Saturday, July 23, 2011

விடுபட்டவை

எதைப் பற்றியாவது எழுத முடிவு செய்தால், உடனே எழுதி விட வேண்டும். நாளை எழுதலாம் என்று ஒருநாள் தள்ளிப்போட்டால் கூட, பின் அதைப் பற்றி என்றுமே நம்மால் எழுத முடியாமல் போகிறது. நாளை என்று தள்ளிப் போட்டதால், என்னால் எழுத முடியாமல் போனவை பல. அதில் முக்கியமானவை நகுலனைப் பற்றி நான் எழுத நினைத்தவை.

நகுலனின் “நாய்கள், இவர்கள், வாக்குமூலம், நவீனன் டைரி” இந்த நான்கு நாவல்களையும் கிட்டத்தட்ட நான்கு நாட்களில் படித்து முடித்தேன். சில பக்கங்களை நான்கு முறைக்குமேல் படித்தேன். அந்த நான்கு நாட்களில், ஒருநாள் நண்பனின் திருமணத்திற்காக சிவகாசி சென்று இருந்ததால். ”இவர்கள்” நாவலை சிவகாசியில் அறை ஒன்றில்தான் படித்து முடித்தேன். படித்த உடனேயே, யாரிடமாவது நகுலனைப் பற்றி பேச வேண்டும் என்று ஆசை. புத்தகத்தில் பல பக்கங்களில் நான் கண்ணீர் சிந்தினேன் என்று யாரிடமாவது சொல்ல ஆசை. அடுத்த நாளே நகுலனைப் பற்றி எதாவது எழுதியாக வேண்டும் என்று ஒரு வெறி. ஆனால், வழக்கம்போல் நாளை நாளை என்று தள்ளிப்போய் கடைசியில் அவரைப் பற்றி எழுத முடியாமல் போய் விட்டது.

இப்பொழுது நகுலனைப் பற்றி எழுத நினைத்தால்,. எதை எழுதுவது, எதை விடுவது என்று ஒரே குழப்பம். முதலில், நகுலனை முழுமையாக நான் புரிந்துக்கொண்டேனா?? என்று சந்தேகம். ”சுசீலா, நவீனன், தேரை, சிவன், ராமநாதன், கேசவமாதவன் ” இவர்கள் எல்லாம் உண்மையில் யார்??. இவர்கள் கதாபாத்திரம் மட்டும்தானா??. உண்மையாகவே சுசீலா என்று ஒருவள் இருந்தாளா??. நகுலன் தனது கதைகளில் ஒன்றில் சொன்னது. “நான் மறைந்தாலும், சுசீலா இருப்பாள்”.

நகுலனைப் பற்றிய கட்டுரைகளில், நகுலனின் பிம்பத்தைப் பற்றிதான் பேசுகிறார்கள். அவரின் எழுத்தையும், அவரின் வாழ்க்கையையும் யாரும் தனியாக ஆராயவில்லை. அவரின் எழுத்து, அவரின் வாழ்க்கை இரண்டுமே ஒன்று என்கிறார்கள். நகுலனைப் பற்றி யோசிக்க யோசிக்க எனக்குள் குழப்பமே மிஞ்சுகிறது. நகுலனை நேரில் சந்தித்த நண்பர் ஒருவரை விரைவில் சந்திக்க இருக்கிறேன், அதன் பின் நகுலனைப் பற்றி தெளிவாக ஒரு தனி பதிவு எழுதுகிறேன்.

********************************************************

இதைப்போல் எழுதாமல் போன இன்னொன்று ரமேஷ்-பிரேம் எழுதிய ”சொல் என்றொரு சொல்” என்ற புத்தகத்தைப் பற்றியது. இந்த புத்தகததை படிக்கும் முன்னரே ஒரு சந்தேகம், “எப்படி, இருவர் இனைந்து ஒரு புத்தகத்தை எழுத முடியும்??” என்று. நாம் அனைவரும் ஒரு கட்டத்துக்குள் சிந்தித்துக் கொண்டு இருக்க, இவர்கள் அந்த கட்டத்தை தாண்டி சிந்திக்கிறார்கள். அதுதான் அவர்களின் எழுத்து. நான் எழுதிக்கொண்டு இருக்கும் “வார்த்தைகளோடு அலைபவன்” பதிவு கூட அவர்கள் எழுத்தை படித்ததால் ஏற்பட்டப் பாதிப்புதான் என்று நினைக்கிறேன். பேரின்பா சொல்வது போல், மற்றவர்களின் பாதிப்பு இல்லாமல் என்னால் தனியாக இயங்க முடியாது போல.

