Tuesday, May 31, 2011

ஒரு குறுஞ்செய்தி

Keep the end very short otherwise memories will burn you
its true, i am burning by life.

மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தேன். சங்கரிடமிருந்து வந்த குறுஞ்செய்தி அது. சங்கர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்புவது மிகவும் அரிது. சொல்லப்போனால், அவன் யாருக்குமே  குறுஞ்செய்தி அனுப்புவதில்லை. "ஏன்டா, யாருக்கும் SMS அனுப்புவதில்லை" என்று கேட்டால், "அது உனக்கு சொன்னாலும் புரியாது" என்பான்.

தற்பொழுது மணி இரவு ஒன்று. இன்னொருமுறை அந்த குறுஞ்செய்தியைப் படித்துப் பார்த்தேன். இந்நேரத்தில், ஏன்? இதை அவன் நமக்கு அனுப்பவேண்டும். அந்த இரண்டு வரிகளில் உள்ள அர்த்தம் என்னை  ஏதோ செய்தது. அந்த கடைசி வரி "its true, i am burning by life", அங்கு "burning myself" என்றல்லவா வந்திருக்க வேண்டும். ஆனால், இதுவும் நன்றாகதான் இருந்தது "burning by life".

எனக்கு சங்கரை  சின்ன வயதிலிருந்தே நன்றாக தெரியும். நானும் அவனும் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை  ஒன்றாகப் படித்தோம். அவன் வீடு முதலில் மஞ்சக்கொல்லையில்தான் இருந்தது, அவன் அம்மா கிணற்றில் விழுந்து இறந்த பின், அவன் அப்பா அவனையும் அவன் தங்கையும் அழைத்துக்கொண்டு எங்கள் ஊரிலிருக்க்கும் புதியக் கடற்கரை சாலைக்கு வந்துவிட்டார்.

"Keep the end very short" என்று இவன் எதைச் சொல்கிறான்??. நம் மனித வாழ்க்கையைப் பற்றி சொல்கிறானா?? சங்கர் கவிதைகள் எழுத கூடியவன் அல்ல, தான் சொல்லவருவதை எப்பொழுதும் நேராகச் சொல்லியே பழக்கப்பட்டவன். எது சரி என்று படுகிறதோ அதை தைரியமாக செய்பவன். அவனால் எப்படி இதை  எழுதமுடிந்தது???..Opera Mini பிரவுசரை ஓபன் செய்து,  கூகுள் உதவியுடன் அந்த வாக்கியங்களைத்  தேடிப்பார்த்தேன். அந்த வாக்கியத்தை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவனே எழுதியதுதான், அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அவனுக்கு நான் குறுஞ்செய்தி அனுப்பினேன். "என்ன இது??" என்று. பத்து நிமிடங்கள் காத்திருந்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனக்கு தெரியும் அவன் கண்டிப்பாகப் பதில் அனுப்பமாட்டான் என்று. அவன் பதில் அனுப்பியிருந்தால்தான் ஆச்சரியம். இதற்க்குமேலும் காத்திருப்பது முட்டாள்தனம் என்று கருதி,  அவனுக்கு போன் செய்தேன். கடைசி ரிங் அடித்து முடிக்கும்போதுதான் எடுத்தான். நன்றாக தூங்கியிருப்பான் போல்,  தூக்கக்கலக்கத்தில் பேசினான். "ஒண்ணுமில்லை, சும்மாதான் போன் செய்தேன், நாளை  போன் செய்கிறேன்" என்று சொல்லி போனை  வைத்துவிட்டேன்.

என்னால் அந்த குறுஞ்செய்தியிலிருந்து வெளிவர முடியவில்லை. "Otherwise Memories Will Burn You" அற்புதமான வரிகள், நினைவுகள்தான் நம்முடைய முதல் எதிரி,  நாம் எதை  மறக்க நினைக்கிறோமோ அவை மீண்டும் மீண்டும் நம் நினைவில் வந்துக்கொண்டேயிருக்கும். "நீ  எதை  மறக்க நினைக்கிறாய்??" என்று யாராவது என்னிடம் கேட்டால், நான் சொல்வேன் "எல்லாவற்றையும்". ஆம் எல்லாவற்றையும். நினைவுகள் இல்லை  என்றால் நமக்கு எந்த ஒரு கவலையும் இல்லை.

எதற்க்காக அவன் இந்த குறுஞ்செய்தியை எனக்கு அனுப்பவேண்டும். ஒரு சொல்லமுடியாத ஒரு துக்கம் அந்த இரண்டு வரிகள் இருக்கிறது. சென்ற  வாரம் நான் அவனை ஊரில் சந்தித்தப்போது கூட மிகவும் உற்சாகமாகதான் இருந்தான். "ஜெ, கருணாநிதி,  சீமான், சிதம்பரம், ராம், வெற்றிமாறன், பின்லேடன் மற்றும் எங்கள் பள்ளி நாட்கள்" என்று எல்லாவற்றைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். 
கல்லூரியில் ஒரு பெண்ணை காதலித்ததாக சொல்வானே அவளை நினைத்து அனுப்பியிருப்பானா?? எப்பொழுதோ இறந்த அம்மாவை  நினைத்து அனுப்பினானா??.

ஒருவேளை  வேலையில் எதாவது பிரச்சனையா?? அதற்க்கு வாய்ப்பே இல்லை, அண்ணாமலை கல்லூரியில் வாத்தியார் வேலை. வாத்தியார் வேலையில் கூட பிரச்சனைகள் வருமா என்ன?? அதுவும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில். பின் எதற்க்காக அந்த குறுஞ்செய்தியை எனக்கு அனுப்ப வேண்டும். சென்றமுறை நாங்கள் சந்தித்தப் போது, நாற்பது வருடங்கள் முன்னால் கருணாநிதிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியதாகவும், அதை  எதிர்த்த மாணவர்களில் ஒருவன் மர்மமான முறையில் இறந்ததாகவும் சொன்னான். அவன் அடுத்து சொன்னதுதான் என்னை தூக்கிப்போட்டது, "அந்த மாணவனின் அப்பாவே இறந்த மகனின் உடலைப்பார்த்து அது தன் மகன் இல்லை  என்று வாக்குமூலம் அளித்தார்" அவன் அந்த கடைசி வாக்கியத்தை  சொன்னபோது, அவன்  கண்கள் சிவப்பாகியிருந்தது. ஏற்கனவே ஆறு அடி உயரம் இருக்கும் அவன். தோள்களை தூக்கிக்கொண்டு இதை சொன்னப்போது எங்கள் ஊர் விஷ்வரூப விநாயகர் போல் காட்சியளித்தான்.

மீண்டும் படித்தேன்.

Keep the end very short otherwise memories will burn you
its true, i am burning by life.


ஒருவேளை  அவன் என்னைப்பற்றி எதாவது சொல்ல நினைக்கிறானா?? எனது கைகள் தானாகவே கொஞ்சம் நடுங்க தொடங்கியது. எனக்கு வியர்க்க ஆரம்பித்தது. என்னுடைய பிரச்சனைகள் அவனுக்கு தெரியும் என்கிறானா?? அவனுக்கு ஆறாவது அறிவு மிகவும் அதிகம், யாரின் முகத்தை  பார்த்தே அவர்களின்  பிரச்சனை  அனைத்தையும் சொல்லிவிடுவான். என்னை ஊரில் பார்க்கும் போதெல்லாம் சொல்வான் "ஏன் மச்சி?டல்லாக இருக்கே??" "இல்லை ,இல்லை" என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்கமாட்டான். இதற்க்காகவே அவனை  பார்க்கும் போதெல்லாம் தேவையில்லாமல், இயல்பாக இருப்பது போல் நான் நடிக்க தொடங்கினேன்.

அவனிடம் சொல்லும் அளவுக்கு எந்த ஒரு பிரச்சனையும் எனக்கு இல்லை என்பதுதான் உண்மை. இந்த இரவில், தேவையில்லாமல் ஒரு குற்றவுணர்ச்சி மனதில்  ஓடத் தொடங்கியது. எப்பொழுது தூங்கினேன் என்றே தெரியவில்லை.

இரண்டு மாதங்கள் கழித்து ஊரில் நானும் சங்கரும் சந்தித்தபோது அந்த குறுஞ்செய்தியைப் பற்றி அவனிடம் கேட்க நான் மறந்துப்போனேன் அல்லது அப்படி நினைத்துக்கொண்டேன். அவன் எதற்காக அந்த குறுஞ்செய்தியை  எனக்கு அனுப்பினான் என்பது இன்னும் எனக்கு புதிராகவே உள்ளது.

3 comments:

Jegadeesh Kumar said...

அருமையான புனைவு. அழகான குட்டிக்கதை.

சரவண வடிவேல்.வே said...

நன்றி ஜெகதீஷ்....

நிலவுக்காதலன் said...

sema lines nanba.. unna mathiriey iruppan pola.. all indirect :)