Saturday, March 26, 2011

வாத்துகள்

அவன் நான்காம் வகுப்போ, மூன்றாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்த சமயம். வகுப்பில் டிராபிக் சிக்னல் பற்றி பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். வகுப்பில் டிராபிக் சிக்னல் பற்றி யாருக்குமே எதுவும் தெரியவில்லை, அவன் நண்பன் பக்கிரியை தவிர. திருச்சியில் அவன் அக்கா வீட்டுக்கு முன்னாடியே அது இருப்பதாகவும், அது மூன்று வர்ணங்களில் ஒளி வீசுவதாகவும் சொன்னான்.

பக்கிரி, ஒரே நாளில் வகுப்பின் முக்கிய மாணவனாக மாறிய நாள் அது. அப்பொழுதெல்லாம் அவன் ஊரில் டிராபிக் சிக்னல் என்று எதுவும் இல்லை. இதில் என்ன அப்பொழுது வேண்டியிருக்கிறது, இப்பொழுது கூட ஒன்றும் இல்லைதான். பேருந்து நிலையத்தையும், அரசு மருத்துவமனையும் இனைக்கும் சாலையில் மட்டும் ஒன்றே ஒன்று வைத்திருந்தார்கள். அதை யாரும் ஒரு பொருட்டாக மதிக்காததால், அதையும் அனைத்துப் போட்டுவிட்டார்கள். அந்த வழியாக அவன் சென்னைக்கு பஸ் ஏற செல்லும் போது, அங்கேயிருந்த ஒரு தெரு நாய் மட்டும் அந்த சிக்னலையே வெறித்து பார்த்துக்கொண்டிருப்பதை அவன் பலமுறை பார்த்திருக்கிறான்.

இப்பொழுது எதற்க்கு அவனுக்கு இந்தப் பள்ளிப்பருவ நாட்களும், பக்கிரியும், அந்த நாயும் நினைவுக்கு வந்தது என்று தெரியவில்லை. இந்தக் கதை எழுதும் எனக்கே தெரியாத போது, பாவம் அவனுக்கு எப்படி தெரியும். 

ஐந்தாம் வகுப்புக்கு பிறகு அவன் வேறு பள்ளிக்கு மாறினான், பக்கிரியும் திருச்சியிலிருக்கும் அக்கா வீட்டுக்கு சென்று படிக்க போனதால், அவனுக்கும் பக்கிரிக்குமான நட்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கடைசியாக, பத்தாம் வகுப்பின் விடுமுறை நாட்களில் நாகூரில் கிரிக்கெட் விளையாடியப் போது பக்கிரியை மீண்டும் பார்த்தான். அவனைப் பார்த்து இவன் சிரித்தும், அவன் சிரிக்காமல் சென்றுவிட்டான். அவன் பெயர் பக்கிரியில்லை, அவன் பெயர் ப்ரவீன் என்றான் இன்னொரு நண்பன். அந்த ஊரில் நடந்த தலித் அரசியல், மற்றும் அதனை தொடர்ந்து நடந்த பிரச்சனைக்களைப் பற்றி அவனுக்கு அப்பொழுது எதுவும் தெரியாததால், அவன் சற்று நேரம் குழம்பிப்போய் நின்றது உண்மை.

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கதையில் சொன்னதுபோல், எல்லா சிறுவர்களும் மிக விரைவில் பெரியவர்களாக மாற ஆசைப்படுகிறார்கள். அப்படிதான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அவனும் ஆசைப்பட்டான். ”எதாவது ஒரு பெண்னை காதலித்தால் சீக்கிரம் பெரியவன் ஆகிவிடலாம்” என்று எதோ ஒரு திரைப்படத்தைப் பார்த்து அவனும் அவன் நண்பர்களும் நம்பத் தொடங்கிய காலம் அது. அதன்படி அப்துல், சிவஜோதி, இவன் என்று மூன்று பேரும் ஹசீனா என்ற பெண்னை காதலிக்க தொடங்கினார்கள். ஹசீனா என்றால் அழகானவள் என்று பொருள்.

காதலிக்க தொடங்கி மூன்று வாரங்கள்தான் ஆகியிருக்கும், அதற்க்குள் அவர்கள் காதலித்த விசயம் அவர்கள் வகுப்பில் அனைவருக்கும் தெரிந்திருந்தது. மெர்சி என்ற அவர்கள் வகுப்பு ஆசிரியை அவர்களிடம் ஒரு மணிநேரம் இதைப்பற்றி சிரித்து சிரித்து விசாரனை செய்துவிட்டு, பின் கண்டித்து அனுப்பிவிட்டாள். இப்படி அவனின் முதல் காதல் ஒரே மாதத்தில் முடிந்துவிட்டது. இவனை தவிர மற்ற இருவருக்கும், இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்கயிருக்கிறது. இரண்டுமே காதல் திருமணம்தான். ஹசீனா தற்பொழுது கணவன் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசிப்பதாக கேள்விப்பட்டான்.