இப்பொழுது ரமேஷ்-பிரேம் எழுதிய மகாமுனி புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் படித்துக்கொண்டிருக்கிறேன், தொடர்ந்து படிக்க முடியவில்லை. ரமேஷ்-பிரேமின் எழுத்தை தொடர்ந்து படிப்பது என்பது ஒரு விஷப்பரீட்சை, அப்படி தொடர்ந்து படித்தால், எதோ ஒரு பக்கத்தில், எதோ ஒரு கதாபாத்திரத்தில் நாம் காணாமல் போவது உறுதி.

மகாமுனி புத்தகத்தை நான் படித்து முடித்தவுடன், அந்த புத்தகம் பற்றி டிவிட்டர் நண்பர் ஒருவர் பதிவு எழுத சொல்கிறார். முயற்சிக்கிறேன்.
 கடைசியாக நகுலனின் இரண்டு கவிதைகள்

வந்தவன் கேட்டான்
"என்னைத் தெரியுமா?"
"தெரியவில்லையே"
என்றேன்.
"உன்னைத் தெரியுமா"?
என்று கேட்டான்.
"தெரியவில்லையே"
என்றேன்.
"பின் என்னதான் தெரியும்"
என்றான்.
"உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்"
என்றேன்!


அங்கு

"இப்பொழுதும்
அங்குதான்
இருக்கிறீர்களா?"
என்று
கேட்டார்
"எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்"
என்றேன்.

Friday, July 8, 2011

மீண்டும் ஒரு சதுரங்க ஆட்டத்தில் தோல்வியடைகிறேன், நான்

இந்த கதை உயிரோசையில் வெளிவந்துள்ளது. 
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4592

"You know what the Mexicans say about the Pacific? They say it has no memory. That's where I want to live the rest of my life. A warm place with no memory" - The Shawshank Redemption Movie

மீண்டும் ஒரு சதுரங்க ஆட்டத்தில் தோல்வியடைகிறேன், நான். நம் பிரிவுக்கு பின் நான் அடையும் நான்காவது தோல்வி இது. போன வாக்கியத்தில் ஒரு பிழை உள்ளது. அது இப்படிதான் இருந்திருக்க வேண்டும், "உன் பிரிவுக்கு பின் நான் அடையும் நான்காவது தோல்வி இது" என்று. மற்றவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, உனக்கு கண்டிப்பாக புரியும் "நம், உன்" இதன் வித்தியாசம். மொத்தம் ஆறு முறை விளையாடி,  நான்கு முறை தோல்வியும், இரண்டு முறை வெற்றியும் அடைந்திருக்கிறேன். வெற்றி பெற்ற இரண்டு ஆட்டங்களும் எனக்குள் நானே விளையாடிய ஆட்டங்கள்.

இப்பொழுதுலாம், என்னுடைய எல்லா தோல்விகளும் உன்னையே நினைவுப்படுத்துகிறது. தோல்விகளுக்கு உன்னையே பழி சொல்கிறது எனது மனது. எனக்கு விரும்பம் இல்லைதான், உன்னை நினைவுப்படுத்தவும், உன் மீது பழி சொல்லவும்.  ஆனால் என்ன செய்வது, பாழாய் போன இந்த எண்ணங்கள் எப்பொழுதும் உன்னை சுற்றியே  இருக்கிறது. எனது படுக்கையறையில், செல்போனில், தலையனைக்கு அடியில், அலுவலகப் பேருந்தில், யாரும் உட்காராத ரயில்வே பிளாட்பாரப் பெஞ்சுகளில், மின்னஞ்சலில், மூன்றாவது தெருவில் இருக்கும் உனது பெயர் கொண்ட ஒரு கடையில், இப்படி எல்லாவற்றிலும் உனது எண்ணங்களே மிஞ்சியிருக்கும் போது, என்னால் எப்படி உன்னை விட்டு முழுமையாக வெளிவர முடியும்.

நான் சிலநேரங்களில் நினைப்பது உண்டு, நமது பிரிவுக்கு அடித்தளமாக அமைந்த அந்த நாளைப் பற்றி,  அந்த உரையாடலைப் பற்றி. அந்த நாள், அந்த உரையாடல் எல்லாம் காற்றோடு மறைந்தால் எப்படி இருக்கும் என்று. அது மட்டும் நடந்திருந்தால், இந்நேரம் உன் வெற்றிக்கு நானும், என் வெற்றிக்கு நீயும் மாறி மாறி இனிப்புகள் கொடுத்திருப்போம். எனது தோல்விக்கு நீயும், உனது தோல்விக்கு நானும் ஆறுதல் சொல்ல நமது தோள்பட்டைகளை தந்திருப்போம். அவை எல்லாம் இப்பொழுது கானல்நீரை போல் மாறிவிட்டது. இனி நீ, நகுலன் கதைகளில் வரும் கதாபாத்திரம் போல்தான் எனக்குள் இருக்க போகிறாய்.

இன்றைய சதுரங்க ஆட்டத்தில், என்னுடைய எல்லா சதுரங்க காய்களிலும் உனது பிம்பமே தெரிகிறது. இன்று நான் தோற்பது உறுதி. இன்றைய தோல்விக்கு கண்டிப்பாக உன்னைப் பழி சொல்லக் கூடாது என்று முடிவோடு இருக்கிறேன். நானே எனது மந்திரியை இழக்க முன் வருகிறேன். அதோ எனது மந்திரி, கட்டங்களை விட்டு வெளியில் சென்று விட்டது. என்னுடைய தவறான முடிவால் எற்பட்டது அது, என்று என்னை நானே திட்டிக்கொள்கிறேன். எனது இன்றைய தோல்விக்கு கண்டிப்பாக எனது தவறான ஆட்டமே காரணம் என்பதை மீண்டும்  மீண்டும் மனதுக்குள் சொல்லிப் பார்க்கிறேன். என்னுடைய சக ஆட்டக்காரனா எனது நண்பன் என்னைப் பார்த்து சிரிக்கிறான்.  ஒருவேளை அவனுக்கு தெரிந்திருக்கலாம், "என்னை  நானே ஏமாற்றிக் கொள்வதைப் பற்றி". ஒருவன் தெரிந்தே  காய்களை நகர்த்தினானா??, அல்லது தெரியாமல் நகர்த்தினானா? என்பதை ஒரு சதுரங்க ஆட்டத்தில் நீங்கள் மிகவும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம்.

"என்னை மன்னித்துவிடு நண்பா, எனக்கு தெரியும் ஒரு சதுரங்க ஆட்டத்தில் எந்த ஒரு வீரனும் தனது எதிரி அவனுடைய காய்களை அவனே விட்டுதர விரும்ப மாட்டான் என்று. எனக்கு வேறு வழி தெரியவில்லை  நண்பா. இன்றைய தோல்விக்கு நான் என்னைப் பழி சொல்ல வேண்டும். நினைவுகளிலிருந்து மொத்தமாக வெளியில் வர வேண்டும" 

உனது நினைவுகள அழிப்பதற்க்கு எனக்கு தெரிந்த அனைத்தையும் செய்துவிட்டேன். இப்பொழுது என்னிடம் உன்னுடைய புகைப்படங்கள் எதுவும் இல்லை. உனது குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், Orkut Scrap என்று எல்லாவற்றையும் அழித்துவிட்டேன். உனக்கும் எனக்கும் தெரிந்த சில நண்பர்களை சந்திப்பதைக் கூட  தவிர்த்து விட்டேன். நீ  எனக்கு தந்த பரிசுப் பொருள்கள் இப்பொழுது எங்கேயிருக்கும் என்று எனக்கு தெரியாது. இது இத்தனையும் செய்த பின்னாலும் உன் நினைவுகளிலிருந்து என்னால் வெளியில் வர முடியவில்லை. இதோ  இப்பொழுது இந்த சதுரங்க ஆட்டம் நடைபெரும் அறையில் மேலே சுற்றிக்கொண்டிருக்கும் மின்விசிறி கூட எனக்கு உன்னைதான் நினைவுப்படுத்துகிறது.

இந்த சதுரங்க ஆட்டத்தில் அடுத்து ஒரு தவறான முடிவை எடுக்க தயாராகிறேன். இந்த முறை எனது ராணியை  இழக்கப் போகிறேன். கண்டிப்பாக இன்றைய தோல்விக்கு நானே காரணம். ஆனால், என்ன செய்கிறான் அவன்??.  நண்பா என்ன சொன்னாய் நீ  "தோல்வியை  ஒத்துக்கொள்கிறேன் என்றா??" அப்படி செய்யாதே,  இன்றைய போட்டியில் நான் தோல்வியடைந்தே  தீரவேண்டும். போகாதே நண்பா போகாதே, உனக்கும் தெரிந்திருக்கும் "ஒரு சதுரங்க ஆட்டத்தில் எந்த ஒரு வீரனும் அனுதாபங்களை விரும்ப மாட்டான்" என்று. நண்பா, தயவு செய்து என்னை வீழ்த்திவிட்டு போ அல்லது அந்த நினைவுகளிலிருந்து என்னை மீட்டாவது போ.  

Tuesday, July 5, 2011

.

உனது நகக் கீறல்களின்
காயங்கள் கூட
இன்னும் ஆறவில்லை,
அதற்குள்
முறிந்துவிட்டது
நாம் சொல்லிக்கொண்ட
காதல் என்ற ஒன்று.

Monday, July 4, 2011

மனுஷ்யபுத்திரன் கவிதை

புத்தகங்களை எரிப்பதன் பலன்கள்

புத்தகங்களை எரிப்பதில்
நிறைய அனுகூலங்கள் இருக்கின்றன்

நமக்கு தேவையான
இடம் கிடைத்துவிடும்
அடைபட்டவர்கள் சொற்களின் வழியே
வெளியேறிச் செல்வதைத் தடுத்து விடலாம்
எரிப்பது சுலபம் என்பதால்
குளிர் காலங்களுக்கு உபயோகமானது
கெட்ட கனவுகள் வருவது
நின்று விடும்
நாம் வேறு சாத்தியங்களைப் பற்றி
யோசிக்கும் அவசியமில்லாமல் போகிறது
பிரச்சனைகளுக்கான காரணங்களை
நாம் நேரடியாகவே சந்திக்கலாம்
பூச்சிகளின் தொல்லை
வெகுவாகக் குறைந்துவிடும்
ஒருவர் என்ன நினைக்கிறார் என
இன்னொருவர் பயப்பட வேண்டியிராது
யாரும் ஒளிந்துகொள்வதற்கென்று
ஒரு இடம் இல்லாமல் போய்விடும்
உரையாடல்களில் புதிய சொற்களை
சந்திக்க வேண்டியிருக்காது
படிப்பவர், படிக்க மறுப்பவர்
என்ற கலாச்சார ஏற்றத் தாழ்வுகள்
அடியோடு ஒழிந்து விடுகிறது
எல்லாவற்றுக்கும் மேலாக
நமது வீட்டில்
நமது கண்ணுக்குத் தெரியாமல்
யாரோ வசிக்கிறார்கள் என்று
நாம் பயந்து பயந்து வாழ வேண்டியதில்லை

- மனுஷ்யபுத்திரன் (உயிர்மை, ஜூலை 2011)

இதே உயிர்மை இதழில் "சேனல் 4" என்ற தலைப்பில் மற்றொரு அற்புதமான கவிதை வந்துள்ளது. கண்டிப்பாக இந்த மாத உயிர்மை இதழை  வாங்கிப் படிக்கவும்.