Sunday, September 25, 2011

எதற்காக என்னை பின் தொடர்கிறாய்??

இந்த பதிவு உயிரோசையில் வெளிவந்துள்ளது.
http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4870  

யாரப்பா நீ?? எதற்காக என்னை பின் தொடர்கிறாய்??. என்னிடம் எதை எதிர்ப்பாக்கிறாய் நீ??. என்னிடம் உனக்கு தருவதற்கு என்று எதுவும் இல்லை.

சரி, ஆம். என்னிடம் தருவதற்கு என்று சில இருக்கிறது, ஆனால் நான் அதை உனக்கு தருவதாக இல்லை. வேண்டுமானால், என் புத்தக அலமாரியில் பல நாட்களாக தூங்கிக்கொண்டு இருக்கும் பாரதியின் கவிதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு போ. உனக்கு பிடித்தவன்தான் பாரதி என்றாலும், நீ அந்த புத்தகத்தை விரும்பமாட்டாய் என்பது எனக்கு நன்றாக தெரியும். இப்பொழுது மலிவு விலையில் பாரதி எல்லா கடைகளிலும் கிடைக்கிறான். ஒரு மலிவு விலை புத்தகத்துக்காக'வா என்னை இத்தனை நாட்களாய் நீ பின்தொடர்ந்து இருப்பாய்?? கண்டிப்பாக இருக்காது.

உன்னுடைய எதிர்பார்ப்பில் ஒரு நியாயம் இருக்கிறது, ஆனால் உனக்கு நான் எதுவும் தருவதாக இல்லை. இதுவே என்னுடைய சுபாவம். இதற்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்க போவதும் இல்லை. இதுவரை என்னை பின் தொடர்ந்தவர்களுக்கு நான் என்ன, என்ன? கொடுமைலாம் செய்து இருக்கிறேன் என்பது உனக்கு தெரிய வந்தால், நீ என் முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு சென்றுவிடுவாய். என்னுடன் பல வருடங்களாக பழகிய தோழி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டதற்கு நான்தான் காரணம் என்பது உனக்கு தெரியுமா?? என்னுடைய கல்லூரி நண்பன் ஒருவன், ஒவ்வொரு அம்மாவாசை அன்றும் வெறிபிடித்த மிருகமாக மாறுவதற்கு நான்தான் காரணம் என்பதாவது உனக்கு தெரியுமா?? உன்னை போலவே என்னிடம் ஒன்றும் பேசாமல் பல நாட்களாக பின்தொடர்ந்த ஒருவன், நடுரோட்டில் மயங்கி தண்ணீர், தண்ணீர் என்று அலறிய போது, அவனை பார்க்காதவன் போல் விலகி சென்றவன் நான் என்பதாவது தெரியுமா??

இவை எல்லாம் நான் உன்னை எமாற்ற செய்யும் நாடகம் போல் தோன்றலாம். உன்னை எமாற்றுவதால் எனக்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை. வேண்டுமானால் உனக்காக வேறு ஒன்றை தருகிறேன். அது காப்காவின் சிறுகதை அடங்கிய புத்தகம். நீயே வைத்துக்கொள். நீ நினைப்பது போல் இது ஒன்றும் மலிவு விலை புத்தகம் அல்ல. ஒரு மிக சிறந்த சிறுகதை எழுத்தாளரின் மிக சிறந்த சிறுகதைகள் அடங்கிய புத்தகம். நான் இன்னும் படிக்கவில்லை, அனைவரும் சொல்வதால் நானும் சொல்கிறேன். மிக சிறந்த எழுத்தாளர்.

உனக்கு அதுவும் வேண்டாமா?? எனக்கு தேவைபடாதவற்றை உனக்கு தருவதாக நீ நினைத்துக்கொள்ளலாம். ஆனால், அதுதான் உண்மை. எனக்கு தேவையானவற்றை எதற்காக உனக்கு தர வேண்டும். நீ என்னை பின் தொடர்வது உன் குற்றமே தவிர, என்னுடைய குற்றம் இல்லை. நானா உன்னை பின் தொடர சொன்னேன். இப்பொழுது கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை, என்னை பின் தொடர்வதை நிறுத்துக்கொள். நான் உனக்கு எதாவது வகையில் உதவி செய்வேன் என்ற நம்பிக்கையில் மீண்டும் என்னை பின் தொடராதே.

இதுதான் நான். இதுவே நான். இதுவும் நான்.

2 comments:

சுப்பிரமணி சேகர் said...

கவிதைத் தனமாய்க் கொட்டிய சிந்தனைகள்... நாட்டம் குறையவில்லை நாவினிக்கப் படிப்பதில். தாகம் என்பது தனித்தமிழ்ச் சொல்லா என்பதில் எனக்கு இன்னும் ஐயமே!

சரவண வடிவேல்.வே said...

நன்றி நண்பா... அந்த கடைசி வாக்கியம் எதை குறிக்கிறது???

ஏற்கனவே அர்த்தம் புரியாத பல புத்தகங்களைப் படித்து குழப்பத்தில் உள்ளேன் :)