Monday, January 23, 2012

வார்த்தைகளோடு அலைபவன் சொல்லும் கதைகள்


4.தலையணை கதைகள்

உங்களுக்கு எற்கனவே தெரிந்திருக்கும், நீங்களும் முன்னரே கேள்விப்பட்டு இருப்பீர்கள். "ஒருவன் தலையணைக்கும் அவன் கனவுகளுக்கும் சம்மந்தம் உள்ளது" என்பதை, "அழுக்கான தலையணைகள்" துர்கனவுகளை உருவாக்கும் என்பதை.

அவன் அறையில் அவன் உபயோகப்படுத்துவதற்காகவே மூன்று தலையணைகளை வைத்துள்ளான். அந்த தலையணைகளை உபயோகப்படுத்த வேறு யாரையும் இதுவரை அவன் அனுமதித்தது இல்லை. அவன் நண்பன் ஒருவன் மூன்று நாள் தூக்கமில்லா பயணத்தில் அவனைப் பார்க்க வந்த ஒரு இரவில, நண்பன் உறங்குவதற்கு அவன் தலையணைகளை எதையும் தரவில்லை, கடைசியில் அவன் நண்பன் கைகளை உபயோகித்து தான் தூங்கினான்.

அவனுடைய மூன்று தலையணைகளும் மூன்று விதமான கனவினை தர கூடியவை. உங்களை போல்தான் அவனும் இதை முதலில் நம்பவில்லை,  நூறு நாட்கள் சோதனையின் பின்தான் அவன் இதை நம்பத் தொடங்கினான். தலையணைகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக கனவுகளின் விதங்களும் அதிகமாகும் என்பதாலும் மேலும் இந்த மூன்று விதமான கனவுகளுக்கே அவன் அடிமையாகிவிட்டான் என்பதாலும் மேலும் நான்காவதாக ஒரு தலையணை வாங்க முடிவு செய்யும் நாட்களில் வரும் கனவுகளில் எல்லாம்  "நான்காவதாக வாங்கிய தலையணையில் உள்ள பஞ்சுகள் தனி தனியாக பிரிந்து பல கோடி எறும்புகளாக மாறி அவன் உடலை அரித்து கொல்வது போல் கனவு கண்டதாலும்", நான்காவது தலையணை வாங்கும் எண்ணத்தை அவன் கைவிட்டான்.

மூன்று விதமான தலையணைகளை தரும் மூன்று விதமான கனவினை அவன் சோதனை செய்த அந்த நூறு நாட்களில், ஒவ்வொருநாளும் தூக்கம் கலைந்து எழுந்தவுடன், அன்றைக்கு அவன் பார்த்த கனவினை நினைவில் கொண்டுவர முயற்சிப்பான். கனவுகள் நினைவுக்கு வந்தவுடன் அந்த கனவினை அந்த தலையணைகளுக்கான டைரியில் எழுதிவிடுவான், இதற்காகவே மூன்று வண்ணங்களில் டைரிகள் வைத்திருந்தான். சிவப்பு, ஊதா, பச்சை என்ற மூன்று வண்ணங்களில் இருந்த மூன்று தலையணைகளுக்கு மூன்று விதமான டைரிகள். பல நேரங்களில் அந்த கனவுகள் உடனே நினைவுக்கு வராது, அன்றைய நாள் முழுவதும் அந்த கனவினைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருப்பான். கடைசிவரை நினைவுக்கு வராத கனவுகளும் உண்டு. நாற்பத்தி ஐந்து நாட்களில் முடிய வேண்டிய சோதனை இதன் காரணமாகவே நூறு நாட்கள் நீடித்தது. இப்படி நூறு நாட்களுக்கு அவன் செய்த சோதனைக்கு பின்னரே அவனுடைய மூன்று தலையணைகள் மூன்று விதமாக கனவினை தருகிறது என்பதை நம்ப தொடங்கினான்.

அதன் படி,

சிவப்பு நிற தலையணை, தற்கொலை கனவுகளை தர கூடியது
ஊதா நிற தலையணை, கடவுளைப் பற்றிய் கனவினை தர கூடியது
பச்சை நிற தலையணை, அவன் கதைகளைப் பற்றிய கனவினை தர கூடியது

இனி அவன் தலையணைப் பற்றியும், அவன் கனவினைப் பற்றியும் இங்கே பார்ப்போம்.



No comments: