Monday, November 1, 2010

ஆசிரியர் குழுவின் கடிதம்

மதிப்பிற்குரிய அசோக்கிற்க்கு,

நீங்கள் நேற்று அனுப்பிய சிறுகதையை கிடைக்கப் பெற்றோம். இதைப்போல், நீங்கள் வாரம் வாரம் அனுப்பும் எல்லா படைப்புகளும் எங்கள் மின்னஞ்சலுக்கு நல்லபடியாக வந்து சேர்ந்துக்கொண்டு இருக்கிறது. நீங்கள் நேற்று அனுப்பிய சிறுகதையில் "இது உங்களுக்கு அனுப்பும் 50வது கதை" என்று எழுதியுள்ளீர், ஆனால் எங்கள் கணக்கின்படி இது உங்களின் 35வது கதையாகும். ஒரே கதையை தலைப்பு மட்டும் மாற்றி இரண்டு முறை அனுப்பி இருந்தீர்கள். அதையும் சேர்த்தால் கூட கணக்கில் 36'தான் வருகிறது.

இதுவரை  உங்கள் படைப்புகள் எதையும் நாங்கள் வெளியிடாமல் போனதுக்கு முதலில் "நிகழ்காலம்"  சிற்றிதழின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.  உங்கள் அனைத்து படைப்புகளையும் படித்த பின்னரே எங்கள் ஆசிரியர் குழு இந்த கடிதத்தை எழுதுகிறது. எங்கள் கடிதம் உங்களுக்கு மகிழ்ச்சியையும், பெரிய ஆச்சர்யத்தையும் கொடுக்கும் என்று நம்புகிறோம். இதுவரை "நிகழ்காலம்" ஆசிரியர் குழு சார்பில்  எந்த எழுத்தாளருக்கும் கடிதம் எழுதியது இல்லை, இதுவே முதல்முறை. இதற்காக நீங்கள் கண்டிப்பாக சந்தோஷம் அடையலாம்.

முதலில் எங்கள் ஆசிரியர் குழு சார்பில் சிலவற்றை உங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறோம். எங்கள் "நிகழ்காலம்" மாதம் ஒருமுறை மட்டுமே வெளிவரும் சிற்றிதழ். இதுவரை இரண்டு இதழ்கள் மட்டுமே வந்துள்ளது. அதற்குள் நீங்கள் 35 கதைகள் அனுப்பியது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது. முக்கியமாக எங்கள் முதல் இதழில், எங்கள் ஆசிரிய குழுவை சேர்ந்த சோம்பன் எழுதிய "சூர்ப்பனகை பல்லாக்கில் போனாள்" என்ற கதையின் தலைப்பை மட்டும் மாற்றி மீண்டும் எங்களுக்கே அனுப்பியதன் காரணம் என்னவோ???.

நாங்கள் உங்களை  குறைசொல்கிறோம் என்று தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். எங்கள் சிற்றிதழுக்கு ஆயுள் சந்தா கட்டிய ஒரே ஆள் என்ற முறையில் உங்களுக்கு எல்லா  உரிமையும் இருக்கிறது. உங்கள் இலக்கிய ஆர்வம் எங்களை  தொடர்ந்து பிரமிக்க வைக்கிறது. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்றே நாங்களும் ஆசைப்படுகிறோம். உங்கள் நண்பர் ஒருவர் எங்கள் இதழுக்கு ஆயுள் சந்தா செலுத்த இருப்பதாக சொன்னீர்களே, அது என்னவானது??. ஒன்றும் அவசரமில்லை, உங்களுக்கு ஒருமுறை ஞாபகப்படுத்தினோம். அவ்வளவுதான்.

எங்கள் ஆசிரியர் குழுவில் உங்களைப் பற்றி பேசும் போது,உங்களை நாங்கள் "பின்நவீனத்துவத்தின் ராஜா" என்றே அழைக்கிறோம். உங்கள் எழுத்து, உலகம் முழுவதும் சென்று அடையவேண்டும். அது ஒரு சிறிய மக்களுக்குள் நின்றுவிடகூடாது. கண்டிப்பாக உலகம் முழுவதும் பரவ வேண்டும். உங்கள் கதைகளை  இப்போழுதே நிகழ்காலம் சிற்றிதழில் வெளியிட்டால், அது கொஞ்ச மக்களுக்கே சென்று சேரும். சில நாட்கள் ஆகட்டும், நமது நிகழ்காலம் சிற்றிதழ் எல்லா மக்களையும் சென்றடைந்தவுடன் நீங்கள் தான் நமது இதழின் ஆஸ்தான எழுத்தாளர்.

அடுத்த இதழ் வெளியிட சுமார் பத்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. எங்கள் ஆசிரிய குழுவில் அனைவரும் பணத்தை ஏற்பாடு செய்ய முயன்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.  எப்படியாவது இந்த மாத இதழை மட்டும் வெளியிட்டால் போதும், அடுத்த மாத இதழுக்கு கண்டிப்பாக விளம்பரம் கிடைத்துவிடும். ஏற்கனவே முதல் மட்டும் கடைசி பக்க விளம்பரங்களுக்கு ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். ஆகவே, இன்னும் ஒரு இதழை வெளீயிட்டால் போதுமானது. அதன் பின் எல்லாம் தானாகவே நடுந்துவிடும். எல்லாம் இறைவன் செயல்.

இப்படிக்கு,
"நிகழ்காலம்" ஆசிரியர் குழு.

2 comments:

தனி காட்டு ராஜா said...

அதாண்டா ...இதாண்டா ..."பின்நவீனத்துவத்தின் ராஜா" சரவணா தாண்டா .........
தமிழ் பதிவுலக நாட்டிலே இவன் அனைவருக்கும் சொந்தண்டா ...........:))

சுப்பிரமணி சேகர் said...

இது உனக்குத் தேவையா...? பொறுமையா பண்ணு. கண்ண குத்திக்கப் போற.