Saturday, December 3, 2011

பங்குச்சந்தை மோகம்

என்னைப் பார்த்து என் நெடுநாள் தோழன் ஒருவனும் வலைப்பதிவு எழுத தொடங்கியுள்ளான். அவன் தொடந்து எழுத என் வாழ்த்துகள். இதைப்போல், அலுவலகத்தில் தினமும் நான் MoneyControl Portfolio'வை மேய்ந்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த ஒருவர், நான் பங்குச்சந்தையில் பெரிய புள்ளி என்று நம்பிவிட்டார். அப்படி நம்பியோடு விட்டிருந்தால் பரவாயில்லை. பங்குச்சந்தையைப் பற்றி நான் அவருக்கு சொல்லிதர வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். நானும் EPS, P/E, Dividend, Face Value. Book Value, Book Closure Date போன்று எனக்கே தெரியாத சில டெக்னிக்கல் விசயங்களை எடுத்துவிட்டேன். அமைதியாக தலையைச் சாய்த்து கேட்டுக்கொண்டவர், அடுத்த வாரமே ஷேர்கானில் அக்கவுண்ட் திறந்தார். ஷேர்கானில் அக்கவுண்ட் ஓபன் செய்ய உதவியவனும் நான்தான் என்பதை எழுத வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.

இனிதான் பிரச்சனையை, அக்கவுண்ட் திறந்தவுடனேயே "அசோக், உனக்கு தெரிந்த சில பங்குகளை சொல் வாங்குகிறேன்" என்றார். அதுவும் எப்படி, ஒரே வாரத்தில் பணம் இரண்டு மடங்காக வர வேண்டுமாம். ஏற்கனவே, எனது பழைய அலுவலகத்தில் சிலருக்கு சில பங்குகளை சிபாரிசு செய்ய போய், எனக்கும் அவர்களுக்கும் தீராப்பகை ஒன்று இன்று வரை இருந்துக்கொண்டு இருக்கிறது. நான் அவர்களுக்கு சிபாரிசு செய்த பங்குகளில் ஒன்று "Pyramid Saimira". இப்பொழுது அந்த பங்கினை பங்குச்சந்தை வணிகத்திலிருந்தே தூக்கிவிட்டார்கள். எனக்கு அந்த பங்கிலிருந்து சில ஆயிரம் லாபம் கிடைத்த காரணத்தால்தான், எனது நண்பர்களுக்கு சிபாரிசு செய்தேன். ஆனால், அவர்கள் வாங்கிய நேரம் கம்பெனியை மூடிவிட்டார்கள். நல்லவேளை, அந்த பங்கில் எனக்கு முன்னரே சில ஆயிரங்கள் லாபம் கிடைத்த விசயத்தை அவர்களிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் இந்நேரம் பெரிய வெட்டுக்குத்து சண்டையே நடந்திருக்கும். என் வாழ்நாளில் எனக்கு லாபம் கிடைத்தது அந்த பங்கிலிருந்து மட்டும்தான், மேலும் இன்று வரை மொத்தமாக என்னுடைய நஷ்டங்கள் சில லட்சத்தை எட்டிவிட்டது என்ற உண்மையை நான் யாரிடம் சொல்லி அழுவது.

நான் முதல் முதலாக பங்குவணிகத்துக்கு அடி எடுத்து வைத்தது கல்லூரி இறுதி ஆண்டில், அப்பொழுது நான் முதலீடு செய்த தொகை 2500. முதலில் வாங்கிய பங்கு ITC. அப்பொழுது அதன் விலை 180 என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது, ஆனால், இன்னும் என்னால் இந்த பங்குச்சந்தையை சரியான முறையில் புரிந்துக்கொள்ள முடியவில்லையே என்று நினைக்கும் போது, கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. நான் தோற்றுவிட்டேன் என்ற உண்மையை மனது உணர்ந்துக்கொள்ள மறுக்கிறது.

நேற்று கூட Intraday'யில் இரண்டு ஆயிரம் ரூபாய் லாபம், ஆனால், கடந்த ஒரு மாதம் என்று மொத்தமாக பார்த்தால் ஆயிர ரூபாய்க்கு அருகில் நஷ்டமே. நானும் பல முறை இதிலிருந்து வெளிவர முடிவு செய்வேன், ஆனால் அது முடியவில்லை. அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் வரை பங்குச்சந்தையிலிருந்து விலகியிருக்கிறேன். நான் அடிமையாகிவிட்டேன் என்று நன்றாக எனக்கே தெரிகிறது. இந்த போதை எனக்கு பிடித்திருக்கிறது. இது எண்களின் விளையாட்டு. இந்த உலகத்தில் ஒருவனுக்கு அதிகம் மயக்கம் தர கூடியவை எண்களே. இப்பொழுது எண்களைப் பற்றி நான் தேடித் தேடி படித்துக்கொண்டு இருப்பதற்கு காரணமும் இந்த பங்குசந்தை மோகம்தான் என்று நினைக்கிறேன்.

பதிவு கொஞ்சம் சீரியஸாக போய்க் கொண்டு இருப்பதால், மீண்டும் என் அலுவலக கதைக்கு வருவோம். அலுவலக நண்பர் அக்கவுண்ட் திறந்தவுடனேயே "அசோக், உனக்கு தெரிந்த சில பங்குகளை சொல் வாங்குகிறேன்" என்றார்.

 "இல்ல எனக்கு அந்தளவு விவரம் தெரியாது, அதனால், நீங்களே செய்திகளைப் படித்து வாங்குகள், ஒரு பங்குப் பற்றி நான்கு முறை நன்றாக படித்துவிட்டு வாங்கவும்"  என்றேன்.

அவரும் விடாமல், தொடர்ந்து இந்த கேள்வியை கேட்டுக்கொண்டே இருந்தார். நானும் அதே பதிலை பல முறை சொல்லிக்கொண்டே இருந்தேன். கடைசியில் அவரே சலித்துப்போய் நிறுத்திவிட்டார். ஆனால் இன்னும் நான் பங்குச்சந்தைப் பற்றி சில டெக்னிக்கல் வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அவருக்கு சொல்லிக்கொண்டேதான் இருக்கிறேன். அவர் அருகில் இருக்கும் போது MoneyControl Portfolio மற்றும் ஷேர்கான் இணையதளம் ஆகிய இரண்டையுமே நான் திறப்பதே இல்லை என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.