”கதை, எந்த ஒரு தொடர்பில்லாமல் போய்க்கொண்டிருக்கிறக்கிறது என்று நினைக்கிறீர்களா??”. என்ன செய்ய, என்னால் இப்பொழுதெல்லாம் சம்பவத்தை வைத்து ஒரு கதையைக் கோர்வையாக எழுத முடியவில்லை. எங்கேயோ ஆரம்பித்து, அது எங்கேயோ போய்விடுகிறது. சிலநேரம் எழுதியவற்றை கிழித்தும் எறிந்திருக்கிறேன். எதிலும் தீவிரம் இல்லை. என்னைப் போல்தான் அவனும். ஹசீனாவில் அரம்பித்து இதுவரை நூறு பெண்களையாவது காதலித்திருப்பான், ஆனால் எல்லாமே சில நாட்கள்தான்.

என் தோழி ஒருத்தி என்னிடம் சொல்வாள். “காதலுக்கு அழிவில்லை, அது ஒரு உள்ளத்திலிருந்து இன்னொரு உள்ளத்திற்க்கு மாறிக்கொண்டேயிருக்கும். நம் வாழ்நாளில் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். எல்லாமே உண்மையானக் காதல்தான். காதல் ஒருமுறை மட்டும்தான் வர வேண்டும் என்று சொல்வது சுத்தப் பைத்தியக்காரத்தனம்”

நான் கடைசியாக வேலைப்பார்த்த அலுவலகத்தில் ஒரு குளம் இருந்தது. அதைக் குளம் என்று கூட சொல்லமுடியாது, மழை நீரை எல்லாம் சேமிக்க குளம் போல் ஒன்றை வடிவமைத்திருந்தார்கள். எப்போழுதுமே அதில் தண்ணீர் இருக்கும். அந்தக் குளத்தை சுற்றி முழுவதும் கண்ணாடி வேலைப்பாடுகளில் நான்கு, ஐந்து கட்டிடங்கள் இருந்தது. குறைந்தது ஒரு நானூறு பேராவது வேலைப் பார்த்தோம். முதலில் அந்தக் குளத்தை சுற்றி ஆட்களே இருக்க மாட்டார்கள். சில நாடகளில், எங்கிருந்தோ இரண்டு வாத்துகளை பிடித்துக்கொண்டு வந்து அந்த குளத்தில் நீந்தவிட்டார்கள். அவை வந்த சில நாட்களில் குளத்தை சுற்றி அமரும் ஆட்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது.

அப்பொழுது வெயில் காலம் என்பதால், சிமெண்ட் தரையின் சூடு பொறுக்க முடியாமல், ஒரு வாத்து இறந்துவிட்டது. முதல் வாத்து இறந்த பின், இன்னொரு வாத்து மட்டும் தண்ணீரிலிருந்து வந்து கட்டிடத்தின் கண்ணாடியில் பிரதிபலிக்கும் அதன் முகத்தை அலகால்  மோதிக்கொண்டிருக்கும். என் நணபன் சொல்வான் “வாத்துக்கு கண்ணாடியில் தெரிவது தன் முகம் எனபது கூடவா, தெரியாமல் போகும்”.

மீண்டும் கொஞ்ச நாட்களில் வாத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. குளத்தை சுற்றி அமர்ந்திருக்கும் கூட்டத்தின் எண்ணிக்கையும் அதற்க்கு தகுந்தால் போல் அதிகரித்தது. வாத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவைகள் எழுப்பும் ஒலியும் அதிகரிக்கத் தொடங்கின. அந்த ஓசையே விநோதமாக இருக்கும், அந்த ஓசையை கேட்டுக்கொண்டேயிருக்கலாம். 

நீரில் உணவை போட்டவுடன், நீந்தி சென்று அவை உண்ணும் அழகையும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். நான் எனது வேலையை ராஜினாமா செய்த அன்று குறைந்தது பத்து வாத்துகள் அந்த குளத்தில் இருந்தன.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நண்பன் ஒருவனைப் பார்க்க போன வாரம் பழைய அலுவலகத்திற்க்கு சென்றிருந்தேன். பழைய அலுவலகம் போன உடனேயே குளத்தில் இருந்த வாத்துகளை தான் தேடினேன். ஒரு வாத்தைக்கூட காணவில்லை. நண்பனிடம் விசாரித்த போது, “தெரியல மச்சி, இரண்டு மாசமாகவே காணோம்” என்றான். வழக்கம்போல் அந்த குளத்தை சுற்றி மனித பேச்சுக்களும், சிரிப்புக்களும், செல்போன் உரையாடல்களும் நடந்துக்கொண்டுதான் இருந்தது. அலுவலகத்தின் உள்ளே இருப்பவர்களை விட, இந்தக் குளத்தை சுற்றி அமர்ந்திருந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக தோன்றியது.

1 comment:

நிலவுக்காதலன் said...

என் தோழி ஒருத்தி என்னிடம் சொல்வாள். “காதலுக்கு அழிவில்லை, அது ஒரு உள்ளத்திலிருந்து இன்னொரு உள்ளத்திற்க்கு மாறிக்கொண்டேயிருக்கும். நம் வாழ்நாளில் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். எல்லாமே உண்மையானக் காதல்தான். காதல் ஒருமுறை மட்டும்தான் வர வேண்டும் என்று சொல்வது சுத்தப் பைத்தியக்காரத்தனம்” யாரந்த தோழி :):) அட நம்ம offic :D:D