சொந்த ஊர், அவனுடைய குடும்பம் இதைப் பற்றி யாருக்குமே தெளிவாக தெரியாது. ஆனால், அவனைப் பற்றி சில மர்மமான கதைகள் மக்களிடைய பரவியிருந்ததன. அவனுடைய அப்பா வடக்கு பகுதியில் உள்ள ஊரின் பெரிய செல்வந்தர். அவருடைய நண்பன் ஒருவனால் வஞ்சிக்கப்பட்டு, தனது செல்வங்கள் முழுவதையும் இழந்துவிட்டார். கடைசியாக அவரிடம் மிஞ்சியது வார்த்தைகள்தான். தன் மகனுக்கு தன்னால் எந்த ஒரு சொத்தையும் தரமுடியவில்லையே என்று வருத்தப்பட்ட அவர், தன்னிடம் கடைசியாக மிஞ்சிய வார்த்தைகளை  எல்லாம் ஒரு மூட்டையில் கட்டி அதை தனது மகனுக்கு தந்துவிட்டு இறந்துவிட்டார். அன்று முதல் இவன் வார்த்தைகளை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறான்.

அவன் இதுவரை எந்த ஒரு வார்த்தையையும் தொழைத்தது இல்லை. அதே போல், இதுவரை  எந்த ஒரு வார்த்தையையும் புதிதாக அந்த மூட்டையில் சேர்த்ததும் இல்லை. அவனுடைய எல்லா கதைகளிலும் அதே வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் வந்துக்கொண்டிருந்தன. வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் வருமே தவிர அவனுடைய கதைகள் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கும். ஒருமுறை சொன்ன கதையை மீண்டும் அவன் சொல்வதில்லை.

அப்படி அவன் சொன்ன பல கதைகளை இன்னும் எங்கள்  ஊரில் பிரபலம். முடிந்தால் உங்களுக்கு அதைச் சொல்கிறேன்.

8 comments:

நிலவுக்காதலன் said...

கண்காணிப்பாளன் naangala machi :)தன்னிரக்க கவிதை mathiri thannirakka kathai a da :) or....

சரவண வடிவேல்.வே said...

எதையோ எழுதப் போய், அது எதுவாகவோ மாறி, கடைசியில் அது ஒரு மோசமான கதையாக மாறிவிட்டது. அதற்க்காக கிழித்தா போட முடியும்.... :)

Anonymous said...

நல்லா இருக்குடா... அங்கங்க எஸ் ரா வந்து போரார்... :)

சரவண வடிவேல்.வே said...

அவருக்கு இதுவே வேலையாப் போச்சு... எனது அனுமதியில்லாமலேயே எல்லா கதைகளிலும் உள்ளே வந்துவிடுகிறார்.

நன்றி நண்பா....

Santhosh Kumar said...

Really superb!

சரவண வடிவேல்.வே said...

thanks :)

தனி காட்டு ராஜா said...

சரவணா, எனக்கு கதை யில் ஆர்வம் இல்லை...
ஆனால் கதை சொல்லியின் மொத்த வார்த்தைகளை மட்டும் எடுத்து கொள்ள ஆர்வம்....
அதை வைத்து நானே நெரிய கதை களை புனைந்து விடுவேன் :)

சரவண வடிவேல்.வே said...

அதேதான் பாஸ்,,, வார்த்தைகள்... வார்த்தைகள் இருந்தால் போதும்... அதை வைத்து பல லட்சம் கதைகளை உருவாக்கலாம்...

ஆனால், நமக்கு தேவைப்படும் நேரத்தில் ஒரும் வார்த்தையும் கிடைக்காது.

காதலியிடம் காதலை சொல்லும் போது தயங்கி நிற்பது போல.. :)