Tuesday, February 12, 2013

இன்னொரு கதை

பசி வயிற்றை கிள்ளுகிறது. அது எப்படி கிள்ளும் என்றும் கேட்காதீர்கள். சிலவற்றை அனுபவித்தால் மட்டுமே நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். அப்படிதான் இதுவும். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. மாதத்தில் ஒரு நாளாவது இப்படி காலையிலிருந்து இரவு வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பது என்று முடிவுசெய்து இருக்கிறேன். காரணம் என்று எதுவும் இல்லை.

வீட்டில் இருந்தால், கண்டிப்பாக எதாவது சாப்பிட வேண்டிய கட்டாயம் எற்பட்டுவிடும். "இல்லை, இன்று முழுவதும் எதுவும் சாப்பிட போவதில்லை" என்று மனைவியிடம் சொல்ல முடியாது. அப்படி சொன்னால், அதற்கு காரணம் கேட்பாள். காரணம் எதுவும் இல்லை என்று சொன்னால், நான் எதையோ ஒன்றை மறைப்பதாக அவள் எண்ணக்கூடும்.

எதற்கு இந்த தேவையில்லாத பிரச்சனை என்று காலை 8 மணிக்கே அலுவலகத்துக்கு வந்துவிட்டேன். அப்படியிருந்தும் அவள் விடவில்லை,  ஒரு கப் டீ போட்டு வைத்துவிட்டாள். ஏற்கனவே காலையில் டிபன் வேண்டாம் என்று சொல்லியாச்சு என்பதால் டீயை குடித்துவிட்டேன். எங்களுக்கு திருமணமாகி ஏழு மாதங்கள் கடந்துவிட்டது. இந்த ஏழு மாதத்தில் ஒருநாள் கூட அவள் கோபப்பட்டோ, டென்ஷனாகியோ நான் பார்த்ததில்லை. 

"ஏன்பா, உனக்கு கோபமே வராதா??" என்று கேட்டால். "கோபப்பட்டு என்ன நடக்க போகிறது" என்பாள்.

அவளைப் பற்றி எழுத ஆரம்பித்தாள் எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் எங்கே ஆரம்பித்து எங்கே முடிப்பது என்று தெரியவில்லை. தனியாக அவளைப் பற்றி ஒரு பதிவு எழுத ஆசை. ஆபிதீன் அவரின் மனைவியைப் பற்றி கலகலப்பாக எழுதுவாரே அதைப்போல். கல்யாணமான புதிதில் அவளை சிரிக்க வைக்க படாதப் பாடுபட்டேன். எந்த காமெடி சொன்னாலும் சிரிக்க மாட்டாள். பின்னர்தான் தெரிந்தது நான் சொல்லும் காமெடிகள் அவளுக்கு புரிவதில்லை என்ற விசயம். அவளிடம் காமெடிக்கு விளக்கம் சொல்லியே முதல் இரண்டு மாதங்கள் கழிந்துவிட்டன.

இப்பொழுதுலாம் அவள் உஷார் ஆகிவிட்டாள், நான் காமெடி சொல்வதற்கு முன்னரே சிரித்துவிடுகிறாள். "எதற்கு சிரித்தாய்" என்று கேட்டால் " அப்பறம் நான் சிரிக்க'லைனா அந்த காமெடிக்கு விளக்கம் வேறு சொல்லுவீங்க" என்கிறாள்.

அவள் விழுந்து விழுந்து சிரிக்கும் அதிசயமும் ஒருநாள் நடந்தது . அது "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" திரைப்படத்தை பார்த்த போது. சில்லரையைக் கொட்டியது போல் சிரிப்பு என்பார்களே, அது போல் அப்படியோரு சிரிப்பு. இப்பொழுது கூட அந்த திரைப்படத்தின் எதாவது ஒரு வசனத்தை சொன்னால் விடாமல் சிரிப்பாள். அப்படி ஒருநாள் அவள் சிரித்த சிரிப்பை கேட்டு பக்கத்து வீட்டு பாட்டி பயந்து போய் வீட்டுக்கே வந்துவிட்டார்கள். அந்த பாட்டிக்கு காது கேட்காது என்பது இங்கே ஒரு கூடுதல் செய்தி.

காலை எட்டு மணிக்கு அலுவலகம் வந்தேன். இப்பொழுது மணி மூன்று. நான்கு முறை போன் செய்துவிட்டாள். " காலையில் சாப்பிட்டாச்சா??" "மதியம் சாப்பிட்டாச்சா??" என்று இரண்டு முறையும், "நான் சாப்பிட போகிறேன்" என்று இரண்டு முறையும் மொத்தம் நான்கு முறை.  இதுவரை காலையிலிருந்து ஆறு முறை தண்ணீர் குடித்ததைதவிர வேறு எதுவும் சாப்பிடவில்லை என்று அவளிடம் சொல்லவா முடியும்.

"இல்லை, இன்னைக்கு முழுவதும் எதுவும் சாப்பிடவேண்டாம் என்று முடிவுசெய்து இருக்கிறேன். சும்மாதான் இந்த முடிவு" என்ற உண்மையை சொல்லலாம். அதற்கு அவளிடமிருந்து வரும் பதில் இப்படியாகதான் இருக்கும்,

"இப்ப அடி வாங்க போறீங்க. முதல்ல இந்த புக் படிக்கிறதை நிறுத்துங்க. மொத்தமா ஒருநாள் எடைக்கு போட்டுறேன் பாருங்க". ஆனால் இதை சொல்லும் போது அவள் மூகத்தில் கொஞ்சம் கூட கோபத்தை பார்க்க முடியாது.

இன்னும் பசி வயிற்றை கிள்ளுகிறது. இன்றைய பசியால் ரொம்ப நாட்களாக தூங்கிக்கொண்டு இருந்த என் வலைப்பதிவுக்கு ஒரு பதிவு கிடைத்துள்ளது என்பதை தவிர உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் இந்த பசிக்கான வேறு காரணங்கள் எதுவும் இல்லை.

குறிப்பு:
இரண்டு வருடங்களுக்கு முன்னால், இரண்டு நாட்கள் டீ தண்ணீரை தவிர வேறு எதுவும் உண்ணாமல் அறையிலேயே கிடந்தது இப்பொழுது தேவையில்லாமல் நினைவில் வருகிறது.

No comments: